Type Here to Get Search Results !

ஆராதனை என்றால் என்ன? | What is worship? | tamil chrisitan message notes | Sermon Points | Jesus Sam

===================

பிரசங்க குறிப்பு

===================

தலைப்பு: ஆராதனை

===================



யாத்திராகமம் 2: 23

          எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு.

யாத்திராகமம் 9: 13

          எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

 


          நம்முடைய ஆண்டவர் ஆராதனையில் பிரியப்படுகிறவர்.  தம்மை ஆராதிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான தூதர்களையும்,  அந்த தூதர்களுக்கு தலைவனாக லூசிபரையும் உருவாக்கினார்.  பெருமையினால் லூசிபர் கீழே விழத்தள்ளப்பட்டான்.  அவனோடு கூடு அவனை பின்பற்றின ஏராளமான தூதர்களையும் தேவன் கீழே விழத்தள்ளினார்.

ஏசாயா 14: 13-15

13. நான் வானத்துக்கு ஏறுவேன். தேவனுடைய நட்சத்திரங்ளுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்.  வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்.

14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்.  உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

15. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.

 

          தம்மை ஆராதிக்க கடவுள் ஏற்படுத்தின தூதன் பெருமை கொண்டதால், கடவுள் தனது சாயலாக மனிதனை படைத்து, இவன் என்னை ஆராதிப்பான்.  எனக்கு துதிபலிகளை ஏறெடுப்பான் என மண்ணினாலே மனிதனை உருவாக்கினார்.

சங்கீதம் 150: 6

          சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக.  அல்லேலூயா.

 

ஆராதனை:

          ஆராதனை என்ற பதம் தமிழ் வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் 82 வசனங்களிலும், புதிய ஏற்பாடில் 27 வசனங்களிலுமாக மொத்தம் 109 வசனங்களிலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

          ஆங்கில வேதாகமத்தில் Worship என்ற பதம் 118 வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

          வேதத்தில் முதன் முறையாக யாத்திராகமம் 3:12-ல் ஆராதனை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.   யாத்திராகமத்தில் மாத்திரம் 27 வசனங்களில் ஆராதனை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

ஆராதனை என்றால் என்ன?

          ஆராதனை என்பது உண்மையான அன்புடனும், பயத்துடனும் கடவுளை மகிமைப்படுத்துவது அதாவது கடவுளை மகிழ்விப்பதான ஒரு காரியம் ஆகும்.

          அநேகர் ஆராதனை என்றால் பாடுவது, ஆடுவது, கைதட்டுவது, குதிப்பது, சத்தமிடுவது, அந்நியபாஷை பேசுவது என எண்ணுகிறார்கள்.

 


நாம் கடவுளை எப்படி ஆராதிக்க வேண்டும்:

1. இருதயத்தை கடவுளுக்கு நேராக்கி ஆராதனை செய்ய வேண்டும்:

1 சாமுவேல் 7: 3, 4

          3. அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்.  அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பார் என்றான்.

          4. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கி விட்டு கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள்.

          சாமுவேல் தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து பேசுகிறார், நீங்கள் உண்மைக் கடவுளாகிய யெகோவாவை மாத்திரம் உண்மையாய் ஆராதிக்கும் போது நீங்கள் பெலிஸ்தரையும், அஸ்தரோத்தையும் ஜெயிப்பீர்கள் என்று.

          கிறிஸ்தவர்களாகிய நாமும் உண்மைக் கடவுள், உயிருள்ள கடவுள், பேசும் கடவுளாகிய இந்த இயேசு கிறிஸ்துவை உண்மையாய் ஆராதிக்கும்போது, அவர் ஒருவருக்கே நமது துதி, கன, மகிமைகளை செலுத்தும்போது நாமும் வெற்றி வீரனாக மாற முடியும்.

          ஞாயிறு கிழமை தோறும் உண்மைக் கடவுளை ஆராதிக்கின்ற நாம் மற்ற ஆறு நாட்களும் சரியாக வாழுகின்றோம்.

          ”நோய்க்கும் பார், பேய்க்கும் பார்”.

          அநேகர் கடவுளையும் ஆராதிக்கின்றார்கள், உரவினர்கள் சொல்லுகிறார்கள், அருகாமையில் உள்ளவர்கள் சொல்லுகிறார்கள் என்று சொல்லி ஜோசியரிடம் சென்ற பார்கிறார்கள்.

          இதை உண்மைக் கடவுள் அருவெருக்கிறார்.

 

ஏலியா:

1 இராஜாக்கள் 18: 21

          அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்.  கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்.  பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான்.



          ”இயேசுவும் தெய்வம் அல்ல, இயேசுவே தெய்வம்”

          புறஜாதியார் எல்லோரும் இயேசு கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக உள்ளனர்.  ஆனால் அவர் மாத்திரமே கடவுள் என்பதைத்தான் ஏற்க மறுக்கிறார்கள்.  உண்மைக் கடவுளை அறிந்த, உயிருள்ள தெய்வத்தை ஆராதிக்கின்ற நாம் அவரை மாத்திரமே உண்மையாய் ஆராதிக்கின்றோமா?

மத்தேயு 4: 10

          உன் தேவனாகிய கர்த்ரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.

          இருதயத்தை நேராக்கி ஆண்டவரை ஆராதிப்பது என்பது, விக்கிரக ஆராதனை செய்யாமல் இருப்பது மாத்திரம் அல்ல.

          கடவுளுக்கு நாம் தரவேண்டிய முன்னுரிமையை வேறு எந்த ஒரு காரியத்திற்கு கொடுத்தாலும் அது நமக்கு விக்கிரகம் தான்.

          எ.கா: குடும்பம், பெற்றோர், பிள்ளைகள், பணம், சொத்து, வேலைவாய்ப்பு.

          இவை அனைத்தும் கடவுளுக்கு அடுத்ததாக இருக்க வேண்டும்.  கடவுளுக்கு மேல் இதில் எதை நாம் அதிகமாக நேசித்தாலும் அது நமக்கு விக்கிரகம் தான்.

ஆபிரகாம்:

          ஆபிரகாம் மிகவும் பெரிய பணக்காரன்.  அவனிடம் இருந்த எந்த செல்வத்தைப் பார்க்கிலும் அவன் அதிகமாக நேசித்தது தன் ஒரே மகன் ஈசாக்கை.  அவனை கடவுள் பலியிடச் சொன்ன போது, நான் என் உயிராய் நேசிக்கிற என் மகனைக் காட்டிலும் என்னை அழைத்த கடவுள் எனக்கு பெரியவர்.  அவருக்குக்கே முன்னுரிமை என்று தன் மகனை பலியிடத் தயாரானார்.

ஆதியாகமம் 22: 10

          ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.

          நாம் எதை அதிகமாக நேசிக்கிறோம்.  நமது குடுத்பத்தையா, பணத்தையா, செல்வத்தையா, வேலையையா? கிறிஸ்துவையா? சிந்திப்போம்! செயல்படுவோம்.

 

2. சரீரத்தைப் பரிசுத்தமாக்கி ஆராதிக்க வேண்டும்:

ரோமர் 12: 1

          நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.  இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

ஆராதனைக்காக நம்முடைய சரீரத்தை நாம் ஆயத்தப்படுத்த வேண்டும்.

1. ஆராதனையில் கலந்து கொள்ளும் நாம் ஆராதனைக்காக, அதை நடத்தும் தேவ ஊழியருக்காக, இந்த நாளில் ஊழியர் மூலமாக கடவுள் பேச இருக்கும் வார்த்தைகளுக்காக, வீட்டில் இருந்து ஜெபித்து வருவது ஒருவித ஆயத்தம்.

2. ஆராதனைக்கு வரும்போது வேதப்புத்தகத்தை (பைபிள்) சுமந்து வருவது ஒருவித ஆயத்தம்.

3. திருவிருந்து ஆராதனை என்றால் நாமும் கடவுளும் நம்முடைய உடன்படிக்கையைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒர் ஆராதனை.  அந்த ஆராதனைக்கு நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்தவர்களாக தகுந்த ஆயத்தத்துடன் ஆராதனையில் கலந்துகொள்ள வேண்டும்.

 

3. ஆவியினாலே கர்த்தருக்கு ஆரானை செய்ய வேண்டும்:

பிலிப்பியர் 3: 3

          மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.

          ஆராதனையில் கலந்துகொள்ளுகிற நாம் ஆவியினாலே தேவனை ஆராதிக்க வேண்டும். 

          ஒரு மிகப்பெரிய கன்வென்ஷன் கூட்டத்தில் ஆராதனை நேரத்தில் கூடியிருந்த ஜனங்கள் அனைவரும் அந்நியபாஷைகள் பேசி தங்களை மறந்து தேவனை வல்லமையாய் ஆராதித்துக் கொண்டிருந்தார்கள்.  ஆராதனை நேரம் முடிந்து செய்தி வேலையில் பிரசங்கியார் கேட்டார் இன்று காலை எத்தனை பேர் ஜெபித்தீர்கள், வேதம் வாசித்தீர்கள் என்று.  ஒருவரும் பதில் செல்லவில்லை.

          நாம் கைதட்டி, குதித்து, நடனமாடி, அந்நியபாஷைகள் பேசி ஆண்டவரை ஆராதிக்கலாம்.  ஆனால் நாம் ஆவியோடு ஆராதிக்கின்றோமா?  இல்லையென்றால், இசைக்கருவிகள் வாசிக்கப்படுவதால் நாம் அபிஷேகந்தில் நிறைந்தவர்களாக நடித்துக்கொண்டிருக்கிறோமா?

யோவான் 4: 23

          உண்மையாய் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும்.  அது இப்பொழுதே வந்திருக்கிறது.  தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாய் இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.



          ஆராதனைக்கு வரும்போது நண்பர்களை பார்ப்பதற்காக, எதிர்பாலினரைப் பார்ப்பதற்காக, அரட்டை அடிப்பதற்காக, விளையாடுவதற்காக, பிரசங்கியாருக்கு மதிப்பெண் போடுவதற்காக, கேலிபேசுவதற்காக வராமல் கடவுள் இந்த நாள் மட்டும் என்னை காப்பாற்றியிருக்கிறார்.  அவருக்கு ஆராதனை செய்வது என் கடமை என்ற உணர்வுடன் ஆவியோடும் உண்மையோடும் கடவுளை ஆராதிக்க வேண்டும்.

 

4. பயத்தோடும் பக்தியோடும் ஆராதிக்க வேண்டும்:

எபிரெயர் 12: 28

          அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பெற்றுக்கொள்ளக்கடவோம்.

          ஆராதனையில் கலந்து கொள்ளுகின்ற நமக்கு தேவனைக் குறித்த பயம் வர வேண்டும்.

          ஆராதனைக்கு சரியான நேரத்திற்கு வர வேண்டும்.  பள்ளிக் கல்லூரிகளுக்கு, நமது சொந்த வேலைகளுக்கு, நல்ல காரியங்களுக்கு சரியான நேரத்தில் செல்லுகின்ற நாம், ஆராதனைக்கு மாத்திரம் எவ்வளவு தாமதமாக வருகிறோம்.

          ஆறு நாளும் நம்முடைய பிள்ளைகள் மேல் இல்லாத பாசம், அந்த ஏழாம் நாள் ஆராதனை நேரத்தில் தான் வரும்.   ஊழியர் பேசுவதை கவனிப்பதை விட்டுவிட்டு, பிள்ளைகளோடு கொஞ்சிப்போசி விளையோடிக் கொண்டிருக்கிறோம்.

          ஆறு நாள் நம் சொந்த வேலையைப் பார்க்க கடவுள் நேரம் கொடுத்துள்ளார்.  ஆனால் ஏழாம் நாள் ஆராதனைக்கு வந்த உடன் ஒரு அழைப்பு வரும், உடனே கடவுளை விட அந்த அழைப்பு முக்கியம் என்று எண்ணி ஆராதனையை விட்டு எழுந்து வெளியே சென்று விடுகிறோம்.

          ஆராதனையில் அமர்ந்துகொண்டு Facebook, WhatsApp, Instagram பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.  

          எத்தனை முறை நாம் ஆராதனையின் ஆரம்ப ஜெப வேளையில் ஆராதனையில் கலந்துகொண்டிருப்போம் சிந்தித்து பார்ப்போம்.

          கடவுளைக் குறித்த பயமும், பக்தியும் நமக்கு வேண்டும்.

 

5. எங்கு ஆராதனை செய்ய வேண்டும்:

பழைய ஏற்பாடு:

          பழைய ஏற்பாட்டில் கடவுள் ஒருவரே.  திரித்துவமாக இருந்தார், ஆனால் திரித்துவத்தை வெளிப்படுத்தாமல் இருந்தார்.  எனவே, எருசலேம் தேவாலயத்தில் மட்டுமே அவர் வாசம் பண்ணினார்.  ஆராதனை செய்ய மக்கள் எருசலேம் தேவாலயத்தில் மட்டுமே கூடியிருந்தனர்.

புதிய ஏற்பாடு:

          புதிய ஏற்பாட்டில் கடவுள் திரித்துவத்தை வெளிப்படுத்திவிட்டார்.  பிதா, குமாரன், பரிசுத்த ஆவி.  எனவே, கடவுள் ஆலயத்தை  மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளார்.

பிதா தங்கும் ஆலயம்:

சங்கீதம் 132: 12

          இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்.  இதை நான் விரும்பினபடியினால் இங்கே வாசம்பண்ணுவேன்.



          நாம் ஞாயிறு ஆராதனையில் கலந்துகொள்ளுகிறோமே, அதுதான் பிதா தங்கும் ஆலயம்.

குமாரன் தங்கும் ஆலயம்:

மத்தேயு 18: 20

          இரண்டு பேராவது, மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்.

          இரண்டு பேர், மூன்று பேர் எங்கே கூடி ஆண்டவரை ஆராதிக்கின்றோமோ அதுதான் குமாரன் தங்கும்க ஆலயம்.

எ.கா: குடும்ப ஜெபம், நண்பர்கள் ஜெபம், உபவாச ஜெபம்,……

 

பரிசுத்த ஆவியானவர் தங்கம் ஆலயம்:

1 கொரிந்தியர் 3: 17

          ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கொடுப்பார்.  தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது.  நீங்களே அந்த ஆலயம்.

          நம்முடைய சரீரமே பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயம்.  எனவே, பரிசுத்த ஆவியாவர் எப்பொழுதும் நமக்குள்ளாகவே இருக்கிறார்.  எனவே, நாம் தேவாலயத்தில் எந்த அளவிற்கு பயத்தோடும், பக்தியோடும் இருக்கிறோமோ, அதேபோல நம் வேலை பார்க்கக்கூட இடங்களில், பிரயாணத்திலும், செல்லும் இடம் எல்லாம் இருக்க வேண்டும்.

 

          இந்த குறிப்பில் ஆராதனை என்றால் என்ன என்றும், நாம் எப்படி கடவுளை ஆராதிக்க வேண்டும் என்றும் கற்றுக் கொண்டோம்.  உண்மைக் கடவுளை உண்மையாய் ஆராதிப்போம், உண்மைக் கடவுளிடம் இரநத ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம்.

          கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக. ! ஆமென்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.