Type Here to Get Search Results !

Moses vs Jesus Christ Similarities | மோசேயும் இயேசு கிறிஸ்துவும் | லெந்து கால சிலுவை தியானம் | Lent Days Cross Message | Jesus Sam

மோசேயும் இயேசு கிறிஸ்துவும்

கொலோசெயர் 2:16,17

          16. ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வு நாட்களையுங் குறித்தாவது, ஒருவனும் உங்கைளைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.

          17. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது.  அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

 


          பழைய ஏற்பாட்டில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் புதிய ஏற்பாட்டின் நிழலாய் இருக்கிறது என்று வேதம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.  பண்டிகையானாலும், மாதப்பிறப்பானாலும், ஓய்வுநாளானாலும் இவையனைத்தும் ஏதோ சடங்காச்சாரம் அல்ல, இவைகள் புதிய ஏற்பாட்டின் அதாவது கிறிஸ்துவின் நிழலாய் இருக்கிறது என்ற பவுல் எழுதுகிறார்.

 

          பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் புதிய ஏற்பாட்டின் நிழலாய் இருக்கிறது. பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையையும் பற்றி வேதாகமத்தில் நாம் தெளிவாக வாசிக்க முடியாது.  ஒரு சிலரை பற்றி மட்டுமே வேதம் நமக்கு தெளிவாக கற்றுக்கொடுக்கிறது.  காரணம், பழைய ஏற்பாட்டு மனிதர்களுக்கு திருஷ்டாந்தங்களாக சம்பவித்தவைகள் அனைத்தும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்கின்ற அதாவது உலகத்தின் முடிவில் வாழ்கின்ற நமக்கு எச்சரிப்புண்டாக அவைகள் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது.

1 கொரிந்தியர் 10:11

          இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது, உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.

 

மோசே:

          மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து கானான் தேசத்திற்கு அழைத்து சென்ற ஒரு தலைவன்.  ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என்ற ஐந்து ஆகமங்களை எழுதினவன்.  ஐந்து ஆகமங்களன் பிரதிநிதி என்று அழைக்கப்படுபவன்.  ஐந்து ஆகமங்களின் பிரதிநிதியாகிய மோசேக்கும் புதிய ஏற்பாட்டின் பிரதிநிதியாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள ஒற்றுமைகளில் சிலவற்றைக்குறித்து இந்த பதிவில் நாம் தியானிக்கலாம்.

 

1. இருவருடைய பிறந்தபோது ஆண்கள் கொலை செய்யப்பட்டார்கள்

மோசே:

யாத்திராகமம் 1:16

          நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்றுபோடுங்கள்.  பெண் பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.

          யோசேப்பு எகிப்து தேசத்தில் அதிகாரியாய் இருந்தபோது, யோசேப்பின் சகோதரர்கள் எழுபது பேர் கானான் தேசத்திலிருந்து எகிப்து தேசத்திற்கு பஞ்சத்திலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள வந்தார்கள்.

          யோசேப்பு எகிப்தின் அதிகாரியாய் இருந்தபடியால் அந்த எழுபது பேருக்கும் ராஜா மரியாதை கிடைத்தது.  ஏறக்குறைய நூற்று முப்பது ஆண்டுகள் யாக்கோபின் புத்திரர், எகிப்தில் செழிப்பாக வாழ்ந்தார்கள்.

          நூற்று முப்பது ஆண்டுகளுக்கு பின்பு, யோசேப்பை அறியாத ராஜா எகிப்தில் தோன்றிபோது அந்த ராஜா யாக்கோபின் புத்திரரின் செழிப்பையும், வளர்ச்சியையும் பார்த்து, அவர்களை அடிமைப்படுத்த துவங்கினான்.

          யாக்கோபின் புத்திரர் எவ்வளவு அதிகமாய் அடிமைப்படுத்தப்பட்டார்களோ அவ்வளவு அதிகமாய் பெருகினார்கள்.

          ஏறக்குறை முன்னூறு ஆண்டுகள் யாக்கோபின் புத்திரர்கள் எகிப்தில் அடிமையாய் இருந்தார்கள்.  அடிமைகளாய் இருந்த யாக்கோபின் புத்திரர் பலுகி பெருகியதைப் பார்த்த ராஜா, புதிதாய் பிறக்கின்ற ஆண் குழந்தைகளை கொலைசெய்ய வேண்டும் என்று தீர்மானித்தான்.

          பார்வோன் எபிரெயரில் புதிதாய் பிறக்கின்ற ஆண் பிள்ளைகளை கொலைசெய்து கொண்டிருந்தபோது, பிறந்தவர் தான் இந்த மோசே.

          கர்த்தருடைய கிருபையினால், மோசே பார்வோனின் கைகக்கு தப்பி பிழைத்துக் கொண்டார்.  எபிரெயர்களை கொலைசெய்ய வேண்டும் என்று நினைத்த பார்வோன் ராஜாவின் வீட்டிலேயே மோசே வளர்ந்தார்.

          எகிப்தில் பிறந்த எபிரெய ஆண் குழந்தைகள் எல்லோரும் கொலைசெய்யப்பட்டுக்கொண்டிருந்த அந்த சூழ்நிலையில், எபிரெயரை தங்கள் சொந்த தேசமாகிய அதாவது கானான் தேசத்திற்கு அழைத்துச் செல்ல ஒரு தலைவன் வேண்டும் என்பதற்காக ஆண்டவர் மோசேயை கிருபையாய் வழிநடத்தி, பாதுகாத்தார்.

 

இயேசு கிறிஸ்து

மத்தேயு 2:16

          அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

          ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறந்த போது, ராஜா ஒருவர் பிறந்திருக்கிறார் என்ற செய்தியை நட்சத்திரங்களின் உதவியால் சாஸ்திரிகள் அறிந்து கொண்டார்கள.

          ராஜாவை சந்தித்து வாழ்த்த வேண்டும் என்று நினைத்த சாஸ்திரிகள், இயேசு ராஜா பிறந்த இடத்தை அறியாமல், ஏரோது ராஜாவின் அரண்மனைக்கு சென்ற விசாரித்தார்கள்.

          சாஸ்திரிகள் ஏரோது ராஜாவைப் பார்த்து, புதிதாய் பிறந்த ராஜா எங்கே என்று கேட்டார்கள்.  இதைக் கேட்ட ஏரோது ராஜா நான் அரசனாய் இருக்கும்போது எனக்கு போட்டியாக இன்னும் ஒருவன் பிறந்திருக்கிறானா? என்ற கோபத்தில், பெத்லகேமிலும் அதின் எல்லைகளிலும் இருக்கின்ற, இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளை கொலை செய்ய ஆணை பிறப்பித்தான்.

          ஏரோது இயேசு கிறிஸ்துவை கொலை செய்ய வகை தேடுகிறான் என்பதை தூதர்கள் இயேசுவின் தகப்பன் யோசேப்பிற்கு அறிவித்தார்கள்.

          யோசேப்பும், இயேசுவின் தாய் மரியாளும், இயேசுவை எகிப்திற்கு கொண்டு சென்றார்கள்.  ஏரோதின் இக்கட்டளையால் அநேக ஆண் குழந்தைகள் கொலை செய்யப்பட்டார்கள்.  உலகத்தை மீட்க வந்த இரட்சகராகிய இயேசுவானர் கிருபையாய் காக்கப்பட்டார்.

          மோசேயின் காலத்தில் எபிரெய ஆண் குழந்தைகள் கொலை செய்யப்பட்டார்கள், இயேசு கிறிஸ்துவின் காலத்தில் ஏரோதின் ஆளுகைக்குட்பட்ட ஆண் குழந்தைகள் கொலை செய்யப்பட்டார்கள்.  இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட மோசேயும் காக்கப்பட்டார், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் காக்கப்பட்டார்.

     எகிப்தில் புதிதாய் பிறக்கின்ற அனைத்து ஆண் குழந்தைகளும் கொலை செய்யப்பட்டபோது மோசேயை ஆண்டவர் பாதுகாத்ததுபோல நம்மையும் பாதுகாக்க வல்லமையுள்ளவராய் இருகக்ிறார்.

 

2. இருவரும் ஜனங்களை இரட்சித்தார்கள்:

மோசே:

அப்போஸ்தலர் 7:35ஆ

          ---------தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.

          எபிரெயர்கள் அதாவது இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்தில் நானூற்று முப்பது வருஷம் வாழ்ந்தார்கள்.  ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் அடிமைகளாக வாழ்ந்தார்கள்.  அடிமைகளாய் வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்களை மீட்கும்படியாக, அவர்களை தங்கள் சொந்த தேசமாகிய கானான் தேசத்திற்கு அழைத்துச் செல்லும்படியாக ஆண்டவர் மோசேயை ஏற்படுத்தினார்.

          இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து இரட்சிக்கும்படியாக அதாவது விடுதலை செய்யும்படியாக மோசே ஏற்படுத்தப்பட்டார்.

 

இயேசு கிறிஸ்து:

மத்தேயு 1:21

          அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.  ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.

          உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களின் பாவங்களையும் நீக்கி அவர்களை இரட்சித்து, அதாவது பாவத்தில் விழுந்த மனிதனை பாவத்திலிருந்து விடுதலையாக்கி பரலோக ராஜ்யத்தில் சேர்ப்பதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பூமிக்கு மனிதனாய் வந்தார்.

 

யோவான் 3:16

          தேவன் தம்முடைய ஒரேபேறாக குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

          இவ்வசனத்தில் எவனோ என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  எவனோ என்றால் அவன் யூதனாகவோ, கிரேக்கனாகவோ, எகிப்தியனாகவோ, ரோமானியனாகவோ, இந்தியனாகவோ, கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவனாகவோ, இந்து மதத்தைச் சார்ந்தவனாகவோ, இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவனாகவோ, தமிழ் மொழி பேசுகிறவனாகவோ, ஆங்கிலம் பேசுகிறவனாகவோ, தெலுங்கு பேசுகிறவனாகவோ, மலையாளம் பேசுகிறவனாகவோ, ஹிந்தி பேசுகிறவனாகவோ, கிரேக்கம் பேசுகிறவனாகவோ, எபிரெயம் பேசுகிறவனாகவோ எவனாக இருந்தாலும் என்பதை குறிக்கிறது.

          இந்த உலகத்தில் எந்த இனம், ஜாதி, நாடு, மொழி, மதம் எதைச் சார்ந்தவனாக இருந்தாலும் அவன் ஆண்டவரை விசுவாசித்தால் இரட்சிக்கப்பட முடியும் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

          இந்த வசனம் முடியும் போது உலகத்தில் அன்பு கூர்ந்தார் என்றே வாசிக்கிறோம்.  எந்த குறிப்பிட்ட நாட்டையோ, மதத்தையோ, மொழியையோ குறிப்பிடாமல் உலகத்தில் அன்பு கூர்ந்தார் என்று ஆவியானவர் எழுதியுள்ளார்.

          முழு உலகத்திலும் எந்த மூலையில் இருக்கும் ஒரு மனிதனும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே என்னை பாவத்திலிருந்து விடுவித்து பரலோகம் சேர்க்கும் வல்லமையுள்ளவர் என்று நம்பினால் அவன் இரட்சிக்கப்பட முடியும்.  முழு உலகத்தையும் இரட்சிக்கும்படியாக இயேசு கிறிஸ்து வந்தார்.

 

          இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி கானான் தேசத்திற்கு அழைத்துச் செல்லும் நபராக மோசே வெளிப்பட்டார்.  உலகத்தில் உள்ள அனைத்து நபர்களின் பாவங்களை நீக்கி அவர்களை பரலோக ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லும் நபராக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்பட்டார்.

 

 

3. இருவரும் உபவாசம் இருந்தார்கள்:

மோசே

யாத்திராகமம் 24:18

          மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பது நாள் மலையில் இருந்தான்.

          கர்த்தரிடமிருந்து கற்பலகைகளையும், நியாயப்பிரமாணங்களையும், கற்பனைகளையும் வாங்கும்படியாக மோசே மலைக்கு ஏறி அங்கே நாற்பது நாள் உண்ணாமலும், குடியாமலும் கர்த்தரோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.

 

இயேசு கிறிஸ்து

மத்தேயு 4:2அ

          அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு…

          ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது ஊழியத்தை ஆரம்பிக்கும் முன்பாக நாற்பது நாள் உபவாசம் இருந்தார்.

 

உபவாசம்:

          உபவாசம் என்பது சாப்பிடாமல் இருப்பது மாத்திரம் அல்ல.  ஆண்டவருக்கு முன்பாக நம்மையும், நம்முடைய ஆத்துமாவையும் தாழ்த்துவதாகும்.  என்னால் ஒன்றும் அல்ல, உம்முடைய கிருபையினாலேயே நான் பிழைத்திருக்கிறேன் என்று நம்மை ஆண்டவருக்கு முன்பாக வெறுமையாக்க வேண்டும்.

          வேதாகமத்திலும் அநேகர் உபவாசித்து ஜெபித்ததன் மூலமாக உடனடியாக பதிலை பெற்றுக்கொண்டார்கள்.

          எ.கா: எஸ்தர் ராஜாத்தி,  நினிவேயின் ஜனங்கள்.

          உபவாசம் என்பது கிறிஸ்வர்கள் மாத்திரம் கடைபிடிக்கின்ற ஒரு காரியம் அல்ல.  பிற மதத்தை சார்ந்தவர்களும் கடைபிடிக்கின்றார்கள்.  கிறிஸ்தவர்களாகிய நாம் உபவாசம் என்று சொல்லுகிறோம்.  இந்து மதத்தினர் விரதம் என்று சொல்லுவார்கள்.  இஸ்லாமிய மதத்தினர் நோன்பு என்று சொல்லுவார்கள்.

உபவாசம்:

மத்தேயு 6:16

          நீங்கள் உபவாசிக்கும்போது மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்.  அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்.  அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நாம் உபவாசிக்க வேண்டும் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.  நான் உபவாசிக்கிறேன் என்று மற்றவர்களிடம் சொல்லுதற்காக உபவாசியாமல், ஜெபத்தில் உறுதியாய் தரித்திருந்து உபவாசம் இருப்பது நல்ல.

உபவாசம் என்பது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தேவையான ஒன்று.  ஆனால், உபவாசம் என்பது கிறிஸ்தவர்களுக்கு கட்டாயமும் அல்ல, சட்டமும் அல்ல.  நாம் விரும்பினால் உபவாசத்தோடு தேவனை ஆராதிக்கலாம்.  உபவாசத்தோடு ஜெபத்திலும், வேத தியானத்திலும் நேரத்தை செலவிடலாம்.

          மோசே கர்த்தரோடு சஞ்சரித்த நாற்பது நாட்களும் உபவாசித்திருந்தார், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நாற்பது நாட்கள் உபவாசித்த பின்பே ஊழியத்தை துவங்கினார்.  நாமும் உபவாசித்து ஜெபிப்போம்.  ஆண்டவரிடமிருந்து நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வோம்.

 

 

4. இருவரும் அற்புதம் செய்தார்கள்

மோசே

அப்போஸ்தலர் 7:36

          இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

          மோசே எகிப்திலும், வனாந்தரத்திலும் அநேக அற்புத அடையாளங்களின் வாயிலாகவே ஜனங்களை வழிநடத்திச் சென்றார்.

          எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் ஜனங்களை விடமாட்டேன் என்று சொல்லி தன் இருதயத்தை கடினப்படுத்தினதினால், பத்து வாதைகளை எகிப்தியர் சந்தித்தார்கள்.

          இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்படுகையில் அவர்களுக்கு தடையாக செங்கடல் இருந்தது.  ஆண்டவரின் வாக்குக்கு இனங்கி மோசே தன் கோலை செங்கடலின் மேல் நீட்டியபோது கடல் இரண்டாக பிளந்து வழிவிட்டது.

          பாலைவனத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உணவாக தினமும் மன்னா வழங்கப்பட்டது.  இஸ்ரவேல் ஜனங்கள் மாமிசம் உண்ண ஆசைப்பட்டபோது வானத்திலிருந்து காடைகள் அவர்களுக்கு கிடைத்தது.  அவர்களுக்கு தண்ணீர் இல்லாதபோது கன்மலையிலிருந்து தண்ணீர் கிடைத்தது.

          இப்படியாக எத்தனையோ அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்து மோசே ஜனங்களை வழிநடத்திச் சென்றார்.

 

இயேசு கிறிஸ்து

யோவான் 2:23

          பஸ்கா பண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

          ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் பூமியில் வாழ்ந்த நாட்களில் எத்தனையோ அற்புத அடையாளங்களை செய்தார்.

          குருடர்கள் பார்வையடைந்தார்கள், குஷ்டரோகிகள் சுகமடைந்தார்கள், வியாதியஸ்தர்கள் குணமானார்கள், மரித்தவர்கள் உயிரோடு எழுந்தார்கள்.  இப்படியாக இயேசு கிறிஸ்து அநேக அற்புதங்களை ஜனங்களுக்கு செய்தார்.

          இயேசு செய்த இன்னும் அநேக காரியங்கள் உண்டு அவைகளை ஒன்வொன்றாக எழுதினால், எழுதப்படும் புத்தகங்களை உலகம் கொள்ளாது என்று யோவான் எழுதுகிறார். (யோவான் 21:25)

 

மத்தேயு 21:22

          நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.

          இயேசு கிறிஸ்து அன்று மாத்திரம் அல்ல, இன்றும் அற்புதம் செய்கிறவராகவே இருக்கிறார்.  இன்று வரை ஒவ்வொரு நாளும் அநேகர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அற்புதங்களை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

          இப்பதிவை வாசிக்கின்ற நீங்களும் கூட இயேசு கிறிஸ்துவின் மூலமாக அநேக அற்புதங்களை பெற்றிருப்பீர்கள்.

          ஒருவேலை ஆண்டவர் உங்களுக்கு அற்பதம் செய்யவில்லை, உங்கள் தேவையை சந்திக்கவில்லை என்றால், தொடர்ந்து விசுவாசத்தோடு ஜெபியுங்கள்.  விசுவாசமுள்ளவர்களாய் நாம் ஜெபத்தில் எவைகளை கேட்கிறோமோ அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று வாசிக்கிறோம்.

          நம்முடைய சரீரத்தில் நீங்காத வியாதியாய் இருக்கலாம், மருத்துவர்களால் கைவிடப்பட்ட சூழ்நிலையாக இருக்கலாம், திருமணக்காரியமாக இருக்கலாம், குழந்தை இல்லாமல் இருக்கலாம், நல்ல வேலை கிடைக்காமல் இருக்கலாம், குடும்பத்தில் சமாதானமின்மையாக இருக்கலாம். எந்த ஒரு குறைவாக இருந்தாலும், எந்த தேவையாக இருந்தாலும் என் கர்த்தர் அதை நிறைவாய் மாற்ற, ஆசீர்வாதமாய் மாற்ற வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.  அவரை நாம் முழுமையாய் விசுவாசிக்கும்போது அற்புதங்களையும் அடையாளங்களையும் காண முடியும்.

 

யோவான் 14:14

          என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

 

 

 

 

5. இருவரும் பரிந்துபேசினார்கள்:

மோசே

யாத்திராகமம் 32:32

          ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்.  இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புத்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.

          அற்புதமாக இஸ்ரவேல் ஜனங்களை ஆண்டவர் வழிடத்தி வந்தார்.  அதை உணராத ஜனங்கள் ஆண்டவருக்கு விரோதமாக முறுமுறுத்துக்கொண்டிருந்தார்கள்.  ஆண்டவர் செய்த அத்துனை அற்புதங்களையும், அடையாளங்களையும் பார்த்தும் இஸ்ரவேலர்கள் ஆண்டவரை விசுவாசிக்கவில்லை.

          இஸ்ரவேல் ஜனங்களின் மூர்க்க குணத்தினால் ஆண்டவர் ஜனங்களை அழிக்க தீர்மானித்தார்.  ஆண்டவர் மோசேயை அழைத்து ”இந்த ஜனங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்களாய் இருக்கிறார்கள்” நான் இவர்கள் அனைவரையும் அழித்துப்போட்டு, உன்னை ஒரு பெரிய ஜாதியாக மாற்றுகிறேன் என்று சொன்னபோது, மோசே ஜனங்களின் அக்கிரமங்களுக்காக ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்டார்.  ஜனங்களுக்காக பரிந்துபேசினார்.

 

 

இயேசு கிறிஸ்து

1 யோவான் 2:1ஆ

          -------ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

          ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இன்றளவும் மனிதர்களுடைய பாவங்களுக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார்.

 

உவமை:

லூக்கா 13:6-9

          6. அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்.  ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்.  அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.

          7. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திரமத்திலே கனியைத் தேடிவருகிறேன். ஒன்றையுங் காணவில்லை.  இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.

          8. அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும், நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,

          9. கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.

          இந்த உவமையில் எஜமான் என்பது பிதாவானவரை குறிக்கிறது.  தோட்டக்காரன் என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.  அத்திமரம் என்பது உலகில் வாழும் ஜனங்களைக் குறிக்கிறது.

          நம் ஒவ்வொருவரும் ஆண்டவருடைய அத்திமரங்கள்.  அவர் நம்மிடம் வந்து கனியை தேடும்போது நாம் கனிகொடுக்கிறவர்களாக இருக்கிறோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

          நம்மிடம் கனி இல்லை என்றாலும், இயேசு கிறிஸ்து நமக்காக தோட்டக்காரனாக இருந்து பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

இந்த வருடம் அவன் திருந்திவிடுவான்.  இந்த வருடம் கனிகொடுத்துவிடுவான் என்று இயேசு கிறிஸ்து பிதாவினிடத்தில் நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கின்றார்.  நாம் அதை உணராதவர்களாக மீண்டும் மீண்டும் பாவம் செய்வோமானால், ஆண்டவர், இந்த அத்திரமத்தில் கனி இல்லை என்று ஒரு நாள் நம்மை வெட்டிப்போடக் கூடும்.

நமக்கு கிடைத்திருக்கின்ற இந்த கிருபையின் நாட்களில் ஆண்டவருடைய பிள்ளைகளாய், அவருக்கு கனிகொடுக்கின்ற பிள்ளைகளாய் நாம் வாழும்போது அவருக்குள்ளாக நிலைத்திருக்க முடியும்.

 

          ஐந்து ஆகமங்களின் (ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்) பிரதிநிதியாகிய மோசேக்கும், புதிய ஏற்பாட்டின் பிரதிநிதியாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள ஐந்து ஒற்றுமைகளைக் குறித்து அறிந்துகொண்டோம்.  நேரம் கிடைக்கும்போதெல்லாம் உபவாசத்திலும், ஜெபத்திலும் தரித்திருப்போம்.  நமக்கு கிடைத்திருக்கின்ற இந்த கிருபையின் நாட்களில் ஆண்டவருக்காக கனிகொடுக்கின்ற பிள்ளைகளாய் வாழ்வோம்.

          ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.