Type Here to Get Search Results !

Isaac And Jesus Christ | Lent Days Special Message | ஈசாக்கும் இயேசு கிறிஸ்வும் | சிலுவை தியானம் | Jesus Sam

ஈசாக்கும் இயேசு கிறிஸ்வும்

கொலோசெயர் 2:16,17

          16. ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வு நாட்களையுங் குறித்தாவது, ஒருவனும் உங்கைளைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.

          17. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது.  அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

 

          பழைய ஏற்பாட்டில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் புதிய ஏற்பாட்டின் நிழலாய் இருக்கிறது என்று வேதம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.  பண்டிகையானாலும், மாதப்பிறப்பானாலும், ஓய்வுநாளானாலும் இவையனைத்தும் ஏதோ சடங்காச்சாரம் அல்ல, இவைகள் புதிய ஏற்பாட்டின் அதாவது கிறிஸ்துவின் நிழலாய் இருக்கிறது என்ற பவுல் எழுதுகிறார்.

 

          பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் புதிய ஏற்பாட்டின் நிழலாய் இருக்கிறது. பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையையும் பற்றி வேதாகமத்தில் நாம் தெளிவாக வாசிக்க முடியாது.  ஒரு சிலரை பற்றி மட்டுமே வேதம் நமக்கு தெளிவாக கற்றுக்கொடுக்கிறது.  காரணம், பழைய ஏற்பாட்டு மனிதர்களுக்கு திருஷ்டாந்தங்களாக சம்பவித்தவைகள் அனைத்தும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்கின்ற அதாவது உலகத்தின் முடிவில் வாழ்கின்ற நமக்கு எச்சரிப்புண்டாக அவைகள் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது.

1 கொரிந்தியர் 10:11

          இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது, உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.


ஈசாக்கு

          ஈசாக்கு ஆண்டவர் ஆபிரகாமிற்கு வாக்குத்தத்தம் பண்ணிண புத்திரன்.  இந்த ஈசாக்கிற்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இடையே பதினைந்திற்கும் அதிகமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன.  அவற்றில் ஒரு சிலவற்றைக் குறித்து இந்த குறிப்பில் நாம் தியானிப்போம்.

 

1. இருவரும் வாக்குத்தத்தத்தின் புத்திரர்:

ஈசாக்கு: (வாக்குத்தத்தம்)

ஆதியாகமம் 12:2

          நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து,..

          ஆபிரகாமை ஆண்டவர் எழுபத்து ஐந்து வயதில் அழைத்தார். (ஆதியாகமம் 12:4)  ஆண்டவர் ஆபிரகாமை அழைத்தபோதே அவனுக்கு குழந்தையை கொடுப்பேன் என்றும், ஆபிரகாமை பெரிய ஜாதியாக்குவேன் என்றும் வாக்குத்தத்தம் கொடுத்தார்.  வாக்குத்தத்தம் கொடுத்தவர் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு பின், ஆபிரகாமின் நூறாவது வயதில் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். 

 

வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றம்:

ஆதியாகமம் 21:5

          தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.

இயேசு கிறிஸ்து:

இந்த வசனம் ஆண்டவர்  பிசாசிடம் சொன்ன வார்த்தை

ஆதியாகமம் 3:15

          உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.  அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

பரிசுத்த பைபிள்: (புதிய மொழிபெயர்ப்பு)

ஆதியாகமம் 3:15

          உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவேன்.  அதோடு உன் பிள்ளைகளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் பகை உண்டாக்குவேன்.  அவள் பிள்ளையின் காலை நீ கடிப்பாய், அவர் உன் தலையை நசுக்குவார் என்று சொன்னார்.

 

          கடவுள் தாம் மனிதனாய் பூமியில் பிறப்பதாகவும், பிசாசை வெற்றி சிறப்பதாகவும் ஆதாம் காலத்திலேயே வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார்.  வாக்குத்தத்தம் கொடுத்தவர் அதை நிறைவேற்றினார்.  கடவுள் மனிதனாய் வந்து, மனிதருடைய பாவங்களுக்காக மரித்து, சிலுவையிலே பிசாசை வெற்றி சிறந்தார்.

 

          விழுந்து போன தூதனாகிய லூசிபரின் இடத்தை நிரப்பும்படியாக ஆண்டவர் மனிதனை படைத்தார்.  கடவுள் படைத்த நோக்கத்தை உணராதவனாக மனிதன் பாவம் செய்தான்.  பிசாசானவன் தந்திரமாக ஏவாளிடம் பேசி பாவம் செய்ய வைத்தான்.  ஏவள் என்ற ஒரு பெண்ணின் மூலமாகவே உலகத்தில் பாவம் வந்தது.  அந்த பாவத்தை நீக்கும்படியாக, பிசாசை ஜெயிக்கும்படியாகவே, ஒரு கண்ணியின் வயிற்றில் கடவுள் மனிதனாய் பிறந்தார்.

 

இயேசு கிறிஸ்து சாத்தானை சிலுவையில் வெற்றி சிறந்தார்:

கொலேசெயர் 2:14,15

          14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து:

          15. துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்.

          மனிதன் பாவம் செய்த போது, ஸ்திரீயின் மூலமாக நான் மனித அவதாரம் எடுத்து, மனிதனின் பாவத்தை மன்னித்து, பிசாசாகிய உன்னை வெற்றி சிறப்பேன் என்று ஆண்டவர் அன்று சொன்னதை, பல நூற்றாண்டுகளுக்கு பின்பு நிறைவேற்றினார்.

          கன்னிகையாகிய மரியாளின் வயிற்றில் பிறந்து, மனுக்குலத்தின் பாவங்களுக்காக சிலுவையில் அடிக்கப்பட்டார்.

          சிலுவை மரத்தில் பிசாசின் கிரியைகளாகிய துரைத்தனங்களையும், அதிகாரங்களையும், அழித்துப்போட்டு சிலுவையிலே வெற்றி சிறந்தார்.

 

சொன்னதை செய்பவர்:

ஆதியாகமம் 28:15ஆ

          …..நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

          ஆபிரகாமின் வாழ்க்கையில் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்று சொன்னவர் செய்து முடித்தார்.  ஆபிரகாமின் சந்ததி இன்று எண்ணி முடியாத அளவிற்கு உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறார்கள்.

          கடவுள் மனுஷனாய் பூமிக்கு வந்து பிசாசை வெற்றி சிறப்பேன் என்று சொன்னதை நிறைவேற்றி முடித்தார்.

 

          இந்த ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்ற வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.  சொன்னதை செய்யும் வரை அவர் கைவிடமாட்டார்.  கடவுள் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

          நம்முடைய எதிர்காலத்தைக் குறித்தும், திருமணக் காரியங்களைக் குறித்தும், வேலைவாய்ப்பைக் குறித்தும் ஆண்டவர் அநேக வாக்குத்தத்தங்களை நமக்கு கொடுத்திருக்கலாம்.  வாக்குத்தத்தம் கொடுத்தவர் நிறைவேற்ற வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.  ஒரு நாள் நிச்சயம் நிறைவேற்றுவார்.  ஆபிரகாம் காத்திருந்து ஈசாக்கைப் பெற்றுக்கொண்டதைப் போல, நாமும் நேரம் வரும் வரை பொறுமையோடு காத்திருக்கும்போது ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

 

2. இருவரும் அதிசய பிறப்பு:

ஈசாக்கு:

ஆதியாகமம் 18:13,14

          13. அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?

          14. கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்.  அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.

          ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாமின் வயது நூறு.  சாராளின் வயது 90.  உலக சரித்திரத்தில் தொண்ணூறு வயது நிறம்பிய மூதாட்டி இதுவரை குழந்தையை பெற்றெடுத்தது இல்லை.  ஆனால், அதிசயமான முறை ஆண்டவர் சாராள் கர்ப்பந்தரித்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கச் செய்தார்.  அந்த குழந்தை தான் ஈசாக்கு.

          சராசரியாக ஒரு பெண் தனது 45-வது வயதில் குழந்தை பிறக்கும் தகுதியை இழந்துவிடுகிறாள்.  ஆரோக்கியமான சரீர அமைப்பை உடைய ஒரு சில பெண்கள் 55 வயது வரை குழந்தை பிறக்கும் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்.  இன்னும் சிலர் 60 வயது வரை குழந்தை பிறக்கும் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்.  ஆனால் எந்த ஒரு பெண்ணும் 60 வயதிற்கு மேலாக குழந்தையை பெற்றெடுத்தது இல்லை.

          ஆனால் ஆண்டவர் அதிசயமாக 90 வயது நிரம்பிய மூதாட்டியாகிய சாராளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையைக் கொடுத்தார்.  கர்த்தரால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை.

 

இயேசு கிறிஸ்து:

லூக்கா 1:34,35

          34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.

          35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்.  ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

          உலக அறிவியலின் படி ஒரு பெண்ணோடு ஆண் சேராவிட்டால், பெண் கர்ப்பவதியாக முடியாது.  ஆனால் அதிசயமான விதத்தில், ஒரு ஆணின் துணையில்லாமல் மரியாள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள்.  இந்நிகழ்வு உலக வரலாற்றில் நடைபெறாத ஒன்றாகும்.

          ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஒரு ஆணின் துணை இல்லாமலேயே பிறந்தார்.

 

          ஒரு ஆணும் பெண்ணும் சேரும்போது ஒரு குழந்தை உருவாகிறது.  ஒரு குழந்தை உருவாக வேண்டுமானால் அதில் பெரும்பான்மையான பணியை செய்வது ஆண்கள்.  ஆனால் ஒரு கருவில் குழந்தை உருவாகிறது என்றால், அது கடவுளின் அருளால் மாத்திரமே.

          மனிதனின் உயிர் இரத்தத்தில் உள்ளது என்று நாம் லேவியராகமம் 17:11-ல் வாசிக்கிறோம்.  நம்முடைய சரீரத்தின் உயிர் இரத்தத்திலேயே இருக்கிறது.  அப்படியானால் கருவில் இருக்கும் குழந்தைக்கு இரத்தத்தை கொடுப்பது யார்?

          தாயின் வற்றில் இருக்கும் குழந்தைக்கு இரத்தத்தை கொடுப்பது தாயோ, தகப்பனோ அல்ல.  ஆண்டவரே, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இரத்தத்தை, அதாவது உயிரை கொடுக்கின்றார்.

ஒரு குழந்தைக்கு இரத்தத்தை கொடுக்கிறவள் தாய் தான் என்று நீங்கள் நினைக்கலாம்.  அனால் அது உண்மையல்ல.  வயிற்றில் இருக்கும் ஒரு குழந்தைக்கு தாய் தான் இரத்தத்தை அதாவது உயிரை கொடுக்கிறாள் என்றால், தாய் எந்த இரத்த வகையை சேர்ந்தவளாக இருக்கிறாளோ அந்த இரத்த வகையே குழந்தைக்கும் இருக்க வேண்டும்.

          வயிற்றில் இருக்கும் ஒரு குழந்தைக்கு தந்தை தான் இரத்தத்தை கொடுக்கிறார் என்றால், தந்தை எந்த இரத்த வகையை சார்ந்தவரோ, குழந்தையும் அந்த இரத்த வகையை சேர்ந்தவராகவே இருக்க முடியும்.

          ஒரு கருவில் இருக்கும் குழந்தைக்கு இரத்தத்தை கொடுப்பது கடவுள் என்றபடியால், அக்குழந்தை தாயின் இரத்த வகையை சாராமலும், தந்தையின் இரத்த வகையை சாராமலும் இருக்கிறது.

 

எ.கா: நம்முடைய அனைவரின் வீடுகளிலும் மின் விளக்குகள், மின் விசிரிகள் பொருத்தப்பட்டிருக்கும். மின் விசிரியை நாம் இயக்க வேண்டுமானால் அதற்குரிய இணைப்பை நாம் இயக்கினால் (Switct On) மின்விசிரி இயங்க துவங்கும்.  நான் கொடுத்த இயக்கத்தினால் மின்விசிரி இயங்குகிறது என்றபடியினால், மின்சாராத்ததை (Current) நான் தான் கொடுத்தேன் என்று சொல்லுவது முட்டாள் தனம்.

 

          ஒரு ஆணின் துணையோடு கரு உருவானாலும், ஆண் இயக்கத்தை துவங்கிவிடுகிறார்.  இயக்கத்தை ஆண் துவங்கினார் என்பதற்காக ஆண்தான் குழந்தைக்கு உயிர் கொடுத்தான் என்பது முட்டாள்தனம்.  கடவுளே ஒரு குழந்தைக்கு இரத்தத்தை, அதாவது ஜீவனை கொடுக்கின்றார்.

 

          இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் ஒரு ஆணின் துணை இல்லாமல், அதாவது முதல் முதலில் ஆதாம் எப்படி மற்றவரின் உதவி இல்லாமல் உருவாக்கப்பட்டானோ அதைப்போலவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், மரியாளின் வயிற்றில் பிறந்தார். எனவே, தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரண்டாம் ஆதாம் என்று 1 கொரிந்தியர் 15:45-ல் வாசிக்கிறோம்.

1 கொரிந்தியர் 15:45

          அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானாவர்.

 

          ஈசாக்கு பிறந்தது ஒரு அதியம்.  கர்ப்பம் செத்துப்போன ஒரு ஸ்திரீயின் வயிற்றில் ஈசாக்கு பிறந்தார்.  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் அதிசயமானது.

 

          செத்துப்போன கர்ப்பத்திலிருந்து (ரோமர் 4:19) ஆண்டவரால் ஒரு குழந்தையை கொடுக்க முடியும் என்றால், நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு அதிசயத்தை செய்வது இயேசுவுக்கு லேசான காரியம்.

          நம்மில் அநேக குழந்தை பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருக்கலாம். நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு அதிசயத்தை செய்வது ஆண்டவருக்கு லேசான காரியம்.  அவரை நாம் உண்மையாய் விசுவாசிக்கும்போது அவர் அற்புதம் செய்ய வல்லவராய் இருக்கிறார்.

 

ரோமர் 4:17

          அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தன் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.

          நம்முடைய ஆண்டவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளாக மாற்றுகிற ஆண்டவர்.  இதை உணர்ந்த ஆபிரகாம் ஆண்டவரை ஒன்றும் இல்லாத சூழ்நிலையிலும் விசுவாசித்தான்.  நாமும் ஆண்டவரை விசுவாசிக்கும்போது அற்புத அடையாளங்களை பார்க்க முடியும்.

          நாம் ஒரு காரியத்திற்காக ஜெபிக்கும்போது, அந்த காரியங்கள் நடக்கும் முன்பதாகவே, ஆண்டவர் நிறைவேற்றிவிட்டார் என்ற விசுவாசத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்.

          அநேக நேரங்களில் நம்முடைய ஜெபத்திற்கு பதில் கிடைக்காமல் இருக்க காரணம், நம்முடைய அவிசுவாசமேயாகும்.  ஆண்டவர் அநேக அடையாளங்களை கொடுத்த பின்பும், நாம் ஆண்டவரை விசுவாசியாமல், முழுமையாக நிறைவேறினால் மாத்திரமே நம்புவேன் என்று சொல்லுகிறோம்.

          ஆபிரகாம் குழந்தையை பிறப்பதற்கு எந்த ஒரு அடையாளமும் இல்லாதபோதே, ஆண்டவர் எனக்கு குழந்தையைக் கொடுத்துவிட்டார் என்று விசுவாசித்தான்.  அப்படிப்பட்ட விசுவாசம் நம்மிடம் காணப்படும்போது நாமும் கடவுளிடமிருந்து அற்புதங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

 

3. இருவரும் பிறக்கும் முன்னமே பெயர் சூட்டப்பட்டவர்கள்

ஈசாக்கு:

ஆதியாகமம் 17:19

          அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள்.  அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக.

          ஆபிரகாமிற்கு தொண்ணூற்று ஒன்பது வயதானபோது ஆண்டவர் ஆபிரகாமிற்கு தரிசனமாகிய, நான் உனக்கு ஒரு குமாரனைக் கொடுப்பேன் அவனுக்கு ஈசாக்கு என்று பெயர் சூட்டுவாயாக என்று கட்டளை கொடுக்கிறார்.

          ஈசாக்கு பிறக்கும் முன்பதாகவே பெயர் சூட்டப்பட்டவன்.

இயேசு கிறிஸ்து:

மத்தேயு 1:21

          அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்.  அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.  ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

          ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்பதாகவே, கர்த்தருடைய தூதன், இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தகப்பனாகிய யோசேப்பிற்கு சொப்பனத்தில் பேசுகிறார்.  யோசேப்பே, உனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டிருக்கின்ற மரியாள் பரிசுத்த ஆவியினால் ஒரு குமாரனைப் பெறுவாள்.  அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்று தேவதூதனால் யோசேப்பு கட்டளை பெற்றார்.

          ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் ஈசாக்கைப் போலவே பிறக்கும் முன்பதாக பெயர் சூட்டப்பட்டவர்.

நம்மையும் ஆண்டவர் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்:

ஏசாயா 44:2அ

          உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும் உனக்கு துணை செய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது..……

ஏசாயா 45:3

          உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே……

தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னமே ஆண்டவர் நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார்.  நம்மை பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்.

          ஈசாக்கு பிறக்கும் முன்னதாகவே ஈசாக்கை பெயர் சொல்லி அழைத்த இறைவன், நாம் தாயின் கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்னமே நம்மையும் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்.

          ஈசாக்கை ஆண்டவர் படைத்ததற்கு ஒரு நோக்கம் இருந்தது.  அந்த நோக்கத்தை ஈசாக்கு சரியாய் செய்து முடித்தார்.  இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்ததற்கும் ஒரு நோக்கம் உண்டு.  அந்த நோக்கத்தை அவர் சரியாய் நேர்த்தியாய் செய்து முடித்தார்.

          ஆண்டவர் நமக்கென்று கொடுக்கப்பட்ட நோக்கத்தை நாம் நிறைவேற்றியிருக்றோமா?

 

          கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் ஒவ்வொருவிதமான நோக்கத்தை வைத்திருந்தாலும், நம் அனைவரையும் ஆண்டவர் ஊழியர்களாக அழைத்திருக்கிறார்.  நம் ஒவ்வொருவரும் சுவிசேஷம் சொல்ல வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.  ஈசாக்கைப்போல, இயேசு கிறிஸ்துவைப் போல நாமும் நம்மைக் குறித்த கடவுளின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்.

லூக்கா 10:2

          அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்.

          நம் ஒவ்வொருவருக்கம் பல பொறுப்புகள், பல திட்டங்கள் இருந்தாலும் நம் அனைவரும் ஆண்டவருடைய ராஜ்ய கட்டுமானப்பணியில் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.  எல்லோரும் ஊழியம் செய்ய வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.  எல்லோரும் முழு நேர ஊழியம் செய்ய வேண்டிய கட்டாயம் அல்ல.  ஆனால் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் பகுதிநேர ஊழியத்தை செய்ய வேண்டும்.  நம்முடைய பணிகளை செய்துகொண்டே ஊழித்தையும் செய்ய வேண்டும்.  இதுவே ஆண்டவரின் நோக்கம்.

 

 

4. இருவரும் பலிக்கான மரத்தை சுமந்தனர்

ஈசாக்கு:

ஆதியாகமம் 22:6

          ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின் மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்.

          ஈசாக்கை பலியிடும்படியாக ஆபிரகாம் ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் சென்றார்.  ஈசாக்கை பலிசெலுத்தும் அளவிற்கு எந்த ஒரு தவறையும் ஈசாக்கு செய்யவில்லை.  தன்னைத்தான் தன்னுடைய தகப்பன் பலியிடபோகிறான் என்று தெரியாமலேயே, ஈசாக்கு தன் பலிக்கான விரகுகளை தானே சுமந்து சென்றான். 

இயேசு கிறிஸ்து:

யோவான் 19:17

          அவர் தம்முடைய சிலுவையை சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸதலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.

          ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் சிலுவை மரத்திலே பலியானார்.  அவர் பலியிடப்படுவதற்கு எவ்வளவேனும் தகுதியற்றவர்.  அவரிடம் எந்த பாவமும் இல்லை.

          நம்முடைய பாவங்களுக்காக, நம்முடைய மீறுதல்களுக்காக ஆண்டவர் சிலுவையிலே பலியானார்.  தம்முடைய பலிக்கான சிலுவை மரத்தை தானே சுமந்து சென்றார்.  நம்முடைய அக்கிரமங்களுக்காக சிலுவையில் பலியானார்.

          ஈசாக்கும் தன்னுடைய பலிக்கான கட்டையை தானே சுமந்து சென்றார், இயேசு கிறிஸ்துவும் தன்னுடைய பலிக்கான கட்டையை தானே சுமந்து சென்றார்.

          ஆபிரகாம் ஈசாக்கை பலியிடும்படியாக கொண்டு சென்ற இடமும், இயேசு கிறிஸ்து பலியிடப்பட்ட இடமும் ஏறக்குறை ஒரே இடம் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

 

5. இருவரும் மீண்டும் உயிர்பெற்றார்கள்

ஈசாக்கு:

ஆதியாகமம் 22:10,12

          10. பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.

          அடையாளப்பூர்வமாக ஈசாக்கு கொலைசெய்யப்பட்டார்.  ஆபிரகாம் கத்தியை எடுத்து பிள்ளைக்கு நேராக நீட்டினார்.  என் பிள்ளை மரிக்கப்போகிறான், நான் இனி அவனை பார்க்க முடியாது என்று ஆபிரகாம் நினைத்திருப்பார்.  நான் மரிக்கப்போகிறேன், இந்த சிறு வயதிலேயே என்னுடைய வாழ்நாள் முடியப்போகிறது என்று ஈசாக்கும் நினைத்திருப்பார்.  ஏறக்குறைய மரித்துப்போன ஒரு நபராக ஈசாக்கு காணப்பட்டார்.

          12. அப்பொழுது பிள்ளையாண்டான்மேல் உன் கையைப்போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே.  நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

          ஏறக்குறைய அடையாளப்பூர்வமாக மரித்துப்போன ஈசாக்கு மீண்டும் புதுவாழ்வைப் பெற்றக்கொள்கின்றார்.

 

இயேசு கிறிஸ்து:

மத்தேயு 28:6,

          6. அவர் இங்கே இல்லை.  தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்.  கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.

          ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உண்மையிலேயே நம்முடைய பாவங்களுக்காக தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.  பிதாவின் நாமம் மகிமைக்காக மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்.  இன்றும் ஜீவிக்கிறார்.



          ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கிற்கும், ஆண்டராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இடையே காணப்பட்ட ஒற்றுமைகளைக் குறித்து அறிந்துகொண்டோம்.

          ஒன்றும் இல்லாத சூழ்நிலையிலும் ஆபிரகாம் கடவுளை விசுவாசித்தான்.  நாமும் ஆண்டவரை விசுவாசிக்கும்போது ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

          ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  ஆமென்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.