Type Here to Get Search Results !

தேடி வந்தார் அற்புதம் செய்தார் | He came in search and did a miracle | gospel short message | கிறிஸ்தவ கைப்பிரதி | Jesus Sam

தேடி வந்தார், அற்புதம் செய்தார்
=============


அப்பொழுது எனக்கு வயது 14. என் இதயம் வீங்கி, வலது கால் செயலற்றுப் போயிற்று. நான் மரணப் படுக்கையில் இருந்தேன். சென்னைப் பட்டணத்தில் பல டாக்டர்களிடத்தில் என் பொற்றோர் என்னைக் கொண்டு சென்றார்கள். என்றாலும், டாக்டர்கள் என்னைக் கைவிட்டார்கள். “மருத்துவத்தால் இவனைக் குணமாக்க முடியாது” என்று சொல்லி விட்டார்கள்.

மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரம் மாத்திரமே இருந்தது. கைவிடப்பட்ட நிலையில், நான் சாகக் கிடந்தபோது, ஒருவர் என்னைத் தேடி வந்தார். என்னைத் தொட்டார். எனக்கு அற்புத சுகம் கொடுத்தார். இந்த அற்புதமானவரை, நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம் நாலுமாவடி. இங்குதான் 1954-ம் ஆண்டு ஒரு பக்தியுள்ள குடும்பத்தில் நான் பிறந்தேன். சிறுவயது முதலே தெய்வ பக்தியில் வளர்க்கப்பட்டேன்.

நான் சிறுவனாக இருக்கும்போது என் பாட்டி ஒவ்வொரு நாளும் இராமாயணம், மகாபாரதம் கதைகளைச் சொல்வார்கள். ஆகவே, தெய்வத்தைப் பார்க்க வேண்டும், தெய்வத்தோடு பேச வேண்டுமென்ற வாஞ்சை சிறு வயது முதலே எனக்குள் காணப்பட்டது.

எங்கள் வீட்டில் இருந்த பூஜை அறைக்குள் தினம் காலையும், மாலையும் தெய் வழிபாடு செய்வேன்.

என் தகப்பனார் வியாபாரத்தின் நிமித்தம் சென்னைப் பட்டணம் வந்தார். ஆகவே, நாங்கள் குடும்பமாக சென்னையில் உள்ள பாடி என்ற இடத்தில் குடியேறினோம். சென்னைக்கு வந்தும் என் தெய்வ பக்தி குறையவில்லை. தினம் காலையில் தெய்வ வழிபாடு செய்து, சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டுதான் பள்ளிக்கூடம் செல்வேன். பள்ளியில் ஒரு ஆசிரியர் என்னைச் ”சந்தனப் பொருட்டு” என்றே அழைப்பார்.

இந்தச் சமயத்தில் சிலர் இயேசுவைக் குறித்து எனக்குச் சொன்னார்கள். “இயேசு கிறிஸ்து தெய்வமே அல்ல“ என்று அவர்களிடத்தில் வாதாடினேன். ”காந்தியைப் போல நேருவைப் போல அவரும் ஒரு மனிதர். அவர் வந்தார், சில நல்ல காரியங்களைச் செய்தார், மரித்துவிட்டார், அவ்வளவுதான்” என்று வாக்குவாதம் பண்ணினேன்.

இன்னும் இயேசுவைக் குறித்துப் பேசிய போது, இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கேவலமாகப் பரிகாசமாகப் பேசலானேன். இந்த புத்தகத்தில் எழுதக் கூடாத அளவு இயேசுவைக் குறித்து மிக கேவலமாகப் பேசி அவரைப் பரிகாசித்தேன். அந்த அளவு தெய்வ பக்தியும், மத வைராக்கியமும் எனக்குள் இருந்தது.

அப்பொழுது எனக்கு 14 வயது, சென்னை-வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை ஹைஸ்கூலில் 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு வியாதி என்னைத் தாக்கியது. என் இருதயம் பாதிக்கப்பட்டது. என் வலது கால் செயலற்றுப் போனது.

என் பொற்றோர் என்னை டாக்டர்களிடத்தில் கொண்டு சென்றார்கள். என்ன வியாதி என்றே அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. மருந்து மாத்திரைகளை மாற்றி மாற்றிக் கொடுத்தார்கள். வியாதி குறையவில்லை.

பல டாக்டர்களிடத்தில் என்னைக் கொண்டு போனார்கள். எனக்காக ஏராளமான பணத்தைச் செலவழித்தார்கள். ஆயிரக் கணக்கான மாத்திரைகளை நான் விழுங்கினேன். டாக்டர்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மாத்திரைகளை கொடுத்தார்கள். என்றாலும், என் வியாதி அதிகரித்ததேயல்லாமல் குறையவில்லை.

என் இருதயம் வீங்கி விட்டது. வலது கால் முற்றிலும் செயலற்றுப் போயிற்று. வியாதியின் அகோரத்தினால் நான் மெலிந்து எலும்பும், தோலுமானேன். என் இருதயம் வீங்கியிருப்பதை வெளியிலிருந்தே பார்க்க முடியும். அப்படி என் இருதயம் பாதிக்கப்பட்டு விட்டது.

சோர்ந்திருந்த சமயம், ”வெளி நாட்டில் படித்து விட்டு ஒரு டாக்டர் வந்திருக்கிறார். அவரிடம் காண்பிக்கலாம்” என்று என் உறவினர் ஒருவர் சொல்லி அனுப்பினார்கள். என் பெற்றோர் என்னை அவரிடம் தூக்கிச் சென்றார்கள்.

சென்னையில் அயனாவரம் என்ற இடத்திலிருந்த அந்த டாக்டர் என்னை மிகுந்த அன்போடு கவனித்தார். அவரும் அவரோடு கூட இன்னும் சில டாக்டர்களுமாகப் பல மணி நேரம் என்னைப் பரிசோதித்தார்கள். எல்லா டாக்டர்களும் கலந்து ஆலோசித்தார்கள்.

”உங்கள் மகனின் இருதயம் முழுவதும் பாதிக்கப்பட்டு விட்டது. இனி மருத்துவத்தால் உங்கள் மகனைக் குணமாக்க முடியாது” என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

மருத்துவம் கைவிட்டபடியினால் எனக்காக என் பெற்றோர் தெய்வத்தை நோக்கிப் பார்த்தார்கள். எப்படியாவது மகன் சுகமாக வேண்டுமே என்று யார் யார் எந்தெந்த தெய்வத்தைக் குறித்துச் சொன்னாலும், எல்லாத் தெய்வங்களுக்கும் பொருத்தனைகளையும், காணிக்கைகளையும் செலுத்தினார்கள்.

ஒரு தெய்வமும் எங்கள் கூப்பிடுதலுக்குப் பதில் கொடுக்கவில்லை. இந்நிலையில் வியாதி மிகவும் அதிகமாகி மரணப் படுக்கையிலானேன். என் வலது காலை அசைக்கவே முடியாது. நான் மரணப் படுக்கையில் எழுந்து உட்கார வேண்டுமானால் ஒருவர் வந்து எனக்கு உதவி செய்ய வேண்டும். நான் மறுபடியும் படுக்க வேண்டுமானாலும் ஒருவர் உதவி செய்ய வேண்டும்.

பசி எடுக்கும், தாகம் எடுக்கும் ஒரு சொட்டுத் தண்ணீர் என் நாக்கிலே வைக்க முடியாது. பயங்கரமாகக் கசக்கும். உறவினர்கள், நண்பர்கள் என்னைப் பார்க்க வருவார்கள். ”இனி இவன் எங்கே நடக்கப்போகிறான்! சாகும் வரை இந்தப் படுக்கைதான்! இனி இவன் எங்கே பிழைக்கப்போகிறான்! மரித்தாலும் மரித்து விடுவான்! என்று சொல்லிப்போவார்கள்.

இப்படி நான் கைவிடப்பட்ட நிலையில் மரணப் படுக்கையில் இருந்தபோது தான் ஒருவர் என்னைத் தேடி வந்தார்.

நான் யாரை வெறுத்தேனோ அந்த இயேசு கிறிஸ்து என்னைத் தேடி வந்தார். நான் யாரை தெய்வம் அல்ல என்றேனோ அந்த இயேசு கிறிஸ்து என்னைத் தேடி வந்தார். நான் யாரை பரிகாசம் பண்ணினேனோ அந்த இயேசு கிறிஸ்து என்னைத் தேடி வந்தார்.

நான் இயேசுவைத் தேடிப் போகவில்லை. ஆனால், இயேசு கிறிஸ்து என்னைத் தேடி வந்தார். நான் வியாதிப்பட்டதைக் கேள்விப்பட்ட ஒரு கிறிஸ்தவ சகோதரன் என்னைப் பார்க்க வந்தார். எங்கள் குடும்ப நண்பர் அவர். என்னை விசாரித்து விட்டுப் போக வந்தார்.

என் தாயார் அந்தச் சகோதரனிடத்தில், ”என் மகனை எல்லோரும் கைவிட்டு விட்டார்கள். என் மகனுக்காக இயேசுவிடம் ஜெபம் செய்வாயா?” என்று கண்ணீரோடு கேட்டுக் கொண்டார்கள்.

என் தாயாருடைய கண்ணீரைக் கண்ட அந்தச் சகோதரன், ”நான் இயேசுவினிடத்தில் உங்கள் மகனுக்காக விண்ணப்பம் செய்கிறேன்“ என்று கூறி என் படுக்கையின் அருகில் முழங்கால்படியிட்டார். என் பெற்றோரும், என் மூன்று சகோதரரும் கூட முழங்கால்படியிட்டார்கள்.

அந்தச் சகோதரன் எனக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் கூட நான் இயேசுவை ஒரு தெய்வமாக நம்பவில்லை. இயேசுவை நோக்கி நான் கூப்பிடவுமில்லை. என் கண்களைத் திறந்து அவர் ஜெபம் பண்ணுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த அளவு நான் இயேசுவை வெறுத்தேன்.

அந்தச் சகோதரன் எனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கும்போது திடீர் என்று அந்த அறைக்குள் தேவப் பிரசன்னம் இறங்க ஆரம்பித்தது. ஒரு தெய்வீக வல்லமை அந்த அறைக்குள் இறங்குவதை உணர ஆரம்பித்தேன். யாரோ ஒருவர் அந்த அறைக்குள் என் படுக்கையின் அருகில் வருவதை என்னால் உணர முடிந்தது.

என் மாம்சக் கண்களால் யாரையும் பார்க்க முடியவில்லை. ஆனால், என் சரீரத்தில் அந்த தெய்வீக வல்லமையை உணர முடிந்தது. திடீரென்று ஒரு கரம் என்னைத் தொட்டது. மின்சாரத்தைப் போல தேவ வல்லமை என் சரீரத்தில் இறங்கியதை உணர்ந்தேன். அந்த தெய்வீக வல்லமை செயலற்றுக் கிடந்த என் வலது கால் வழியாகப் பாய்ந்து சென்றது.

எனக்குள் ஒரு தெய்வீக பயம் உண்டாயிற்று. என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வடிந்தது. என் காலின் வழியாக அந்த வல்லமை மின்சாரத்தைப் போலப் பாய்ந்து சென்ற உடன் செயலற்றுக் கிடந்த என் கால் செயல்பட ஆரம்பித்தது.

அந்தச் சகோதரன் இன்னும் ஜெபித்துக் கொண்டே இருந்தார். ஜெபித்து முடிக்கவில்லை. அதற்குள்ளாக நானே படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தேன். காலை அசைக்க முடியாமல் படுத்திருந்த நான் தானாகவே எழுந்து உட்கார்ந்து விட்டேன்.

”என் கால் செயல்படுகிறது! நான் சுகமாகி விட்டேன்! இயேசு என்னைச் சுகமாக்கி விட்டார்!“ என்ற சந்தோஷத்தில் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது. “இயேசு கிறிஸ்து தான் மெய்யான தெய்வம்“ என்று அப்பொழுது என் இருதயத்தில் விசுவாசித்தேன்.

அந்தச் சகோதரன் ஜெபித்து முடித்தார். படுக்கையை விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தேன். ஆம்! நொண்டியாய் கிடந்த என்னை இயேசு நடக்கப்பண்ணினார். என் வலது காலுக்கும், இடது காலுக்கும் ஒரு சிறு வித்தியாசம் கூட இல்லாத அளவு பரிபூரணமாகச் சுகமாக்கினார்.

என் காலை மாத்திரமல்ல, வீங்கியிருந்த என் இருதயத்தையும் அப்பொழுதே இயேசு சுகமாக்கினார். ஒரே சமயத்தில் இரண்டு அற்புதங்கள். அதன் பிறகு அந்த வியாதிக்காக என் பெற்றோர் எந்த டாக்டர்களிடத்திலும் என்னைக் கொண்டு செல்லவில்லை.

இந்த 50 வருடங்களாக ஒரு சிறு பிரச்சனை கூட இல்லாதபடி, என் இருதயம் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

காரணம் என்ன? இயேசு கிறிஸ்து எனக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுத்துவிட்டார்! பாதிக்கப்பட்டிருந்த என் பழைய இருதயத்தை மாற்றி, ஆரோக்கியமான ஒரு புதிய இருதயத்தைக் கொடுத்துவிட்டார்! கத்தியில்லாமல், இரத்தம் இல்லாமல், ஒரு நொடிப்பொழுதில் இயேசு கிறிஸ்து எனக்கு இருதயமாற்று ஆபரேஷன் செய்து விட்டார்!

நான் இன்றைக்கு உயிரோடு இருப்பதற்குக் காரணம், இயேசு கிறிஸ்து ஒருவரே! அவர் என்னைத் தேடி வராமல் இருந்திருந்தால், இன்றைக்கு என் கல்லறைதான் இந்த பூமியில் இருந்திருக்கும்!

அவர் என்னைத் தேடி வந்து, எனக்குச் செய்த இந்த அற்புதத்தை நான் நினைக்கும் போதெல்லாம், அவருடைய பாதபடியில் நன்றிக் கண்ணீர் வடிக்கிறேன். அவர் எனக்குக் காண்பித்த அன்பை இன்றைக்கு வரைக்கும் என்னால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை!

அவரை மிகக் கேவலமாக, பரிகாசமாகப் பேசின என்னை பழி வாங்காதபடி, அன்போடு என்னைத் தேடி வந்து, என் மரணப் படுக்கையை மாற்றினாரே! அந்த அன்பு, கிரகிக்கவே முடியாத மிகவும் ஆச்சரியமான அன்பு!

அந்த அன்பின் நேசராகிய இயேசு கிறிஸ்து, இன்றைக்கு உங்களைத் தேடி வந்திருக்கிறார். இதோ, இந்தப் பதிவின் மூலமாக உங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு இன்றைக்கு ஒரு அற்புதத்தைச் செய்வார்!

இன்றைக்கு உங்களுக்கு ஒரு அற்புதம் தேவை! உங்கள் வியாதி மாற, பிரச்சனைகள் தீர, தேவைகள் சந்திக்கப்பட, பயங்கள் நீங்க, உங்களுக்கு ஒரு அற்புதம் தேவை!

உங்களுக்கு அற்புதம் செய்வதற்காகவே, இயேசு கிறிஸ்து உங்களைத் தேடி வந்திருக்கிறார். ஆகவே, கலங்காதீர்கள்! இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார்! நீங்கள் அவரை வெறுத்தாலும், அவர் உங்களை நேசிக்கிறார்!

அவருடைய அன்பை விசுவாசியுங்கள்! அவருடைய வல்லமையை விசுவாசியுங்கள்! விசுவாசத்தோடு அவரை நோக்கிப் பாருங்கள். நீங்களும் இயேசு கிறிஸ்துவிடமிருந்து அற்புதங்களைப் பெற்றுக் கொள்வீர்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.