Type Here to Get Search Results !

New Testament Bible Study Part Six 6 | புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் | பவுலின் கடிதங்கள் | Jesus Sam

புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஆறு (6)

    ஆண்டவரும், மீட்பரும், உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.  புதிய ஏற்பாட்டு ஆய்வு ஆறாம் பாகம்.  இந்த பாகத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் சபைகளுக்கு எழுதின கடிதங்களைப் பற்றியும், அப்போஸ்தலனாகிய பவுல் தனி நபருக்கு எழுதின கடிதங்களைப் பற்றியும், தனி நபர்கள் எழுதின கடிதம் பற்றியும், யோவானுக்கு வெளிப்படுத்தின நிருபம் பற்றியும் அறிந்துகொள்வோம்.

    புதிய ஏற்பாட்டு ஆய்வு முதல் ஐந்து பாகங்களை வாசிக்காதவர்கள் கீழே உள்ள லிங்க்-யை கிளிக் செய்து வாசிக்கவும்.

புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஒன்று (1)

புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் இரண்டு (2)

புதிய ஏற்பாட்டு ஆய்பு பாகம் மூன்று (3)

புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் (4)

புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் (5)

கலாத்தியா | எபேசியர் | பிலிப்பியர் | கொலோசேயர் | தெசலோனிக்கேயர் | தீமோத்தேயு | தீத்து | பிலேமோன் | எபிரெயர் | யாக்கோபு | பேதுரு | யோவான் | யூதா | வெளிப்படுத்தல் 


கலாத்தியா:

            கலாத்தியா நகரம் கல்ல உபதேசகர்கள் நிறைந்த நகரம்.  Gnostics என்ற குழுவினர் ஆவிக்கும் சரீரத்துக்கும் உள்ள வேறுபாட்டை வைத்து அநேக கள்ள உபதேசங்களை கொண்டு வந்தார்கள்.  இப்படிப்பட்ட கலாத்தியா சபைக்கு பவுல் மாம்சம் என்றால் என்ன? ஆவி என்றால் என்ன? ஆவியின் கனிகள் என்றால் என்ன? கள்ள உபதேசத்துக்கு விலகியிருப்பது எப்படி இதுபோன்ற காரியங்களை எழுதுகிறார்.

            கலாத்தியா சபையில் உள்ளவர்கள் யார் எதை சொன்னாலும் நம்புவார்கள்.  இதனால் தான் பவுல் புத்தியில்லாத கலாத்தியரே உண்மையை மாத்திரம் நம்புங்கள் என்று குறிப்பிடுகிறார்.

            இப்படிப்பட்ட குலப்பம் நிறைந்த கலாத்தியா சபைக்கு பவுல் சொல்லுகிறார், நாங்கள் கிறிஸ்துவைப்பற்றியும், சுவிசேஷத்தைப்பற்றியும் தெளிவாக உங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறோம்.  இதைத்தவிற வேறு எந்த ஒரு உபதேசத்தையும் தேவதூதனே வந்து சொன்னாலும் நம்பாதிருங்கள் என்று பவுல் எழுதுகிறார்.

 

எபேசியர்:

             எபேசு பட்டணம் ஒரு பணக்கார பட்டணம்.  கொரிந்தியர்களைப்போலவே இவர்களும் செல்வச்செழிப்பு மிகுந்தவர்கள்.  கொரிந்து பட்டணத்தார்கள் பணக்காரர்கள், ஆனால் கல்வியறிவு இல்லாதர்கள்.  இந்த எபேசு பட்டணத்தார் பணக்காரர்கள் மாத்திரம் அல்ல கல்விமான்களும் கூட.  ஞானிகள், வான சாஸ்திரிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்களால் நிறைந்ததுதான் இந்த எபேசு பட்டணம்.

            எபேசு சபையில் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் தங்கள் பிற மத நம்பிக்கை புத்தகங்களை தெருக்கில் வைத்து எரித்ததை அப்போஸ்தலர் 19:19-ல் வாசிக்கிறோம். 

            ரோமர் புத்தகத்தில் கிறிஸ்தவர்களுக்கான மூல உபதேசத்தை எழுதிய பவுல், ஆவியானவரின் துணையோடு எபேசு சபைக்கு கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஆழமான அநேக சத்தியங்களை எழுதுகிறார்.

            எபேசியர் புத்தகத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமானால், வேதத்தை குறித்த அநேக காரியங்கள் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

            எபேசியர் புத்தகத்தில் பவுல் திரித்துவத்தைப் பற்றி விளக்குகிறார்.  அக்கிரமங்களிலும், பாவங்களிலும் மரித்தவர்களாகிய ஜனங்கள் எப்படி ஆண்டவருக்குள்ளாக உயிரடைகிறார்கள் என்பதை எபேசியருக்கு பவுல் எழுதுகிறார்.

            உலகலாவிய சபைகளுக்கு ஆண்டவர் கற்றுக்கொடுத்த ஐந்து விதமான ஊழியங்களைப்பற்றி எபேசியர் நான்காம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.  அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் என்ற பிரிவுகளைப் பற்றி தெரிவாக விளக்குகிறார்.

            ஆறாம் அதிகாரத்தில் பிசாசுகளைப் பற்றி பவுல் பேசுகிறார்.  பிசாசுகள் நான்கு விதத்தில் உள்ளது.  துரைத்தனங்கள், அதிகாரங்கள், இப்பிரபஞ்சத்தின் அந்தகாரலோகாதிபதிகள், வானமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள் போன்ற பிசாசைக்குறித்த ஆழமான சத்தியத்தைப்பற்றி பவுல் பேசுகிறார்.

            எபேசியர் புத்தகம் கிறிஸ்தவர்களுக்கு ஆழமான சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கின்ற உபதேச புத்தகம்.

 

பிலிப்பியர்:

            பிலிப்பியர் புத்தகத்தை பவுலின் அன்பு கடிதம் என்று சொல்லலாம்.  பிலிப்பு பட்டணத்தில் இருந்தவர்கள் மிகவும் ஏழைகள்.  எல்லோரையும் நேசிக்கக்கூடியவர்கள், பகிர்ந்து உண்ணக்கூடியவர்கள்.  அப்பாவி ஜனங்கள்.

            இந்த ஏழை பிலிப்பு பட்டணத்திற்கு பவுல் அன்பாக ஒரு கடிதம் எழுதுகிறார்.  இயேசுவும் உங்களைப்போலவே ஏழையாக வந்தார்.  மரணபரியந்தம் தன்னை தாழ்த்தினார்.  நீங்கள் உங்கள் ஏழ்மையைக் குறித்து கலங்கவேண்டாம்.  கிறிஸ்துவிடம் காணப்பட்ட அதே சிந்தையுடையவர்களாயிருங்கள்.

நீங்கள் ஏழைகளாக இருக்க காரணம் நீங்கள் பாவிகள், உங்களை ஆண்டவர் நேசிக்கவில்லை என்று சொல்லுகிற நாய்களுக்கு ஜாக்கிரதையாயிருங்கள்.

கள்ள உபதேசகர்கள் சொல்வதைக் கேட்டு சோர்ந்துபோகாதிருங்கள்.  உங்களுக்கு வீடு இல்லையென்றாலும், செல்வம் இல்லை என்றாலும் கர்த்தர் உங்களோடு இருக்கிறார்.  அவருக்குள் நீங்கள் சந்தோஷமாய் இருங்கள் என்று பவுல் எழுதுகிறார்.

 

கொலோசேயர்:

            கொலோசெயர் பட்டணத்தில் அதிகமாக இருந்தவர்கள் யூதர்கள்.  புறஇனத்தைச் சார்ந்தவர்கள் சிலரே இருந்தார்கள்.  கொலோசே பட்டணத்தில் இருந்தவர்கள் பணக்கார்களும் அல்ல, ஏழைகளும் அல்ல.  நடுத்தரவர்க்கத்தினார்.

            இந்த கொலோசே பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் மத நம்பிக்கைகளை சபைக்குள்ளாக கொண்டுவந்தார்கள்.  முன்பு யூதனாய் இருந்தவர்கள் யூதமத நம்பிக்கையையும், பிற மதங்களில் இருந்தவர்கள் தங்கள் மத நம்பிக்கையையும் சபைகளுக்குள்ளாக கொண்டு வந்தார்கள். 

இப்படிப்பட்ட மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கிற ஜனங்களுக்கு எழுதப்பட்ட புத்தகம் தான் கொலோசேயர் புத்தகம்.

 

தெசலோனிக்கேயர்:

            தெசலோனிக்கே பட்டணம் ஒரு சிறப்பான பட்டணம்.  நடுத்தரவர்க்கத்தினரே இங்கு அதிகமாக வாழ்ந்தார்கள்.  இவர்கள் அப்பாவி ஜனங்கள்.  பிலிப்பி பட்டணத்தைப் போன்ற ஏழைகள் அல்ல.  ஆனால் அப்பாவிகள்.

            கடவுள் மீதும், ஊழியர்கள் மீதும் அதிக அன்பு வைத்தவர்கள்.

            பவுலோடு இணைந்து ஊழியம் செய்த தேமா, பவுலை விட்டு பிரிந்து தெசலோனிக்கே சபைக்கு போகிறார்.  காரணம், அவர்கள் ஊழியர்களை மதித்து அதிக காணிக்கைகள் கொடுத்து வந்தார்கள்.

            தெசலோனிக்கே சபையில் உள்ளவர்களுக்கு ஒரு ஊழியர் ஆண்டவர் பரலோகத்திற்கு ஏறிச்சென்றதை பிரசங்கித்தார்.  ஆண்டவர் எப்படி பரலோகத்திற்கு ஏறிச்சென்றாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்று ஒரு ஊழியர் தெசலோனிக்கே சபை விசுவாசிகளுக்கு பிரசங்கித்தார்.

            அதைக்கேட்ட விசுவாசிகள், ஆண்டவர் இப்பொழுதே வந்துவிடுவார் என்று எண்ணி, தங்கள் வேலைகளை விட்டுவிட்டு, பிள்ளைகளை கல்விசாலைகளுக்கு அனுப்பாமல், அனைவரும் மலைகளின் மேல் ஏறி, கர்த்தரே சீக்கிரம் வாரும் எங்களை எடுத்துக்கொள்ளும் என்று சொல்ல தொடங்கினார்கள்.

            இப்படிப்பட்ட தெசலோனிக்கே சபைக்கு, கர்த்தர் வருவேன் என்று சொன்னது உண்மை, அவர் நிச்சயம் ஒருநாள் வருவார்.  அவர் வருவதற்கு முன்பு பூமியில் அநேக காரியங்கள் நடைபெறவேண்டியுள்ளது.  அவைகள் நடந்து முடிந்த பின்பே அவர் வருவார்.  அவருடைய வருகைக்கு ஆயத்தமாயிருங்கள், அவசரப்படாதிருங்கள் உங்கள் வேலைகளை, கடமைகளை செய்யுங்கள் என்று சொல்லி பவுல் கடிதம் எழுதுகிறார்.

            தெசலோனிக்கே சபையில் ஒரு விசுவாசி மரித்துப்போனால், சபையார் அனைவரும், ஆண்டவர் நாளையோ நாளை மறுநாளோ வந்துவிடுவார், அதற்குள்ளாக நீ இப்படி மரித்துவிட்டாயே, நீ நரகத்திற்கு சென்றுவிடுவாயே என்று சொல்லி புலம்பி அழுவார்கள்.  எனவே தான் பவுல், கிறிஸ்துவின் வருகையின் போது மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்.  பின்பு உயிரோடிருக்கும் நாமும் அவர்களோடு கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்.  எனவே, மரித்தவர்களுக்காக கவலைப்படாதிருங்கள் என்று எழுதுகிறார்.

            பவுல் எழுதிய முதல் கடிதத்தை அவர்களால் சரியாக புரிந்கொள்ள முடியவில்லை.  இதனால் இன்னும் சற்று எளிமையான முறையில் இரண்டாம் கடிதத்தை பவுல் தெசலோனிக்கே சபைக்கு எழுதுகிறார்.

 

 

 

பவுல் தனிநபருக்கு எழுதின கடிதங்கள்

1 தீமோத்தேயு, 2 தீமோததேயு, தீத்து இவை மூன்றும் போதக கடிதங்கள்.  தீமோத்தேயு ஒரு வாலிப போதகர்.  தீத்து நடுத்தர வயதையுடைய போதகர்.  ஒரு போதகரிடம் காணப்படவேண்டிய அனைத்து நல்லொழுக்கங்களையும் பவுல் இந்த மூன்று கடிதங்களில் எழுதுகிறார்.

            ஒரு ஊழியர் தனிப்பட்ட முறையில் எப்படி வாழ வேண்டும்? குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும்? சபையை எப்படி நடத்த வேண்டும்? சபையில் நிர்வாக பொறுப்புகளை கண்காணிப்பது எப்படி? தலைவர்களை ஏற்படுத்துவது எப்படி? மூப்பர்களை ஏற்படுத்துவது எப்படி? அவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன? பெண்களை எப்படி நடத்த வேண்டும்? ஆண்களை எப்படி நடத்த வேண்டும்? விதவைகளை எப்படி நடத்த வேண்டும்? இதுபோன்ற ஊழியர்களுக்கு வேண்டிய அனைத்து ஆலோசனைகளையும் பவுல் இந்த மூன்று கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

 

 

பிலேமோன் நிரூபம்:

            கொலோசே பட்டணத்தில் ஒரு செல்வந்தன் வாழ்ந்தார்.  அவர் எபேசு பட்டணத்தைச் சார்ந்தவர்.  இவர் பவுலின் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்டவர்.   பவுலும் அந்த செல்வந்தனும் நண்பர்களானார்கள்.  அந்த செல்வந்தனின் பெயர் பிலேமோன்.

             பவுல் கைதுசெய்யப்ட்ட போது இரண்டு ஆண்டுகள் வீட்டுக் காவல் சிறையில் இருந்தார்.  தன்னை பார்க்க வருகிறவர்களிடம், மீண்டும் நீங்கள் வரும்போது அநேகரை அழைத்து வாருங்கள் என்று பவுல் சொல்லுவார்.  அநேகர் அவரைத் தேடி வீட்டிற்கு வந்தார்கள்.  அவர்களுக்கு புவுல் சுவிசேஷம் சொல்லி இரட்சிப்புக்குள்ளாக வழிநடத்தினார்.

            தினம் தினம் பவுலின் வீட்டிற்கு அநேகர் வந்தார்கள்.  அநேகர் இரட்சிக்கப்பட்டார்கள்.  ஒரு நாள் ஏழை வாலிபன் ஒருவன் பவுலின் வீட்டிற்கு வந்தான்.  அவனும் இரட்சிக்கப்பட்டான்.

            அந்த ஏழை சிறுவனிடம் அநேக திறமைகள், தாலந்துகள் இருந்தது.  பவுல் அவனை தன்னுடைய மகனாகவே நினைத்து, அவனை தன்னோடு வைத்துக்கொண்டார்.  அந்த வாலிபனை பவுல் சிறந்த ஊழியனாக மாற்ற வேண்டும் என்று நினைத்தார்.  அந்த வாலிபனின் பெயர் ஒநேசிமு.

            பவுல் ஒரு நாள் ஒநேசிமுவிடம் நீ யார், உன்னுடைய பெற்றோர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கேட்டார்.  அதற்கு ஒநேசமு, கொலோசே பட்டணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற பிலேமோன் என்பவரின் அடிமை நான்.  அவருடைய வீட்டில் இருந்து அவருக்கு தெரியாமல் ஓடிவந்துவிட்டேன் என்று சொன்னான்.

            இதைக்கேட்ட பவுல் பிலேமோன் என் நெருங்கிய நண்பன்.  அவர் இரட்சிக்கப்பட்டுவிட்டார் என்று ஒநேசிமுவிடம் கூறினார்.  ஒநேசிமுவுக்கு மிகுந்த சந்தோஷம்.

            பவுல் ஒநேசிமுவை தன் மகனைப்போல நேசித்தாலும், அவன் வேறொருவரின் அடிமை என்பதால், பவுல் ஒநேசிமுவைப் பார்த்து, நீ உன் எஜமானிடம் போய் அவருக்கு அடங்கியிரு என்று சொன்னார்.

            அதற்கு ஒநேசிமு, நான் அவருக்கு தெரியாமல் அவர் வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டேன்.  இனி நான் அங்கு சென்றால் என்னை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று சொல்லுகிறார்.  அப்பொழுது பவுல் நான் உனக்காக பரிந்துபேசி ஒரு கடிதம் எழுதிக்கொடுக்கிறேன்.  அந்தக் கடிதத்தோடு நீ பிலேமோனை சென்று பார், அவர் உன்னை நிச்சயம் ஏற்றக்கொள்வார் என்று ஒநேசிமுவிடம் சொன்னார்.

            பவுல் நண்பனாகிய பிலேமோனுக்கு எழுதிய நிருபம்.  நண்பனே, நீ இரட்சிக்கப்பட்டுவிட்டாய், உனக்கு அடிமையாக இருந்த ஒநேசிமுவும் இரட்சிக்கப்பட்டுவிட்டான்.  அவன் உனக்கு துரோகம் செய்ததை நான் அறிந்திருக்கிறேன்.  ஒநேசிமுவை என் மகனாக சேர்த்துக்கொள்ள எனக்கு விருப்பம், ஆனாலும் அது சரியான முறை அல்ல என்பதால், அவனை மறுபடியும் உன்னிடத்திற்கு அனுப்புகிறேன், அடிமையாய் அல்ல உன்னுடைய சகோதரனாக அவனை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்.  ஒநேசிமுவால் உனக்கு ஏதாவது இழப்பு நேர்ந்திருந்தால், அதை என் கணக்கில் வைத்துக்கொள்.  நான் உன்னிடம் வரும்போது அதை உனக்கு செலுத்துவேன் என்று பவுல் நண்பனாகிய பிலேமோனுக்கு ஒநேசிமுவை ஏற்றுக்கொள்ள வழியுறுத்தி ஒரு கடிதத்தை எழுதுகிறார்.

 

எபிரெயர்:

            எபிரெயர் என்றால் யூதர்கள்.  எபிரெயர் புத்தகம் யூதர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம்.  எழுதியவர் பவுல்.  நான் தான் இந்த புத்தகத்தை எழுதுகிறேன் என்பதை யூதர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் என்று நினைத்த பவுல், இந்த நிருபத்தில் மாத்திரம் தனது பெயரை பதிவு செய்யவில்லை.

மத்தேயு புத்தகமும், யோவான் புத்தகமும் யூதர்களுக்கு எழுதப்பட்ட புத்தகங்கள்.  இவை இரண்டும் இரட்சிக்கப்படாத யூதர்களுக்கு எழுதப்பட்ட புத்தகங்கள்.  இயேசு ஒரு ராஜா என்று காண்பிப்பதற்கு மத்தேயு புத்தகம்.  இயேசு கடவுள் என்று காட்டுவதற்கு யோவான் புத்தகம்.

இரட்சிக்கப்பட்ட யூதர்களுக்கு எழுதப்பட்ட புத்தகம் எபிரெயர் புத்தகம்.  ஆபிரகாம் கிரியைகளினால் நீதிமானாகவில்லை, விருத்தசேதனத்தினால் நீதிமானாகவில்லை, நியாயப்பிரமாணத்தினால் நீதிமானாகவில்லை, விசுவாசத்தினாலேயே நீதிமானானார் என்று யூதர்கள் புரிந்துகொள்ளும்படி பவுல் எழுதுகிறார்.

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய பயங்கர ஆழமான சத்தியங்களை பழைய ஏற்பாட்டு ஆதாரத்தோடு சொல்லுகிற புத்தகம் தான் இந்த எபிரெயர் புத்தகம். 

            இயேசு கிறிஸ்துவின் ஆசாரியத்துவம் லேவியர்களின் ஆசாரியத்துவம் அல்ல, மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவம் என்ற சத்தியத்தையும் இப்புத்தகத்தில் நாம் பார்க்க முடியும்.

            பழைய ஏற்பாட்டிலும் விசுவாசம் இருந்தது என்பதை காண்பிக்கும்பொருட்டு, விசுவாசத்தைப்பற்றி பதினொராம் அதிகாரத்தில் எழுதுகிறார் பவுல்.

 

பொதுவான நிருபங்கள்

            பொதுவான நிருபங்கள் மொத்தம் எழு.  யாக்கோபு, 1 பேதுரு, 2 பேதுரு, 1 யோவான், 2 யோவான், 3 யோவான், யூதா.

            யாக்கோபு, யூதா இவ்விருவரும் இயேசுவின் சகோதரர்கள். 

 

யாக்கோபு:

            ஊழியர்களுக்கு தேவையான பொதுவான ஆலோசனையை யாக்கோபு தனது நிருபத்தில் எழுதுகிறார்.  வார்த்தைகளில் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும், பிசாவுக்கு எதிர்த்து நிற்க வேண்டும் என்பது போன்ற ஊழியர்களுக்கு பொதுவான ஆலோசனையை யாக்கோபு எழுதுகிறார்.

 

யூதா:

            கள்ள உபதேசங்களுக்கு எதிராக போராட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட புத்தகம்.

 

பேதுரு, யோவான்

            இந்த ஐந்து புத்தகங்களும் மக்களுக்கு சொல்ல விரும்பும் பொதுவான ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

            பேதுரு: இயேசு கிறிஸ்து பாதாளத்தில் உள்ள ஆவிகளுக்கு பிரசங்கித்தார் என்று எழுதுகிறார்.  மூலபாஷையில் பாதாளத்தில் உள்ள ஆவிகளை கடிந்து கொண்டார் என்றே உள்ளது.  தமிழ் மொழியாக்கத்தில் பிரசங்கித்தார் என்று பிழையாக உள்ளது. 

 

வெளிப்படுத்தின விசேஷம்:

            வெளிப்படுத்தல் புத்தகம் ஒரு தீர்க்கதரிசன புத்தகம்.  இப்புத்தகத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.

            முதல் பிரிவு: 1-3 அதிகாரம்

            இரண்டாம் பிரிவு: 4-22 அதிகாரங்கள்.

 

            முதல் மூன்று அதிகாரத்தில் நடந்த, நடக்கப்போகின்ற, சபை எடுத்துக்கொள்ளப்படும் நாள் வரைக்கும் நிகழப்போகின்ற காரியங்கள் எழுதப்பட்டுள்ளது.

            நான்கு முதல் இருபத்து இரண்டு அதிகாரங்கள் வரை உள்ள அனைத்து காரியங்களும் இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகைக்கு (இரண்டாம் வருகைக்கு) பின்பாக நடைபெறப்போகும் காரியம் ஆகும்.  நான்காம் அதகாரம் முதலாம் வசனத்திலிருந்து உள்ள அனைத்து வசனங்களும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு பின்பாக நடைபெறும் காரியங்கள்.

            வெளிப்படுத்தல் நான்காம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து தன்னுடைய பிள்ளைகளை அழைத்துச் செல்வார்.  அதன் பின்பு இயேசு கிறிஸ்து தேவனாய் இல்லாமல், மனுஷனாய் இருப்பார்.  அன்றிலிருந்து எழு ஆண்டுகளில் முப்பது மூன்று வயது நிறைந்த இயேசு கிறிஸ்து நாற்பது வயதை அடைவார்.  நாற்பது வயது நிறைந்த இயேசு கிறிஸ்து சபையை திருமணம் செய்வார்.

            வெளிப்படுத்தல் பத்தொன்பதாம் அதிகாரத்தில் சபையை கிறிஸ்து மனைவி என்று அழைக்கிறார்.  இப்பொழுது சபை மனவாட்டியாக இருக்கிறது. 

            வெளிப்படுத்தல் நான்காம் அதிகாரத்திற்கு பின்பு வரும் இயேசு கடவுளாக இல்லாமல் மனுஷனாய் இருக்கின்றார்.  அதாவது ஆட்டுக்குட்டியானவராக இருக்கிறார்.  பூமியில் அல்ல, பரலோகத்தில் மனிதனாக இருக்கின்றார்.

            அந்த ஆட்டுக்குட்டியானவர் தான் முத்திரைகளை உடைக்கிறார்.  பின்பு தான் நியாயத்தீர்ப்பு நடைபெறுகிறது. 
    
    புதிய ஏற்பாட்டு ஆய்வு ஆறாம் பாகத்தின் மூலமாக அநேக வேதாகம சத்தியங்களை அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நான் விசுவாசிக்கிறேன்.  இப்பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.  வேதாகமத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதையும் கருத்துப்பலகையில் பதிவு செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  ஆமென்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.