Type Here to Get Search Results !

Christian Doctrines Part 1 in Tamil | கிறிஸ்தவ மூல உபதேசங்கள் | Jesus Sam

கிறிஸ்தவ மூல உபதேசங்கள் பதினாறு (Part-1)

    ஆண்டவரும், மீட்பரும், உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.  கிறிஸ்தவர்களின் மூல உபதேசங்கள் பதினாறு உள்ளன.  அவற்றில் இரண்டு மூல உபதேசங்களை குறித்து இந்த குறிப்பில் நாம் தியானிப்போம்

லோகோஸ் | ரேமா | உபவாசம் | பரிசுத்த வேதாகமம் | கடவுள் 

            வேதாகமத்தில் நேர்மறையான கட்டளைகள், இதை செய் என்று சொல்லும் 248 கட்டளைகள் இருக்கின்றன.  எதிர்மறையான கட்டளைகள், இதை செய்யாதே என்று சொல்லும் 365 கட்டளைகள் உள்ளன.

            வேதவசனத்தின் அர்த்தங்களை புரிந்துகொள்ள இரண்டு எபிரெய வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.  அவை: லோகோஸ், ரேமா.

            லோகோஸ் என்றால் எழுதப்பட்ட வார்த்தை.

            ரேமா என்றால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை.

ரேமா:

            நாம் ஒரு வசனத்தை வாசிக்கும்போது, அந்த வசனத்தைக் குறித்த ஒரு வெளிப்பாட்டை ஆவியானவர் நமக்கு தருவார்.  அந்த வசனத்தின் மூலமாக நம்மை ஆண்டவர் சரிபடுத்துவார், நாம் ஒரு தேவைக்காக காத்திருக்கும்போது, அந்த வசனத்தின் மூலமாக ஆவியானவர் நம்மை ஆறுதல்படுத்துவார்.  இப்படிப்பட்ட வெளிப்பாட்டையே ரேமா என்கிறார்கள்.

நாம் வாசித்த அதே வசனத்தை வேறொருவர் வாசிக்கும்போது, அந்த வசனம் அவருக்கு வேறுவிதமான அர்த்தத்தை கொடுக்கும்.  ஆவியானவர் அவருக்கு அதே வசனத்தின் மூலமாக வேறு ஒரு வெளிப்பாட்டை கொடுப்பார். ஆவியானவர் எனக்கு கொடுத்த வேறுபாட்டிற்கும், மற்றொருவருக்கு கொடுத்த வேறுபாட்டிற்கும் அநேக வித்தியாசங்கள் இருக்கும்.  இவற்றில் எது சரியானது என்று நாம் யோசிக்க தேவையில்லை.  இரண்டு வெளிப்பாடுகளும் சரியானதுதான்.  ரேமாவைப் பொறுத்தவரை அவை மாறிக்கொண்டே இருக்கும்.  ஒவ்வொருவருக்கும் ஆவியானவர் ஒவ்வொரு விதமான வெளிப்பாட்டைக் கொடுப்பார்.

ஒரு ஊழியன் எவ்வளவு அதிகம் படித்திருந்தாளும், எவ்வளவு பட்டங்களை பெற்றிருந்தாலும், அவன் பிரங்கிக்க வரும்போது, ஆவியானவரின் வெளிப்பாட்டையே பிரசங்கிக்க வேண்டும்.  நான் படித்திருக்கிறேன், வேதவசனங்கள் எல்லாம் எனக்கு மனனமாக தெரியும் என்பதால், ஒரு ஊழியன் ஆவியானவரின் துணையில்லாமல் பிரசங்கிப்பானானால், அவன் நிச்சயம் கள்ள ஊழியனாகவே இருப்பான்.

            லோகோஸ் என்பவை மாறாத ஒன்று. 

எ.கா: வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். (மத்தேயு 11:28)

            இந்த வசனத்தைப் பொறுத்தவரை ரேமா ஒவ்வொரு இடத்தைப் பொறுத்தும், ஒவ்வொரு ஊழியரைப் பொறுத்தும் மாறுபடும்.  இவ்வசனத்தைக் கொண்டு இரட்சிக்கப்படாத புறமதத்தினரிடம் பிரசங்கிக்கும்போது ஆவியானவர் ஒருவித ரேமாவை கொடுப்பார்.  அதே வசனத்தைக்கொண்டு கிறிஸ்தவர்களுக்கு பிரசங்கிக்கும்போது ஆவியானவர் வேறுவிதமான ரேமாவைக் கொடுப்பார். 

லோகோஸ்:

            லோகோஸ் என்பது அந்த காலத்தில் இயேசு கிறிஸ்து எதற்காக இந்த வார்த்தையை பயன்படுத்தினார்.  வருத்தப்படுகிறவர்கள் என்று யாரைக்குறித்து ஆண்டவர் சொன்னார்.  பாரம் சுமக்கிறவர்களே என்றால், அவர்கள் என்ன பாரத்தை சுமந்துகொண்டிருந்தார்.  ஆண்டவர் இவ்வார்த்தையை பயன்படுத்திய போது கேட்டவர்களுக்கு என்ன விளங்கியது.  என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.  ஆண்டவர் சொன்ன இழைப்பாறுதல் எதைக் குறிக்கும்.  இவைகளையே நாம் லோகோஸ் என்கிறோம்.

            லோகோஸ் ஒருபோதும் மாறாத ஒன்று.  ஆனால், ஒவ்வொரு ஊழியரைப் பொறுத்தும், ஒவ்வொரு காலசூழலுக்கேற்ப ரேமாக்கள் மாறுபடும்.  ரேமாக்கள் மாறுவதால், அவர்கள் கல்ல உபதேசிகள் அல்ல.  அவர்களுக்கு ஆண்டவர் தந்த வெளிப்பாட்டின்படி அவர்கள் பிரசங்கிக்கிறார்கள்.  ஆனால், ஒரு ஊழியர் லோகோசை மாற்றி பிரசங்கிப்பாரானால், அவன் கள்ள உபதேசி.

            வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை உள்ள வெவ்வொரு வசனத்தின் மூலமாக ஆவியானவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரேமாக்களை இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

            கிறிஸ்தவ மூல உபதேசங்கள் என்பது, இவற்றிலிருந்து எதையும் நாம் நீக்கவும் முடியாது, எவற்றையும் புதிதாக சேர்க்கவும் முடியாது, எவற்றையும் மாற்றவும் முடியாது, மூல உபதேசங்களை நாம் திரித்து பேசவும் முடியாது.  இப்படி மாற்ற முடியாத பதினாறு கிறிஸ்தவ மூல உபதேசங்கள் இருக்கின்றன.  அவற்றைக் குறித்து சிந்திப்போம்.

            இந்த பதினாறு மூல உபதேசங்களைத் தவறி வேதத்தில் இன்னும் பல மூல உபதேசங்கள் இருக்கின்றன.  மற்ற மூலஉபதேசங்களை ஒரு ஊழியன் அறியாமையினால் தவறாக பிரசங்கிக்கும்போது, அது அவனை ஒரு கள்ள உபதேசியாக மாற்றாது.

எ.கா: உபவாசம்

            சில சபைகளில் உபவாசத்திற்கென தனி முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.  சில சபைகளில் உபவாசித்தால் மட்டுமே அவன் கிறிஸ்தவன் என்று சட்டமும் இயற்றுகிறார்கள்.  சில சபைகளில் உபவாசம் ஒன்றும் தேவையில்லை.  சாப்பிடுகிறன் கர்த்தருக்கென்று சாப்பிடுகிறான், உபவாசிக்கிறவன் கர்த்தருக்கென்று உபவாசிக்கிறான் என்று பிரசங்கிக்கிறார்கள். 

            உபவாசிக்கிற கிறிஸ்தவர்கள் உபவாசிக்காத கிறிஸ்தவர்களைப் பார்த்து, நீங்கள் ஆவியில்லாதவர்கள், அனலில்லாதவர்கள் என்று குறை சொல்லுவது தவறானது.  உபவாசியாதவர்கள், உபவாசிக்கிறவர்களைப் பார்த்து மனவாளன் எங்களோடு இருக்கிறார், நாங்கள் உபவாசிப்பதில்லை, நீங்கள் வேதத்தை சரியாக புரிந்துகொள்ள வில்லை என்று குறைசொல்வதும் தவறானது.

            உபவாசம் என்பது கிறிஸ்தவ மூல உபதேசம் அல்ல.  உபவாசத்தைக் கடைபிடிக்கிறவர்கள் நாங்கள் தான் உண்மை கிறிஸ்தவர்கள் என்றோ, உபவாசத்தைக் கடைபிடிக்காதவர்கள் நாங்கள் தான் உண்மை கிறிஸ்தவர்கள் என்றோ சொல்ல முடியாது.  இவைகள் ஆவியானவரின் வெளிப்பாட்டின் படி சில உபவாசிக்கிறார்கள், சிலர் உபவாசியாமல் இருக்கிறார்கள்.

            சிலர் வியாதியின்போது மருந்து எடுப்பார்கள், சிலர் மருந்து எடுக்க மாட்டார்கள்.  கர்த்தர் எனக்கு சுகம் தருவார், நான் எந்த மருந்து, மாத்திரையும் எடுக்க மாட்டேன் என்பார்கள்.  மருந்து எடுப்பவர்கள் மருந்து எடுக்காதவர்களை பார்த்து குறைசொல்வதும், மருந்து எடுக்காதவர்கள் மருந்து எடுப்பவர்களைப் பார்த்து குறைசொல்வதும் தவறானது.  இவை மூல உபதேசம் அல்ல.

            இப்படி மூல உபதேசம் அல்லாத காரியத்தை ஊழியர் பின்பற்றாததால், அவர் கள்ள உபதேசி என்று சொல்வது தவறு.  ஆனால், நாம் கற்றுக்கொள்ளப்போகிற இந்த கிறிஸ்தவ மூல உபதேசங்களை ஒரு ஊழியனோ, ஒரு விசுவாசியோ, ஒரு கிறிஸ்தவ நிருவனமோ, கிறிஸ்தவ கல்லூரியோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர் நிச்சயம் கள்ள உபதேசியாகவே இருப்பார்.

 

1. பரிசுத்த வேதாகமம்:

            கிறிஸ்தவர்களின் முதலாவது மூல உபதேசம் பரிசுத்த வேதாகமம்.  பரிசுத்த வேதாகமமானது தேவனுடைய ஆவியினால் அருளப்பட்டிருக்கின்றது.

2 தீமோத்தேயு 3:15,16

            15. வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.  தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,

            16. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

1 பேதுரு 2:2,3

            2. சகல துர்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூதலையும் ஒழித்துவிட்டு,

            3. நீங்கள் வளரும்படி, புதிதாய் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

            முழு வேதாகமமும் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு எழுதப்பட்டதால், ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரம் முதல் வசனம் முதல் வெளிப்படுத்தல் இருபத்து இரண்டாம் அதிகாரம் கடைசி வசனம் வரை உள்ள எந்த ஒரு வசனத்தையும் நீங்கவும் முடியாது.  ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரம் முதலாம் வசனம் முதல் வெளிப்படுத்தல் இருபத்து இரண்டாம் அதிகாரம் கடைசி வசனம் வரை உள்ள இந்த வசனங்களே தேவனுடைய வார்த்தைகள்.  இதற்கு அதிகமாக எந்த ஒரு புதிய வசனத்தை சேர்க்கவும் முடியாது. 

            பிசாசானவன் சிலரை, சிலவசனங்களை நம்பவிடாதபடி தடுத்துப்போடுவான்.  சிலர் முழு பழைய ஏற்பாட்டையும் நம்பமாட்டார்கள்.  புதிய ஏற்பாடு மட்டுமே வேதம் என்று சொல்லுவார்கள்.  சிலர் புதிய ஏற்பாட்டை நம்பமாட்டார்கள்.  பழைய ஏற்பாடு மட்டுமே வேதம் என்று சொல்லுவார்கள்.

            நாம் புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழலாம், இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டு மனிதனாக இருக்கலாம், புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் நாம் எல்லா ஒழுங்குகளையும் கடைபிடிக்கலாம் இருப்பினும், நாம் பழைய ஏற்பாட்டை தள்ளிவிட முடியாது.  புதிய ஏற்பாட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம், எவ்வளவு மதிப்பு, எவ்வளவு அபிஷேகம் இருக்கிறதோ, அதே அளவிற்கு முக்கியத்துவம் பழைய ஏற்பாட்டிற்கும் உண்டு.

            அநேக கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டில் நேசிப்பதும், வாசிப்பதும் சங்கீத புத்தகத்தை மாத்திரமே.  சங்கீத புத்தகத்திற்கு எந்த அளவிற்கு அபிசேஷம் இருக்கின்றதோ, வல்லமை இருக்கின்றதோ அதே அளவு அபிஷேகமும் வல்லமையும் தேவன், கர்த்தர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிறாத எஸ்தர் புத்தகத்திற்கும் இருக்கின்றது.

            எஸ்தர் புத்தக்தில் தேவன், கர்த்தர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படாததால், அவை பரிசுத்த ஆவியானவரின் துணையோடு எழுதப்பட்ட புத்தகம் அல்ல என்று சொல்லுவது தவறு.

            சிலர் உன்னப்பாட்டு புத்தகத்தை கடவுளின் வார்த்தை இல்லை என்று நினைக்கிறார்கள்.  மற்ற புத்தகங்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவமும், வல்லமையும் இருக்கிறதோ அதே முக்கியத்துவம் உன்னதப்பாட்டு புத்தகத்திற்கும் இருக்கிறது.

            பழைய ஏற்பாட்டில் உள்ள முப்பத்து ஒன்பது புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் உள்ள இருபத்து ஏழு புத்தகங்களும் கடவுளுடைய வார்த்தை என்பதை நாம் நம்ப வேண்டும்.  இதற்கு அதிகமாக நாம் ஒன்றையும் சேர்க்க முடியாது.

            பவுல் கொரிந்து சபைக்கு அநேக கடிதங்களை எழுதினார்.  ஆனால், இரண்டு நிருபங்கள் மாத்திரமே கடவுளுடைய வார்த்தைகள்.  மற்ற கடிதங்கள் கடவுளுடைய வார்த்தைகள் அல்ல. 

            கி.பி 1576-ம் ஆண்டு கத்தோலிக்க குருக்கள் இந்த அறுபத்து ஆறு புத்தகங்களுக்கு மேல்அதிகமாக இன்னும் ஆறு புத்தகங்களை சேர்த்தார்கள்.  இன்றும் கத்தோலிக்கர்களுடைய வேதாகமத்தைப் பார்த்தால் எழுபத்து இரண்டு புத்தகங்கள் இடம் பெற்றிருக்கும்.  கத்தோலிக்க குருக்கள் அதிகபடியாக சேர்த்த அந்த ஆறு புத்தகங்களை நாம் கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

            The Church of Jesus Christ என்று சொல்லப்படுகின்ற ஒரு கள்ள உபதேச நிருவனம் இருக்கின்றது.  இவர்களை மோமன் என்று அழைப்பார்கள்.  ஜோசப் சுமித் என்ற ஒரு நபர் பொய்க்கதையின் அடிப்படையில் உருவாக்கிய ஒரு நிருவனமே இந்த மோமன் நிருவனம்.  ஜோசப் சுமித் உருவாக்கிய Book of Momens என்ற புத்தகத்தையே அவர்கள் வேதாகமம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.  இவைகள் கடவுளுடைய வார்த்தைகள் அல்ல.

            வேதாகமத்தில் ஆங்காக்கே கடவுளுடைய வார்த்தைகள் உண்டு என்றல்ல, முழு வேதாகமமும் கடவுளுடைய வார்த்தை, அது மாத்திரமே கடவுளுடைய வார்த்தை என்று ஒவ்வொரு விசுவாசியும், சபையும் நம்ப வேண்டும்.  இதுவே முதலாவது மூல உபதேசம்

 

 

2. கடவுள்

            கிறிஸ்தவர்களுக்கு ஒரு தெய்வமே உண்டு.  மூன்று தெய்வங்களையோ, பால தெய்வங்களையும்,  நாம் ஆராதிக்கவில்லை.  ஒரே தெய்வம் திரித்துவமாக காணப்படுகின்றார்.  திரித்துவம் என்ற பதம் வேதத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பது உண்மை.  இப்பதத்தை அறிமுகப்படுத்தியவர் ஹிப்போ என்ற பிரதேசத்தைச் சார்ந்த அகஸ்டியன் என்று அழைக்கப்படும் சபை தலைவர்.

            திரித்துவம் என்ற சொல் வேதாகமத்தில் காணப்படாவிட்டாலும், திரித்துவத்தின் தன்மைகள் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை காணப்படுகின்றது. 

ஆதியாகமம் 1:1-3

            1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

            2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது.  ஆழத்தின் மேல் இருள் இருந்தது.  தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

            3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார்.  வெளிச்சம் உண்டாயிற்று.

            ஆதியாகமம் முதல் அதிகாரம் முதல் மூன்று வசனங்களிலேயே திரித்துவக்கடவுளின் தன்மை வெளிப்படுகின்றது.  சிருஷ்டித்தவர் தேவன்.  ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தவர் ஆவியானவர்.  மூன்றாம் வசனத்தில் வார்தையாகிய கடவுள் வெளிப்படுகின்றார்.  அந்த வார்த்தையாகிய கடவுள் மனிதனானார்.  யோவான் 1:14-ல் அந்த வார்த்தை மாம்சமாகி என்று வாசிக்கிறோம்.

 

            ஆதியாகமம் 1:1-ல் பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்த தேவன் என்ற பதத்தை எபிரெய மொழிபெயர்ப்பில் பார்த்தால் எல்லோகிம் என்று பயன்படுத்தப்பட்டுள்ளது.  எல்லோகிம் என்றால் ஒருமையைக் குறிக்கும் ஒரு வார்த்தை அல்ல, எல்லோகிம் என்றால் அந்த ஒருமைக்குள் பண்மை காணப்படுகின்றது.

            எ.கா: மனிதன்.  மனிதன் என்பது ஒரு ஆண்பால் சொல்.  நான் ஒரு மனிதன்.  மனிதன் என்பது ஒருமையைக் குறிக்கும் ஒரு சொல்.

சில நேரங்களில் மனிதன் என்ற பதம் பன்மையையும் குறிக்கிறது.  மனிதன் சந்திரனுக்கு பிரயாணப்பட்டான்.  மனிதன் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துவிட்டான், மனிதன் பல சாதனைகளை புரிந்துவிட்டான்.  இங்கு நாம் பார்க்கின்றோம், மனிதன் என்ற ஒரு ஆண்பால் ஒருமைச் சொல் ஒரு மனிதனை குறிப்பதில்லை.  அநேகரை குறிக்கிறது.

மனிதன் மாறிவிட்டான் என்று சொல்லும்போது, ஒரு மனிதனை குறிக்காமல் ஒட்டுமொத்த மனித இனத்தையே குறிக்கிறது.

            இங்கு மனிதன் என்ற சொல் பன்மையாக மாறவில்லை.  ஒருமையாக இருந்துகொண்டே பன்மைக்குறிய பொருளைத் தருகின்றது.  இது தமிழ் மொழியின் சிறப்பு.

            அதைப்போலவே எல்லோகிம் என்ற சொல்லிலும் எபிரெய அர்த்தப்படி ஒருமையை குறிக்கும் சொல்லாக இருந்தாலும்.  அதற்குள்ளாக பன்மை காணப்படுகின்றது.  ஆண்டவர் எல்லீம் என்றோ, எல்கீம் என்றோ வார்த்தையை பயன்பத்தியிருந்தால், தேவர்கள் என்று வந்திருக்கும்.  ஆண்டவர் வேதத்தை எழுதும்போது மிகச் சிறப்பாக மொழியை கையாண்டுள்ளார்.  எல்லோகிம் என்றால் ஒருமைக்குள் பண்மை காணப்படுகின்றது.

            கிறிஸ்தவர்களின் இரண்டாவது மூல உபதேசம்.  நமக்கு ஒரே கடவுள் இருக்கிறார்.  அவர் திரித்துவமாக செயல்படுகின்றார்.  அவருக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. 

 

திரித்துவம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவி

            பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் தனித்தனி கடவுள்கள் அல்ல.  மூவரும் ஒருவரே.  கடவுளின் திரித்துவத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.  நம்ப வேண்டும்.  மூன்றும் ஒரே கடவுள் என்றால் மூவரிடமும் நாம் ஜெபிக்கலாம்.

            ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படி ஜெபிக்க வேண்டும் என்று வேதத்தில் இரண்டு முறை கற்றுக்கொடுத்திருக்கிறார்.  முதல் முறை கலிலேயாவில் வைத்து மலைப்பிரசங்கத்தின் போது கற்றுக்கொடுத்தார்.  (மத்தேயு 5,6,7-ம் அதிகாரம்).  இரண்டாவது முறை எருசலேமில் உள்ள ஒலிவமலையில் வைத்து சீஷர்கள் இயேசுவிடம் வந்து, ஆண்டவரே யோவான்ஸ்நானன் தன்னுடைய சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்ததுபோல நீறும் எங்களுக்கு ஜெபிக்க கற்றுக்கொடும் என்று கேட்டார்கள்.  அப்பொழுதும் இயேசு ஜெபத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.  இந்த இரண்டு முறையும் ஆண்டவர் ஒரே ஜெபத்தையே கற்றுக்கொடுக்கின்றார்.

            பரமண்டல ஜெபத்தில், பரமண்டலங்களில் இருக்கின்ற எங்கள் பிதாவே, என்ற இந்த பதத்ததை வைத்துக்கொண்டு சிலர் நாம் இயேசுவை நோக்கியோ, பரிசுத்த ஆவியானவரை நோக்கியோ ஜெபிப்பது தவறு என்று போதிக்கிறார்கள்.  இயேசுவின் நாமத்திலே பிதாவை நோக்கி மாத்திரமே ஜெபிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.

            பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இம்மூவரும் வேறுவேறு நபர்கள் என்பது உண்மை.  குமாரன் தான் சிலுவையில் அறையப்பட்டார்.  சிலுவையில் அறையப்பட்டது பிதாவும் அல்ல, பரிசுத்த ஆவியானவரும் அல்ல.  இருப்பினும் இம்மூவரும் ஒருவர் என்பதால், நாம் இயேசுவை நோக்கியும் ஜெபிக்கலாம், பரிசுத்த ஆவியையும் நோக்கி ஜெபிக்கலாம்.

            கி.பி 360, 370 காலக்கட்டத்தில் அரியஸ் (Arius) என்று அழைக்கப்படும் ஒரு சபை தந்தை இருந்தார்.  அவரால் திரித்துவத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.  எனவே, அவர் இயேசு ராஜாவாக வந்தார், உயர்த்தப்பட்டார் ஆனால் அவர் கடவுள் அல்ல என்று போதிக்க துவங்கினார்.

            தேவன் என்ற வார்த்தை வேதத்தில் அநேக முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஆண்டவர் மோசேயைப் பார்த்து, நீ பார்வோனிடத்திற்கு போ, நீ அவனுக்கு தேவனாய் இருப்பாய் என்று சொல்லுகிறார்.

            அரியஸ் என்ற தந்தை இந்த மோசேயைப்போல இயேசுவும் ஒரு தேவனாக இருக்கலாமே தவிர இவர் பிதாவாக முடியது என்ற வாதத்தை முன்வைத்தார்.  அந்த காலத்தில் ரோமபேரரசனாக இருந்த கான்ஸ்டன்டைன் என்ற மன்னர் நைசீயா என்ற இடத்தில் ஒரு மாநாட்டை ஏற்படுத்தி, அதில் அரியசையும் அவருக்கு எதிரானவர்களையும் வழக்காடவைத்தார்.  அத்தனீசியஸ் என்றவர் அரியசிற்கு எதிராக வாதாடினார்.  அத்தனீசியஸ் அவர்களின் கேள்விகளுக்கு அரியஸ் அவர்களால் பதில் சொல்ல முடியாததால் அரியசின் கோட்பாடுகள் அன்றுறோடு நின்றுபோயிற்று.

            19-ம் நூற்றுாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த சால்ஸ் ராசல் என்ற ஒருவர், ஆரியஸின் கோட்பாடுகளை வாசித்து, அதில் என்ன தவறு இருக்கிறது என்பதை கண்டறித்தார்.  அவர் ஏற்படுத்திய சபை தான் யெகோவாவின் சாட்சிக்காரர்கள்.

            பிசாசானவன் காலத்துக்குக்காலம் யாரையாவது எழுப்பி பிதா வேண்டாம் இயேசு மாத்திரம் போதும் என்றும், இயேசு வேண்டாம் பிதா மாத்திரம் போதும் என்றும் சபையை பாழாக்கிக்கொண்டிருக்கின்றான்.

            யெகோவாவின் சாட்சிக்காரர்கள் திரித்துவத்தை நம்பாததால் அவர்கள் கள்ள உபதேசிகள்.

            UBC – United Banticastal Church என்ற ஒரு சபை உண்டு.  இவர்கள் பிதாவும், பரிசுத்த ஆவியும் இல்லை என்பார்கள்.  இயேசு மாத்திரமே கடவுள் என்று சொல்லுவார்கள்.  இவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்காமல், இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பார்கள்.

            இந்த 21-ம் நூற்றாண்டில் அநேக பெந்தேகோஸ்தே ஊழியர்கள் பிதாவும் வேண்டாம், குமாரனும் வேண்டாம், பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே கடவுள் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.

            பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இம்மூவரில் ஒருவரையாகிலும் ஏதாவது ஒரு சபை ஏற்றுக்கொள்ளாதிருந்தால், அது கள்ள உபதேசம் நிறைந்த சபையாகும்.

            பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இம்மூவரும் சர்வ வியாபகர், சர்வ ஞானி, சர்வ வல்லவர், மாறாதவர், ஆதியில்லாதவர், அந்தமில்லாதவர், சகலத்தையும் அறிந்தவர், சகலத்தையும் செய்யக்கூடியவர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

            இம்மூவரும் சம உரிமை படைத்தவர்கள். இவர் தான் பெரியவர் என்று நாம் பிரித்துக் காட்ட முடியாது.  இயேசு கிறிஸ்து மனுஷனாய் வந்தபோது, அவருடைய மனுஷத்துவத்தை காட்டும்படியாக என்பிதா என்னிலும் பெரியவர் என்று சொன்னார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.