Type Here to Get Search Results !

பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஐந்து 5 | Old Testmant Bible Study Part Five 5 | விவிலிய விளக்க உரைகள் | Jesus Sam


பழைய ஏற்பாட்டு ஆய்வு (பாகம்–5)

    ஆண்டவரும் மீட்பரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.  பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஐந்து.  முதல் நான்கு பாகத்தைப் படிக்காதவர்கள் அதை படித்துவிட்டு இந்த ஐந்தாம் பாகத்தைப் படிப்பீர்கள் என்றால் உங்களுக்கு வேதத்தைக் குறித்த புரிதல் உண்டாகும்.  

    கீழே உள்ள லிங்க்-யை பயன்படுத்தி முந்தைய பாகங்களை வாசிக்கவும்.

பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஒன்று (1)

பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் இரண்டு (2)

பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் மூன்று (3)

பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் நான்கு (4)




யோசுவா

                யோசுவா புத்தகத்தை எழுதியவர் யோசுவா.

                யோசுவா புத்தகத்தில்  இருந்த அனைத்து ஜனங்களுமே பாலைவனத்தில் பிறந்தவர்கள்.  இவர்களை வைத்து புதிய சந்ததியை எழுப்புவது ஆண்டவருக்கு லேசான காரியம்.  ஏனென்றால், பாலைவனத்தில் வளர்ந்தவர்கள் என்பதால், வேற்று மதத்தின் கலாச்சாரங்கள், பண்புகள் இவர்களிடம் இல்லை.  இவர்கள் அனைவரும் தற்காலிக வாழ்க்கை (கூடார வாழ்க்கை) வாழ்ந்தவர்கள்.  நிரந்தரமாக ஓர் இடத்தில் வாழ்ந்து பழகாதவர்கள்.

            பாலைவனத்தில் எந்த நேரமாவது சாப்பிடுவார்கள்.  எந்த நேரமாவது தூங்குவார்கள்.  இவர்களுக்கென ஒரு பழக்கவழக்கம், கலாச்சாரம் எதுவும் இல்லை.  இவர்களை வைத்து புதிய கலாச்சாரத்தை, புதிய பழக்கவழக்கங்களை உருவாக்குவது மிகவும் எளிது.

            யோசுவா முதலாம் அதிகாரத்தில் மோசேயின் பெயரை அதிகாமாக பார்க்க முடியும்.  மோசேக்கு ஆண்டவர் குறித்த எல்லை முழுவதையும் யோசுவாவுக்கும், இஸ்ரவேல் ஜனங்களுக்கும் தருவதாக ஆண்டவர் சொல்லுகிறார்.

            யோசுவா சரியாக இருபத்து ஐந்து ஆண்டுகள் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தினார்.  இருபத்து ஐந்து ஆண்டு ஊழியப் பாதைக்கு பின்பு யோசுவாவிற்கு ”கர்த்தருடைய ஊழியக்காரன்” என்ற பட்டம் கிடைக்கிறது.  (யோசுவா 24:29)

             மோசே மரித்தபின்பு யோசுவா ஆண்டவரிடம் தனி தரிசனத்தைக் கேட்கவில்லை.  மோசேயின் ஊழியத்தையே தொடர்ந்து உண்மையாக கடைசிவரை செய்தார்.  எனவே, கர்த்தருடைய ஊழியக்காரன் என்ற பட்டம் கிடைத்தது.

            எலிசாவிற்கு ஆசை எலியாவின் வரம் இரட்டிப்பாய் வேண்டும்.  அதற்கு எலியாவின் பதில், கடைசிவரை எனக்கு கீழாக நீ அடங்கியிருந்தால் உனக்குத் தருவேன் என்று வாக்குரைக்கிறார்.  எலிசா கடைசிவரை இருந்து பெற்றுக்கொண்டார்.  எலிசா எலியாவிடம் பதின்மூன்று ஆண்டுகள் ஊழியம் செய்தார்.  இந்த பதின் மூன்று ஆண்டுகளில் எந்த ஒரு ஊழியக் காரியத்திற்காகவும் எலியா எலிசாவை பயன்படுத்தவில்லை.

            ஆனால் எலிசா அவனுடைய உதவி ஊழியன் கேயாசியை ஏற்ற நேரத்திற்கு முன்பே பயன்படுத்தினார்.  சூனேமியாளின் மகன் செத்தபோது, எலிசா தன் கோலை கேயாசியிடம் கொடுத்து, சூனேமியாளின் மகன் மீது வை அவன் உயிர்ப்பிழைப்பான் என்று சொல்லுகிறார்.  அதைப்போலவே கேயாசி செய்கிறார், சூனேமியாளின் மகன் பிழைக்கவில்லை.  ஒருவேலை பிழைத்திருந்தால், கேயாசி எலிசாவை விட்டு பிரிந்து சென்றிருப்பார்.  தனி ஊழியத்தை துவங்கியிருப்பார்.   நாகமானின் நிகழ்வு மூலமாக நாம் கேயாசியின் குணத்தை அறிந்துகொள்ள முடியும். 

            இருபத்து ஐந்து ஆண்டுகள் யோசுவா, மோசேயின் ஊழிக்காரனாக தனது ஊழியத்தை சரியாய் செய்து வந்தார்.  முதலில் எரிகோ பட்டணத்தைப் பிடித்தார்கள்.  பின்பு ஆயி பட்டணத்தைப் பிடிக்கும்போது இஸ்ரவேலர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். 

எரிகோ பட்டணம்:

            எரிகோவின் மதில் மிகவும் அகலமானது.  ஒரே நேரத்தில் நான்கு இரதங்கள் ஓடும் அளவிற்கு அகலம் கொண்டது.  மதில்களுக்கு நடுவாக வீடுகள் அமைக்கப்பட்டிருந்தது.  ராணுவ வீர்களின் வீடுகள்.  மதுபானம் அருந்தும் கடைகள், விபச்சார விடுதிகள் இவை அனைத்தும் மதில்களுக்கு நடுவாக அமைக்கப்பட்டிருந்தது.  ராகாப்பின் வீடும் இந்த மதில்களுக்கு நடுவாகவே இருந்தது.  இந்த மதில் ஒருவேலை பூமியதிர்ச்சியால், நிலநடுக்கத்தால் பாதிப்படைந்தால், மதில் இடிந்து நகரத்திற்குள் விலாமல் வெளிப்புறமாக விழுமாறு, வெளிப்புறம் சாய்ந்த நிலையில் கட்டப்பட்டிருந்தது.

            இஸ்ரவேலர்கள் ஆறு நாட்கள் மதிலை ஒவ்வொரு முறை சுற்றி வந்தார்கள்.  அப்பொழுது எரிகோவின் ராணுவமும், ராஜாவும் இஸ்ரவேலர்களைப் பார்த்திருப்பார்கள்.  ஆனால் எந்த பதிலடியும் கொடுக்கவில்லை.  காரணம், மதில் அவ்வளவு உறுதியானது, அவர்களால் உள்ளே வர முடியாது என்று நம்பினார்கள்.

            ஆனால் ஏழாம் நாள் ஏழு முறை இஸ்ரவேலர்கள் மதிலை சுற்றி வந்தார்கள்.  ஏழாவது முறை சுற்றும்போது, எக்காளங்களை ஊதிக்கொண்டு சுற்றினார்கள்.  அப்பொழுது மதில் இடிந்து வெளிப்புறமாக விழவில்லை.  உட்புறமாக விழுந்தது.  உடனே இஸ்ரவேலர்கள் எரிகோ பட்டணத்திற்குள் நுழைந்து எரிகோவை கைப்பற்றினார்கள்.

 

ஆயி பட்டணம்:

            மிகப்பெரிய எரிகோ பட்டணத்தைப் பிடித்த இஸ்ரவேலர்களுக்கு, சிறிய ஆயி பட்டணத்தை பிடிப்பது அற்ப காரியமாய் இருந்தது.   ஆனால், ஆயி பட்டணத்தாரிடம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார்கள்.  காரணம், ஆகான் குடும்பத்தார் பாபிலோன் துப்பட்டியை திருடி, அதை தன் கூடாரத்திற்குள்ளாக ஒழிந்து வைத்திருந்தார்கள்.  பின்பு ஆகானையும், அவன் குடும்பத்தையும் கல்லெறிந்து கொலைசெய்தார்கள்.  பின்பு ஆயி பட்டணத்தை தோற்கடித்தார்கள்.

            இதன் மூலமாக ஆண்டவர் ஒரு சத்தியத்தை இஸ்ரவேலர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.  அனைவரும் ஒரு சபையாக இருக்க வேண்டும்.  ஒருவர் தவறினாலும், அது அனைவரையும் பாதிக்கம் என்பதை ஆண்டவர் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். 

            கானான் தேசத்திற்குள் மொத்தம் அறுபத்து நான்கு ராஜாக்கள் இருந்தார்கள்.  அனைத்து தேசங்களையும் யோசுவா கைப்பற்றவில்லை.  சில தேசங்களை மட்டுமே கைப்பற்றினார்.  அறுபத்து நான்கு தேசங்களையும் கைபற்றியது தாவீது ராஜா.  தாவீதின் காலத்தில் முழு கானான் தேசமும் இஸ்ரவேல் தேசமாக மாறியது.

 

            யோசுவா பிடித்த தேசத்தை பன்னிரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார்.  ஆனால், லேவி கோத்திரத்தாருக்கு பங்கு கொடுக்கப்படவில்லை.  பதினொரு கோத்திரத்திற்கு மட்டுமே நிலங்கள் பிரித்துக்கொடுக்கப்பட்டது.  பனிரெண்டாவது பிரிவு ஆபிரகாம் வாழந்த பகுதி.  அந்த பகுதியை காலேப் கைப்பற்றியதால் அது காலேப்பிற்குக் கொடுக்கப்பட்டது.

 

            லேவியர்களுக்கு நிலங்கள் கொடுக்கப்படவில்லை.  காரணம்.  அவர்கள் இரண்டு வித ஊழியத்தை செய்தார்கள்.  முதலாவது ஊழியம் ஆண்டவருக்கு ஆராதனை செய்யும் ஊழியம்.  இரண்டாவதாக, ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுக்கும் ஊழியம்.

            ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கற்பிப்பதற்காக, ஒரு பிரிவுக்கும் நான்கு லேவியபட்டணங்கள் என்ற வீதத்தில் (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு)  பனிரெண்டு பிரிவுகளுக்கும் நாற்பத்து எட்டு லேவிய பட்டணங்களை ஆண்டவர் அமைக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.  லேவியர்கள் அனைவரும் அந்த பட்டணத்தில் தங்கி அங்கு உள்ள ஜனங்களை ஆண்டவருக்குள்ளாக வழிநடத்த வேண்டும்.

            தேசங்களைக் கைப்பற்றி, ஜனங்களுக்கு அவைகளை பிரித்துக்கொடுத்த பின்பு, யோசுவா தனது மரணத்தறுவாயில் மோசேயைப் போலவே ஒரு பிரசங்கம் செய்கிறார் (யோசுவா 24அதிகாரம்).  பிரசங்கத்தோடு வரலாறுகளையும் கொஞ்சமாக சேர்த்து சொல்லுகிறார்.

            யோசுவா 24:2-ல் நிதிக்கு அப்புறத்திலே என்று வாசிக்கிறோம்.  வேதாகமத்தில் வெறுமனே நதி என்ற பெயர் மட்டும் வந்தால், அது ஐபிராத்து நதியைக் குறிக்கும்.

            யோசுவா மரணத்தறுவாயில் இருக்கும்போது ஒரு கேள்வி கேட்கிறார்.   நான் மரித்த பின்பு நீங்கள் யாரை ஆராதிப்பீர்கள், ஐபிராத்து நதிக்கு அப்புறத்திலே ஆபிரகாம் வணங்கின (ஆண்டவர் அழைக்கும் முன்) பாபிலோன் தெய்வங்களையா? இல்லையென்றால் இங்கு உள்ள கானானிய தெய்வங்களையா? என்று கேட்கிறார்.  கேட்டதுமாத்திரம் அல்ல, நானும் என் வீட்டாருமோவேன்றால் கர்த்தரையே சேவிப்போம்.  எகோவா கடவுளையே ஆராதிப்போம் என்று சொல்லுகிறார்.  ஜனங்களும் மறுமொழியாக நாங்களும் கர்த்தரையே சேவிப்போம் என்று சொல்லுகிறார்கள்.  யோசுவா அதற்கு சாட்சியாக பன்னிரண்டு கற்களை எடுத்து நிறுத்துகிறார்.

            இப்படி எல்லா ஊழியங்களையும் யோசுவா நேர்த்தியாய் செய்து முடித்த பின்பு மரித்துப்போகிறார்.  மோசே தான் மரிக்கும் முன்பாகவே உபாகமம் புத்தகத்தில் தான் மரித்தாக எழுதிவைத்துவிட்டு மரித்தார்.  அதைப்போலவே யோசுவாவும் மரிக்கும் முன்பாகவே மரித்தாக யோசுவா புத்தகத்தில் எழுதிவைத்துவிட்டே மரித்துப்போனார்.

நியாயாதிபதிகள்

            நியாயாதிபதிகள் புத்தகத்தை எழுதியது சாமுவேல்.  நியாயாதிபதிகள் புத்தகத்தில் மொத்தம் பதினைந்து நியாயாதிபதிகளை பற்றி வாசிக்க முடியும்.  முதலாவது நியாயாதிபதியின் பெயர் ஓத்னியேல் (காலேப்பின் உறவினன்).  கடைசி நியாயாதிபதியின் பெயர் சாமுவேல்.  பதினைந்து நியாயாதிபதிகளில் பதிநான்கு நபர்கள் ஆண்கள் மற்றும் ஒரு பெண் நியாயாதிபதி (தெபோராள்).

            1. இஸ்ரவேலர்கள் எகிப்தில் வாழ்ந்த காலங்கள் – நானூற்று முப்பது வருஷம் (430)

            2. எகிப்திலிருந்து கானான் பிரயாணம் – நாற்பது வருஷம் (40)

            3. யோசுவா கானானை பிரித்துக் கொடுத்தல்  இருபத்து ஐந்து வருஷம் (25)

            4. யோசுவாவின் மரணத்திலிருந்து சவுல் ராஜா ஏற்படுத்தப்படும் வரை உள்ள காலங்கள் நியாயாதிபகளின் காலங்கள்.  இந்த காலங்கள் மொத்தம் இருநூற்று முப்பது வருஷம் (230)

நியாயாதிபதிகள்:

            இந்த இருநூற்று முப்பது (230) ஆண்டுகளில் மொத்தம் பதினைந்து நியாயாதிபதிகள் இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்.  இந்த பதினைந்து நபர்களும் தலைமுறை தலைமுறையாக ஆட்சி செய்தவர்கள் அல்ல.  நியாயாதிபதியை ஏற்படுத்தும்போது எவரும், அவர் தலையில் எண்ணை ஊற்றி நீ இன்று முதல் இஸ்ரவேல் ஜனங்களுக்கு நியாயாதிபதியாய் அபிசேஷம் பண்ணப்படுகிறாய் என்று சொல்லவில்லை.  நியாயாதிபதிகள் ஜனங்களால் ஏற்படுத்தப்படுகிற ஒரு நபர் அல்ல.  ஆண்டவரால் ஏற்படுத்தப்படுகிற நபரும் அல்ல.

            நியாயாதிபதிகள் எப்படி ஏற்படுத்தப்பட்டார்கள் என்றால், யோசுவா மரித்த பின்பு, நாங்களும் ஆண்டவரையே சேவிப்போம் என்று சொன்ன ஜனங்கள்.  விக்கிரகங்களை வணங்க ஆரம்பித்தார்கள்.  ஆண்டவர் அருவெருக்கக்கூடிய காரியங்ளை செய்ய ஆரம்பித்தார்கள்.   இதைப் பார்த்த ஆண்டவர் தமது பாதுகாப்பின் கரத்தை இஸ்ரவேலர்களிடம் இருந்து எடுத்தார்.  அப்பொழுது அருகாமையில் உள்ள நாடுகள் இவர்களை கைப்பற்ற ஆரம்பித்தார்கள்.

            நியாயாதிபதிகளின் காலம் இருநூற்று முப்பது (230) ஆண்டுகளிலும் எந்த ஒரு எதிரி மன்னனும் முழு இஸ்ரவேலர்களையும் அடிமைகளாக இழுத்துச் செல்லவில்லை.  இஸ்ரவேலர்களை அவர்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வைத்திருந்தார்கள்.  இஸ்ரவேலர்கள் பயிரிட்ட தானியங்களின் அறுவடைக்காலத்தில் இவர்களை அடிமைப்படுத்தின ராஜா அனைத்து தானியங்களையும் பறித்துக்கொண்டு சென்றுவிடுவார்.  அழகான ஸ்திரீகளை கடத்திக்கொண்டு போய்விடுவார்.  வாலிப ஆண்களை இழுத்துச் சென்று அவர்கள் வீட்டு அடிமையாக வைத்திருப்பது போன்ற காரியங்களை செய்து வந்தார்கள்.  இவ்வாறு எதிரி நாடுகளால் அடிமைப்பட்டிருக்கும்போது ஜனங்கள் ஆண்டவரைத் தேட துவங்குவார்கள்.  ஆண்டவர் அவர்கள்மேல் மனம் இரங்கி அவர்களை விடுவித்தார்.

            புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் கிருபையுள்ளவர், அன்புள்ளவர், இரக்கமுள்ளவர்.  ஆனால் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆண்டவர் அப்படி இல்லை.  பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆண்டவர் கொடூரமானவர் என்று அநேகர் நினைக்கிறார்.  ஆனால், அப்படியல்ல, ஆண்டவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்.

பழைய ஏற்பாட்டில் இருந்ததைவிட இப்பொழுது ஆண்டர் கொடூரமானவர்.  காரணம், பழைய ஏற்பாட்டில் ஒருவனை கொலை செய்தால், அவன் குற்றவாளி.  ஆனால் புதிய ஏற்பாட்டில் ஒருவனை மூடனே என்று சொன்னால் அவன் குற்றவாளி.  (மத்தேயு 5:22).

பழைய ஏற்பாட்டில் ஒரு பெண்னோடு ஒருவன் தகாத உறவு வைத்தால் அவர்கள் விபச்சாரம் செய்தவர்கள்.  ஆனால், புதிய ஏற்பாட்டில் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்த்தாலே அவன் அவளோடே விபச்சாரம் செய்ததற்கு சமம் (மத்தேயு 5:28).

புதிய ஏற்பாட்டில் இயேசு சாதாரணமானவர் அல்ல.  இயேசுவை பார்த்த சவுல் குதிரையிலிருந்து கீழே விழுந்து கண்பார்வை இழந்தார் (அப்போஸ்தலர் 9:1-9).  இயேசுவின் மார்பில் சாந்த சீஷன் யோவான் இயேசுவை பார்த்த போது செத்தவன்போல் ஆனேன் என்று எழுதுகிறார் (வெளிப்படுத்தல் 1:17).  புதிய ஏற்பாட்டிலும் நம்முடைய ஆண்டவர் பயங்கரமானவர்.  நாம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.

புதிய ஏற்பாட்டை விட, பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் கிருபையுள்ளவராகவே இருந்தார்.  ஜனங்கள் பாவம் செய்து, வழிதப்பி சென்றாலும், மனம் திரும்பி ஆண்வரிடம் மன்னிப்பு கேட்கும்போது, ஆண்டவர் அவர்களை மன்னித்தார்.  அவர்களில் ஏதாவது ஒரு மனிதனை நியாயாதிபதியாக பயன்படுத்தி, அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டார்.  அப்படி பயன்படுத்தப்பட்டவர்கள் தான் இந்த பதினைந்து நியாயாதிபதிகள்.

 

கிதியோன் (நியாயாதிபதிகள் 6-அதிகாரம்):

            கிதியோன் ஒரு பயந்த சுபாவமுள்ள மனிதன்.  எதிரிகள் கோதுமை அறுவடை காலத்தில், கோதுமை விளையும் இடத்திற்கு வந்து தானியங்களை எடுத்துச் செல்வார்கள்.  திராட்சை நன்றாக விளைந்து வரும்போது திராட்சை ஆலைக்குள்  நுழைந்து அதை எடுத்துச் செல்வார்கள்.  கோதுமை அறுவடையின் போது திராட்சை ஆலைக்கு வரமாட்டார்கள்.  திராட்சை விளையும்போது போதுமை ஆலைக்கு வரமாட்டார்கள்.  இந்த கிதியோன் கோதுமை அறுவடைக் காலத்தில் எதிரிகளுக்கு பயந்து, யாருக்கும் தெரியாமல், எந்த மனிதனையும் உதவிக்கு அழைக்காமல், தானாக கோதுமைகளை திராட்சை ஆலைக்கு கொண்டு சென்று, திராட்சை ஆலையில் வைத்து போரடித்த ஒரு மனிதன்.

            இப்படி பயந்த ஒரு மனிதனை பார்த்து, கர்த்தருடைய தூதனானவர் பராக்கிரமசாலியே (நியாயாதிபதிகள் 6:12) என்று அழைக்கிறார்.   பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய தூதனானவர் என்ற பதம் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.

            வந்தவர் கர்த்தர் என்பதை அறிந்த கிதியோன், ஆண்டவரே இங்கே இருங்கள் நான் உங்களுக்காக ஒரு ஆட்டை அடித்து சமைத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லுகிறார்.  கிதியோன் போய் வருமளவும் கர்த்தருடைய தூதனானவர் மரத்தடியில் அமர்ந்து ஒரு குச்சியினால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.  இதை நாம் புதிய ஏற்பாட்டிலும் பார்க்க முடியும்.  விபச்சாரத்திலே பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை இயேசுவிடம் அழைத்து வந்தபோதும் அவர் குனிந்து தரையிலே எழுதுகிறார். (யோவான் 8:6).

 

பாராக்:

            பாராக்கும் ஒரு பயந்த சுபாவம் கொண்ட மனிதன்.  தெபோராள் ஒரு நீதிபதி.  பனைமரத்திற்கு அடியில் அமர்ந்து நியாயம் விசாரித்த ஒரு ஸ்திரீ.  ஆண்டவர் தெபோராளிடம் யாபீனியர்களை முறியடிப்பதற்கு பாராக்கை அனுப்பு என்று சொன்னார்.  தெபோராள் அதை பாராக்கிடம் சொன்னபோது, பாராக் நீர் வந்தால் நான் போகிறேன் என்று சொன்னான்.  அந்த அளவிற்கு பயந்த மனிதன் பாராக்.           

            இப்படிப்பட்ட மனிதர்களைக் கொண்டே ஆண்டவர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை ஏற்படுத்தினார்.  எந்த நபர் மூலமாக ஆண்டவர் இஸ்ரவேலர்களை இரட்சித்தாரோ, அந்த நபர்களை இஸ்ரவேல் ஜனங்கள் நியாயாதிபதியாக ஏற்படுத்தி,  அவரிடம் தங்கள் குடும்ப பிரட்சனை, இடப்பிரச்சனை, களவு பிரட்சனை, கானி பிரட்சனை, ஆடு,மாடு பிரச்சனை போன்ற அனைத்திற்கும் நியாயாம் கேட்டு வருவார்கள்.  இப்படி யார் மூலமாக இரட்சிப்புக் கிடைத்ததோ, அவர்களையே ஜனங்கள் நியாயாதிபதியாக ஏற்படுத்திக் கொண்டார்கள்.

           

ரூத்

            ரூத் புத்தகத்தை எழுதியது சாமுவேல்.  ரூத் சரித்திரம் நியாயாதிபதிகள் மூன்றாம் அதிகாரம், காலகட்டத்தில் நடைபெற்றது.  ஏகூத் என்ற நியாயாதிபதி எக்லோனின் மன்னனை தோற்கடித்தபோது, தேசம் என்பது வருஷம் (நியாயாதிபதிகள் 3:30) அமரிக்கையாய் இருந்தது என்று வாசிக்கிறோம்.  அந்த என்பது ஆண்டு காலத்தில் நடைபெற்ற சரித்திரம் தான் இந்த ரூத்தின் சரித்திரம்.

 

I, II சாமுவேல், இராஜாக்கள், நாளாகமம்

            முன்னர் இவை சாமுவேல், இராஜாக்கள், நாளாகமம் என்றே இருந்தன.  பின்நாட்களில் 1, 2 சாமுவேல் என்றும், 1, 2 இராஜாக்கள் என்றும், 1, 2 நாளாகமம் என்றும் பிரிக்கப்பட்டன.  1, 2 சாமுவேல் புத்தகத்தை எழுதியது சாமுவேல் தீர்க்கதரிசி.  1, 2 இராஜாக்கள் புத்தகத்தை எழுதியது வெவ்வேறு காரியதரிசிகள்.  அதாவது ராஜாவின் காரியதரிசிகள்.  ஒரு ராஜா ஏற்படுத்தப்பட்டார் என்றால் அவர் மரிக்கும்வரை அவருக்காக ஒரு காரியதரிசி நியமிக்கப்படுவார்.  அவர் அந்த ராஜாவின் வாழ்வில் நடைபெறுகிற ஒவ்வொரு காரியத்தையும் குறிப்புகளில் பதிவிடுவார்.  1, 2 நாளாகமம் புத்தகத்தை எழுதியதும் காரியதர்சிகளே.  ஆனால், ராஜாக்களுடைய காரியதரிசிகள் அல்ல, தேசத்து காரியதரிசிகள்.  உதாரணமாக அரசாங்க அதிகாரிகள் என்று வைத்துக்கொள்ளலாம்.  எனவேதான், இராஜாக்கள் புத்தகமும், நாளாகமம் புத்தகமும் ஒரே சரித்திரத்தை குறிக்கும், ஆனால் வேறுவேறு கோணங்களில் எழுதப்பட்டிருக்கும்.  ராஜாக்களைப் பற்றிய குறிப்புகளை ராஜாக்கள் புத்தகத்திலும், ராஜாக்கள் காலத்தில் நாட்டில் என்னென்ன நடந்தது என்பதைப் பற்றிய குறிப்புகளை நாளாகமம் புத்தகத்திலும் நாம் பார்க்க முடியும்.

 

சாமுவேல்:

            சாமுவேல் பதினைந்தாவது நியாயாதிபதி.  சாமுவேல் லேவி கோத்திரத்தில் பிறந்தவர்.  தகப்பன் பெயர் எல்க்கானா.  இவர்கள் வருடம் ஒரு முறை ஆலயத்தில் ஆசாரிய வேலை செய்வதற்காக வருவார்கள்.

எல்க்கானா ஒரு சரியான மனிதன் அல்ல.  இவருக்கு இரண்டு மனைவிகள்.  அன்னாள் தனக்கு குழந்தை இல்லையே என்று மனவேதனையோடு எல்க்கானாவிடம் வந்து சொல்லும்போது, நான் உனக்கு பத்து குமாரனைப்போல் இருக்கிறேன் என்று நல்லவன் போல பேசிவிட்டு, பெனினாலோடு சேர்ந்து குழந்தைகளை பெற்றுக்கொண்டிருந்தான்.

அன்னாளும் ஒரு சரியான ஸ்திரீ அல்ல.  நான் ஆசையாய் தூக்கி வளர்க்க வேண்டும் என்பதற்காக அவள் குழந்தையை கேட்கவில்லை.  என் சக்கலத்தி என்னை கேலி செய்கிறார், என்னை மலடி என்று அவமானப்படுத்துகிறாள்.  அந்த நிந்தை ஒழிய வேண்டும்.  எனவே எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று ஜெபிக்கிறாள்.  குழந்தை பிறந்த பிறகும் பாருங்கள் நான் ஆசையாய் கொஞ்ச ஆண்டவர் எனக்கு குழந்தையைக் கொடுத்தார் என்று அவள் பாடவில்லை.   என் எதிரியின் முன், ஆண்டவர் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றே பாடுகிறாள்.  குழந்தை பால் மறந்த உடனே ஆலயத்தில் வந்து விட்டுவிட்டாள்.  அந்த குழந்தை தாயை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்.  தாய் பாசத்திற்காக எவ்வளவாய் ஏங்கியிருக்கும்.  ஆனால் பிள்ளையைக் குறித்த எந்த ஒரு அக்கரையும் இல்லாத தாயாக அன்னாள் இருந்தாள்.  பிள்ளையைக் குறித்த பாசம் இருந்திருந்தால், பிள்ளைக்கு பன்னிரண்டு வயது நிரம்பியதும் ஆலயத்தில் வந்து விட்டிருக்கலாம்.  ஆனால் பால் மறந்ததும் வந்து விட்டுவிட்டாள்.  ஒரு சிறந்த தாயாக இருந்திருப்பாலானாள், குழந்தையைப் பிரிந்து அவளால் இருந்திருக்க முடியாது.  குழந்தையை ஆலயத்தில் விட்டுச் சென்ற சில நாட்களிலேயே பிள்ளையைப் பார்ப்பதற்காக ஆலயத்திற்கு வந்திருப்பாள்.  ஆனால் அன்னாள் வரவில்லை.  வருஷத்திற்கு ஒரு முறை தான் வந்தாள்.  வருஷத்திற்கு ஒரு முறை குழந்தையைப் பார்ப்பதற்காக வரவில்லை, கணவன் ஆசாரியன் என்பதால், அவர்கள் வருஷம் ஒருமுறை தேவாலயத்தில் பணி செய்யவரவேண்டிய கட்டாம்.  எனவே ஆலயத்திற்கு பணிசெய்ய வரும்போது, தன் பிள்ளைக்கும் ஒரு சட்டையை கொண்டுவருவாள்.  தேவாலயத்திற்கும் அன்னாளின் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் மூன்று நாள் பிரயாண தூரம்.

சாமுவேலின் தகப்பனுக்கும், தாய்க்கும் சாமுவேலின் மேல் கரிசனை இல்லை.  ஏலியின் துணையால் சாமுவேல் வளர்க்கப்படுகிறார்.  ஏலியின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர் தன் இரண்டு குமாரரை (ஓப்னி, பினேகாஸ்) சரியாக வளர்க்கவில்லை.  இப்படிப்பட்ட ஒரு மனிதனின் துணையோடுதான் சாமுவேல் வளர்ந்து வருகிறார்.

தாய், தந்தையின் ஆதரவில் சாமுவேல் வளராததால், சாமுவேல் தன்னுடைய பிள்ளைகளை சரியாய் வளர்க்கவில்லை.  காரணம், ஏலி தன்னுடைய பிள்ளையை சரியாய் வளர்க்கவில்லை.  எனவே, பிள்ளையை எப்படி வளர்ப்பது என்பது சாமுவேலுக்கு தெரியவில்லை.

இதனால் பின்நாட்களில் சாமுவேல் தன் பிள்ளையை பெயர்செபாவில் நியாயாதிபதியாய் ஏற்படுத்தினபோது அவர்கள் சரியாய் நியாயம் விசாரிக்கவில்லை.  எனவே, அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஜனங்கள் தங்களுக்கு ராஜா வேண்டும் என்று கூக்குரலிட்டார்கள்.  ஜனங்கள் ராஜா கேட்காமல் இருந்திருந்தாலும் ஆண்டவர் தாவீது ராஜாவைக் கொடுத்திருப்பார்.  ஆனால் தாவீதுக்கு முன்பாக சவுல் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்ததற்கு காரணம் அன்னாள்.

சாமுவேலின் ஊழியம்:

சாமுவேல் காலத்தில் ஜனங்கள்  மிகவும் கேவலமானவர்களாக இருந்தார்கள்.  எந்த அளவிற்கு என்றால், எல்லா அக்கிரமமும் செய்துவிட்டு, ஆண்டவர் வெற்றியை தரவேண்டும் என்பதற்காக பெலிஸ்தரோடு யுத்தம்செய்ய புறப்படும்போது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள்.  விளைவு, யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டு, பெலிஸ்தர் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை எடுத்துச் சென்றுவிட்டார்கள்.  அந்த அளவிற்கு அக்கிரமம் செய்கிறவர்களாக ஜனங்கள் இருந்தார்கள்.

இப்படி வாழ்ந்த ஜனங்களை சாமுவேல், வேதத்தைக் கற்றுக்கொடுத்து நல்வழிப்படுத்தினார்.  மூன்று இடங்களில் வேதத்தைக் கற்றுக்கொடுக்கும் நிலையங்களைத் துவங்கினார்.  வடக்கு இஸ்ரவேல், மத்திய இஸ்ரவேல், தெற்கு இஸ்ரவேல் என்ற மூன்று இடங்களில் நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுக்கும் கல்வி நிலையங்களை ஏற்படுத்தி ஜனங்களை நல்வழிப்படுத்தினார். 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.