Type Here to Get Search Results !

அப்போஸ்தலர் வேத ஆராய்ச்சி | Acts Bible Study Chapter 3-6 | அனனியா சப்பீராள் | பந்தி விசாரிப்புக்காக ஏழு பேர் | Bible Study in Tamil | Jesus Sam

==========================
அப்போஸ்தலர் நடபடிகள் (பாகம் மூன்று)
==========================
அப்போஸ்தலர் அதிகாரம் 3
====================


    ஜெப வேலையாகிய 9-ம் மணி நேரத்தில் பேதுருவும், யோவானும் தேவாலயத்திற்கு போனார்கள்.

    ஒன்பதாம் மணி வேலை என்பது இந்திய நேரப்படி மதியம் மூன்று மணி. யூதர்களின் ஒரு நாள் பகல் பொழுது என்பது காலை 6 மணிக்கு துவங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 3 மணி என்பது எருசலேம் தேவாலயத்தின் ஜெப நேரமாய் இருந்தது.


    பேதுருவும், யோவானும் இரட்சிக்கப்பட்ட பின்பும் எருசலேம் தேவாலயத்திற்கு சென்றார்களே, அப்படியானால் நாமும் எருசலேம் தேவாலயத்திற்குச் செல்ல வேண்டுமா என்ற கேள்வி எழும்பலாம்.

    இயேசுவும் கூட தேவாலயத்திற்கு சென்றார். இயேசு குழந்தையாக இருந்த போதும் தேவாலயம் சென்றார். பன்னிரெண்டு வயதாகும்போதும் தேவாலயம் சென்றார். ஞானஸ்நானம் பெற்ற பின்பும் இயேசு தேவாலயம் சென்றார். இயேசு கிறிஸ்து இரண்டு முறை தேவாலயத்தை சுத்திகரித்தார். தன்னுடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் தேவாலயத்தை சுத்திகரித்தார் (யோவான் 2-ம் அதிகாரம்). தன்னுடைய ஊழியத்தின் முடிவிலும் இயேசு தேவாலயத்தை சுத்திகரித்தார் (மத்தேயு 21-ம் அதிகாரம்). ஒவ்வொரு பண்டிகையின் போதும் இயேசு தேவாலயத்திற்கு சென்றார்.

    இயேசு கிறிஸ்து தேவாலயத்தை புறக்கணக்கவில்லை. அவர் ஒரு யூதனாய் பிறந்தபடியினால், ஒரு யூதனாக தேவாலயத்திற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுத்தார்.

    இயேசுவும் தேவாலயம் சென்றார், சீஷர்களும் சென்றார்கள். அப்படியானால் நாமும் தேவாலயம் செல்ல வேண்டுமா என்று நினைக்க வேண்டாம்.

    நாம் எருசலேம் தேவாலயத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. காரணம், இயேசு சொன்னபடி (மத்தேயு 24:2) கி.பி 70-ல் எருசலேம் தேவாலயம் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடி இடிக்கப்பட்டுவிட்டது.

    எருசலேமில் இருந்த விசுவாசிகள் மாத்திரமே தேவாலயத்திற்கு சென்று வந்தார்கள். அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலேயே சுவிசேஷமானது புறஜாதியாருக்கும் சென்றடைந்தது. புறஜாதியார் யூதர்கள் செய்கின்ற காரியங்களை செய்ய வேண்டிய தேவை இல்லை.

    விருத்த சேதனம், பண்டிகைகள், தேவாலயம் இவையனைத்தும் யூதர்களுக்குறியவைகள். கிறிஸ்தவர்கள் இவைகளை பின்பற்ற வேண்டியதில்லை.

    உலகத்தில் உள்ள எந்த மதத்தினருக்கும் கொடுக்கப்பட்டாத ஒரு உரிமை யூத மதத்தினருக்கு உண்டு. உலகத்தில் உள்ள எந்த மதத்தினரும், நான் எங்கள் தேவனை ஆராதித்துக்கொண்டு, இயேசுவுக்கு சீஷனாகவும் இருக்கிறேன் என்று சொல்ல முடியாது. ஆனால் யூதர்களால் சொல்ல முடியும். ஒரு யூதன், யூதனாக இருந்துகொண்டே, இயேசுவுக்கு சீஷனாகவும் இருக்க முடியும். இன்றும் அநேக கிறிஸ்தவர்கள் யூதனாக இருந்துகொண்டு கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மேசியானிக் யூதர்கள் என்று பெயர்.

    மேசியானிக் யூதர்கள் என்றால் மேசியாவை நம்புகிற யூதர்கள். யூதர்கள் என்றாலே பழைய ஏற்பாட்டை நம்புகிறவர்கள். புதிய ஏற்பாடு என்பது பழைய ஏற்பாட்டின் நிரைவேற்றமாய் இருக்கிறது.

    யூதர்களால் மாத்திரம் பழைய ஏற்பாட்டு பண்டிகைகளையும், முறைமைகளையும் கடைபிடித்துக் கொண்டே புதிய ஏற்பாட்டையும் நம்ப முடியும். ஒரு இந்துவோ, இஸ்லாமியனோ, புத்த மதத்தினரோ வேறு யாரும் இப்படி சொல்ல முடியாது. தங்கள் மதத்தைப் பின்பற்றிக்கொண்டே கிறிஸ்துவையும் பின்பற்றும் உரிமை யூதர்களுக்கு மாத்திரமே உண்டு.


    தேவாலயத்திற்கு செல்கின்ற பேதுருவையும், யோவானையும் பார்த்து பிறவி சப்பானி ஒருவன் பிச்சை கேட்கிறான். அதற்கு அவர்கள் வெள்ளியும் பொன்னும் எங்களிடத்தில் இல்லை என்று சொல்லி, நசரேயனாகிய இயேசுவின் நாமத்தினாலே அவனுக்கு சுகம் கொடுக்கிறார்கள். பிறவி சப்பாணியாய் இருந்தவன், காலூன்றி நின்று குதிக்கத் தொடங்கினான்.

    பிறவி சப்பாணி சுகமடைந்ததால், அநேகர் அவ்விடத்தில் கூடி வந்தார்கள். அவர்களுக்கு பேதுரு சுவிசேஷத்தை பிரசங்கித்தார்.


அப்போஸ்தலர் அதிகாரம் நான்கு
=======================
    தேவாலயத்தில் பேதுரு பேசிக்கொண்டிருக்கிறதை கேட்டு, ஆசாரியர்களும், தேவாலயத்து சேனைத்தலைவர்களும், சதுசேயரும் அங்கே கூடி வந்தார்கள்.

    சதுசேயர்கள் உயிர்த்தெழுதலை நம்பாதவர்கள்.

    இவர்கள் பேதுருவையும், யோவானையும் காவலில் வைத்தார்கள்.


இஸ்ரவேலில் மூன்று விதமான சிறைச்சாலை இருந்தன:
1. பிலாத்துவின் அரண்மனையில் இருந்த சிறைச்சாலை
    ரோம அரசுக்கு விரோதமாக, இராயனுக்கு விரோதமாக, சுதந்திரத்தற்காக போராடுகிறவர்களை இந்த சிறையில் அடைப்பார்கள்.

2. ஏரோதுவின் மாளிகையில் உள்ள சிறைச்சாலை
    ஏரோது யூதர்களுக்கு தலைவனாய் இருந்தான். கலவு, கொலை போன்ற சமுதாய குற்றம் செய்கிறவர்களை இந்த சிறையில் அடைத்தார்கள்.

3. காய்பாவின் அரண்மனையில் இருந்த பாதால சிறை
    காய்பா என்பவர் அந்த வருஷத்து (இயேசுவை சிலுவையில் அறைந்த அந்த ஆண்டு) பிரதான ஆசாரியன்.

    பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் அரண்மனையில் ஒரு சிறை இருந்தது. தேவாலயம் தொடர்பாக தேவ தூஷணம் சொல்லுதல், யூத மதத்திற்கு எதிராக, நியாயப்பிரமாணத்திற்கு எதிராக பேசுதல் போன்ற குற்றம் செய்தவர்களை இந்த காய்பாவின் அரண்மனையில் உள்ள சிறையில் அடைப்பார்கள்.


    பேதுருவையும், யோவானையும் சிறையில் வைத்தவர்கள் பிரதான ஆசாரியர், சதுசேயர், தேவாலய சேனைத் தலைவர்கள். அப்படியானால் இவர்கள் காய்பாவின் அரண்மனையில் உள்ள சிறையில் தான் பேதுருவையும், யோவானையும் அடைத்திருக்க வேண்டும்.


    பேதுரு எந்த சிறையில் அடைக்கப்பட்டாரோ அதே சிறையில் தான் சில நாட்களுக்கு முன்பு இயேசுவை அறியேன் என்று சபித்து சத்தியம் பண்ணினார். பேதுரு சிறைக்குள் சென்ற உடனே, நான் இங்கே தான் இயேசுவை மறுதலித்தேன் என்ற நியாபகம் பேதுருவுக்கு வந்திருக்கும்.

    சில நாளைக்கு முன்பு தன்னுடைய உயிருக்கு பயந்து இயேசுவை அறியேன் என்று சொன்ன பேதுரு, அந்த இயேசுவுக்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தைரியமாய் சுவிசேஷம் அறிவிக்கத் தொடங்கினார்.

    இந்த காய்பாவின் அரண்மனை இன்றும் இருக்கிறது. இன்று இது ஒரு கத்தோலிக்க தேவாலயமாக இயங்கி வருகிறது.


    இயேசுவை கைது செய்து விசாரித்த அதே கூட்டத்தார் இப்போது பேதுருவையும், யோவானையும் கைது செய்து விசாரிக்கிறார்கள்.

    அந்த நேரத்தில் பேதுரு பரிசுத்த ஆவியினால் நிரைந்தவராய் தைரியமாய் அவர்களுக்கு மறுவுத்தரவு கொடுத்தார்.

அப்போஸ்தலர் 4:11
    வீடு கட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.


    பேதுருவின் உண்மையான பெயர் சீமோன்.
    கலிலேயாவின் வடக்கு பகுதியில் பிலிப்பு, செசரியா என்ற பகுதி உள்ளது. இங்கு இயேசு சீஷர்களைப் பார்த்து ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு சீஷர்கள் ஜனங்கள் உம்மை எலியா என்றும், தீர்க்கதரிசி என்றும், யோவான்ஸ்நானன் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

    அதற்கு இயேசு நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பேதுரு: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சொன்னார்.

    உடனே ஆண்டவர் சீமோனுக்கு, கேபா என்ற ஒரு புதிய பெயரைக் கொடுத்தார். கேபா என்றால் தமிழில் பேதுரு. கிரேக்கத்தில் பெட்ராஸ். கேபா அல்லது பெட்ராஸ் என்றால் கூழாங்கல் என்று பொருள்.

    இயேசு சீமோனைக் பார்த்து சொல்லுகிறார், நீ என்னுடைய கையின் கூழாங்கல். தாவீது கோலியாத்தோடு யுத்தம்பண்ண ஐந்து கூலாங்கற்களை எடுத்துச்சென்றார். அந்த கூலாங்கல்லுக்கு கேபா என்று பெயர்.

    தாவீதின் கையில் கூலாங்கள் இருந்ததுபோல, தாவீன் குமாரனாகிய என்னுடைய கையில் இருக்கும் கூலாங்கல் நீ தான் என்று இயேசு பேதுருவைப் பார்த்து சொன்னார். அன்று முதல் இயேசு பேதுருவை கேபா என்றே அழைத்தார். (யோவான் 1:42, மத்தேயு 16:18)

    மத்தேயு 16:18-ல் இந்த கல்லின் மேல் சபையைக் கட்டுவேன் என்று இயேசு பேதுவைப் பார்த்து சொல்லவில்லை. தன்னைக் குறித்தே இயேசு சொன்னார். பேதுருவே, நான் (இயேசு) தான் அந்த கல், என் மேல் தான் நான் சபையைக் கட்டுவேன் என்று இயேசு சொல்லுகிறார்.

    இதை மனதில் கொண்டவராகத்தான் இங்கே பேதுரு, இயேசுவே மூலைக்குத் தலைக்கள் என்று கூறுகிறார்.

    பேதுருவும், யோவானும் பேசியதைக் கேட்டு அனைவரும் பயந்தார்கள். பேதுருவால் சுகம் பெற்ற மனிதன் அங்கே இருந்தபடியினால் எதிர்பேச அவர்களால் கூடாமற்போயிற்று.

    தேவாலயத்தின் தலைவர்கள் இனி இயேசுவைக் குறித்து பேசவும் போதிக்கவும் கூடாது என்று மிரட்டியபோதும், பேதுருவும் யோவானும் பயமில்லாமல், துணிச்சளோடு சுவிசேஷத்தை அறிவித்தார்கள்.


அப்போஸ்தர் 4:24
    விசுவாசிகள் அனைவரும் ஒன்றாக கூடி தேவனை துதித்தார்கள். அவர்களுடைய ஜெபத்தினால் கூடியிருந்த இடம் அசைந்தது.

    விசுவாசிகள் அனைவரும் ஒரே இருதயமும், ஒரே மனமுமுடையவர்களாய் இருந்தார்கள். சகலத்தையும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள்.

    இன்று கிறிஸ்தவ சபைகளில் ஒருமனம் காணப்படுவதில்லை. சபையில் நான் வலக்கமாக இந்த நாற்காலியில் தான் அமருவேன். நான் அமருகிற நாற்காலியில் வேறொருவர் அமர்ந்துவிட்டால், அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதுதான் இன்றை சபையின் நிலை.  ஆனால் ஆதி திருச்சபையில் சகலமும் அவர்களுக்கு பொதுவாய் இருந்தது.

அப்போஸ்தலர் 4:34
    நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரத்தை கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள்.

    அநேகர் தங்கள் வீடுகளையும், நிலங்களையும் விற்றிருந்தாலும், பர்னபாவின் பெயரை மாத்திரம் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறதை பார்க்க முடியும்.

    சவுல் ஆலோசனை சங்கத்தின் உறுப்பினர். ஒரு பரிசேயன். சபைகளை துன்பப்படுத்தி, சிறையில் அடைத்தவர். சவுல் இரட்சிக்கப்பட்ட போது, அப்போஸ்தலர்களில் ஒருவரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சூழ்நிலையில் பவுலை ஏற்றுக்கொண்டவர் இந்த பர்னபா.

    பர்னபாவின் உதவி ஊழியனாகவே பவுல் கிறிஸ்வர்கள் மத்தியில் அறிமுகமாகிறார். மிக வல்லமையாய் ஊழியம் செய்த பவுலை ஏற்றுக்கொண்டு, அவரை ஊழியப்பாதையில் நடத்தியவர் இந்த பர்னபா. எனவே, பர்னபா தன்னுடைய நிலங்களை விற்று, அப்போஸ்தலர்களிடம் கொடுத்த நிகழ்வு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அப்போஸ்தலர் ஐந்தாம் அதிகாரம்
=====================
அனனியா சப்பீராள்
    விசுவாசிகள் தங்கள் வீடுகளையும், நிலங்களையும் விற்று விற்கப்பட்டதின் கிரயத்தை கொண்டுவர வேண்டும் என்று அப்போஸ்தர்கள் சொல்லவில்லை. விசுவாசிகள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வீடுகளையும், நிலங்களையும் விற்று விற்கப்பட்டதின் கிரயத்தை அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள்.

    அனனியாவும், சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்கவேண்டிய காட்டாயம் இல்லை. தங்களுடைய பெருமைக்காக இவர்கள் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.

    தங்கள் காணியாட்சியை விற்ற இவர்கள் தங்களுக்கு விருப்பமான தொகையை அப்போஸ்தலரிடம் வந்து கொடுத்திருக்கலாம். முழு தொகையையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை விற்கும் முன்பும் அது அவர்களுடையதாய் இருந்தது, அதை விற்ற பின்பும் அது அவர்களுடையதாய் இருந்தது.

    அனனியாவும், சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றதில் ஒரு பகுதியை வஞ்சித்து வைத்ததுமல்லாமல், முழு தொகையையும் கொடுத்ததாக சொல்லி ஜனங்கள் மத்தியில் பெருமையை தேடிக்கொள்ள நினைத்தார்கள்.

    இவர்களுடைய குணத்தை அறிந்த பேதுரு, பரிசுத்த ஆவியினால் நிறைந்து அனனியாவைப் பார்த்து: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள் என்று கேட்டார். அதற்கு அனனியா: ஆமாம் இவ்வளவுக்குத்தான் விற்றோம் என்று பொய் சொல்லுகிறார். நாங்கள் நிலத்தை அதிக விலைக்குத்தான் விற்றோம், அதில் ஒரு பகுதியை எங்கள் குடும்பத்திற்காக எடுத்துவைத்துள்ளோம், மீத தொகையை கொண்டு வந்துள்ளோம் என்று அனனியா உண்மையை சொல்லியிருக்கலாம். நான் ஒரு பகுதியை ஒளித்து வைத்தது யாருக்கும் தெரியாது என்று ஆண்டவருக்கு விரோதமாக பொய் சொன்னதினால் அனனியா மரித்துப்போகிறார்.


பிதாவானவரும், பரிசுத்த ஆவியானவரும் ஒருவரே:
    அப்போஸ்தலர் 5:3-ல் பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொன்னாய் என்று பேதுரு சொல்லுகிறார்.
    அப்போஸ்தலர் 5:4-ல் தேவனிடத்தில் பொய் சொன்னாய் என்று பேதுரு சொல்லுகிறார்.
    பிதாவானவரும் பரிசுத்த ஆவியானவரும் ஒருவரே என்று பேதுரு இங்கே விளங்கப்படுத்துகிறார்.

    அப்போஸ்தலர் 2:2-ல் சீஷர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற போது, பலத்த காற்று அந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று என்று வாசிக்கிறோம், அப்போஸ்தலர் 4:31-ல் அவர்கள் ஜெபம்பண்ணும்போது அந்த இடம் அசைந்தது, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள் என்றும் வாசிக்கிறோம்.

    சிலர் பிதாவினுடைய வல்லமை தான் பரிசுத்த ஆவி என்று நினைக்கிறார்கள். பிதாவின் வல்லமை பரிசுத்த அவி அல்ல.  பரிசுத்த ஆவியானவருக்கும், பிதாவானவருக்கு நிகரான வல்லமை இருக்கிறது என்பதை இங்கே பேதுரு விளங்கப்படுத்துகிறார்.


    உங்களுக்கு பரிசுத்த ஆவி கிடைத்துவிட்டதா? உங்களிடத்தில் பரிசுத்த ஆவி இருக்கின்றதா? என்று சிலர் கேட்பார்கள். கிடைத்துவிட்டதா? இருக்கின்றதா? என்று கேட்பது சரியான மொழிநடை அல்ல? இது அக்ஃரினை வார்த்தை.

    உயிரற்ற பொருட்களையும், விலங்குகளையும் குறிப்பிடும்போது நாம் அது, இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவோம். பரிசுத்த ஆவி என்பது ஒரு வல்லமை என்று நினைக்கின்ற சிலர், பரிசுத்த ஆவியானவருக்கு இந்த அக்ஃரினை வார்த்தையையே பயன்படுத்துகிறார்கள்.

    பரிசுத்த ஆவி என்பது அக்ஃரினை வார்த்தை அல்ல, உயர்தினை வார்த்தை. அவர் என்றே நாம் பயன்படுத்த வேண்டும் என்று இங்கே பேதுரு நினைப்பூட்டுகிறார். பரிசுத்த ஆவி என்று நாம் பயன்படுத்துவதை விட பரிசுத்த ஆவியானவர் என்று சொல்வது சரியானதாகும்.

    கிரேக்கத்தில் நியூமா, நியூமடோஸ் என்ற இரண்டு வித சொற்கள் உண்டு. நியூமா என்றால் ஆவி என்று பொருள். நியூமடோஸ் என்றால் ஆவி என்பதோடு ஒரு ஆண்பால் சேருகிறது, அதாவது ஆவியானவர் என்தாகும்.

    பரிசுத்த ஆவியானவர் கிரேக்கத்தில் நியூமடோஸ் என்றே அழைக்கப்படுகிறார். தமிழில் இதுபோன்ற சிறப்பு சொற்கள் இல்லாவிட்டாலும், புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் பரிசுத்த ஆவியானவரை குறிக்கக்கூடிய இடங்களில் நியூமடோஸ் என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழில் வேதாகமத்தில் சில இடங்களில் பரிசுத்த ஆவி என்றும், சில இடங்களில் பரிசுத்த ஆவியானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பரிசுத்த ஆவியானவர் என்பது அக்ஃரினை வார்த்தை அல்ல, உயர்தினை வார்த்தை.  நாம் பரிசுத்த ஆவியானவர் என்று பயன்படுத்துவதே சரியானதாகும்.


    கர்த்தருடைய சமுகத்தினின்று பொய் சொன்ன அனனியா அங்கேயே விழுந்து ஜீவனை விட்டார்.

    சபைகளிலே ஆண்டவர் பரிசுத்தத்தையும், ஒழுக்கத்தையும் எதிர்பார்க்கின்றார். இந்த காலத்தில் கண்டித்து பேசுகின்ற சபைகளையும், பாவத்தை உணர்த்துகின்ற சபைகளையும் மக்கள் விரும்புவதில்லை. ஆசீர்வாதத்தையும், செழிப்பையும் போதிக்கின்ற சபைகளையே மக்கள் விரும்புகின்றார்கள். மக்கள் என்ன தவறு செய்தாலும், அதை சுட்டிக்காட்டுவதை விட்டுவிட்டு, ஆசீர்வாதத்தையும், செழிப்பையுமே போதிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    சபையில் ஊழியர் பாவத்தைக் குறித்து கண்டித்து உணர்த்துவாரானால், சபையை விட்டு வேறு சபைக்குச் சொல்லும் விசுவாசிகள் அதிகரித்துவிட்டார்கள்.

    அநேக சபைகளில் விசுவாசிகள் ஆலய ஆராதனைக்கு சரியான நேரத்தில் வருவதில்லை, ஆராதனை நேரத்தில் தொலைபேசியில் மற்றவரோடு பேசுவது, மற்றவர்களுக்கு SMS அனுப்புவது, ஆராதனை நேரத்தில் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கிக்கொடுத்து உண்ண வைப்பது, சில பெரியவர்களே ஆராதனை நேரத்தில் தின்பண்டங்களை சாப்பிட்டுக்கொண்டு இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட காரியங்கள் சபை ஒழுக்கத்தை கெடுக்கின்றன. சபையிலே ஆண்டவர் ஒழுக்கத்தை, பரிசுத்தத்தை விரும்புகின்றார்.

    ஒரு ஊழியர் சபையிலே கண்டிப்பான வார்த்தைகளை பேசும்போது, விசுவாசிகள் இது பழைய ஏற்பாட்டுக் காலம் அல்ல, இது புதிய ஏற்பாட்டுக் காலம், கிருபையின் காலம், அன்பினால் தான் சபை நடத்தப்பட வேண்டும், கண்டிப்பு சபையில் இருக்கக்கூடாது என்று சொல்லுவார்கள்.

    அப்போஸ்தலர் 5-ம் அதிகாரம் புதிய ஏற்பாட்டு சபை, ஊழியர் கண்டித்து பேசும்போது அனனியா விழுந்து ஜீவனையே விட்டான் என்று வாசிக்கிறோம்.

    ஆண்டவரால் அபிஷேகம்பண்ணப்பட்ட ஒரு ஊழியரிடத்தில் நாம் பொய் சொல்வோமானால், அவனுடைய வாழ்க்கையில் மரணங்கள் நேரிடும் வாய்ப்பு உள்ளது. ஒருவேலை சரீரப்பிரகாரமான மரணம் ஏற்படாவிட்டாலும், அவனுடைய நின்மதி மரித்துவிடும், ஆரோக்கியம் மரித்துவிடும், பொருளாதாரம் மரித்துவிடும்.


    விசுவாசிகள் இப்படி நினைப்பதுண்டு. ஊழியர் என்னைவிட பெரியவரா? அவர்கள் பாவம் செய்ததில்லையா? அவர்கள் என்ன தேவனைப் போன்ற பரிசுத்தவான்களா? இப்படியெல்லாம் நினைப்பதுண்டு.

    அனனியாவும் இப்படி நினைத்திருக்கக்கூடும். சபை ஆரம்பித்த ஒருசில மாதங்களில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. சில மாதங்களுக்கு முன்பு இயேசுவை அறியேன் என்று சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கினவர் இந்த பேதுரு. அப்படிப்பட்ட பேதுருவுக்கு முன்தானே நான் பொய் சொல்லுகிறேன் என்று அனனியா நினைத்திருக்கலாம். பேதுரு பெலவீனமானவராக இருக்கலாம், ஆனால் அவருக்குள் இருக்கின்ற பரிசுத்த ஆவியானவர் பெரியவர்.

    ஒருவேலை உங்கள் சபையின் மேய்ப்பர் பெலவீனமானவராக இருக்கலாம், ஆனால் அவருக்குள் இருக்கின்ற பரிசுத்த ஆவியானவர் பெரியவர். பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாய் நாம் செயல்படும்போது நம்முடைய முடிவு மோசமானதாக இருக்கும்.


    அப்போஸ்தலர்களாலே அற்புத அடையாளங்கள் நடைபெற்றன. இதனால் பிரதான ஆசாரியர், சரிசேயர் அனைவரும் எழும்பி பொறாமையினால் நிரைந்து, அப்போஸ்தலர்களை பொதுவான சிறைச்சாலையில் அடைத்தார்கள்.

    பொதுவான சிறைச்சாலை என்றால், ஏரோது மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த சிறைச்சாலை. இவர்கள் சமூக விரோதிகள் என்ற பெயரில் அப்போஸ்தலர்களை சிறையில் அடைத்தார்கள்.

    பின்பு அப்போஸ்தலர்கள் தேவதூதனால் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, தேவாலயத்தில் தைரியமாய் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள்.


    அப்போஸ்தலர்களின் தைரியத்தைப் பார்த்த பிரதான ஆசாரியரும் சதுசேயரும் அவர்களை கட்டுப்படுத்த முடியால், அவர்கள் மேல் பொறாமை கொண்டார்கள்.

    அப்பொழுது அவர்கள் நடுவே சகல ஜனங்களாலும் கனம்பெற்ற கமாலியேல் என்பவர் பேசத்துவங்கினார். கமாலியேல் நியாயசாஸ்திரியாகவும், ஆலோசனை சங்கத்து உறுப்பினராகவும் இருந்தார். இவர் ஒரு பரிசேயர்.

    கமாலியேல் சபையின் நடுவே நின்று, முன்னே தெயுதாஸ், யூதாஸ் என்பவர்கள் எழும்பி அநேகரை தங்கள் வசமாய் இழுத்துக்கொண்டார்கள். அவர்கள் மரித்தபின்பு அவர்களைப் பின்பற்றினவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். இவர்களும் சில நாட்களுக்குள்ளே சிதறிப்போவார்கள்.

    ஒருவேலை அவர்கள் தேவனால் ஏற்படுத்தப்பட்டவர்களாய் இருப்பார்களானால் அவர்களை உங்களால் அழித்துவிட முடியாது. தேவனோடு எதிர்த்து நிற்காதபடி பாருங்கள் என்று கமாலியேல் பேசுகிறார்.

    கமாலியேல் இயேசுவை விசுவாசித்தவர் அல்ல. இருப்பினும், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களை விட்டுவிடுங்கள், அவர்களை தொந்தரவு செய்யாதிருங்கள். ஒருவேலை அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருப்பார்களானால், தேவனோடு போர் செய்கிறவர்களாக இராதேயுங்கள் என்று சொல்லுகிறார்.


    அப்போஸ்தலர்கள் இயேசுவுக்காக அவமானப்படுவதையும், பாடுகள் அனுபவிப்பதையும் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள். தேவாலயத்திலும், வீடுகளிலும் மிகவும் தைரியமாய் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள்.


அப்போஸ்தலர் ஆறாம் அதிகாரம்
==================
    கிரேக்க மதங்களிலிலுந்து யூதர்களாய் மாறியவர்கள் புராசலிடோஸ் என்று அழைக்கப்பட்டார்கள். அப்போஸ்தலர்கள் காலத்தில் அநேக கிரேக்கர்கள் யூதர்களாக மாறினார்கள்.

கிரேக்கர்கள்
    கிரேக்கர்கள் தத்துவ ஞானிகள். அரிஸ்டாட்டில், பிலேட்டோ இதுபோன்ற உலகத்தில் சிறந்த ஞானிகள் எல்லோரும் கிரேக்கர்கள். உலக அறிவு அதிகம் படைத்தவர்கள், அவர்களுடைய பேச்சு நடை, மொழி நடை, எழுத்து நடையைப் பார்க்கும்போது இவர்களுடைய அறிவு மதிக்கக்கூடியனவாக இருக்கும்.

    ஆனால் இவர்களுடைய மதங்கள் சற்று வித்தியாசமானது. இவர்களுடைய ஞானத்திற்கும், இவர்களுடைய மத நம்பிக்கைகளுக்கும் சம்பந்தம் இருக்காது. கிரேக்கர்களுடைய மதக் கோட்பாடுகள் எந்த விதத்திலும் நம்பக்கூடிய அளவில் இருக்காது. மனித முகத்தையும், குதிரை சரீரத்தையும் கொண்ட தெய்வங்களை வணங்குவார்கள். இப்படி இவர்களுடைய மதக்கோட்பாடுகள் எந்த விதத்திலும் நம்பக்கூடியதாக இருக்காது.

    இன்றும் அநேகர் இப்படி இருக்கிறார்கள். மிகச் சிறந்த ஞானிகளாக, மருத்துவராக, விஞ்ஞானியாக இருப்பார்கள். எந்த அளவும் நம்பமுடியாத மூடநம்பிக்கைகளை நம்பிக்கொண்டிருப்பார்கள். சிறந்த ஞானிகளாக இருந்தாலும், தங்கள் மதக் கோட்பாடுகளில் உள்ள மூட நம்பிக்கைகளை அப்படியே நம்புவார்கள்.

    கிரேக்கர்களுடைய மதக்கோட்பாடுகளில் உள்ள மூட நம்பிக்கைகளை அநேக கிரேக்கர்கள் விரும்பவில்லை.  தங்கள் மத மூட நம்பிக்கைகளை வெறுத்தார்கள்.

    கிரேக்க மதக் கோட்பாடுகளை விரும்பாத கிரேக்கர்கள், யூத மதத்தைப் பற்றி அறிந்துகொண்டு, யூத மதக்கோட்பாடுகளை ஆராய்ச்சி செய்தார்கள். யூதர்களின் நியாப்பிரமாண புத்தகம், சட்ட புத்தகத்தை வாசித்த கிரேக்கர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இப்படியாக அநேக கிரேக்கர்கள் யூதர்களாக மதம் மாறினார்கள்.

    லூக்கா, தீத்து, அப்பொல்லோ, தெயோப்பிலு போன்றவர்கள் கிரேக்கர்களாக இருந்து யூதர்களாக மாறியவர்கள்.

    கிரேக்கராக இருந்து யூதனாக மாறியவர்களில் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். இப்போது சபைக்குள்ளே கிரேக்கரும், யூதரும் கலந்து இருந்தார்கள்.


    இந்தியாவில் விதவைளை எவரும் மதிப்பதில்லை. நல்ல காரியங்களுக்கு விதவைகளை அழைப்பதில்லை. நம்மைப்போலவே யூதர்களும் விதவைகளை மதிக்க மாட்டார்கள்.

    ஆனால் கிரேக்கர்கள் விதவைகளை அதிகம் மதித்தார்கள். திருமணமான ஒரு ஆண் மரித்துப்போனால், அவர் தெய்வமாக மாறிவிட்டார் என்று கிரேக்கர்கள் நம்பினார்கள். அப்படியானால் விதவையாக்கப்பட்ட அந்த பெண் கடவுளின் மனைவி என்பதால், விதவைகளை கிரேக்கர்கள் அதிகம் மதித்தார்கள்.

    ஒரு விசேஷ நிகழ்வுகளில் எல்லோரும் வரிசையாக நின்று உணவு வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், விதவைகள் வரும்போது அவர்களுக்கு கிரேக்கர்கள் அதிக முன்னுரிமை கொடுப்பார்கள்.

    கிரேக்கர்கள் விதவைகளை மதித்தார்கள். யூதர்கள் விதவைகளை சாபமாக நினைத்தார்கள். இவர்கள் இருவரும் இரட்சிக்கப்பட்டு ஒரே ஐக்கியமாய் இருந்தபோது அவர்களுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.


அப்போஸ்தர் 6:1
 அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரனையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.

    இப்படி கிரேக்கருக்கும், யூதருக்கும் கருத்துவேறுபாடு வந்தபோது சீஷர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. காரணம் இப்பொழுதுதான் சபை உருவானது. சபை இன்னும் மூல உபதேசத்தில் அதிகமாக வளரவில்லை. யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை என்று சொன்னவர் பவுல். பவுல் இன்னும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவர் யூதனாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

    இந்த பிரச்சனைக்கு முடிவுகொண்டு வரும் விதத்தில் சீஷர்கள் பந்தி விசாரிப்புக்காக ஏழுபேரை தெரிவுசெய்கிறார்கள்.


    இரண்டுவிதமான பொறுப்பாளர்களை நாம் பார்க்க முடியும். ஒன்று ஆட்சியாளர்கள், மற்றொன்று தலைவர்கள்.

    ஆட்சியாளர்கள் தாங்கள் கட்டளையிடுகின்றதை அனைவரும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

    தலைவர்கள் கட்டாயப்படுத்தமாட்டார்கள். அவர்களும் செய்வார்கள், மற்றவர்களையும் செய்ய ஊக்கப்படுத்துவார்கள். யாரால் எந்த காரியத்தை செய்ய முடியும் என்பதை அறிந்து, அந்தந்த காரியத்திற்காக அந்தந்த மனிதர்களை பிரித்துவிடுவார்கள்.

    ஆண்டவர் நம்மை ஆட்சியாளர்களாக அல்ல தலைவர்களாக ஏற்படுத்தியிருக்கிறார். நான் ஒரு கட்டளையிட்டால் அதற்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என்று நினைப்பது தவறு.

    அநேக முழுநேர ஊழியர்கள் எல்லா வேலைகளையும் தாங்களே செய்து கொண்டு, வேதம் வாசிக்க நேரம் இல்லை, ஜெபிக்க நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

    முழு நேர ஊழியர் என்பவர் மற்ற காரியங்களை ஊழிய வாஞ்சையுள்ள வாலிபர்களிடம், விசுவாசிகளிடம் பொறுப்பாய் ஒப்படைத்துவிட்டு, தாங்கள் அதிக நேரத்தை ஜெபத்திலும், வேதவாசிப்பிலும் செலவிட வேண்டும்.

    எல்லா காரியங்கைளையும் தாங்களே செய்து கொண்டு, வேதம் வசிக்க நேரமில்லை, ஜெபிக்க நேரமில்லை என்று சொல்வது முட்டாள்தனம்.

    ஒரு ஊழியர் ஜெபிக்கிறார், வேதத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் என்று விசுவாசிக்கோ மற்றவர்களுக்கோ தெரியவேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள் பார்க்கும்படியாக ஜெபிப்பது, மற்றவர்கள் பார்க்கும்படியாக வேதம் வாசிப்பதை ஆண்டவர் விரும்புவதில்லை.

    ஒரு ஊழியர் எந்த அளவிற்கு வேதம் வாசிக்கிறார், எந்த அளவிற்கு ஜெபிக்கிறார் என்பதை அவருடைய கனிகளினால், ஆராதனையில் அவர் மூலமாக ஆண்டவர் வெளிப்படும் விதத்தில நாம் அறிந்துகொள்ள முடியும்.


    அப்போஸ்தலர்கள் பந்தி விசாரிப்புக்காக ஏழு நபர்களை தெரிவு செய்தார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரைந்தவர்களும், ஞானமுள்ளவர்களும்? ஜனங்களால் நற்சாட்சி பெற்றவர்களுமாய் இருந்தார்கள்.

    சாதாரண பந்தி விசாரிக்கின்ற காரியத்திற்கே இப்படிப்பட்ட குணாதிசயங்கள் தேவை என்றால், மேடையில் நின்று பிரசங்கம் செய்கிறவர்கள், இசைக்கருவிகள் வாசிக்கிறவர்கள், காணிக்கை எடுக்கிறவர்கள், ஆலோசனை கொடுக்கிறவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    இப்படி பந்திவிசாரிப்புக்காக தெரிவுசெய்யப்பட்ட பிலிப்பு, ஸ்தேவான் என்ற இருவரை ஆண்டவர் ஊழியத்தில் வல்லமையாய் எடுத்து பயன்படுத்தினார்.

    ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

    ஸ்தேவானோடு பந்திவிசாரிப்புக்காக தெரிவு செய்யப்பட பிலிப்பு என்பவர்  சமாரியாவிற்கு சுவிசேஷத்தை அறிவிக்கச் சென்றார்.

    இரண்டு பிலிப்புவை நாம் வேதத்தில் பார்க்க முடியும். இயேசுவின் 12 சீஷர்களில் ஒருவரின் பெயர் பிலிப்பு. அந்த பிலிப்பு சமாரியா செல்லவில்லை. பந்தி விசாரிப்புக்காக தெரிவு செய்யப்பட்ட பலிப்புவே சமாரியாவிற்கு சுவிசேஷத்தை எடுத்துச் சென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.