Type Here to Get Search Results !

கர்த்தர் நன்மையானதை தருவார் | Tamil Christia Message Notes | பிரசங்க குறிப்புகள் | Jesus Sam

தலைப்பு: கடவுள் நன்மை செய்வார்

சங்கீதம் 85:12அ

          கர்த்தர் நன்மையானதைத் தருவார்.

          நம்முடைய கர்த்தர் நன்மையானதை தருகிறவராய் இருக்கிறார்.  ஆண்டவர் யார் யாருக்கு நன்மையானதைத் தருவார் என்பதைக் குறித்து இந்த குறிப்பில் அறிந்துகொள்வோம்.

1. கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு அவர் நன்மை செய்வார்

சங்கீதம் 34:10

          சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்.  கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

          காட்டின் ராஜா சிங்கம்.  அந்த சிங்கம் கூட தனது குட்டியின் தேவையை சந்திக்க முடியாமல் இருக்கலாம்.

ஒரு நாட்டின் அதிபதி தனது மகனின் தேவையை (ஆசையை) நிறைவேற்ற முடியாமல் இருக்கலாம்.  ஆனால் கர்த்தரைத் தேடுகிற பிள்ளைகளுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது என்ற சங்கீதக்காரன் எழுதுகிறான்.

          நாம் கர்த்தரை உண்மையாய் தேடும்போது நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

 

கர்த்தரை எப்படி தேட வேண்டும்?

          முழு இருதயத்தோடு கர்த்தரை தேட வேண்டும்.

சங்கீதம் 119:2

            அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.

          பாக்கியவான்கள் என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று பொருள்.

          ஆண்டவரைத் தேடுவதற்கு அநேக வழிமுறைகள் உள்ளது.  ஆண்டவரைத் தேடியே நாம் ஆலயத்திற்கு வருகிறோம்.  ஆனால், முழு இருதயத்தோடு ஆண்டவரை ஆராதிப்பதற்காக நாம் ஆலயம் வருகிறோமா? யோசித்துப் பார்போம்.

ஆண்டவரைத் தேடி ஆலயத்திற்கு வருகிறவர்கள் பலவிதம்:

1. பெற்றோரின் கண்டிப்பினால் சிலர் ஆலயத்திற்கு வருவார்கள்.

2. நண்பர்களை பார்ப்பதற்காக சிலர் ஆலயத்திற்கு வருவார்கள்

3. பொழுதுபோகவில்லை என்பதற்காக சிலர் ஆலயத்திற்கு வருவார்கள்

4. எதிர்பாலினரை பார்ப்பதற்காக சிலர் ஆலயத்திற்கு வருவார்கள்

5. பெண் பார்ப்பதற்காக, ஆலயம் வருகிறவர்கள் இருக்கிறார்கள்.

6. தாங்கள் வாங்கின விளையுயர்ந்த ஆடை அணிகலன்களை திருச்சபை மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக ஆலயம் வருகிறவர்கள் இருக்கிறார்கள்.

7. ஊழியரை குறை சொல்லும்படியாக, ஊழியர் ஆராதனை நடத்தும் போது கீழே அமர்ந்துகொண்டு குறை சொல்வதற்காக, ஊழியருக்கு மதிப்பெண் வழங்குவதற்காக சிலர் ஆலயத்திற்கு வருவார்கள்.

8. ஆராதனையின் போது ஆண்டவர் என்னோடு பேசுவார், நான் அதை நன்றாக கவனித்து, அதன்படி வாழ்வேன், அதன் மூலமாக ஆண்டவர் எனக்கு தருகிற நம்மைகளை நான் பெற்றுக்கொள்வேன் என்று எண்ணி ஆலயம் வருகிறர்கள் மிக சிலரே.

          வொவ்வொரு ஆராதனைக்கும் நாம் புறப்பட்டு வரும்போது வீட்டிலேயே ஆராதனைக்காகவும், ஆராதனையில் பேசுகிற ஊழியருக்காகவும், ஊழியர் மூலமாக ஆவியானவர் எனக்கு தேவையான சத்தியத்தை தரவேண்டும் என்பதற்காகவும் நம்மில் எத்தனை பேர்  ஜெபித்து வருகிறோம்.  சற்று யோசித்துப் பார்ப்போம்.

          நாம் முழு இருதயத்தோடு கர்த்தரைத் தேடும்போது, அவர் நம்முடைய வாழ்க்கையில் நன்மைகளை செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

 

 

2. தீமை சகிக்கிறவர்களுக்கு கர்த்தர் நன்மை செய்வார்

          நான் கர்த்தரை முழு இருதயத்தோடு தேடுகிறேன்.  ஆனாலும் என் வாழ்க்கையில் எல்லாம் தீமையாகவே நடைபெறுகிறது என்று நாம் யோசிக்கலாம்.  நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் தீமையாய் நடைபெறுகிறது என்றால், ஆண்டவர் அதை நம்மையாய் மாற்ற ஆசைப்படுகிறார் என்று அர்த்தம்.

          ஆண்டவர் நமக்கு நம்மையைத் தரும்போது, அதை நாம் பெற்றுக்கொள்ள விடாதபடிக்கு அநேக தடைகளை பிசாசானவன் கொண்டு வருவான்.  அவைகளே அந்த தீமையான காரியங்கள்.

          தீமைகள் நம்முடைய வாழ்க்கையில் அநேகம் நடைபெறும்போது நாம் மனம் தளராமல் ஆண்டவர் என்னை உயர்த்தப்போகிறார் என்று விசுவாசிக்கும்போது, நம்மையான காரியங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

          தீமைகள் நேரிடும்போது நாம் நினைக்க வேண்டியவை:

இந்த தீமை என் வாழ்வின் முடிவு அல்ல,

இந்த தீமை என் வாழ்வின் நிரந்தரமானது அல்ல

முடிவு:

எ.கா. அரசுத் தேர்விலோ, நேர்முகத்தேர்விலோ நாம் தோல்விடைந்து விட்டால் அவ்வளவுதான் என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைப்போர் அந்த தோல்வியை விட்டு எழும்ப முடியாது.  இல்லை, இல்லை என் வாழ்க்கை இன்னும் முடியவில்லை, என்று தொடர்ந்து போராடுகிறவர்களே வெற்றியை (நன்மையை) பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

          எனக்கு கடன் அதிகரித்துவிட்டது.  என்னால் இதை அடைக்க முடியாது, என் வாழ்க்கையை முடித்து விடுகிறேன் என்று அநேகர் தற்கொலை செய்துகொள்ளுகிறார்கள்.  ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் நினைக்க வேண்டியது என்னவென்றால், கடன் அதிகரித்திருக்கிறது உண்மைதான், ஆனாலும் என் வாழ்க்கை இன்னும் முடியவில்லை.  ஆண்டவர் என்னோடு இருக்கிறார், நான் நிச்சயம் ஒரு நாள் கடனை அடைப்பேன் என்று உறுதியோடு உழைக்க வேண்டும்.

 

நிரந்தரம்:

          ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 75 மதிப்பெண் எடுக்கிறார் என்றால், இந்த மதிப்பெண் அவருடைய முழு ஆண்டு தேர்வை தீர்மானிப்பதில்லை.  அவர் முயற்சி செய்தால் அதை விட அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற முடியும்.  அவர் முயச்சி செய்யவில்லை என்றால், 75 மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண்ணை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

          ஒரு சாதாரண மதிப்பெண் நம்முடைய வாழ்க்கையில் நிரந்தரமானது அல்ல, அப்படியானால் நமக்கு நடைபெறுகிற தீமைகள் மாத்திரம் எப்படி நிரந்தரமாக முடியும்.

 

யோசேப்பு

ஆதியாகமம் 50:20

          நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்.  தேவனோ, இப்பொழுது நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.

          யோசேப்பின் வாழ்க்கையில் எல்லா காரிங்களும் தீமையாகவே நடைபெற்றது.  ஆனாலும் யோசேப்பு ஆண்டவர் மேல் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்.  ஒரு நாள் எவரும் எதிர்பாராத ஒரு உயர்வை (ஆசீர்வாதத்தை) ஆண்டவர் யோசேப்பிற்கு கொடுத்தார்.  யோசேப்பின் தீமைகள் அனைத்தையும் நன்மையாக மாற்றின ஆண்டவர் நம்முடைய தீமைகளையும் நன்மையாக மாற்றுவார்.

யோபு

          யோபு மிகப்பெரிய செல்வந்தன்.  தன் சொத்துக்கள் முழுவதையும், பத்து பிள்ளைகளையும் ஒரே நாளில் இழந்தார்.  அந்த நிலையில் யோபு கர்த்தரை தூசிக்கவில்லை.  காரணம், யோபுவிற்கு தெரியும், இது என் வாழ்க்கையின் நிரந்தரம் அல்ல.  ஆண்டவர் என்னை ஒருநாள் நிச்சயம் மாற்றுவார் என்பதை யோபு விசுவாசித்தார்.  அவரை உண்மையாய் நம்பினார்.

          யோபு இழந்தை அத்துனை ஆசீர்வாதங்களையும் ஆண்டவர் யோபுவிற்க இரண்டு மடங்காக திரும்ப கொடுத்தார்.

யோபு 42:10

          கர்த்தர் யோபுவின் சிறையிருப்பை மாற்றினார்.  யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.

          யோசேப்பின் வாழ்க்கையில் காணப்பட்ட எல்லா தீமைகளையும் நன்மையாய் மாற்றின ஆண்டவர், யோபுவின் தீமையை நன்மையாய் மாற்றி இரண்டத்தனையாய் ஆசீர்வதித்த ஆண்டவர் நம்மையும் ஆசீர்வதித்து, நன்மைகளை செய்ய வல்லமையுள்வராய் இருக்கிறார்.

3. கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு அவர் நன்மை செய்வார்

கடவுளை ஒருவராலும் பார்க்க முடியாது

யோவான் 1:18அ

          தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.

 

1 யோவான் 4:12அ

          தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை.

 

1 தீமோத்தேயு 6:16அ

          ஒருவராய் சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்.

          நம்முடைய ஆண்டவர் இரக்கமுள்ளவர், கிருபையுள்ளவர், அன்புள்ளவர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.  அதே நேரத்தில் அவர் பயங்கரமானவர்.  சர்வ அதிகாரம் படைத்தவர்.

          கடவுளை யாராலும் பார்க்க முடியாது.  கடவுள் படைத்த சூரியனையே நம்மால் பார்க்க முடியவில்லை.  கடவுளை நாம் எப்படி பார்க்க முடியும்.  இந்த கடைசி காலத்தில் அநேகர் கடவுளை பார்த்ததாக சொல்லுகிறார்கள்.  இவைகளெல்லாம் சாத்தான் கொண்டுவருகிற குழப்பங்கள்.

          யாத்திராகமம் 3:14-ல் ஆண்டவர் தன்னுடைய நாமம் இருக்கிறவராக இருக்கிறேன் என்று சொல்லுகிறார்.  இதன் சரியான எபிரெய பதம் நான் என்பதாகும். நான் என்ற பதத்தை ஆண்டவர் தனது பெயராக மாற்றிக்கொண்டதால், இஸ்ரவேலர்கள் இன்று வரை நான் என்ற பாத்தை பயன்படுத்த மாட்டார்கள். 

          ஆனால் நம்மில் சிலர், அவரை பார்த்ததாகவும், பேசியதாகவும், அவரோடு படுத்து உறங்கியதாகவும், உணவு உண்டதாகவும் கதை சொல்லுகிறார்கள்.

          கடவுள் மனிதனாக இந்த பூமிக்கு வந்தபோது அநேகர் அவரை பார்த்தார்கள், பேசினார்கள், தொட்டார்கள்.  ஆனால் அவர் பூமிக்கு வருவதற்கு முன்னும், வந்து மரித்து உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற பின்பு யாரும் அவரை கண்டதில்லை.

பழைய ஏற்பாட்டில் கடவுளை பார்த்தவர்:

மோசே:

மோசே ஆண்டவருடைய மகிமையை பார்க்க விரும்பினார்.  ஐந்து ஆகமத்தை எழுதின மோசேக்கு ஆண்டவரை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

யாத்திராகமம் 33:20

          நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.

 

புதிய ஏற்பாட்டில் கடவுளைப் பார்த்தவர்கள்:

சவுல்:

          சவுல் கடவுளை பார்க்க வில்லை.  ஒளியை மட்டுமே பார்த்தார்.  கர்த்தருடைய ஒளியைப் பார்த்த சவுலின் கண்கள் இரண்டும் குருடானது.

அப்போஸ்தலர் 9:8

          சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையுங்காணவில்லை.

யோவான்:

வெளிப்படுத்தல் 1:17

          நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்.

          அப்போஸ்தலனாகிய யோவான் வெளிப்படுத்தல் புத்தகத்தை எழுதும்போது, கர்த்தரை பார்த்து செத்தவனைப்போல விழுந்தேன் என்று எழுதுகிறார்.

          கடவுளை யாராலும் பார்க்க முடியாது.  அவர் காணக்கூடாத இறைவன்.  அவருக்குறிய மறியாதையை, கணத்தை நாம் செலுத்தியே ஆக வேண்டும்.

ஆராதனை:

          சர்வ வல்லமையுள்ள, எல்லா வற்றையும் படைத்து ஆட்சி செய்துகொண்டிருக்கிற நம்முடைய ஆண்டவரை நாம் எப்படி ஆராதிக்கிறோம்.   அவரை நாம் ஆராதிக்கும்படியாக பாக்கியம் பெற்றிருக்கிறோம்.

யோவான் 4:24

          தேவன் ஆவியாயிருக்கிறார்.  அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.

சங்கீதம் 96:9

          பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.  பூலோகத்தாரே நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.

சங்கீதம் 2:11

          பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள்.  நடுக்கத்துடனே களிகூறுங்கள்.

 

          ஆராதனையில் கலந்துகொள்ளுகிற நாம் ஏதோ கடமைக்காக ஆராதனையில் கலந்துகொள்ள கூடாது.  நம்மிடம் பரிசுத்தம் காணப்பட வேண்டும்.         நம்முடைய உடையில், உள்ளத்தில், வார்த்தையில் பரிசுத்தம் காணப்பட வேண்டும்.  பயத்தோடும் நடுக்கத்தோடும் நாம் அவரை ஆராதிக்க வேண்டும். 

          புறஜாதிகள் தங்கள் தெய்வங்கள் விரும்பாத காரியங்களை செய்துவிட்டால், தெய்வம் நம்மை தண்டித்துவிடும் என்று கல்லையும் மண்ணையும் பார்த்து பயந்து கொண்டிருக்கிறார்கள்.  உயிருள்ள தெய்வத்தை வணங்குகின்ற கிறிஸ்தவர்களாகிய நாம் கடவுளைக் குறித்த பயம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 

ஆண்டவர் என்னை பார்க்கிறார்:

          உலக மனிதர்கள் பார்வையில் நாம் நல்லவர்கள் போல் வாழ்வது மிகவும் எளிமையானது.  யாரும் இல்லாத நேரத்தில் நாம் நல்லவர்களாக வாழ வேண்டும்.

          மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதால், நாம் அநேக நேரங்களில் தவறு செய்யாமல் இருக்கிறோம்.  யாரும் இல்லை, யாரும் என்னை பார்க்கவில்லை என்று நாம் தவறு செய்துவிடுகிறோம்.  அந்த நேரத்தில் ஆண்டவர் என்னோடு கூட இருக்கிறார், என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

2 நாளாகமம் 16:9

          தம்மைப்பற்றி உத்த இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.

          நம்முடைய ஆண்டவர் எங்கும் காணப்படுகிறார், அவர் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று பயந்து நாம் தவறு செய்யாமல் இருக்க வேண்டும்.

 

தாவீது:

கற்பனை கதை:

          தாவீது பெண்கள் மீது நாட்டம் கொண்ட ஒரு அரசன்.  அவர் ஒரு நாள் குடித்து வெறித்து, பெண்களோடு உள்ளாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டார்.  மற்றவர்கள் பார்த்தால் என்னை தவறாக நினைப்பார்கள் என்பதால், மதுபானத்தையும், சில பெண்களையும் கூட்டிக்கொண்டு துறைமுகத்திற்கு சென்று, ஒரு நீர்மூழ்கி கப்பலை வாடகைக்கு வாங்கி, சமுத்திரத்தின் ஆழத்திற்கு சென்று அங்கு உள்ளாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.  அங்கு சென்றது ஆண்டவர் அவருக்கு வெளிப்பட்டார்.  தவறு செய்ய முடியவில்லையே என்ற எண்ணத்தில் அங்கியிருந்து கரைக்கு வந்தார்.

          மீண்டுமாக விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று, ஒரு ராக்கெட்டை வாடகைக்கு வாங்கி, மதுபானத்தையும், ஸ்திரீகளையும் கூட்டிக்கொண்டு பூமியைக் கடந்து, எல்லா கோள்களையும் தாண்டி வானத்திற்கு சென்றார்.  அங்கு அவர் உள்ளாசமாக இருக்கலாம் என்று நினைத்தபோது அங்கும் ஆண்டவர் இருந்தார்.  எனவே, வேதனையோடு எழுதுகிறார்,

சங்கீதம் 139:8

          நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கு இருக்கிறீர்.  நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.

          நாம் எந்த தவறு வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் ஆண்டவர் இல்லாத இடமாக சென்று செய்ய வேண்டும்.  நான் செய்யக்கூடிய தவறுகளை மனிதர்கள் பார்த்துவிடக் கூடாது என்று நினைக்கிற நாம், நாம் எங்கு இருந்தாலும் கடவுள் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிடுகிறோம்.

          தேவனுக்கு பயந்து நாம் வாழும்போது அவரிடமிருந்து நாம் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

தேவனுக்கு பயந்த மறுத்துவச்சிகள்;

          மருத்துவச்சிகள் தேவனுக்கு பயந்ததால், ஆண்டவர் அவர்கள் குடும்பத்தை ஆசீர்வதித்தார்.

யாத்திராகமம் 1:17,20

          17. மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.

          18. இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார்.  ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள்.

          நாமும் கடவுளுக்கு பயந்து நடக்கும்போது, நம்முடைய குடும்பததையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார்.

          கடவுள் யாருடைய வாழ்க்கையில் நன்மையை செய்கிறார் என்று கற்றுக்கொண்டோம்.  நாமும் கடவுளை முழு இருதயத்தோடு தேடும்போது, தீமைகளை சகிக்கும்போது, கடவுளுக்கு பயந்து வாழும்போது ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையிலும் தீமையை நன்மைகளாக மாறப்பண்ணுவார்.  ஆசீர்வாதத்தைக் கட்டளையிடுவார்.

          ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வாதிப்பாராக.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.