Type Here to Get Search Results !

New Testment Bible Study Part Four 4 | புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் நான்கு | சுவிசேஷங்கள் | வேதாமக ஆராய்ச்சி கட்டுரை | Jesus Sam

புதிய ஏற்பாட்டு ஆய்வு (பாகம் 4)

    ஆண்டவரும், மீட்பரும், உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.  புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் நான்கு.  இந்த நான்காம் பாகத்தில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்ற நான்கு சுவிசேஷங்களைப் பற்றியும், வெளிப்படுத்தின விசேஷத்தைப் பற்றியும், அப்போஸ்தலர் நடபடிக்ளைப் பற்றியும், பவுலின் நிருபங்கள் குறித்த மேலான கண்ணோட்டத்தைக் குறித்தும் அறிந்துகொள்வோம்.

    புதிய ஏற்பாட்டு ஆய்வு முதல் மூன்று பாகங்களை வாசிக்காதவர்கள் கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்து வாசித்த பின்பு இந்த நான்காம் பாகத்தை வாசிப்பீர்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஒன்று (1)

புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் இரண்டு (2)

புதிய ஏற்பாட்டு ஆய்பு பாகம் மூன்று (3)


    மத்தேயு | வெளிப்படுத்தின விசேஷம் | மாற்கு | லூக்கா | யோவான் | அப்போஸ்தலர் நடபடிகள் | பவுலின் நிரூபங்கள்

நான்கு சுவிசேஷங்கள்:

மத்தேயு:

            யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவின் நாட்களில், பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமை கைப்பற்றினார்.  அந்த நாட்களிலிருந்து யூதா தேசத்தை யூதர்கள் ஆட்சி செய்யவில்லை.  மற்ற அந்நிய ராஜாக்களே யூதாவை ஆட்சி செய்து வந்தார்கள்.

            எந்த ஒரு நாட்டு குடிமகனும், தங்களை ஆட்சி செய்யக்கூடியவர்கள், தங்கள் குடிமகனாகவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு.  சிதேக்கியாவின் காலத்தில் யூதா தேசம் பாபிலோனியரின் ஆட்சிக்கு கீழ் வந்தது.  அந்த நாளில் இருந்து தாவீதின் சந்ததியில் ஒரு நபர் பிறந்தால்,  இவராவது ஆட்சியை கைப்பற்றுவாரா? என்ற எண்ணம் இஸ்ரவேலர்களுக்கு இருந்திருக்கும்.

            சிதேக்கியாவின் மகன் சலாத்தியேல் பிறந்தபோது, இவன் பாபிலோனியர்களிடமிருந்து நம்மை பாதுகாத்து ஆட்சியை கைப்பற்றமாட்டானா? என்று ஜனங்கள் நினைப்பார்கள்.  சலாத்தியேல் ஆட்சியை கைப்பற்றிவில்லை.  சலாத்யேலின் மகன் செருபாபேல்.  ஜனங்கள் பாபிலோனிலிருந்து திரும்ப தங்கள் சொந்த நாட்டிற்கு வந்தபோது, இஸ்ரவேலர்களுக்கு ஆளுநராக இருந்தது, செருபாபேல்.  ஜனங்கள் அனைவரும் செருபாபேலிடம் சென்று, நீங்கள் தானே எங்கள் ராஜா, அவர்களை தோற்கடித்துவிட்டு நீங்கள் ஆட்சியை கைப்பற்றுங்கள் என்று சொல்லியிருப்பார்கள்.  செருபாபேலும் ஆட்சியை கைப்பற்றவில்லை.  அதைப்போலவே இயேசுவின் வளர்ப்பு தகப்பன் யோசேப்பு வரை தாவீதின் சந்ததியில் யார் ஒருவர் புதிதாக பிறக்கிறாறோ, இவராவது ஆட்சியை கைப்பற்றமாட்டாறா? என் எண்ணம் இஸ்ரவேலர்கள் அனைவருக்கும் இருந்தது.  சலாத்தியேல் முதல் இயேசுவின் வளர்ப்பு தகப்பன் வரை ஒவ்வொருவரும் பிறந்தபோது இஸ்ரவேலர்கள், இவர்களாவது நம்மை ஆட்சிசெய்ய மாட்டார்களா என்று நினைத்தார்கள்.  யோசேப்பு வரை எந்த ஒரு நபரும் ஆட்சி கைப்பற்றவில்லை.

            இஸ்ரவேலர்கள் இப்படி எதிர்பார்க்க காரணம், தாவீதின் வேரிலிருந்து ஒருவர் வருவார்.  நம்மை இரட்சிப்பார் என்று தீர்க்கதரிசிகள் அநேகர் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார்கள்.  (ஏசாயா 11:1)

            தாவீதின் வேரிலிருந்து ஒருவர் வந்து நம்மை இரட்சிப்பார் என்று இஸ்ரவேலர்கள் நம்பினார்கள்.  ஆனால் அவர்தான் இயேசு என்பதை அவர்கள் உணராதிருந்தார்கள்.  இயேசுவானவர் உலகத்திற்கு இரட்சிப்பை கொடுக்க நினைத்தார்.  ஆனால் இஸ்ரவேலர்கள் தாவீதின் வேரிலிருந்து ஒருவர் வந்து, தாவீதைப்போலவே யுத்தம் செய்து எங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் என்று நம்பினார்கள்.

            மத்தேயு 1:20-ல் கர்த்தருடைய தூதன் யோசேப்பை தாவீதின் குமாரனே என்று அழைக்கிறார்.  அதாவது ராஜாவே என்று தான் அழைக்கிறார்.  இந்த யோசேப்பும் யூதர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கவில்லை.  யோசேப்பின் மூத்த மகனாகிய இயேசு பிறந்த போதும் ஜனங்கள் இயேசுவிடம் வந்து நீங்களாவது எங்களை இரட்சிக்க மாட்டீர்களா என்று நிச்சயம் கேட்டிருப்பார்கள்.

            ஜனங்கள் தன்னை ராஜாவாக மாற்றிவிடுவார்கள் என்று நினைத்து, இயேசுகிறிஸ்து அவர் எப்பொழுதெல்லாம் ராஜாவாக செயல்பட்டாரோ, அப்பொழுதெல்லாம் இதை ஒருவருக்கும் அறிவிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று சொல்லுார்.  (மத்தேயு 8:4) (மத்தேயு 16:20) (மத்தேயு 17:9)

            ஜனங்கள் தன்னை ராஜாவாக்குவார்களோ என்று நினைத்து அவர்களைவிட்டு விலகி மலையின்மேல் ஏறினார் என்று யோவான் 6:15-ல் வாசிக்கிறோம்.

            நம்முடைய காலத்திலும் யாராவது ஒரு தலைவர் வித்தியாசமாக செயல்பட்டால் இவர் தான் அந்திக்கிறிஸ்து என்று சொல்லுகிற கூட்டத்தாரும் இருக்கிறார்கள்.  இவர் தான் கடைசி போப் ஆண்டவர் இவர் தான் அந்திக்கிறிஸ்து என்று சொல்லுகிற மக்களையும் நாம் பார்க்க முடியும்.

            இதைப்போலவே யூதர்களும் இவர் தான் ராஜா, இவர் தான் ராஜா என்று ஒவ்வொரு தாவீதின் குமாரனையும் நினைத்தார்கள்.

            இயேசு கிறிஸ்து ராஜாவாக இருப்பாரோ என்று நினைத்த ஜனங்களுக்கு ஒரே குலப்பம்.  ராஜாக்கள் குதிரையில் பிரயாணம் செய்வார்கள்.  ஆனால் இயேசு கழுதையில் பிரயாணம் செய்கிறார்.  ராஜாக்கள் பெரிய பெரிய மனிதர்களோடு சுற்றித்திரிய வேண்டும், ஆனால் இவர் மீனவர்களையும், வரிவசூலிப்பவர்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டிருக்கிறார்.  இவர் நம்மை விடுவிப்பாரானால் பெருங்கூட்ட ஜனங்களை ஒன்று சேர்க்க வேண்டும், ஆனால் இவர் பன்னிரெண்டு நபர்களை மாத்திரமே தன்னோடு சேர்த்துக்கொண்டுள்ளார்.  ராஜாவின் கெம்பீரத்தோடு பேசாமல் மிகவும் பணிவாக பேசுகிறார்.

            வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தை திருப்பிக்கொடு, மேல் அங்கியை கேட்டால் உள் அங்கியையும் கொடு, ஒரு மையில் தூரம் பிரயாணம் செய்ய பலவந்தம் பண்ணினால் இரண்டு மைல் தூரம் பிரயாணம் செய் இதுபோன்ற கருத்துக்களையே மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்.

            ராஜா என்றால் தாவீதைப்போல வாருங்கள் ரோமர்களை தோற்கடித்து ஆட்சியைப் பிடிப்போம் என்று அல்லவா சொல்லவேண்டும்.  இவருடைய கோட்பாடுகள் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறதே, ரோமர்களை கோபப்படுத்தும்படி  எதையும் செய்யவில்லையே என்று ஜனங்கள் குலம்பினார்கள்.  கடைசி வரை இயேசு யூதர்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுக்கவில்லை.

            இயேசுவின் மகனாவது தங்களுக்கு விடுதலையை பெற்றுத்தருவான் என்று நினைத்தாள், இயேசு திருமணமே செய்யவில்லை.  முப்பது மூன்று வயதில் மரித்துப்போனார்.  இனி யார் எங்களை விடுவிக்கப்போகிறார்கள் என்று ஜனங்கள் குலம்பிக்கொண்டிருந்தார்கள்.

            இப்படிப்பட்ட மனிதர்களுக்கு இவரே அந்த ராஜா, தாவீதின் சந்ததியில் ஒரு ராஜா வந்து நம்மை மீட்பார் என்று தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்களே, அந்த ராஜா இவர்தான் என்று யூதர்கள் அறிந்து கொள்ளும்படியாக மத்தேயு ஒரு சுவிசேஷ புத்தகத்தை எழுதினார்.  அது தான் மத்தேயு நற்செய்தி நூல்.

            மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவே தாவீதின் குமாரன், இவரே நம்மை மீட்க வந்த இரட்சகர் என்று யூதர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, முதல் அதிகாரத்தில் வம்சவரலாறு அட்டவனையை கொடுத்திருக்கிறார்.  மத்தேயு நற்செய்தியில் அதிகபடியான பழைய ஏற்பாட்டு மேற்கோள்களை பார்க்க முடியும்.  காரணம், தீர்க்கதரிசிகள் சொன்ன ராஜா இவர் என்பதை யூதர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மத்தேயு நற்செய்தி நூலை எழுதுகிறார்.

            மத்தேயு நற்செய்தியாளர் ராஜா வருவார் என்று எதிர்பார்த்த யூதர்களுக்காக இவரே அந்த ராஜா.  நீங்கள் அதை உணராதிருந்தீர்கள்.  நான் உங்களுக்கு இயேசுவே அந்த ராஜா என்பதை விளங்கப்படுத்துகிறேன் என்ற விதத்தில், அவருடைய ராஜாரீகத்தைப்பற்றியும், அவர் இவ்வுலகத்தின் ராஜ்யத்தை ஸ்தாபிக்காமல் நித்திய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக வந்த ராஜா என்பதையும், அந்த ராஜா உங்களை ரோமர்களின் கையிலிருந்து இரட்சிக்கவரவில்லை, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க வந்தார் என்பதையும், அவர் உங்களுக்கு கொடுப்பேன் என்று சொன்ன விடுதலை, உலகப்பிரகாரமான விடுதலை அல்ல, பாவத்திலிருந்து விடுதலை பெற்று பரலோகத்திற்கு அழைத்துச் செல்ல வந்த ராஜா என்றும் யூதர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மத்தேயு ஒரு சுவிசேஷ புத்தகத்தை எழுதுகிறார்.

            அவர் மரித்துப்போனதாக நீங்கள் நினைக்கிறீர்கள்.  இல்லை, அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், எங்களை சந்தித்தார், இந்த நற்செய்தியை உலகமெங்கும் சென்று அறிவியுங்கள் என்று கட்டளையிட்டார் என்று யூதர்கள் புரிந்துகொள்வதற்காக மத்தேயு ஒரு சுவிசேஷத்தை எழுதுகிறார். 

வெளிப்படுத்தின விசேஷம்:

            இயேசு கிறிஸ்து இப்பொழுது மனுஷனாக இல்லை.  இறைவனாக இருக்கின்றார்.  சபையை மனவாட்டி என்று அழைப்பது இறைவனாகிய இயேசு அல்ல, மனுஷனாகிய இயேசு.  மனுஷனாகிய இயேசுவே இரத்தம் என்ற விலையை கொடுத்து சபையை வாங்கினார்.  அப்படியானால் சபையை திருமணம் செய்யப்போகிறவர் இறைவனாகிய இயேசு அல்ல, மனுஷனாகிய இயேசு.  இப்பொழுது இயேசு இறைவனாய் இருக்கிறார்.  அப்படியானால் இறைவனாகிய இயேசு இப்பொழுது சபையை திருமணம் செய்ய இயலாது.

            வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.  ஒன்று முதல் மூன்று வரை உள்ள அதிகாரத்தை ஒரு பிரிவாகவும், நான்கு முதல் இருபத்து இரண்டு வரை உள்ள அதிகாரங்களை மற்றொரு பிரிவாகவும் பிரிக்கலாம்.

            முதல் மூன்று அதிகாரங்கள் சபை எடுத்துக்கொள்ளப்படும் வரை உலகில் நடைபெறுகிற காரியங்களைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது. 

            நான்காம் அதிகாரம் முதல் இருபத்து இரண்டாம் அதிகாரம் வரை உள்ள வசனங்களில் இயேசுவின் இரண்டாம் வருகையின் போது சபை எடுத்துக்கொள்ளப்பட்டபின் நடைபெறக்கூடிய காரியங்களைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது.

            வெளிப்படுத்தல் நான்காம் அதிகாரத்திற்கு மேல் உள்ள அதிகாரத்தில் எந்த ஒரு வசனமாவது நிறைவேறிவிட்டது என்று யாராவது சொன்னால் நம்ப வேண்டாம்.  நான்காம் அதிகாரம் முதலாம் வசனத்திலிருந்து எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு காரியங்களும் சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு நடைபெறக்கூடியவை.

            யோவான் மூன்றாம் அதிகாரம் வரை இறைவனாக இருந்த இயேசு, நான்காம் அதிகாரத்தில் ஆட்டுக்குட்டியானவராக மாறுகிறார்.  ஆட்டுக்குட்டி என்பது இறைவனாகிய இயேசு அல்ல, மனுஷகுமாரனாகிய இயேசு கிறிஸ்து.  சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு இயேசு கிறிஸ்து இறைவனாக செயல்படாமல், மனுஷனாக செயல்படுகிறார்.  இப்பொழுது அவர் இறைவனாகிய இயேசு என்பதால் அவருக்கு வயது என்பது இல்லை.  இயேசு கிறிஸ்து மனுஷகுமாரனாக இருந்து மரிக்கும்போது அவருடைய வயது முப்பத்து மூன்று.  யூதக்கலாச்சாரத்தின்படி ஒரு ஆண் முப்பத்து மூன்று வயதில் திருமணம் செய்ய இயலாது.  நாற்பது வயது நிறைந்த ஒரு ஒருவரே திருமணம் செய்ய தகுதியானவர்.  சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு இறைவனாக இருந்த இயேசு மனுஷகுமாரனாகிய இயேசுவாக மாறியதால், மனுஷகுமாரனாகிய இயேசுவுக்கு வயது அதிகரிக்க துவங்கும்.  சபை எடுத்துக்கொள்ளப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு மனுஷகுமாரனாகிய இயேசுவுக்கு வயது நாற்பது.  சபை எடுத்துக்கொள்ளப்பட்டு ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு நாற்பது வயது நிறைந்த மனுஷகுமாரனாகிய இயேசு சபையை திருமணம் செய்கிறார் என்று வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

            சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, இறைவனாக இருந்த இயேசு மனுஷனாக மாறுகிறார்.  அந்த ஏழு ஆண்டுகள் உலகத்தில் உபத்திரவகாலமாயிருக்கும்.  அந்திக்கிறிஸ்து உலகை ஆட்சி செய்வான்.

 

மாற்கு நற்செய்தி நூல்:

            ரோமர்களுக்கு  இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்பதற்காக மாற்கு நற்செய்தி நூல் எழுதப்பட்டது.  அந்நாட்களில் உலகை ஆட்சிசெய்துகொண்டிருந்தவர்கள் ரோமர்கள்.  உலகம் முழுவதுக்கும் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டுமானால், உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிற ரோமர்களுக்கு முதலில் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.  ரோமர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டால், சுவிசேஷம் விரைவாக உலகம் முழுவதுக்கும் பரவிவிடும்.

            தமிழகத்தில் ஒரு தொழில் துவங்க வேண்டுமானால், சென்னையில் துவங்கினால் அது முழு தமிழகத்தையும் சென்றடைய வாய்ப்பாக இருக்கும்.

            ரோமர்கள் பட்டணவாசிகள்.  எந்த நேரமும் வேலைசெய்து கொண்டிருக்கக்கூடியவர்கள், அவர்களுக்கு ஒரு கதையை சொல்லவேண்டுமானால் மிகவும் சுருக்கமாக, தெளிவாக சொல்லவேண்டும்.  அவர்களுக்கு மத்தேயு, லூக்கா போன்று அநேக கருத்துக்களை கொண்ட பெரிய கதையை சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  அவர்கள் வாசிக்க ஏற்ற விதத்தில் மிக சுருக்கமாக இயேசுவின் வரலாற்றை மாற்கு நற்செய்தியாளர் எழுதுகிறார்.

            ரோமர்கள் ஒரு கடவுளை வணங்கவில்லை.  பலதெய்வங்களை வணங்கினார்கள்.  அவர்களிடம் புதியதாக ஒரு தெய்வத்தை அறிமுகப்படுத்தினால் பத்தோடு ஒன்றாக அதையும் சேர்த்துக்கொள்வார்கள்.  அதை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள்.  அப்படிப்பட்ட மனிதர்களிடம் இயேசுவே கடவுள் என்று காட்டும்படியாக மாற்கு நற்செய்திநூல் எழுதப்பட்டது.

            ரோமர்களின் கடவுள் வழிபாட்டில் அவர்கள் தெய்வங்கள் மனுஷரூபமாக வந்தால் மனிதர்களிடம் எத்தனையோ பரிகாரங்களை செலுத்தச்சொல்லி கட்டாயப்படுத்தும்.  ரோமர்கள் கலாச்சாரப்படி தெய்வங்கள் மனிதனாகவோ, மிருகமாகவோ, பறவையாகவோ எத்தகைளோ உருவங்களில் வந்து அநேக பரிகாரங்களை மக்களிடம் கேட்கும்.  ரோமர்களும் கடவுள் நம்மை தண்டிக்கும் என்று பயந்து தெய்வம் கேட்கிற எல்லா பரிகாரங்களையும் செலுத்துவார்கள்.  அப்படிப்பட்ட ரோமர்களுக்கு கடவுள் மனிதனாக வந்தார், ஆனால் அவர் நம்மிடம் பரிகாரம் கேட்கவில்லை, நமக்காக பலியாகும்படியாக, பாவஅடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்கும்படியாக வந்தார் என்பதை ரோமர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மாற்கு நற்செய்தி நூல் எழுதப்பட்டது.

            மாற்கு சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவை ஊழியக்காரராக, சுருக்கமாக ரோமர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. 

 

லூக்கா சுவிசேஷம்:

            கிரேக்கர்களுக்கு சுவிசேஷம் சென்றடைந்தால், மேல்மட்டத்தில் வாழக்கூடியவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்ததற்கு சமம்.  கிரேக்கர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.  கிரேக்கர் தத்துவ ஞானிகள்.  அரிஷ்டாட்டில், பிலேட்டோ போன்றவர்கள் கிரேக்கு நாட்டைச் சேர்ந்தவர்கள்.  உலகிற்கு தத்துவ ஞானத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்த கிரேக்கர்கள்.

            ஒரு நாட்டின் தலைவருக்கு நாம் ஒரு கடிதம் எழுதுகிறோம் என்றால், அக்கடிதத்தை அழகிய இலக்கிய நயத்தோடு, தலைவர் படித்தவுடன் நம்மை மெச்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காக சிறந்த மொழிநடையில் எழுதுவோம்.

            அதுபோல உலகத்தில் சிறந்த ஞானிகளாகிய கிரேக்கர்களுக்கு அவர்கள் விரும்புகிற சிறந்த கிரேக்க மொழிநடையில் எழுதவேண்டும் என்பதற்காக, அறிவில் சிறந்த மருத்துவரான லூக்காவை ஆண்டவர் தெரிவுசெய்து.  அவர் மூலமாக லூக்கா சுவிசேஷத்தை எழுதுகிறார்.

            எ.கா: சாதாரண மொழி நடையில் ”குதிரையில் இரண்டு நபர்கள் வந்தார்கள்” என்று சொல்வதை சிறந்த மொழிநடையில் சொல்லவேண்டுமானால் ”புரவிமீதேறி இருவர் வந்தனர்” என்று சொல்ல வேண்டும்.

            அறிவில் சிறந்தவர்கள் இப்படிப்பட்ட மொழிநடையில் எழுதினால் மட்டுமே வாசிப்பார்கள் என்பதற்காக ஆண்டவர் மருத்துவனாகிய லூக்காவை பயன்படுத்தி ஒரு சுவிசேஷத்தை எழுதுகிறார்.

            லூக்கா ஒரு சிறந்த மருத்துவர், கிரேக்கனாக இருந்து யூதனாக மாறியவர்.  இவருடைய நண்பன் தேயோப்பிலு.  தேயோப்பிலுவும் கிரேக்கனாக இருந்து இயேசுவை ஏற்றுக்கொண்டவர்.  மருத்துவனாகிய தோயோப்பிலு இயேசுவைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, மிகச்சிறந்த கிரேக்க மொழிநடையில் லூக்கா என்ற மருத்துவர் அநேக மருத்துவ ஆதாரத்துடன் லூக்கா நற்செய்தியை எழுதுகிறார்.

            லூக்கா பயன்படுத்துகிற அந்த உயர்ரக கிரேக்க மொழியையே பவுலும் பயன்படுத்தி நிருபங்களை எழுதுகிறார்.

            கிரேக்கர்களுடைய மதத்திலும் கடவுள்கள் மனித அவதாரம் எடுத்து மனிதனைப்போல வரும்.  அப்படிப்பட்ட கிரேக்கர்களுக்கு இயேசு மனிதனைப்போல வந்தவர் அல்ல, மனிதனாகவே வந்தவர் என்பதை விளக்கப்படுத்துவம்படியாக லூக்கா சுவிசேஷம் எழுதப்பட்டது.  அவர் கடவுளாக இருந்தாலும் நூறு சதவீதம் மனிதனாக வந்தார்.  அவருக்கு பசி இருந்தது, தாகம் இருந்தது, கலைப்பு இருந்தது என்பதை கிரேக்கர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக லூக்கா சுவிசேஷம் எழுதப்பட்டது.

            லூக்கா சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவை மனுஷகுமாரனாக கிரேக்கர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது.

 

யோவான் நற்செய்தி நூல்:

            யோவான் நற்செய்தியாளர் இயேசு கிறிஸ்து மனிதனாக வந்தாலும் அவர் கடவுள் என்பதை யூதர்களுக்கு காண்பிப்பதற்காக, இயேசு தம்மை தெய்வமாக காண்பிப்பதற்கு என்னென்ன காரியங்களை செய்தாரே அதை யோவான் நற்செய்தியாளர் தனது சுவிசேஷத்தில் எழுதுகிறார்.

            ஏழு என்பது முழுமையைக் குறிக்கும்.  யூதர்கள் ஏழு என்ற எண்ணை தெய்வீக எண்ணாக நினைத்தார்கள்.  யோவான் இயேசு செய்த ஏழு அற்புதங்களை மாத்திரம் தனது சுவிசேஷத்தில் எழுதுகிறார்.

            பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் மோசேயை சந்திக்கும்போது, தனது பெயர் இருக்கிறவறாகவே இருக்கிறேன் என்று செல்லுகிறார்.  இருக்கிறவராக இருக்கிறேன் என்பதன் எபிரெய பதம் ”ஹயா”. ஆங்கிலத்தில் I am that I am.   இருக்கிறவராக இருக்கிறேன் என்பது சரியா மொழியாக்கம் அல்ல.  நான், ”நானேதான்” என்பதுதான் சரியான மொழியாக்கம்.  இயேசு தனது பெயரை ”நானே” என்று வைத்துக்கொண்டதால் இஸ்ரவேலர்கள் அன்று முதல் ஹயா என்ற பதத்தை பயன்படுத்தமாட்டார்கள்.  ஆனால் இயேசு கிறிஸ்து ”ஹயா” நானே என்ற பதத்தை பலமுறை பயன்படுத்தினார்.  குறிப்பாக ஏழு இடங்களில் நானே என்று இயேசு சொன்னதை யோவான் தனது நற்செய்தியில் எழுதுகிறார்.

 

            யோவான் சுவிசேஷம் இயேசுவை யூதர்களுக்கு கடவுளாக காண்பிக்கும்படியாக எழுதப்பட்ட புத்தகம்.

 

நான்கு சுவிசேஷத்தின் சுருக்கம்:

மத்தேயு:

            யூதர்களுக்கு இயேசு கிறிஸ்து ராஜா என்று காண்பிக்கும்படி எழுதப்பட்டது.

 

மாற்கு:

            ரோமர்களுக்கு இயேசு கிறிஸ்து ஊழியக்காரன் என்று காண்பிக்கும்படியாக எழுதப்பட்டது.

 

லூக்கா:

            கிரேக்கர்களுக்கு இயேசு கிறிஸ்து மனுஷகுமாரன் என்று காண்பிக்கும்படி எழுதப்பட்டது.

 

யோவான்:

            யூதர்களுக்கு இயேசு கிறிஸ்து கடவுள் என்பதை காண்பிக்கும்படியாக எழுதப்பட்டது.

 

 

அப்போஸ்தலர் நடபடிகள்

            லூக்கா நற்செய்தியின் தொடர்ச்சி அப்போஸ்தலர் நடபடிகள்.  லூக்கா நற்செய்தியை எழுதின,  மருத்துவரான லூக்கா அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தையும் மருத்துவரான தேயோப்பிலுவுக்கு எழுதுகிறார்.

            லூக்கா சுவிசேஷம் இயேசு கிறிஸ்து ஒலிவமலையிலிருந்து பரலோகம் ஏறிச்சென்றதோடு முடிவடைகிறது.  அதே ஒலிவமையிலேயே அப்போஸ்தலர் நடபடிகள் ஆரம்பமாகியது.

            அப்போஸ்தலர் புத்தகம் ஒரு சரித்திர புத்தகம்.  எதைப்பற்றி சரித்திரம் என்றால் சபையைப் பற்றிய சரித்திரம்.

            சபை தொடங்கி முதல் பிரசங்கத்திலேயே சபையில் முவாயிரம் பேர் சேர்க்கப்பட்டார்கள்.  இப்படி தொடங்கப்பட்ட சபை எப்படி விரிவடைந்தது, எத்தனை கஷ்டங்களை தாங்கியது, எருசலேமில் சபை எப்படி விருத்தியடைந்தது, எருசலேமிலிருந்து அந்தியோகியாவிற்கு எப்படி சுவிசேஷம் சென்றது, உலகம் முழுமைக்கும் எப்படி சுவிசேஷம் சென்றது என்ற வரலாற்று புத்தகமாக அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் உள்ளது.

            லூக்கா பவுலின் ஊழியத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டு, பவுலோடு தன்னை ஊழியத்தில் இனைத்துக்கொண்டவர்.  அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் அநேக இடங்களில் நாங்கள் கப்பலில் பிரயாணப்பட்டோம் என்று வாசிக்க முடியும்.  நாங்கள் என்பது லூக்காவும் அந்த இடத்தில் இருந்தார் என்பதை குறிக்கிறது.

            அப்போஸ்தலர் புத்தகம் முடிவடையும் போது ரோமாபுரிவரையிலும் சுவசேஷம் சென்றடைந்தது.  ரோமாபுரி உலகின் தலைநகரம்.  ரோமாபுரிக்கு சுவிசேஷம் சென்றுவிட்டால், முழுஉலகத்திற்கும் சுவிசேஷம் சென்றடைந்து விட்டதாக கருதப்படும்.

            சபை எருசலேமில் துவங்கி, எத்தனை போராட்டங்களை சந்தித்தது, சபையில் ஏற்பட்ட குலப்பங்கள் என்ன, சபையில் நடைபெற்ற நன்மை, தீமைகள் என்ன? கிறிஸ்தவம் யூதர்களுக்கான மதம் என்ற நம்பிக்கை உடைக்கப்பட்டு, புறஜாதியினரும் எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள், யூதர்களுக்கு மட்டுமே பிரசங்கித்துக்கொண்டிருந்த பேதுரு எப்படி புறஇனத்தவர்களுக்கு சுவிசேஷம் சொல்ல துவங்கினார், யூதனாய் பிறந்து வளர்ந்த பவுல் எப்படி புறஜாதியினருக்கு அப்போஸ்தலனாக ஏற்படுத்தப்பட்டார், ரோமாபுரி வரை எப்படி சுவிசேஷம் சென்றடைந்தது போன்ற அனைத்து வரலாற்றுக் குறிப்புகளையும் அப்போஸ்தலர் நடபடிகளில் நாம் வாசிக்க முடியும்.

 

பவுலின் நிருபங்கள்

            பவுலின் நிரூபங்கள் மொத்தம் பதினான்கு.  பவுல் ஏழு நகரங்களில் (பட்டணம்) இருக்கின்ற கிறிஸ்தவர்களுக்கு ஒன்பது கடிதங்களை எழுதுகிறார்.

            முதலில் ரோமாபுரியாருக்கு கடிதம் எழுதுகிறார். கொரிந்து பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு இரண்டு கடிதங்களை எழுதுகிறார்.  கலாத்தியா பட்டணத்தில் வாழ்ந்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.  எபேசு பட்டணத்தில் வாழ்ந்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.  பிலிப்பி பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.  கொலோசே பட்டணத்தில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.  தெசலோனிக்கே பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு இரண்டு கடிதம் எழுதுகிறார்.

            பவுல் கடிதம் எழுதிய பட்டணங்கள்: ரோம், கொரிந்து, கலாத்தியா, எபேசு, பிலிப்பி, கொலோசே, தெசலோனிக்கே.

           

            எழுதிய நபர் ஒரே நபர் என்பதால் கடிதத்தை பெற்றுக்கொள்ளுகின்ற பட்டணத்தின் பெயரால் அவை குறிக்கப்படுகிறது.

 

          பவுல் மூன்று நபர்களுக்கு நான்கு கடிதங்களை எழுதுகிறார். தீமோத்தேயு என்ற வாலிப ஊழியருக்கு இரண்டு கடிதங்களை எழுதுகிறார். தீத்து என்ற நடுத்தர வயதுடைய ஒரு ஊழியருக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார். பிலேமோன் என்ற நபருக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார். கடைசியாக எபிரெயர் புத்தகத்தையும் பவுலே எழுதினார். எபிரெயர் புத்தகத்தை வாசிக்கின்ற யூதர்களுக்கு இதை எழுதியது நான்தான் என்பது தெரியவேண்டாம் என்பதற்காக தனது பெயரை குறிப்பிடாமல் எபிரெயர் புத்தகத்தை பவுல் எழுதுகிறார்.

    புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் நான்கு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று கிறிஸ்து இயேசுவுக்குள் நான் விசுவாசிக்கிறேன்.  இந்த பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.  ஏதேனும் கேள்விகள் இருந்தால் இதையும் பதிவு செய்யவும்.
        ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  ஆமென்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.