தென்னிந்திய திருச்சபை
மதுரை இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
விடுமுறை வேதாகமப்பள்ளி – 2023
நாள் – 7
தலைப்பு: அசைக்கபடாததில் உறுதி
அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்
நோக்கம்:
நம்மை வாழச்செய்யும் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் இவைகளில் நாம் ஆண்டவருக்கு விரோதமாகவும் நம் அயலாருக்கு விரோதமாகவும் பாவம் செய்யக்கூடிய சூழ்நிலைகளை மேற்கொள்ள வேண்டும். பாவத்தின் விளைவுகள் நம்வாழ்வில் பல தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
வேதபகுதி:
2 சாமுவேல் 11:1 - 12:13 பெலிஸ்தியருடன் போர்
2 சாமுவேல் 12:1-10 நாத்தான் மூலம் தாவீதுக்கு கடவுளின் எச்சரிப்பு
சங்கீதம் 51 தாவீது தன் பாவத்தை உணர்ந்து, கடவுளிடம் அர்ப்பணித்தல்
கடவுளின் நித்திய கிருபையையும் அவருடைய திட்டங்களையும் நம் வாழ்வில் நிறைவேற்றபட, நாம் அவரில் உறுதியாய் இருக்க வேண்டும் என கடவுள் விரும்புகின்றார். மத்தேயு 1:6
2 சாமுவேல் 7:1-5 தேவாலயத்தை கட்ட வாஞ்சை
மனன வசனம்:
2 பேதுரு 1:10
ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள். இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.
வேதபாட முன்னேற்றம்:
இன்றைய உலகில் நம்மை அசைக்கின்ற காரியங்கள் உண்டு, அசையாமல் நிலை நிறுத்துகின்ற காரியங்கள் உண்டு.
தாவீது அசைந்து, விழுந்து போகக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. பிறர் பொருளை அவர் இட்சித்தார். அடுத்தவரின் மனைவியை தன் மனைவியாக்கிக் கொண்டார்.
அவர் கொலை செய்யவும் முற்பட்டார். கடவுளின் கட்டளைகளிலிருந்து அசைக்கப்பட்டார். ஆனாலும் கடவுளின் எச்சரிப்பை ஏற்று மனம் திரும்பி, மன்னிப்பு கேட்டு ஒப்புரவாகினார். அவர் செய்த பாவத்தின் விளைவு அவரையும், அவர் குடும்பத்தையும் பாதித்தது.
தலைப்பு அறிமுகம்:
இரண்டு தன்னார்வலர்களை முன்பதாக அழைத்து அவர்களுடைய வலது கையில் ஒரு கனமான பொருளை கொடுத்து, கையை நீட்டிபிக்கச் சொல்ல வேண்டும். இருவரும் தங்களது வலது கையை கீழே படாமல் எவ்வளவு நேரம் நீட்டி கொண்டிருக்கிறார்கள் என்பதே இதன் நோக்கம். அவர்கள் இருவருடைய கை நடுங்கும் பொழுதோ அல்லது வலி ஏற்படும் பொழுதோ, JC VBS இயக்குநர் அங்கிருக்கும் ஒரு நபருடைய கையைப் பிடித்து அவருடைய கை கீழே இறங்காமல் இருப்பதற்கு உதவி செய்யலாம். மற்றொருவரை அப்படியே விட்டு விடவுடம்.
(ஒருவருடைய கையை மற்றொருவர் பிடித்து உதவி செய்யும் பொழுது அவர் நீண்ட நேரம் அந்த பொருளை பிடித்திருக்க முடியும் உதவி செய்யாத பட்சத்தில் அவருடைய கை வலி ஏற்பட்டு அவரால் நீண்ட நேரம் அதை பிடித்திருக்க முடியாது. இதுபோன்று தான் கர்த்தர் நம் பச்சம் நின்று நமக்கு உதவி செய்யும் பொழுது நாம் அசைக்கப்படாமல் உறுதியாக இருக்க முடியும்)
பாட விளக்கம்:
தாவீது ஆண்டவர் மீது வைத்திருந்த நம்பிக்கையால் அவருக்காக உறுதியான மனப்பான்மையுடன் வாழ்ந்தபோதிலும் அவரது வாழ்விலும் சில பாவங்கள் காணப்பட்டன.
ஒரு முறை பெலிஸ்தியருடன் யுத்தம் நடைபெற்றபோதும் தாவீது அந்த யுத்தத்திற்குச் செல்லாமல் அரமனையில் இருந்தார். அவரது படைவீரர்கள் மட்டும் யுத்தத்திற்கு சென்றார்கள். அப்போது ஒருநாள் தனது படைவீரன் உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை பார்த்தார். அவளது அழகாள் கவரப்பட்டு அவரைத் தனது அரமனைக்கு வரவழைத்து அவள் உரியாவின் மனைவி என்று அறிந்தும் பிறரது உடமையை, மனைவியை வேலைக்காரரரை தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளக்கூடாது என அறிந்தும் கர்த்தருடைய கட்டளையை மீறினவராக அவரைத் தனக்கு மனைவியாக்கிக்கொள்ள முயன்றார். இதனால் பத்சேபாள் கர்ப்பவதியானார். இதை அறிந்த தாவீது தன் செய்தது தவறு என்று உணர்ந்து அதை மறைப்பதற்கு முயன்றார். தனது முயற்சி தோல்வியடைந்ததால் சதி செய்து உரியாவை யுத்த கலத்தில் சாகடிக்கச் செய்தார். மனிதர் பார்வைக்கு இந்த பாவம் தெரியாவிட்டாலும் ஆண்டவரின் பார்வைக்கு எதையும் மறைக்க முடியாது அல்லவா? தாவீதின் இந்த செயலால் ஆண்டவர் தாவீதின் மீது கோபம் கொண்டார். நாமும் கூட பலநேரங்களில் இப்படித்தானே செயல்பட்டு விடுகின்றோம். தவறு செய்யும்போது அது கர்த்தருடைய கட்டளையை மீறுகின்ற செயல் என்பதை மறந்துவிடுகிறோம். நாம் செய்த தவறு நமக்கு பிரச்சனையை உருவாக்கும் என்கிற சூழல் வரும்போது அதை மறைக்கவோ, பிறர் மீது அதற்கான பழியையோ போட்டு தப்பிக்கொள்ள முயற்சிப்போம் அல்லவா? தாவீதும் இவ்வாறே செயல்பட்டார். ஆகவே கர்த்தர் நாத்தான் தீர்க்கதரிசியின் மூலம் தாவீதை எச்சரித்து அவர் செய்த தவற்றிற்கு தண்டனை கொடுக்கப்படும் என்றார். உடனே தாவீது தான் செய்த தவறு உரியாவுக்கு எதிரானது மட்டுமல்ல ஆண்டவருக்கு விரோதமானது என்று அறிக்கை செய்து ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டார்.
தாவீதின் இந்த தவறு அவரது பிள்ளையின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல நேரங்களில் நாம் பாவம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று துணிந்து பாவம் செய்கிறோம் அல்லவா? உங்கள் பாவம் உங்களை தொடர்ந்து பிடிக்கும் என்று கர்த்தருடைய வார்த்தை நம்மை எச்சரிக்கை செய்கிறது.
தாவீது ஆண்டவரிடம் மன்னிப்பைப் பெற்றுக்கொண்டாலும் அவரது தவற்றின் தீய விழைவு அவரது குடும்பத்தாருக்கும் துன்பத்தை வருவித்தது. நமது தவறான செயல் பெற்றோருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிடாதவாறு நம்மை உண்டாக்கிய கர்த்தரின் திருநாமம் நமது தவறான செயல்பாடுகளால் தூஷிக்கப்படாதபடிக்கு கவனமாக வாழ்வோம்.
இரட்சிப்பின் சிந்தனை:
நாம் பாவங்களை நிராகரிக்க பழக வேண்டும். அதை ஒழிக்கவும், அவைகளில் இருந்து விலகியிருக்கவும் வேண்டும். நம்முடைய பாவங்களுக்காக, கடவுளிடம் மன்னிப்பு கேட்கவும் மனம்திரும்பவும் வேண்டும்.
கதை:
தாவீது இஸ்ரவேலரின் சிறந்த ராஜாவாய் இருந்தாலும், கர்த்தருக்கு பரியமான அனைத்து காரியங்களையும் செய்தாலும், தாவீதுக்குள்ளாக ஒருவித பாவம் இருந்தது.
தாவீது கண்களின் இச்சையில் விழுந்துபோனார். தன்னுடைய கண்களினால் மற்றவனின் மனைவியை இட்சித்தார்.
தாவீதின் வீரர்கள் அனைவரும் பெலிஸ்தியருக்கு விரோதமாக யுத்தத்திற்கு சென்றபோது, தாவீது யுத்தத்திற்கு செல்லாமல் அரண்மனையின் உப்பரிகையின் மேல் சுற்றித்திரிந்தார். அப்போது ஒரு வீட்டில் பெண் ஒருத்தி குளித்துக்கொண்டிருப்பதை பார்த்தார். இப்படியாக தாவீது தன் கண்களினால் பாவம் செய்தார்.
நாமும் தாவீதைப்போல அநேக நேரங்களில் ஆண்டவர் நமக்கு கிருபையாய் கொடுத்திருக்கின்ற கண்களை பயன்படுத்தி ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியங்களைப் பார்ப்பதுண்டு. சில நேரஙகளில் டீ.வி பார்த்து நேரத்தை செலவிடுகின்றோம். சில நேரங்களில் அலைபேசி (Android Mobile) பார்த்து நேரத்தை செலவிடுகின்றோம். ஆனால் ஆண்டவருடைய வேதத்தை படிப்பதற்கோ, நல்ல ஆவிக்குரிய புத்தகங்களை படிப்பதற்கோ நமக்கு நேரம் இல்லை. நாம் நம்முடைய கண்களை சரியான பாதைகளுக்கு பயன்படுத்துகின்றோமா? தவறான பாதைகளுக்கு பயன்படுத்துகின்றோமா? யோசித்துப் பார்ப்போம்.
பிறனுடைய எந்தவிதமான பொருளையும் இச்சிக்கக்கூடாது என்று கர்த்தர் கட்டளையிட்டிருக்க, (யாத்திராகம் 20:17) எல்லாவற்றையும் அறிந்த தாவீது, தன்னுடைய கண்களினால் மற்றவரின் மனைவியை இச்சித்தார்.
நாமும் கூட அநேக நேரங்களில் மற்றவர்களின் பொருள் மீது அசைப்படுவதுண்டு. அதை ஆண்டவர் வெறுக்கின்றார். ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கின்ற பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும். நாம் ஆண்டவரிடம் ஜெபிக்கும்போது, ஆண்டவரே எனக்கு இந்த பொருள் தேவைப்படுகின்றது, எனக்கு வாங்கிக்கொடுங்கள் என்றே கேட்க வேண்டும். மாறாக, ஆண்டவர் அவன் இப்படி ஒரு பொருள் வைத்திருக்கின்றான், அதேபோன்ற பொருளை எனக்கும் வாங்கிக்கொடுங்கள் என்று கேட்பதை ஆண்டவர் வெறுகின்றார்.
ஒரு விளையுயர்ந்த போனா ஒன்றை வாங்க நமக்கு ஆசையாய் இருக்கலாம். நம்முடைய பெற்றோரிடம் கேட்டாள் வாங்கிக்கொடுக்க முடியாது என்று சொல்லியிருக்கலாம். நாம் முழங்கால்படியிட்டு ஆண்டவரே எனக்கு அந்த விளையுயர்ந்த போனா வாங்கவேண்டும் என்று அசையாய் இருக்கிறது என்று கேட்டாள், ஆண்டவர் நிச்சயம் கொடுப்பார். மாறாக ஆண்டவரே என்னோடு படிக்கின்ற ஒருவன் விளையுயர்ந்த பேனா வைத்திருக்கிறான், அதைப்போன்ற பேனா எனக்கும் வேண்டும் என்று கேட்டால் ஆண்டவர் கொடுக்க மாட்டார்.
நாம் ஆசைப்படுகின்ற பொருட்களைக் காட்டிலும், நமக்கு தேவையான பொருட்களை கர்த்தர் நிச்சயம் கொடுப்பார். நாம் ஒருபோதும் மற்றவர் பொருட்களுக்கு ஆசைப்படக்கூடாது.
தாவீது கண்களின் இச்சைக்குள்ளாக அகப்பட்ட போது, ஆண்டவர் நாத்தான் என்ற தீர்க்கதரிசியின் மூலமாக தாவீதை எச்சரித்தார். நாத்தானின் வார்த்தைகளைக் கேட்ட உடனே, தன் தவற்றை உணர்ந்த தாவீது மனம் கசந்து அழுது ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்டார்.
நாமும் சில நேரங்களில் தவறு செய்யும்போது, நம்முடைய பெற்றோரோ, உறவினர்களோ, நண்பர்களோ நம்மை கண்டிக்கும்போது, நம்முடைய தவறுகளை உணர்த்தும்போது, நாம் அந்த தவற்றைவிட்டு விலக வேண்டும். நாம் செய்த தவறுக்காக ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மாறாக, நாம் செய்த தவற்றை ஒருவர் உணர்த்தும்போது, என்னை விட நீ நீதிமானா? நீ பாவம் செய்தது இல்லையா? நீ நீதிமான்போல என்னை கண்டிக்கின்றாயோ என்று சொல்லி, நம்முடைய தப்பிதங்களை உணர்தியவரை நாம் கடிந்துகொள்ளக்கூடாது.
தாவீது முழு இஸ்ரவேலுக்கும் ராஜாவாய் இருந்தபோது, நாத்தான் என்ற தீர்க்கதரிசி தாவீதை கடிந்துகொண்டார். ஒருவேளை தாவீது நான் செய்த தவறு எல்லோருக்கும் தெரிந்துவிட்டதே என்று எண்ணி, நான் ஒரு ராஜா அப்படித்தான் தவறு செய்வேன், அதை கேட்டக நீ யார்? ஒரு ராஜாவுக்கே ஆலோசனை சொல்லுகிறாயா? என்று நாத்தான் தீர்க்கதரிசியை தண்டித்திருக்கலாம், இல்லையென்றால் கொலையும் செய்திருக்கலாம். ஏனென்றால், தாவீது இஸ்ரவேலின் ராஜா. இஸ்ரவேலர்கள் அனைவரும் தாவீதின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும்.
தாவீது தன் தவற்றை உணர்த்தின நாத்தாணை தண்டிக்கவில்லை. தன் தவறுக்காக ஆண்டவருடைய சமுகத்தில் மனம் கசந்து அழுதார். நம்முடைய தவறுகளையும் யாரேனும் உணர்த்தும்போது நாம் மனம்திரும்பி, பாவங்களை ஆண்டவருடைய சமுகத்தில் அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும்.
நாம் அறியாமல் பாவம் செய்தாலும், ஆண்டவருடைய சமுகத்தில் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அசைக்கப்படாமல் அவருக்குள்ளாக நிலைத்திருக்க வேண்டும். நம்மை அசைக்கும்படியாக, நம்மை பாவத்தில் விழவைக்கும்படியாக சாத்தான் எத்தனையோவிதமான சோதனைகளை கொண்டுவருவான். நாம் பாவத்தில் விழுந்துவிடாமல், அசையாமல் கர்த்தருக்குள்ளாக உறுதியாய் இருக்க வேண்டும்.
தாவீது பிறருடைய பொருளை இச்சித்தான். இச்சை என்ற பாவம் அவனுக்குள்ளாக இருந்ததினால் தாவீது தன் மகனை (அமனோன்) கண்டிக்க முடியவில்லை. தாவீதின் பாவத்தினால் தாவீது தன் மகனால் கொலைசெய்வதற்கு துரத்தப்பட்டார்.
தாவீது அப்சலோமால் துரத்தப்படுகின்றார். மக்னாயீம் குகையில் ஒழிந்துகொள்கின்றார்.
மனன வசனம்:
வசனத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள முதல் எழுத்துக்களை மாத்திரம் நாம் சொல்ல வேண்டும். அதை வைத்து பிள்ளைகள் முழு வசனத்தையும் கண்டுபிடிக்க வேண்டும். இந்த முறையை பயன்படுத்தலாம்.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.