Type Here to Get Search Results !

JC VBS 2023 | Day 6 | நம்பிக்கையில் உறுதி | Firm in Faith | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
விடுமுறை வேதாகமப்பள்ளி – 2023

நாள் – 6
தலைப்பு: நம்பிக்கையில் உறுதி
அவன் இருதயம் கர்த்ரை நம்பித் திடனாயிருக்கும்

நோக்கம்:
    கர்த்தரை நம்பி உறுதியான விசுவாசத்துடன் நம் வாழ்வில் சோதனைகளையும் அவர் நமக்கு கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்களை கொண்டு நமக்கு ஏற்படுகின்ற போராட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

வேதபகுதி:
    2 சாமுவேல் 5:17-25 பெலிஸ்தியருடன் போர்
    2 சாமுவேல் 7:1-17 கடவுளின் வாக்குத்தத்ததம்    
    2 சாமுவேல் 7:18-29 தாவீதின் ஜெபம் 
    லூக்கா 5:17-20 தாவீதின் வம்சம் கட்டப்படும் அவரின் வழியில் மோசியாவின் வருகை முன்னறிவிக்கப்பட்டது.

மனப்பாட வசனம்:
சங்கீதம் 37:23
    நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும். அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.

வேதபாட முன்னேற்றம்:
    தாவீது அரசராக ஆட்சிபுரிந்த காலங்கள் மிகவும் அமரிக்கையான காலங்கள் எனினும், பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலரை தாக்க அவ்வப்போது எழும்பவார்கள். ஆனாலும் தாவீது கர்த்தரை நம்பி, விசுவாசத்துடன் அவர்களை மேற்கொண்டார்.
    தாவீது கடவுளிடம் கொண்டிருந்த கனத்தையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்த ஆண்டவருக்கென்று ஆலயம் கட்ட வேண்டும் என விரும்பினார். ஆனால் ஆண்டவர் அதை தடுத்து தாவீதின் வழியாய் மேசியா வருவதை வாக்கு கொடுத்தார்.

தலைப்பு அறிமுகம்:
    Inter, Senior-ல் ஒரு தம்பியையும் ஒரு தங்கையையும் அவர்களுடைய நெருங்கின நண்பர் ஒருவரையும் முன்பாக வரவழைக்கவும். அவர்களில் இருவரது கண்களையும் கட்டி விட வேண்டும்.
    இவர்கள் இருவரையும் சுழற்றிவிட்டு அவர்களை பின்புறமாக சாய சொல்ல வேண்டும். எதையும் பிடிக்காமல் அவர்கள் பின்புறம் எவ்வளவு கீழே சாய முடியுமோ அவ்வளவு தூரம் அவர்கள் சாய வேண்டும். இவர்களோடு வந்த இவர்களுடைய நண்பர்களை அழைத்து ரகசியமாக அவர்கள் இருவரும் பின்பறமாக சாயும் பொழுது அவர்களை கீழே விழாமல் பிடிக்க வேண்டும் என்று சொல்லிவிட வேண்டும். Start என்று சொன்னதும் கண்கள் கட்டப்பட்ட இருவரும் பின்பறமாக சாய வேண்டும். அவர்கள் இருவரும் தைரியமாக சாய்ந்தால் எவ்வாறு அதை செய்தார்கள் என்றும் அல்லது சாயவில்லை என்றால் ஏன் அவர்கள் சாயவில்லை என்றும் கேட்க வேண்டும்.
    (தன்னுடைய நண்பர் பிடித்துவிடுவார் என்ற தைரியத்தில் அவர்கள் சாய்ந்து இருக்கக்கூடும் அல்லது நாம் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் சாயாமல் இருந்திருக்கக் கூடும். கடவுள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் நாம் உறுதியாக இருக்கும்பொழுது எந்த சூழ்நிலை வந்தாலும் அவர் நம்மை பாதுகாத்து கொள்வார் என்ற தைரியம் நமக்கு இருக்கும்)

பாட விளக்கம்:
    ஆண்டவரை நம்பி அவருக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்கிற மன உறுதியுடன் தாவீது வாழ்ந்தாலும் பல்வேறு எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் அவர் எதிர்கொண்டார். நண்பர்கள் எதிரிகளாகவும் மாறினர். சவுலுக்காக பெலிஸ்தியரை எதிர்த்துப் போரிட்டார் தாவீது. முடிவில் சவுல் தாவீதுக்கு எதிரியாக செயல்பட்டார். சவுலின் எதிர்ப்பால் பெலிஸ்திய நாட்டிற்குச் சென்று அந்த அரசனுக்காக பல யுத்தங்கள் செய்தார். ஆனால் அவர்களும் தாவீது இஸ்ரவேலின் ராஜாவானார் என்பதை அறிந்து அவருக்கு எதிராக யுத்தங்கள் செய்தனர். நாம் ஆண்டவருடைய பிள்ளையாக வாழும்போது நம் வாழ்க்கையிலும் கஷ்டங்களும் பிரச்சனைகளும் வரும். ஆனாலும் நாம் தொடர்ந்து ஆண்டவருக்குப் பிரியமாக வாழும்போது, அவரது வார்த்தைக்கு கீழ்படியந்து வாழும்போது, அவரது ஆலோசனைகளின்படி செயல்படும்போது ஆண்டவர் நமக்கு வெற்றி தருவார்.
    தாவீதுக்கு எதிராக பெலிஸ்தர் ரெப்பாயிம் என்கிற பள்ளத்தாக்குப் பகுதியில் யுத்தம் செய்ய கூடியிருந்தனர். தாவீது உடனே அவர்களுக்கு எதிராக யுத்தத்திற்குச் செல்லாமல் ஆண்டவர் என்ன ஆலோசனை தருகிறார் என்பதை அறிந்து அதற்கு பின்பு அவரது வாக்கை நம்பி யுத்தத்திற்குச் சென்று வெற்றிபெற்றார். மீண்டும் அவர்கள் சிலநாட்களுக்குப்் பிறகு அதே இடத்தில் யுத்தம் செய்வதற்காக கூடியிருந்தனர். ஏற்கெனவே தான் ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டுவிட்டோமே என்று தாவீது யுத்தத்திற்குச் செல்லாமல் மீண்டும் ஆண்டவரிம் ஆலோசனையைக் கேட்டார் அப்போது ஆண்டவர் நீ அவர்களுக்கு நேராய்ப் போகாமல் அவர்களுக்குப் பின்னே சுற்றிப்போய் யுத்தம் செய், கர்த்தர் உனக்கு முன்பாக புறப்பட்டிருப்பார் என்றார். தாவீது அதை விசுவாசித்து சென்றபோது ஆண்டவர் அவருக்கு வெற்றியைத் தந்தார். நம்முடைய சிறிய முயற்சிகளில் நாம் வெற்றிபெரும்போது மகிழ்ச்சியுடன் பெருமையும் நமக்குள் வந்துவிடும் அல்லவா? தாவீதோ தான் வெற்றி பெற்ற நாட்டில் அமைதி நிலவியபோது கர்த்தரைக் குறித்து சிந்தித்தார். தான் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட அழகிய மாளிகையில் வசிக்கிறோமே, கர்த்தருடைய வீடு என்று அழைக்கப்படும் அவருடைய ஆலயமோ கூடாரத்தில் இருக்கிறதே என்று தனது கவலையை நாத்தான் என்கிற தீர்க்கதரிசியிடம் பகிர்ந்துகொண்டார். அதற்கு நாத்தான் தாவீதிடம் உமது மனவிருப்பத்தின்படியெல்லாம் செய்யும்.  கர்த்தர் உம்முடன் இருக்கிறார் என்று கூறினார்.
    அன்று இரவிலே கர்த்தர் நாத்தான் தீர்க்கதரிசியிடம் இதுவரை எனக்கான அழகிய வீட்டைக் கட்டும்படி நான் யாரிடமும் கூறவில்லை. இந்த நல்ல விருப்பம் தாவீதுக்கு வந்தபடியால் நான் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டுவேன். அவன் வீடும் ராஜ்யமும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றார். அதன் அர்த்தம் என்னவென்றால் தாவீதின் வம்சத்தில் பிறப்பவர் எப்போதும் ஆட்சி செய்து கொண்டிருப்பார்கள் என்பதாகும். இந்த தாவீதின் வம்சத்திலேயே ஆண்டவர் இயேசு பிறப்பார் அவரது ராஜ்யத்திற்கு (ஆளுகைக்கு) முடிவிறாது (லூக்கா 1:33) என்கிற இறை திட்டம் வெளிப்படுத்தப்பட்டது. வாழ்வின் எத்தகைய கடின நிலையிலும் நீங்கள் ஆண்டவரது ஆலோசனை அறிந்து அவரது வார்த்தையை விசுவாசித்து அதின்படி வாழ்ந்தால் ஆண்டவர் உங்களை நிச்சயமாக அநேகருக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்துவார்.

இரட்சிப்பின் சிந்தனை:
    கிறிஸ்து நமக்காக சிலுவையில் அடிக்கப்பட்டு பாடுபடவும், உயிர்த்தெழவும் முன் குறிக்கப்பட்டார். தாவீதின் வம்சத்தின் வழியாக இயேசு கிறிஸ்துவின் வருகை உறுதியாக்கப்பட்டது. அதைப்போல் அவரின் வழியில் வாக்குத்தத்தமாக இயேசு கிறிஸ்து பிறந்தார். கடவுள் நம்மீது வைத்துள்ள வாக்குத்தத்தங்கள் நிறைவேற விசுவாச வாழ்க்கையில் வரும் போராட்டங்களையும், சோதனைகளையும் மேற்கொண்டு நம்பிக்கையோடு வாக்குத்தத்தம் நிறைவேற வாழ வேண்டும்.



கதை:
    ஒரு பையில் தாவீது பயன்படுத்தின அநேக பொருட்களை எடுத்துக்கொள்ளவும். ஒரு வேதாகமத்தையும் எடுத்துக்கொள்ளவும்.

    தாவீதுக்கு எத்தனையோ எதிரிகள் இருந்தார்கள். சவுல் உயிரோடிக்கும் நாளெல்லாம் தாவீதுக்கு எதிரியாகவே செயல்பட்டார்.  (1 சாமுவேல் 18:29)  தாவீது சவுலின் கைக்குத் தப்பி பெலிஸ்தியர்களோ சேர்ந்துகொண்டான்.  பெலிஸ்தியர்களுக்காக யுத்தமும் செய்தான்.  (1 சாமுவேல் 27:7,8)  பெலிஸ்தியருக்கு தாவீது நன்மை செய்ததால், பெலிஸ்தியரின் ராஜாவாகிய ஆகீஸ் தாவீதுக்கு சிக்லாக் என்ற பகுதியை கொடுத்தான். (1 சாமுவேல் 27:6)

    இஸ்ரவேல் தேசத்திற்கு சவுல் அரசனாய் இருந்த போது தாவீது எத்தனையோ நன்மைகளை பெலிஸ்தியருக்கு செய்தார்.  இதை உணராத பெலிஸ்தியர்கள் தாவீது இஸ்ரவேல் தேசத்திற்கு அரசனானபோது, தாவீதுக்கு விரோதமாக படையெடுத்து வந்தார்கள்.
    நம்முடைய வாழ்க்கையிலும் கூட நாம் அநேகருக்கு நன்மை செய்திருப்போம்.  ஆனால், அதற்கு கைமாறாக அவர்கள் நமக்கு தீமையே செய்வார்கள்.  நம்மிடம் நன்மைகளைப் பெற்றுக்கொண்டு நமக்கே எதிராக செயல்படுவார்கள்.  அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் நம்முடைய சுய முயற்சியின்படி செயல்படாமல், கர்த்தருடைய ஆலோசனையைக் கேட்டு, அவருடைய சித்தத்தின் படி செய்ய வேண்டும்.  
    பெலிஸ்தியர்கள் தாவீது விரோதமாக போர்த்தொடுத்த போது, தாவீது கர்த்தரித்தில் சென்று, பெலிஸ்தியருக்கு விரோதமாக போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று கேட்டான்.  அதற்கு கர்த்தர்: போ, பெலிஸ்திரை உன் கையில் நிச்சயமாய் கொடுப்பேன் என்று சொன்னார்.
    தாவீது பெலிஸ்தியர்களோடு போரிட்டு வெற்றி சிறந்தான்.  தண்ணீர்கள் உடைந்து போகிறதுபோல பெலிஸ்தியர்கள் ஓடிப்போனார்கள்.  எனவே, தாவீது அந்த ஸ்தலத்திற்கு பாகால்பிராசீம் என்று பேரிட்டான்.
    பெலிஸ்தியர்கள் மீண்டும் தாவீதுக்கு விரோதமாக ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள்.  தாவீதுக்கு பதிலாக நாம் அங்கே இருந்திருப்போமானால், கோபத்தில், பெலிஸ்தியர்களுக்கு வேறு வேலை இல்லை, எங்களை வெற்றிசிறக்க முடியாது என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் போருக்கு வருகிறார்கள், கர்த்தர் பெலிஸ்தியருக்கு விரோதமாக போர்புரிய அனுமதி கொடுத்துவிட்டார் என்று யுத்தம் செய்ய புறப்பட்டிருப்போம்.
    ஆனால் தாவீது அப்படி செய்யவில்லை, முதல் முறை பெலிஸ்தியர்கள் தனக்கு விரோதமாக வந்தபோது, கர்த்தரிடம் ஆலோசனை கேட்டதுபோலவே, அதே பெலிஸ்தியர்கள் மீண்டும் போருக்கு வந்தபோதும், தாவீது மீண்டும் கர்த்தரிடம் சென்று நான் பெலிஸ்தியரோடு யுத்தத்திற்கு செல்லலாமா என்று கேட்டார்.  இரண்டாவது முறையும் கர்த்தர் பெலிஸ்தியர்களோடு யுத்தம் பண்ண தாவீதுக்கு அனுமதி கொடுத்தார்.  அந்த போரிலும் தாவீது பெலிஸ்தியர்களை முறியடித்தார்.
    தாவீது தன் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் கர்த்தரை நம்பினார்.  அவர் ஒருவரை நான் முழுமையாய் நம்பினால், எவரும் என்னை அசைக்க முடியாது என்பதை தாவீது நன்கு அறிந்து வைத்திருந்தார்.  தன்னுடைய முழு உறுதியான நம்பிக்கையையும் கர்த்தர் மீதே தாவீது வைத்திருந்தார்.
    நாமும் தாவீதைப்போல நம்முடைய வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரையே நம்பி ஜீவிக்க வேண்டும்.  உயர்வு, தாழ்வுகளின் மத்தியலும் கர்த்தரை உறுதியாய் நம்பி வாழ வேண்டும்.

    தாவீது பெலிஸ்தியர்களோடு போரிட்டு மீண்டும் தன் எருசமிற்குத் திரும்பினார்.  அப்போது தாவீதுக்கு கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி சாதாரண கூடாரத்தில் இருப்பதைவிட, அழகிய மாளிகையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
    நாம் ஒரு காரியத்தை வெற்றியாக முடிக்கின்றோம் என்றால், கடவுளைப் பற்றியோ, ஆலயத்தைப்பற்றியோ யோசிக்க மாட்டோம்.  அந்த வெற்றியை எப்படி கொண்டாட வேண்டும் என்றே யோசிப்போம்.
    முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து ஒரு மாதம் விடுமுறை விட்டார்கள் என்றால், இந்த ஆண்டு எந்த உறவினர்களின் வீட்டிற்கு செல்லாம், எந்த சுற்றுலா தளத்திற்கு செல்லலாம், எப்படியெல்லாம் சந்தோஷமாக நேரத்தை செலவிடலாம் என்று யோசிப்போம்.  ஆனால், இந்த விடுமுறையில் ஆண்டவருக்கு என்ன செய்வோம், ஆலயக்காரியங்களில் எப்படி நம்மை கூடுபடுத்திக்கொள்வோம் என்று நாம் யோசிக்க மாட்டோம்.
    ஆனால் தாவீது பெலிஸ்தியர்களை முறியடித்த சந்தோஷத்தைக் கொண்டாடுவததைப் பார்க்கிலும் ஆண்டவருடைய உடன்படிக்கைப் பொட்டியை வேறு சிறந்த இடத்தில் வைப்பதையே பெரும் பாக்கியமாக கண்டார்.
    கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எழுதிக்கொடுத்த பத்து கட்டளை அடங்கிய பலகை, ஆரோனின் துளிர்த்த கோள், இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தின் உட்கொண்ட மன்னா இவையனைத்தும் அடங்கிய உடன்படிக்கைப் பெட்டி மோசேயின் காலம் முதல் தாவீதின் காலம் வரை சாதாரண ஒரு கூடாரத்திலேயே இருந்தது.
    நான் மாத்திரம் மிகப்பெரிய மாளிகையில் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய பெட்டி மாத்திரம் எதற்காக கூடாரத்தில் இருக்க வேண்டும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்காக ஒரு தேவாலயத்தை கட்ட வேண்டும் என்ற எண்ணம் முதல் முதலில் தாவீதுக்கே எழுந்தது.
    மோசேயின் காலம் முதல் தாவீதின் காலம் வரை எத்தனையோ பரிசுத்தவான்கள் இருந்தார்கள்.  ஆனால் ஒருவரும் கர்த்தருடைய பெட்டியை வைப்பதற்காக ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை.
    தாவீது உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்காக ஒரு தேவலாயம் கட்ட வேண்டும் என்று சொன்னது, கர்த்தருக்கு மிகவும் பிரியமாய் இருந்தது.  இதுவரை எவரும் செய்யாத ஒன்றை கர்த்தருக்காக நான் சிறப்பாய் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தாவீதுக்கு இருந்தது.
    தாவீது தன் செல்வாக்குகளையும், தன் அதிகாரத்தையும் வைத்து மிகவும் உள்ளாசமாக, சந்தோஷமாக, தன் மனம் சொல்லும் எல்லாவித வழிகளிலும் வாழ்ந்திருக்கலாம்.  ஆனால் தாவீது அப்படி செய்யவில்லை, எல்லாவற்றையும் அனுபவிப்பதற்கு தனக்கு அதிகாரம் இருந்தாலும், இவையனைத்தையும் விட கர்த்தருக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்பதையே தாவீது சிந்தித்துக்கொண்டிருந்தார்.
    தாவீது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்காக ஒரு ஆலயத்தை கட்ட வேண்டும் என்று சித்தம் கொண்டார்.  அதை கர்த்தர் தனது சித்தமாக எடுத்துக்கொண்டு, தேவாலயம் கட்ட அனுமதி கொடுத்தார். (2 சாமுவேல் 7:12,13)  ஆனாலும் கர்த்தர் தாவீதுக்கு அனுமதி கொடுக்காமல், தாவீதின் மகன் சாலொமோனுக்கு தேவலாயம் கட்டும்படியான அனுமதி கொடுத்தார்.
    தாவீது கரத்தருக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தை சிந்தினபடியினால் கர்த்தர் தாவீதின் மகன் சாலொமோனின் காலத்தில் தேசத்தில் அமைதியை உண்டாக்கி, அவன் மூலமாக தனக்கொன்று ஒரு தேவாலயத்தைக் கட்டினார்.  (1 நாளாகமம் 22:7-10)
    சாலொமோன் தேவாலயத்தைக் கட்டினாலும், தேவாலயம் கட்ட தேவையான அனைத்து பணங்களையும் தாவீது சேகரித்துவைத்திரு்ந்தார்.  (1 நாளாகமம் 22:14)

    தாவீது கர்த்தரை உறுதியாய் நம்பினதினால் தன்னால் இயன்ற மட்டும் கர்த்தருக்கு தொண்டு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்.  நாமும் தாவீதைப்போல எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரையே உறுதியாய் நம்பியிருக்க வேண்டும்.  நம்மா்ல் இயன்றதை, நம்மிடம் உள்ள சிறப்பானதை கர்த்தருக்கென்று கொடுக்க வேண்டும்.



மனன வசனம்:
    Action Method. கை செய்கையின் மூலம் வசனத்தை கற்றுக்கொடுக்கவும்.



நாடகம்:
    ஒரு அலைபேசி நிறுவனம் ஒன்று இப்படியாக விளம்பரம் செய்திருந்தார்கள். நீங்கள் உங்கள் பழைய அலைபேசியை கொடுத்துவிட்டு புதிய அலைபேசியை வாங்கிச்செல்லலாம் என்பதுதான் அந்த விளம்பரம். இந்த சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
    விளம்பரத்தை பார்த்த ஒரு நபர் தன் நண்பனை அழைத்து அதைப்பற்றி கூறினார். நண்பர் அதை நம்பவில்லை. இவையெல்லாம் உண்மையல்ல. நம்மை ஏமாற்றுவதற்காக இப்படி செய்வார்கள் என்று நண்பன் கூறினான்.
    இந்த வாலிபன் தன் மனத்தில் நம்பிக்கையோடு அந்த விளம்பரத்தையும் கையில் எடுத்துக்கொண்டு அலைபேசி நிலையத்திற்கு சென்றார். விளம்பரத்தை நம்பாத அந்த நண்பனும் உடன் சென்றார். அந்த வாலிபன் விளம்பரத்தை காண்பித்து தன் பழைய அலைபேசியை வைத்துக்கொண்டு புதிய அழைபேசி தருமாறு கூறினார். அந்த அலைபேசி ஊழியர்கள் அந்த வாலிபனின் பழைய அலைபேசியை வாங்கிவிட்டு புதிய அழைபேசியை கொடுத்தார்கள்.
    இதைப்பார்த்த அந்த நண்பனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. உடனே நண்பனும் அலைபேசி நிலையத்திற்குள் சென்று, எனது அழைப்பேசியையும் வாங்கிக்கொண்டு புதிய அலைபேசி கொடுங்கள் என்று சொன்னார். அதற்கு அந்த ஊழியர்கள் இல்லை உங்களுக்கு கொடுக்க முடியாது என்று சொன்னார்கள். நண்பன் ஏன் என்று காரணம் கேட்டபோது, அலைபேசி ஊழியர்கள் நீங்கள் விளம்பரத்தை சரியாக படிக்கவில்லையா? கீழே எழுதியிருப்பதை வாசியுங்கள் என்று சொன்னார்கள்.
    அந்த விளம்பரத்திற்கு கீழே, பழைய அலைபேசியை கொடுத்துவிட்டு புதிய அலைபேசியை வாங்குபவர்கள் தாங்கள் பார்த்த அந்த விளம்பர துண்டுப்பிரதியை கையோடு கொண்டுவர வேண்டும் என்று எழுதியிருந்தது.
    நம்பிக்கையோடு விளம்பர துண்டுப்பிரதியோடு வந்த வாலிபன் புதிய அலைபேசியை பெற்றுக்கொண்டான். நம்பிக்கையில்லாமல் விளம்பர துண்டுப்பிரதியை கொண்டுவராத நண்பனால் புதிய அலைபேசியை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

விளையாட்டு:
    ஒரு மாணவனை முன்பாக அழைத்து அவன் கையை எந்த திசையில் வைத்திருக்கிறான் என்பதை வைத்து, பிள்ளைகளை நேரத்ததை கண்டுபிடிக்க செய்வது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.