Type Here to Get Search Results !

மோசேயின் சிறப்பு பண்புகள் | Moses Good Qualities | Tamil Christian Message Notes Outline | பிரசங்க குறிப்புகள் | Jesus Sam

தாலைப்பு: மோசே குணங்கள்

          நியாயப்பிரமாண புத்தகமாகிய ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் புத்தகத்தை எழுதியவர் இந்த மோசே.  இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து கானான் தேசத்திற்கு வழிநடத்தி சென்ற தலைவன் மோசே.  இந்த மோசேயிடம் காணப்பட்ட சிறப்பு குணங்களைப் பற்றி இந்த குறிப்பில் அறிந்துகொள்வோம்.

மோசே நூற்று இருபது ஆண்டுகள் வாழ்ந்தார்.  மோசேயின் வாழ்க்கையை மூன்று பிரிவுகாளாக பிரிக்கலாம்.  நாற்பது வயது வரை எகிப்தின் அரண்மனையில் வாழ்ந்தார்.  நாற்பது வயது முதல் என்பது வயது வரை மீதியான் தேசத்தில் வாழ்ந்தார்.  என்பது வயது முதல் நூற்று இருபது வயது வரை இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்திற்கு அழைத்துச் சென்றார்.

          இந்த மோசே விசுவாசிகளாகிய நமக்கு கற்றுக்கொடுக்கும் மூன்று விதமான காரியங்களை என்ன?

1. வேலை செய்த மோசே:

          மோசே இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்தவன்.  எபிரெயராகிய அம்ராமுக்கும், யேகெபேத்துக்கும் பிறந்தவன்.  மோசே பிறந்த போது இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமையாய் இருந்தார்கள்.  எகிப்தின் பார்வோன் ராஜா இஸ்ரவேலர்கள் பலுகி பெருகுகிறதை பார்த்து அவர்களில் புதிதாக பிறக்கிற ஆண் குழந்தைகளை கொலைசெய்யும்படி கட்டளையிட்டான்.

          மோசேயின் தாய் மோசேயை மாதம் ஒளித்து வைத்தாள். பின்பு ஒளித்துவைக்கக்கூடாமல், நாணல் பெட்டியை செய்து, அதில் குழந்தையை வைத்து நதியில் விட்டாள்.  பெட்டி பார்வோனின் குமாரத்தி நதியில் நீராடிக்கொண்டிருந்த இடம் வரை வந்தது.  பார்வோனின் குமாரத்தியுடைய தாதிமார்கள் பெட்டியை திறந்து போது பெட்டிக்குள் அழகிய குழந்தை இருந்தது.  பார்வோனின் குமாரத்தி அதை தன் குழந்தையாக எடுத்து வளர்த்தாள்.  மோசே எகிப்தில் வளர்ந்தான்.

          பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்பதால், ராஜாவிற்கு கொடுக்க வேண்டிய மதிப்பும், மரியாதைகளும் மோசேக்கும் கிடைத்தது.  பார்வோனுக்கு ஒரு குமாரனும் இருந்தான்.  பார்வோன் தன் குமாரனுக்கு என்னென்ன வித்தைகளை கற்றுக்கொடுத்தானோ, அனைத்தையும் மோசேக்கும் கற்றுக்கொடுத்தான்.  மோசேயும் அதை சிறப்பாய் கற்றுக்கொண்டார்.  பார்வோனின் மகனை விட மோசே திறமையாக அனைத்து கலைகளையும் கற்றுக்கொண்டார்.  என்ன தான் அனைத்து திறமைகளும் மோசேயிடம் இருந்தாலும் அவர் அடுத்த பார்வோனாக முடியாது.

          நான் எத்தனை முயற்சி எடுத்தாலும், எவ்வளவு சிறப்பாக அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டாலும் என்னால் அடுத்த பார்வோனாக முடியாது, நான் ஏன் இவகைளை கற்றுக்கொண்டு, என்னை நான் வருத்திக்கொள்ள வேண்டும் என்று மோசே நினைக்கவில்லை.  நான் அரண்மனையில் இருக்கிறேன், பார்வோனுடைய குமாரத்தியின் மகனாக இருக்கிறேன்.  என்னுடைய வேலை பார்வோன் கற்றுக்கொடுக்கிற அனைத்து காரியங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.  இதனால் நான் கற்றுக்கொள்ளுகிறேன் என்று அனைத்ததையும் கற்றுக்கொண்டார்.  அரண்மனையில் தன்னுடைய கடமையை சரியாய் செய்தான்.

அப்போஸ்தலர் 7:22

          மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.

          மோசே வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான் என்று வாசிக்கிறோம்.  ஜனங்களை நியாயம் விசாரிப்பதிலும், சரியாய் தீர்ப்பு கூறுவதிலும், யுத்தத்திலும் மற்ற அனைத்து கலைகளிலும் மோசேயைப்போல சிறந்த நபர் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மோசே மிகசிறப்பாய் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார்.

          நாற்பது ஆண்டுகள் வரை பார்வோனின் மகனைவிட அதிக சிறப்பாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்ட மோசே, தனது நாற்பதாவது வயதில் எகிப்தை விட்டு மீதியான் தேசத்திற்கு ஓடிப்போகிறார்.

          மீதியான் தேசத்தில் என்ன செய்வது, எங்கு தங்குவது என்று தெரியாமல் ஒரு ஊற்றண்டையில் அமர்ந்துகொண்டிருந்தார்.  மீதியான் தேசத்து ஆசாரியனான எத்திரோவின் ஏழு குமாரத்திகள் தங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டும்படியாக ஊற்றண்டைக்கு வந்தார்கள்.  மற்ற ஆட்டு மேய்ப்பர்கள் எத்திரோவின் குமாரத்திகள் தங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டவிடாதபடி தடுத்தார்கள்.  அதைப் பார்த்த மோசே எகிப்தில் தான் கற்றுக்கொண்ட அதிகார திறமையை பயன்படுத்தி எத்திரோவின் ஏழு குமாரத்திகளுக்கு உதவி செய்தான்.

          எத்திரோவின் குமாரத்திகள் மோசே தங்களுக்கு உதவியதை தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள்.  மோசே தன் குமாரத்திகளிடம், உடனே அந்த நபரை அழைத்துவரும்படி கட்டளையிட்டார்.  மோசே எத்திரோவின் வீட்டிற்கு வந்தபோது, எத்திரோ இவர் நம்மோடு இருந்தால் நமக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி, தன்னோடு இருக்கும்படி வேண்டிக்கொண்டார்.  மோசே எத்திரோயோடு இருக்க சம்மதித்தார்.

யாத்திராகமம் 2:21

          மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான்.

          மோசே தன்னோடு இருக்க சம்மதித்ததாள் எத்திரோ தன் குமாரத்திகளில் சிப்போராள் என்பவளை மோசேக்கு மனைவியாக கொடுத்தான்.

          மோசே ஒரு ராஜகுமாரன் என்பதால், அவன் நம்மோடு இருந்தாள் போதும் என்றே அவனை தன்னோடு தங்க வைத்தார்.  மோசேக்கு மூன்று வேலை உணவு கொடுத்து நன்றாக பராமரித்தார்.  மோசே எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டியதில்லை.

          மோசே தன்னுடைய கடமைகளை சரியாய் செய்யக்கூடிய ஒரு நபர்.  அரண்மடையில் ஒரு நாளும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து வேலை செய்த நபர்.  எத்திரோவின் வீட்டிலும் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்று நினைத்து, எத்திரோவின் ஆடுகளை மேய்க்க துவங்கினார்.  மோசே ஆடுகளை மேய்க்கும்போது ஆடுகளை என் குமாரத்திகள் பார்த்துக்கொள்வார்கள், நீங்கள் ஓய்வெடுங்கள் என்ற எத்திரோ சொல்லியிருப்பார்.  மோசே ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்பதற்காக ஆடுகளை மேய்க்கும்படி வனாந்திரத்திற்கு புறப்பட்டார்.

யாத்திராகமம் 3:1

          மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான்.

          மோசேயிடம் காணப்பட்ட நல்ல குணத்தை நாம் கவனிக்க முடியும்.  அரண்மனையில் அவர் எந்த வேலையையும் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.  எகிப்தியருடைய வித்தையையும், சாஸ்திரங்களையும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  அவைகளை நான் எவ்வளவு சிறப்பாக கற்றுக்கொண்டாலும் நான் எகிப்தின் ராஜாவாக முடியாது என்று மோசேக்கு நன்றாகவே தெரியும்.  இருப்பினும் மோசே அரண்மனையில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்ய வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் சிறப்பாய் செய்தார்.

          மீதியான் தேசத்திலும் அவர் எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை.  எத்திரோ அவன் ஒரு ராஜாகுளத்தான் என்பதால் அவனை மிகவும் சிறப்பாய் கவனித்து வந்தான்.  மோசேயின் உடை அமைப்பை வைத்தே, அவன் ராஜாகுளத்தை சார்ந்தவன் என்பதை எத்திரோ அறிந்திருப்பார்.

          அரண்மனையில் ராஜாவுக்குறிய அனைத்து கலைகளையும் மிகச்சிறப்பாய் கற்றுக்கொண்ட மோசே, மீதியான் தேசத்தில் வந்ததும் சிறிதும் தயங்காமல் ஆடுகளை மேய்க்க துவங்கினார்.  நான் எங்கு இருந்தாலும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருப்பேன் என்பதில் மோசே உறுதியாய் இருந்தார்.

          நாம் வேலை செய்கிறவர்களாக இருக்கிறோமா? மோசேயைப்போல ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வேலையை நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும்.  அது சின்ன வேலையாக இருந்தாலும், பெரிய வேலையாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் நாம் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

1 தீமோத்தேயு 5:18

          …வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்…

          என் கணவன் வேலை செய்கிறான் நன்றாக சம்பாதிக்கிறான் நான் எதற்காக வேலை செய்ய வேண்டும் என்று மனைவிகள் நினைக்க கூடாது.  ஏதாவது வேலையை நாம் செய்துதான் ஆக வேண்டும்.  அதைத்தான் ஆண்டவர் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

யாத்திராகமம் 20:9

          ஆறுநாளும் நீ வேலை செய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.

          ஆறுநாளும் நீ முடிந்தால் வேலை செய் என்று ஆண்டவர் சொல்லவில்லை.  ஆறுநாளும் நீ வேலை செய்ய வேண்டும் என்றே ஆண்டவர் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

          என் மனைவி நன்றாக சம்பாதிக்கிறாள் நான் ஏன் வேலை செய்ய வேண்டும் என்று கணவன்களும் நினைக்க கூடாது.  எனது பெற்றோர் நன்றாக சம்பாதிக்கிறார்கள் நான் ஏன் வேலை செய்ய வேண்டும் என்று வாலிப பிள்ளைகள் நினைக்க கூடாது.  ஏதாவது வேலையை நாம் செய்ய வேண்டும்.

          பள்ளிக் கல்லூரி படிக்கக்கூடியவர்கள் ஒவ்வொரு நாளும் ஆசிரியர் நடத்துகிற பாடங்களை படிக்க வேண்டும்.  படிப்பது மட்டுமே நம்முடைய வேலை.  அநேகர் படிப்பை தவிற மற்ற அனைத்து காரியங்களையும் செய்கிறார்கள்.  ஒவ்வொரு நாளும் நாம் படிக்க வேண்டும்.

          ஒவ்வொரு நாளும் மூன்று வேலை உணவு சாப்பிடுகிறோம்.  இந்த உணவிற்கு தேவையான வேலையை நான் செய்திருக்கிறேனா? என்று தினமும் நம்மை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

          அநேக இளைஞர்கள் வேலை கிடைக்கவில்லை என்று சொல்லுகிறார்கள்.  தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்க வேலை கிடைக்கவில்லை என்றால், எப்படி வடமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் இளைஞர்களுக்கு மாத்திராம் வேலை கிடைக்கிறது.

          வேலை கிடைக்கவில்லை என்பதை விட, நாம் வேலையை தேடவில்லை என்பதே உண்மை.  மோசேயிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் ஒவ்வொரு நாளும் நாம் வேலை செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.

 

2. உண்மையாய் இருந்த மோசே:

எண்ணாகமம் 12:7

          என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.

          மோசேயிடம் காணப்பட்ட இரண்டாவது சிறந்த குணம் உண்மையுள்ளவனாக இருந்தார்.  ஆண்டவர் வேறு யாரைக்குறித்து இந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை.  மோசேயைப் பார்த்து, ஆண்டவர் என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் என்று சொல்லுகிறார். எல்லா காரியங்களிலும் மோசே உண்மையுள்ளவராகவே இருந்தார்.

நீதிமொழிகள் 28:20

          உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்.

          மோசேயைப்போல நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா?.  கணவன் மனைவிக்கு உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும்.  மனைவி கணவனுக்கு உண்மையுள்ளவளாக இருக்க வேண்டும்.  அதையே ஆண்டவரும் விரும்புகிறார்.  நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கும்போது பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

3. கீழ்ப்படிந்த மோசே:

          மோசே ஆண்டவருடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தார்.

          மோசே நாற்பது வயது முதல் என்பது வயது வரை எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தார்.  என்பதாவது வயதில் மோசேயை ஆண்டவர் அழைத்தார்.  மோசேயை ஆண்டவர் அழைத்த நாள் முதல் தன் வாழ்நாளில் கடைசி வரையிலும் மோசே ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தே நடந்தார்.

          ஆண்டவர் கோலை கீழே போடு என்று சொன்னதும் போட்டார், மீண்டும் கையில் எடு என்று சொன்னபோது எடுத்தார், கோலைக்கொண்டு நயில்நதியில் அடி என்று ஆ்ண்டவர் சொன்னபோது மோசே நீட்டினார், கோலை எகிப்தின் மேல் நீட்டு என்று ஆண்டவர் சொன்னபோது நீட்டினார், கொலை செங்கடலில் அடி என்று ஆண்டவர் சொன்னதுபோது மோசே அடித்தார். 

          இப்படியாக ஆண்டவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் மோசே கீழ்ப்படிந்தார்.  ஆண்டவர் மோசேக்கு அதிகபடியான காரியங்களை அவன் கையில் இருந்த கோலின் மூலமாகவே செய்தார்.

          ஒரு நாள் ஆண்டவர் மோசேயிடம் கன்மலையைப் பார்த்து பேசு.  அப்பொழுது அது உங்கள் அனைவருக்கும் வேண்டிய தண்ணீரை தரும் என்று சொன்னார்.

எண்ணாகமம் 20:8

          8. நீ உன் கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச் செய்து, அவர்கள் கண்களுக்கு முன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்.  அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்….

10. தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்.  உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது….

          ஆண்டவர் மோசேயிடம் கன்மலையை பார்த்து பேசு என்ற சொன்னபோது, மோசே கன்மலையை பார்த்து பேசாமல், தன் முன்செய்துவந்த வழக்கத்தின்படியே கன்மலையை இரண்டு முறை அடித்தார்.  மோசேயின் இந்த சிறிய கீழ்படியாமையினால் ஆண்டவர் மோசேக்கு மிகப்பெரிய தண்டனையை கொடுத்தார்.

          நாற்பது ஆண்டுகளாக கஷ்டத்தின் மத்தியிலும், எதிர்ப்புகளின் மத்தியிலும் அத்துனை இலட்சம் மக்களை எகிப்திலிருந்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்த மோசேக்கு அந்த கானான் தேசத்திற்குள் நுழையும் பாக்கியம் கிடைக்கவில்லை. 

உபாகமம் 32:52

          நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்.  ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்.

          மோசே பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தைப் பார்த்தார்.  ஆனால் அதற்குள்ளாக பிரவேசிக்கவில்லை.  காரணம் மோசேயின் கீழ்ப்படியாமை.

          மோசே பழைய ஏற்பாட்டில் மிக முக்கியமான நபர்.  ஐந்து ஆகமங்களை எழுதியவர்.  வேதாகமத்தை எழுதும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது.  புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து மறுரூபமானபோது அவருக்கு அருகில் மோசேயும், எலியாவும் நின்றார்கள் என்று மத்தேயு 17-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.  பழைய ஏற்பாட்டில் எத்தனையோ பரிசுத்தவான்கள் வாழ்ந்தார்கள்.  ஆனால் எவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.  மோசேக்கு அந்த பாக்கியம் கிடைத்தது.  அவ்வளவு உன்னதமான மனிதர் கீழ்ப்படியாமல் இருந்தபோது ஆண்டவர் அவருக்கு கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை தடுத்தார்.

          நாமும் கூட அநேக நேரங்களில் ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய தவறியிருக்கிறோம்.  நம்முடைய ஆசீர்வாதங்களுக்கு தடையாயிருக்கின்ற காரியம் கீழ்ப்படியாமையே.  நாம் ஆண்டவருடைய வார்த்தைக்கு முழுமையாய் கீழ்ப்படியும்போது ஆண்டவரின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

யாத்திராகமம்  20:8

          ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.



          ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஓய்வுநாளை பரிசுத்தமாய் அனுசரிக்க வேண்டும் என்பது ஆண்டவருடைய பிரதான கட்டளை அந்த கட்டளைக்கு நாம் கீழ்படிகிறோமா?

          ஆண்டவருடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நாம் கீழ்படிந்து நடக்கும்போது அவர் தருகிற நன்மையையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.  கீழ்படிய தவறுவோமானால், அதுவே நம்முடைய ஆசீர்வாதத்தை தடுக்கக்கூடியதாக இருக்கும்.

          மோசேயிடம் காணப்பட்ட சிறப்பு குணங்களைப் பற்றி அறிந்துகொண்டோம்.  தன்னுடைய கடமையை சரியாய் செய்தார், எல்லா நேரத்திலும் உண்மையுள்ளவராக இருந்தார், கீழ்ப்படிந்தார்.  மோசேக்கு கிடைத்த ஆசீர்வாதத்தைப் பாருங்கள்.

மோசேக்கு கிடைத்த ஆசீர்வாதம்:

உபாகமம 34:5,6,7

          5. அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.

          6. அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார்.  இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.

          7. மோசே மரிக்கும்போது நூற்றிருபது வயதாயிருந்தான்.  அவன் கண் இருளடையவுமில்லை.  அவன் பெலன் குறையவுமில்லை.

          மோசே முதிர்வயதில் மரித்தார்.  நூற்று இருபது வயதுவரை அவருடைய கண் இருளடையவும் இல்லை, அவருடைய பெலன் குறையவும் இல்லை.  நூற்று இருபது வயதில் தனி நபராக மலையில் ஏறும் அளவிற்கு மோசேக்கு பெலன் இருந்தது.

          மோசேயை அடக்கம் செய்தவர் ஆண்டவர்.  மோசேயின் எலும்புகளை இந்த நாள் வரை ஒருவரும் கண்டுபிடிக்கமுடியவில்லை.  அப்படிப்பட்ட ஒரு மேலான ஆசீர்வாதத்தை மோசே பெற்றுக்கொண்டார்.

          நாமும் கூட கடமையை சரியாய் செய்து, உண்மையுள்ளவர்களாய் ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கும்போது மோசே பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

          ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வாதிப்பாராக. ஆமென்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.