Type Here to Get Search Results !

Christian Doctrines Part 2 | கிறிஸ்தவ மூல உபதேசங்கள் பாகம் இரண்டு 2 | கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய சட்டங்கள் | Jesus sam

கிறிஸ்தவ மூல உபதேசங்கள் (பாகம் 2)

    ஆண்டவரும், மீட்பரும், உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.

    கிறிஸ்தவ மூல உபதேசங்கள் பாகம் இரண்டு.  முதலாம் பாகத்தில் பரிசுத்த வேதாகமத்தையும், கடவுளையும் கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டும்.  இதை நம்பாதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்று அறிந்துகொண்டோம்.  இந்த இரண்டாம் பாகத்திலும் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய மூல உபதேசங்கள் சிலவற்றைக் குறித்து சிந்திப்போம்.  உண்மை கிறிஸ்தவர்கள் தேவதூதர்களையும், சாத்தானையும், கடவுள் மண்ணினாலேயே மனிதனை படைத்தார் என்பதையும், உலகத்தில் பாவம் உண்டு என்பதையும், மனிதன் பாவத்திலிருந்து விடுதலை பெற இயேசுவின் இரத்தத்தினால் மாத்திரமே முடியும் என்பதையும், ஞானஸ்நானம் கட்டாயம் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    கிறிஸ்தவ மூல உபதேசங்கள் பாகம் ஒன்றை வாசிக்காதவர்கள் கீழே உள்ள லிங்க்-கை தொட்டு வாசித்த பின்பு இந்த இரண்டாம் பாகத்தை வாசிக்கவும்.

கிறிஸ்தவ மூவ உபதேசங்கள் பாகம் ஒன்று (1)

3. தேவதூதர்கள்:

            தேவதூதர்களை நாம் இரண்டு விதமாக பிரிக்கலாம்.  வீழ்ச்சியடைந்த தூதர்கள்.  வீழ்ச்சியடையாத தூதர்கள்.  கடவுள் எத்தனை தூதர்களை படைத்தார் என்பது நமக்கு தெரியாது.  ஆனால் கோடிக்கணக்கான தூதர்களை படைத்திருக்கிறார் என்பது உண்மை.  தூதர்களில் தலைவர்களை ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் நாம் அறிந்திருக்கிறோம்.  தூதர்களுக்கு எத்தனை விதமான தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறியோம்.

            பிரதான தூதனாகிய காபிரியேல் என்றும், பிரதான தூதனாகிய லூசிபர் என்றும் நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.  அப்படியானால், இரண்டு பிரதான தூதர்களை நாம் அறிந்திருக்கிறோம்.  இவர்கள் மட்டுமே பிரதான தூதுர்களா? இன்னும் வேறு அநேக பிரதான தூதர்கள் இருக்கிறார்களா? என்பதை நாம் அறியோம். வெளிப்படுத்தல் புத்தகத்தில் சில தூதர்கள் சிங்காசனத்தின் மேல் அமர்ந்திருப்பதையும் நாம் பார்க்க முடியும்.

            தேவதூதர்கள் எப்படி இருப்பார்கள்? என்ன வேலை செய்வார்கள்?  எத்தனை தேவதூதர்கள் இருக்கிறார்கள்? தேவதூதர்களுக்கென எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை பற்றி நமக்கு அறிந்துகொள்ள ஆர்வம் இருக்கலாம்.  ஆனால் மனிதர்களாகிய நமக்கு அதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

            மனிதர்களாகிய நமக்கு பரலோகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசை.  ஆனால் அவசியம் இல்லை.  நரகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசை, ஆனால் அவசியம் இல்லை.  பாதாளம் எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசை, ஆனால் அவசியம் இல்லை.  பரதீசு என்று ஒன்று உள்ளதா? இருந்தால் அது எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசை, ஆனால் அவசியம் இல்லை.

            அவசியம் இல்லாத காரியங்களை, ஆசையின் நிமித்தமாக நானும் ஆராய்ச்சி செய்கிறேன் என்று சொல்லி அநேகர் கள்ள உபதேசிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

            அநேகர் தாங்கள் பரலோகம் சென்றதாகவும், தாங்கள் பாதளம் சென்றதாகவும் சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  அவசியமில்லாத ஆசைகளை நிவிர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக அநேகர் தவறான உபதேசத்தை மக்கள் மத்தியில் உபதேசிக்கிறார்கள்.

            தேவதூதர்கள் உண்டு, பிரதான தூதர்கள் உண்டு.  பிரதான தூதுர்களில் இருவர் காபிரியேல், மிகாவேல்.  தேவதூதர்கள் தேவனுடைய வேலைக்காரர்கள்.  மனிதர்களாகிய நம்முடைய வேலைக்காரர்கள் அல்ல.

            தேவதூதர்கள் மனிதர்களைவிட சற்று மேலானவர்கள்.  மனுஷகுமாரன் பூமிக்கு வந்தபோது தேவதூதர்களைவிட சற்று சிறியவராகவே வந்தார்.

வீழ்ந்த தூதர்கள்:

            பரலோகத்தில் இருந்து பாதாளத்திற்கு தள்ளப்பட்ட தூதனின் பெயர் லூசிபர் என்று நாம் நினைக்கிறோம்.  லூசிபர் என்ற பதம் எபிரெய பதம் அல்ல.  லூசிபர் என்பது ஒரு இலத்தின் பதம்.  அதிகாலையின் மகனாகிய விடிவெற்றியே (ஏசாயா 14:12) என்பதன் இலத்தின் பதம் லூசிபர்.

            கீழே விழுந்த தூதனின் பெயர் லூசிபர் தானா? அவனுக்கு பெயர் இருந்ததா? இல்லையா என்று? நமக்கு தெரியாது.  இதை ஆராய்ச்சி செய்து கொண்டு நம்மை மாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்.

            கீழே விழுந்த தூதனுக்கு ஆண்டவர் எத்தனையோ நல்ல காரியங்களை கொடுத்திருந்தார்.  அதினால் அவனுக்குள்ளாக பெருமை வந்தது.  அவனுக்குள் காணப்பட்ட பெருமையினால் பரலோகத்திலிருந்து பாதாளத்திற்கு தள்ளப்பட்டான்.  இயேசுவானவர் மூன்றில் ஒரு பங்கு தூதர்கள் விழுந்ததாக கண்டேன் என்று சொல்லுகிறார். (வெளிப்படுத்தல் 12:4). ஒரு தூதன் மாத்திரம் விழவில்லை.  அநேக தூதர்கள் பரலோகத்திலிருந்து பாதாளத்திற்கு தள்ளப்பட்டிக்கிறார்கள்.

            பாதாளத்தில் தள்ளப்பட்ட தூதனே பிசாசானவன்.  பிசாசானவன் இருக்கின்றான்.  கிறிஸ்தவர்களாகிய நாம் பிசாசையும் நம்ப வேண்டும்.  சில கிறிஸ்தவர்கள் பிசாசு இல்லை என்று சொல்லுவார்கள்.  பிசாசு என்ற தார்ப்பரியம் கிறிஸ்தவர்களை பயமுறுத்துவதற்காக சபையின் தலைவர்கள் ஏற்படுத்தினார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள்.  அப்படியல்ல, பிசாசு இருக்கிறான் என்பதை கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டும்.

            பிசாசு தோற்கடிக்கப்பட்டான்.  ஆண்டவர் சிலுவையில் பிசாசை வென்றார்.  பிசாசு நரகத்திற்கு சொந்தக்காரன்.  நரகம் திறக்கப்படும் வரை பிசாசானவன் செயல்படுவான்.  பிசாசை விட நம்மோடு இருக்கின்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வல்லமை படைத்தவர். 

            தூதர்கள் இருக்கிறார்கள், பிரதான தூதர்கள் இருக்கின்றார்கள், தூதர்களின் சிலர் தங்களின் முந்தின மகிமையை இழந்து, சாத்தானாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

4. மனிதனும் அவனின் வீழ்ச்சியும்:

ஆதியாகமம் 1:26-31

            இந்த வசனங்களை நாம் வாசிக்கும்போது ஆண்டவர் தெளிவாக சொல்லுகிறார், கடவுள் தனது சாயலாகவும், தமது ரூபத்தின் படியும் மனுஷனை படைத்தார்.  குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று அநேகர் நம்புகிறார்கள்.  சார்லஸ் டார்வின் ஏதோ உண்மையின் அடிப்படையில் தான் இந்த கருத்தை முன்வைத்திருக்கிறார் என்று அநேகர் நம்புகிறார்கள்.  அநேக கிறிஸ்தவர்களும் மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்று நம்புகிறார்கள்.

            உண்மையான கிறிஸ்தவர்கள், மனிதனை கடவுள் மண்ணிலிருந்து உருவாக்கினார், தமது ஜீவசுவாசத்தை அவனுக்கு கொடுத்து அவனை ஜீவாத்துமாவாக்கினார் என்பதை நம்ப வேண்டும்.

            கடவுள் படைத்த மனிதனாகிய ஆதாமும், ஏவாளும் ஆண்டவர் விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததால் பாவத்தில் விழுந்தார்கள்.  பாவத்தில் விழுந்த மனிதன் எந்த விதத்திலும் தானாக தன்னை மீட்டுக்கொள்ள முடியாது, தானாக ஆண்டவரிடத்தில் சேர முடியாது.

            ஆதியாகமம் 3:15 ஆண்டவர் மேசியாவை குறித்து தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்.  மேசியா சிலுவை மரணத்தின் மூலமாக சாத்தானை நசுக்குவார் என்று ஆதியாகமத்திலேயே தீர்க்கதரிசனமாக எழுதப்பட்டுள்ளது.

            ஆண்டவர் ஆணுக்கு துணையாக பெண்ணைப் படைத்தார்.  ஆணுக்கு துணையாக மற்றும் ஒரு ஆணை ஆண்டவர் படைக்கவில்லை.  இந்த நவீன உலகத்தில் அநேகர் ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்துகொள்ளுகிறார்கள்.  இது வேதத்தின்படி முரணானது.  சோதோம் கொமோரோ ஜனங்கள் இந்த பாவத்தை செய்தபடியினால், ஆண்டவர் வானத்திலிருந்து ஆக்கினியையும், கந்தகத்தையும் அனுப்பி அவர்களை அழித்தார்.

            உண்மை கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் மனிதன் கடவுளாள் உருவாக்கப்பட்டவன் என்பதையும், மனுஷனுக்கு துணை மனிதன் அல்ல மனுஷி என்பதையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

 

5. பாவம்:

            உலகில் பாவம் இருக்கிறது என்று கிறிஸ்தவன் நம்பவேண்டும்.  அநேக கிறிஸ்தவர்கள் பாவம் உலகத்தில் இல்லை என்றும், கிறிஸ்தவர்களை பயமுறுத்துவதற்காக பாவம் என்ற ஒன்று சபைத்தலைவர்களால் ஏற்படுத்தப்பட்டது என்றும் நினைக்கிறார்கள். 

            பாவம் என்பது ஆதாமும் ஏவாளும் கடவுள் விலக்கின விருட்சத்தின் கனியை புசித்ததன் மூலமாக உலகில் வந்தது.  மனிதனின் கீழ்ப்படியாமையினால் அவன் பாவம் செய்து, கடவுளுடைய மகிமையை இழந்தான்.  அந்த பாவத்திற்கு மன்னிப்பு வேண்டுமானால், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மாத்திரமே அவை பெற்றுக்கொள்ள முடியும்.

            புதிதாய் பிறக்கும் குழந்தைகளும் பாவத்தில் பிறக்கின்றன என்பதை நாம் நம்ப வேண்டும். 

 

6. மனிதனின் பாவத்திலிருந்து இரட்சிப்பு:

            இரட்சிப்பு என்றால் விடுதலை அல்லது காப்பாற்றப்படுதல் என்பதாகும்..  ஒவ்வொரு மனிதனும் பாவத்திலிருந்து விடுதலை பெற்றிருக்க வேண்டும்.  பாவத்திலிருந்து விடுதலை பெறாமல் அதாவது இரட்சிக்கப்படாமல் ஒருவனாகிலும் பரலோகம் செல்ல முடியாது.

            ஒரு மனிதன் எவ்வளவு தான தர்மங்களை செய்தாலும், எத்தனை பேருக்கு உதவி செய்தாலும் அவன் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படவில்லை என்றால் அவன் பரலோகம் செல்ல முடியாது.

            பாவங்களை நாம் விட்டுவிட்டு நன்மைகள் செய்தால் பரலோகம் சென்று விடலாம் என்று அநேக மதங்களில் கற்றுக்கொடுக்கிறார்கள்.  இதனால், அநேர் மண்ணாசை, பெண்ணாசை, பொண்ணாசையை விட்டுவிட்டு துரவிகலாக புறப்படுகின்றார்கள்.  துரவரம் மேற்கொண்டால் பரலோகம் சென்று விடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

            யோவான் 3:16-ல் ஆண்டவர் தெளிவாக நமக்கு கற்றுக்கொடுக்கின்றார், இயேசுவின் மூலமாகவே இரட்சிப்பு உண்டு.  பாவத்திற்கு நேராய் சென்ற ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுகிறது என்றால், அந்த ஆத்துமா நகரத்திலிருந்து காப்பாற்றப்படுகிறது என்று அர்த்தம்.  நம்மை காப்பாற்றிக்கொள்ள அதாவது இரட்சித்துக்கொள்ள ஒரே ஒரு வலிதான் உண்டு, அதுதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம்.  (தீத்து 2:11) (ரோமர் 10:13-15) (லூக்கா 24:47) (தீத்து 3:5-7)

            ஒருவன் தான் பாவி என்பதை அறிந்து, உணர்ந்து, தனது பாவங்களை இயேசுவிடம் அறிக்கையிட்டு,  இயேசுவை விசுவாசித்து, அவரை தன் உள்ளத்தில் தெய்வமாக ஏற்றுக்கொண்டால் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.  அவன் கடவுளுடைய பிள்ளையாக மாறுகிறான்.  (யோவான் 1:12)

            நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கு பரிசுத்த ஆவியானவரே சாட்சி. (ரோமர் 8:16)

 

7. தண்ணீர் ஞானஸ்நானம்:

            கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானத்தை நம்ப வேண்டும்.

உதாரணம்: ஒரு தம்பதியினருக்கு திருமணத்திற்காக நிச்சயம் செய்யப்படுகின்றது.  அவர்கள் நிச்சயிக்கப்பட்டுவிட்டதே என்று திருமணத்திற்கு முன்பாகவே கூடி வாழ்ந்தால் அது விபச்சாரம்.

            ஞானஸ்நானம் எடுக்காத கிறிஸ்தவர்கள் நிச்சயிக்ககப்பட்டு திருமணம் செய்து கொள்ளாத தம்பதியினர் கூடி வாழ்வது போன்றது.

            ரோமர் 6-ம் அதிகாரத்தில் பவுல் சொல்லுகிறார் கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டேன், ஆயினும் பிழைத்திருக்கிறேன், இனி நான் அல்ல கிறிஸ்துவே என்னில் ஜீவிக்கிறார்.

            நாம் பாவத்துக்கு செத்து இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிக்கு பிழைக்கும் அடையாளத்தை ஞானஸ்நானத்தின் மூலமாக பெற்றுக்கொள்கிறோம்.

            நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவம் செய்யாதவர்.  அவரே ஞானஸ்நானம் எடுத்தார் என்றால், நாமும் நிச்சயம் ஞானஸ்நானம் பெறவேண்டும்.

            பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் பெறும் ஞானஸ்நானம் மிக, மிக முக்கியமானது.  இந்த ஞானஸ்நானம் இல்லாமல் நாம் கிறிஸ்தவர்களாய் வாழ முடியாது, வாழவும் கூடாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.