Type Here to Get Search Results !

சத்துருக்களுக்கு முன் ஆசீர்வாதம் | A blessing before enemies | வாக்குத்தத்த ஆசீர்வாத செய்தி | Tamil Blessing Sermon | Importance of prayer | Jesus Sam

தலைப்பு: சத்துருக்களுக்கு முன் ஆசீர்வாதம்
========================


சங்கீதம் 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

தாவீது அரசனின் வாழ்நாளில் அவருக்கு அநேக சத்துருக்கள் இருந்ததை வேதத்தில் நாம் பார்க்க முடியும். ஆனாலும், அவர்களுடைய கண்களுக்கு முன்பாக தாவீது உயர்த்தப்பட்டாரே தவிர, ஒருபோதும் தாவீது தாழ்ந்து போகவில்லை, ஒருபோதும் தாவீது தோற்றுப்போகவில்லை.

தாவீது சவுலின் மகளை திருமணம் செய்து கொண்டதின் மூலம் சவுலின் குடும்பத்தில் ஒரு நபராக மாறிவிடுகின்றார். தாவீதுக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய சவுல் அரசனே, தாவீதை பல முறை கொலை செய்யும்படியாக விரட்டுகிறார். தாவீதின் மாமா சவுல் தாவீதுக்கு சத்துருவாய் வந்த போதும் கூட தாவீதோடு கர்த்தர் இருந்தபடியினால், தாவீதின் சத்துருக்களுக்கு முன்பாக தாவீது உயர்த்தப்பட்டார். தாவீதின் மகன் அப்சலோம் தாவீதை கொலை செய்யும்படியாக எழும்புகிறார்.  சொந்த வீட்டில் தாவீதுக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலை.  சவுலைப் போன்று, அப்சலோமைப்போன்று அநேகம் சத்துருக்கள் தாவீதுக்கு இருந்தாலும், அவர்களுடைய கண்களுக்கு முன்பாக ஆண்டவர் தாவீதை உயர்த்தி, ஆசீர்வதித்தார்.

தாவீது மாத்திரம் அல்ல, வேதாகமத்தில் அநேக நபர்கள் அவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாகவே உயர்த்தப்பட்டார்கள்.

வேதத்தில் சத்துருக்களுக்கு முன்பாக உயர்த்தப்பட்டது யார்? யார்? தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக அவர்கள் உயர்த்தப்பட அவர்கள் என்ன செய்தார்கள்? ஏன் இவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாக கர்த்தர் இவர்களை உயர்த்தினார் என்று இந்த தொகுப்பில் நாம் தியானிப்போம்.

1. அன்னாள் – பொருத்தனையின் ஜெபம்
அன்னாளின் கணவன் பெயர் எல்க்கானா. எல்க்கானாவுக்கு பெனின்னாள் என்ற இரண்டாம் மனைவியும் இருந்தாள்.

அன்னாளின் எதிரி யார் என்றால் பெனின்னாள். பெனினாள், அன்னாளை தன்னுடைய வார்த்தைகளினால் காயப்படுத்தினாள்.

1 சாமுவேல் 1:6
கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.

இக்கால சமுதாயத்தினரும் ஒருவருக்கு குழந்தை இல்லை என்றால், தங்களுடைய வாயின் வார்த்தைகளினால், அவர்களை காயப்படுத்துகிறார்கள்.

அன்னாளின் கணவனாகிய எல்க்கானாவும் ஒரு சிறந்த மனிதன் அல்ல.
1 சாமுவேல் 1:5
அன்னாளை சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்.

1 சாமுவேல் 1:8
அவள் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான்.

இந்த வசனங்களை பார்க்கும்போது, உண்மையில் எல்க்கானா நல்ல மனிதன் போல் தெரியும். ஆனால் உண்மை என்னவென்றால், எல்க்கானாவின் முதல் மனைவி தான் அன்னாள். இரண்டாம் மனைவி பெனின்னாள்.

1 சாமுவேல் 1:2அ
அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒருத்திபேர் அன்னாள், மற்றவள் பேர் பெனின்னாள்.

எல்க்கானா உண்மையிலேயே அன்னாளை நேசித்திருப்பாரானால், தன் மனைவியிடம் சொன்னதுபோல, பத்து குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகம் அல்லவா என்று உண்மையாய் சொல்லுவாரானால், இவர் மறுமணம் செய்திருக்க மாட்டார்.

பழமொழி:
    பிள்ளையையும் கிள்ளிவிட்டு,
    தொட்டிலையும் ஆட்டுவார்களாம்

இந்த எல்க்கானா பெனின்னாளோடு சந்தோஷமாக வாழ்ந்துகொண்டு, அன்னாளை நேசிப்பதுபோல ஆசை வார்த்தைகளை பேசி வந்தான். பெனினாலுக்கு குமாரரும், குமாரத்திகளும் இருந்ததாக வேதத்தில் வாசிக்கிறோம். (1 சாமுவேல் 1:4)

1 சாமுவேல் 1:7
அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான். இவள் அவளை மனமடிவாக்குவாள். அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.

இந்த வசனத்தின் மூலமாக நாம் ஒரு காரியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அன்னாளும், பெனின்னாளும் ஒரே வீட்டில் வாழவில்லை. அவர்களுடைய கணவன் எல்க்கானா வருஷத்திற்கு ஒரு முறை சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு சென்று பலிசெலுத்துவான். அந்த நாளில் மாத்திரமே இரண்டு மனைவிகளையும், பெனின்னாளின் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போவான். அந்த நேரத்தில் தான் பெனின்னாள் அன்னாளை விசனப்படுத்துவாள். எனவே அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள் என்று வாசிக்கிறோம்.

உண்மையில் எல்க்கானா அன்னாளை நேசித்திருப்பாரானால், பெனின்னாள் அன்னாளை விசனப்படுத்தும்போது, பெனின்னாளை அதட்டியிருக்கலாம். ஆனால் எல்க்கானா அப்படி செய்ததாக வேதத்தில் இல்லை.

1 சாமுவேல் 1:22,23அ
22. அன்னாள்: பிள்ளை பால் மறந்தபின்பு, அவள் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய் விடுவேன் என்று தன் புருஷனிடத்தில் சொன்னாள்.
23. அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன் இஷ்டப்படி செய்து,

இங்கே எல்க்கானா ஒரு ஆறுதலுக்காகவாவது, நீ மிகவும் எதிர்பார்த்தது ஒரு குழந்தையைத்தானே, அவன் பிறந்துவிட்டான். இனி நாம் சந்தோஷமாக இருக்கலாமே என்று சொல்லியிருக்கலாம். ஒரு பத்து வயது வரை அவனை வளர்த்து விட்டு, பின்பு ஆலயத்தில் விடலாம் என்று சொல்லியிருக்கலாம். அங்கே எல்க்கானா உன் இஷ்டப்படி செய் என்று செல்லுவதை நாம் பார்க்க முடியும்.

அன்னாள் செய்த காரியம்
தன் சக்களத்தியின் வார்த்தைகளால் மிகவும் காயப்பட்ட அன்னாள், தன் கணவனிடம் சரியான ஆறுதல் கிடைக்காத அன்னாள், அவர்களை பழிவாங்க வேண்டும் என்று தவறான முடிவு எடுக்கவில்லை.

ஒருவேலை அன்னாள் தன் சக்களத்தியை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து, ஜோசியர்களையும், மந்திர மாந்திரங்களை செய்பவர்களையும் தேடிச் சென்றிருப்பாரானால், நாம் இன்றைக்கு அன்னாளைக் குறித்து தியானித்திருக்க முடியாது. அன்னாள் ஒரு சரியான காரியத்தை செய்தாள்.

ஜெபம்
1 சாமுவேல் 1:10
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

அன்னாள் செய்த ஒரே காரியம், தன் இருதயத்தின் வேதனையை கர்த்தரிடத்தில் தெரிவித்தாள்.

நமக்கு ஆறுதல் கிடைக்கும் ஒரே இடம் ஆண்டவருடைய பாதம் மாத்திரமே. நம்முடைய கவலைகளை, துக்கங்களை, வியாகுலத்தை உலக மனிதர்களிடத்தில் சொல்லி, அவர்கள் நமக்கு ஆறுதல் வார்த்தைகளை சொல்லுவார்கள் என்று நாம் நினைக்கிறோம். மெய்யான ஆறுதல், மெய்யான விடுதலை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் மாத்திரமே கொடுக்க முடியும்.

பொருத்தனையின் ஜெபம்
1 சாமுவேல் 1:11
சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன். அவன் தலையில் சவரகன் கத்தி படுவதில்லை் என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.

அன்னாளின் ஜெபத்தைக் கேட்ட கர்த்தர் அன்னாளின் ஜெபத்திற்கு பதில் கொடுத்தார்.

1 சாமுவேல் 1:20
சில நாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.

அன்னாளிடத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால், தன்னுடைய சத்துருக்களை அவள் பழிவாங்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆண்டவருடைய பாதத்தில் அமர்ந்து பொருத்தனையோடு ஜெபித்தாள். ஏற்ற நேரத்தில் ஒரு அழகான ஆண் குமாரனை கர்த்தர் அன்னாளுக்குக் கொடுத்தார்.

ரோமர் 12:19
பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நமக்கு விரோதமாய் செயல்படுகிறவர்களுக்கு பதில் செய்கிறவர் நாம் அல்ல, கர்த்தரே பதில் செய்வார். எனக்கு விரோதமாய் செயல்படுகிறவர்களுக்கு நானே பதில் செய்வேனேயானால், அங்கே கர்த்தரால் கிரியை செய்ய முடியாது.

கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதம்:
1 சாமுவேல் 2:21அ
அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார். அவன் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்.

அன்னாளுடைய பொருத்தனையின் ஜெபத்தைக் கேட்ட ஆண்டவர், ஒரு குழந்தையை அல்ல ஆறு குழந்தையைக் கொடுத்து அன்னாளை உயர்த்தினார். 

யோவான் 16:20
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

தாவீது பக்தனைப் போல அன்னாளாலும் கர்த்தர் என் சத்துருக்களுக்கு முன்பாக என்னுடைய தலையை உயர்த்தினார் என்று சொல்ல முடியும்,

1 சாமுவேல் 2:1
என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது. என் பகைஞர்களின்மேல் என் வாய் திறந்திருக்கிறது.

அன்னாளை சத்துருக்கள் முன்னிலையில் உயர்த்தி ஆசீர்வதித்த ஆண்டவர் நம்மையும் உயர்த்தி ஆசீர்வதிக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார். அன்னாளைப்போல நாமும் பொருத்தனையோடு ஜெபிக்க வேண்டும்.


2. யாக்கோபு – போராடி ஜெபித்தார்
கானான் தேசத்திலே வாழ்ந்து கொண்டிருந்த யாக்கோபு, தன் தாய் தகப்பனின் வார்த்தைக்கு இணங்க, பதான் ஆராம் என்னும் தேசத்தில் வாழ்ந்து வந்த தன் மாமனாகிய லாபானின் வீட்டிற்கு புறப்பட்டார்.

லாபான் ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வந்தவர். யாக்கோபும், தன் மாமாவின் ஆட்டு மேய்ப்பர்களோடு ஆடுகளை மேய்த்து வந்தார்.

யாக்கோபு பதான் ஆராமில் தன் மாமாவின் வீட்டில் 20 ஆண்டுகள் வாசம்பண்ணினார்.

ஆதியாகமம் 31:41
இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன். பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்.

பதினான்கு வருஷம் தன் மாமாவின் மகளை திருமணம் செய்வதற்காக யாக்கோபு வேலை செய்தார். ஆறு ஆண்டுகள் தன் வருமானத்திற்காக வேலை செய்தார்.

கர்த்தர் யாக்கோபோடு இருந்ததினால், அந்த ஆறு வருஷத்தில் சேர்த்த செல்வம் மிகவும் பெரியது. மிகப்பெரிய செல்வச் சீமானாக மாறினார் யாக்கோபு.

தன் செல்வங்கள் அனைத்தையும், தன் மனைவி பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு தன் சொந்த ஊரான கானான் தேசம் செல்ல புறப்பட்டார் யாக்கோபு.

பதாம் ஆராமிலிருந்து புறப்பட்ட யாக்கோபுக்கு, தன் ஊருக்கு அருகில் வரும்போது, தன்னால் ஏமாற்றப்பட்ட தன் அண்ணன் இன்னும் கோபத்தில் இருப்பாரோ என்று யோசித்தார். இருபது ஆண்டுகள் கடந்திருந்தாலும், ஒருவேலை என் அண்ணன் என் மீது கோபமாக இருப்பாரா என்று அறியும்படி, தன் வேலையாட்கள் இருபதுபேரை, தன் அண்ணனிடத்திற்கு அனுப்பி, யாக்கோபு வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லச்சொன்னார்.

ஏசாவை சந்தித்த வேலையாட்கள் யாக்கோபிடம் மறுமொழியாக சொன்னது என்னவென்றால்:
ஆதியாகமம் 32:6
அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய் வந்தோம். அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.

ஏசாயா 400 பேரோடு வருகிறான் என்ற செய்தியைக் கேட்ட உடனேயே யாக்கோபு வாருங்கள் யுத்தத்திற்கு தயாராவோம் என்று சொல்லவில்லை. யாக்கோபு சாதாரண மனிதன் அல்ல. அவனிடத்திலே ஏராளமான வேலையாட்கள் இருந்தார்கள். மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தான்.

நாம் ஒருவருக்கு பரிசு பொருள் கொடுப்போமானால், நம்முடைய சொத்தை விற்று பரிசு பொருள் கொடுக்க மாட்டோம். நம்மிடத்தில் இருப்பதில் ஏதேனும் சிறந்த ஒரு பொருளை கொடுப்போம். தன் சகோதரனாகிய ஏசாவுக்கு யாக்கோபு கொடுத்த பரிசு பொருள் என்னவென்றால்:

ஆதியாகமம் 32:14,15
14. இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும்,
15. பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும், இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து,

யாக்கோபு ஏசாவிற்கு பரிசு பொருட்களாக கொடுத்த காணிக்கை இவ்வளவு என்றால், அவனிடம் உள்ள மொத்த செல்வம் எவ்வளவாக இருக்கும், அதை பராமரிக்க எவ்வளவு வேலையாட்கள் இருப்பார்கள் என்று நாம் யோசிக்க வேண்டும்.

தன்னோடு பிறந்து, வளர்ந்த தன் சகோதரன் ஏசா தனக்கு எதிராக வந்தபோது, யாக்கோபு அவனோடு யுத்தத்திற்கு செல்லவில்லை, மாறாக ஆண்டவருடைய சமுகத்தில் காத்திருந்து மன்றாடி ஜெபிக்கிறார்.

இந்த நாட்களிலும் சகோதரர்களுக்கிடையே சண்டைகள் பிச்சனைகள் வருவதுண்டு. (எ.கா: சொத்து பிரச்சனை)

பெரும்பாளும் சகோதரர்களுக்குள்ளே சண்டைகள் உருவாக காரணமாய் இருப்பது எது? காரணமாய் இருப்பது யார்?

எது காரணம் என்று கேட்டால் நாம் உடனேயே சொத்து பிரச்சனை தான் காரணம் என்று சொல்லிவிடுவோம். யார் காரணம் என்று கேட்டாள் நம்மிடம் பதில் இல்லை.

அண்ணன் தம்பி சிறு வயதாய் இருக்கும்போது, சின்ன சின்ன காரியங்களுக்கு சண்டையிடுவது உண்டு. சண்டை முடிந்த சில மனித்துளிகளில் இருவரும் சந்தோஷமாக விளையாட துவங்கிவிடுவார்கள்.

அதைப்போலவே, அவர்கள் பெரியவர்களாக மாறிய பிறகு, சண்டைகள் வருவது உண்டு. பெரியவர்களாக வளர்ந்து விட்டதால், சண்டைகள் பெரிய பெரிய காரணங்களுக்காகத்தான் இருக்கும். சிறுவயதில் உடனே சமாதானமான அவர்களால் ஏன், பெரியவர்களான பின்பு உடனே சமாதானமாக முடியிவில்லை.

காரணம் என்னவென்றால், அவர்கள் சமாதானமாக வேண்டும் என்று நினைத்தாலும், அவர்களுடைய மனைவிமார்கள் அவர்களை சமாதானமாக்க விடுவதில்லை.

ஒரு நிகழ்வு:
ஒரு தகப்பனுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். இருவருக்கும் திருமணமான பின்பு, தகப்பனார் இருவருக்குமான நிலங்களை பிரித்துக் கொடுக்கிறார். அண்ணனை விட தம்பிக்கு ஒரு அடி நிலம் கூடுதலாக சென்று விட்டது. அண்ணனுடைய மனதில் சிறு கஷ்டம் இருந்தாலும், அதை யார் எடுத்துள்ளார் என் தம்பிதானே எடுத்துள்ளான் என்று தன் மனதை தேற்றிக்கொண்டு வீட்டிற்கு வருவார்.

வீட்டிலே உக்கிரக் கோபத்தோடு மனைவி அமர்ந்திருப்பாள். அண்ணன் வீட்டிற்கு வந்ததும், ஏன் முழு சொத்தையும் தம்பி பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டியது தானே. உன்னைப்போல ஒரு கோலை யாரும் இருக்க முடியாது. இப்படி சொத்த யாருக்கோ விட்டுவிட்டு வந்துவிட்டாயே என்று தகாத வார்த்தைகளை சொல்லி பேசுவாள்.

இதற்கு பின்பு சகோதரர்களுக்கு இடையே சமாதானம் உண்டாகுமா? நிச்சயம் இல்லை. இப்படி சகோதரர்களின் உறவை பிரித்து, அதன் மூலமாக சந்தோஷம் காண்பதில் மனைவிமாருக்கு எந்த ஆனந்தமோ தெரியவில்லை.

தாத்தா:
சமீபத்தில் ஒரு முதியவரின் தம்பி மரித்துப்போனார். அந்த முதியவரும் அந்த முதியவரின் தம்பியும் அநேக நாட்களாக பேசுவது இல்லை?

அதற்கு காரணம் என்னவென்றால், அவர்களின் மனைவிமார்கள். தன் தம்பி மரித்துப்போய்விட்டான். தன் தம்பியை அண்ணனால் பார்க்கக்கூட முடியவில்லை.

தம்பியின் மனைவி அண்ணனை பார்க்கக்கூட விடவில்லை. என் சகோதரனின் சரீரத்தைக் கூட என்னால் பார்க்கமுடியவில்லையே என்று மிகவும் வேதனைப் பட்டு அழுதார் அண்ணன்.

குடும்பங்களிலே சகோதரர்களுக்கு இடையே, பிரச்சனைகள் கருத்துவேறுபாடுகள் ஏற்படுகின்றபோது, நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம், ஜெபம் மாத்திரமே.

யாக்கோபு தன் சகோதரனோடு போராடி அவனை தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. யாக்கோபின் மனைவிமாரும் அப்படிப்பட்ட ஆலோசனையை அவருக்குக் கொடுக்கவில்லை. யாக்கோபு தன் சகோதரரோடு போராட நினைக்காமல், கர்த்தரோடு போராடினார்.

ஆதியாகமம் 32:26,28
26. அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
28. அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும். தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.

தன் சகோதரன் ஏசா தனக்கு விரோதமாய் வந்தபோது யாக்கோபு ஆண்டவருடைய சமுகத்தில் போராடி ஜெபித்தார்.

பதில்:
ஆதியாகமம் 33:4
அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடி வந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். இருவரும் அழுதார்கள்.

யாக்கோபின் போராட்ட ஜெபம், சகோதரர்களுக்கிடையே சமாதானத்தை, ஐக்கியத்தை உண்டுபண்ணியது.

நான் எத்தனை முறை சொன்னாலும் என் சகோதரன் புரிந்துகொள்வதில்லை. நாம் சமாதானமாக இருப்போம் என்று சொன்னாலும், அவன் எனக்கு எதிராலியைப் போலவே தான் செயல்படுகிறான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இதற்கு ஒரே தீர்வு போராட்டமான ஜெபம் மாத்திரமே.

யாக்கோபைப்போல நாமும் போராடி ஜெபிக்கும்போது, நமக்கு விரோதமாய் எழும்ப நினைக்கிற உறவுகளையும் நாம் சமாதானப்படுத்த முடியும்.


3. எஸ்தர், மொர்தெகாய் – உபவாசித்து ஜெபித்தார்கள்
இஸ்ரவேலின் முதல் அரசன் சவுல், இரண்டாவது அரசன் தாவீது. இப்படியாக 23 அரசர்கள் எருசலேமை ஆட்சி செய்தார்கள். 23-வது அரசன் சிதேக்கியா. இவன் ஆண்டவருடைய பார்வைக்கு பொல்லாதவைகளை செய்தபடியினால், கர்த்தர் எருசலேமை பாபிலோனியர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.

கி.மு 586-ம் வரும் எரேமியாவின் நாட்களில் நேபுகாத்நேச்சார் எருசலேமை முற்றுகையிட்டு அதை அழித்து, அனைத்து ஜனங்களையும் அடிமைகளாக இழுத்துச் சென்றார்.

நேபுகாத்நேச்சார் யூதா ஜனங்களை அடிமையாக இழுத்துச் செல்வார் என்றும், 70 ஆண்டுகளுக்கு பின்பு அவர்கள் மீண்டும் யூதா தேசத்திற்கு வருவார்கள் என்றும் எரேமியா தீர்க்கனால் தீர்க்கததரிசனம் உரைக்கப்பட்டது.

சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு கோரேஸ் ராஜாவின் உள்ளத்தில் ஆண்டவர் பேசினதின் விளைவாக யார்? யார்? எருசலேம் தேவாலயம் கட்டுவதற்காக எருசலேம் செல்லவேண்டுமோ நீங்கள் செல்லலாம் என்று கட்டளை பிறந்தது. செருபாபேலின் தலைமையில் கி.மு 536-ம் ஆண்டு எருசலேம் தேவாலயத்தைக் கட்டுவதற்காக ஒரு ஜனக்கூட்டம் பாபிலோனிலிருந்து எருசலேமிற்கு வந்தது.

பின்பு எழுபது ஆண்டுகளுக்கு பின்பு ஆண்டவர் தீர்க்கதரிசனம் உரைத்தபடியே கி.பி 516-ம் ஆண்டு எஸ்றாவின் தலைமையில் திரளான ஜனங்கள் எருசலேமிற்கு திரும்பினார்கள்.

இப்பொழுது எல்லா ஜனங்களும் எருசலேமிற்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்களில் சிலர் பாபிலோனிலேயே தங்கிவிட்டார்கள்.

அவர்களுக்கு பாபிலோன் தேசத்திலே நல்ல வேலைவாய்ப்பும், வசதிகளும் இருந்ததால், தங்கள் சொந்த தேசத்தையும், ஆண்டவரையும் மறந்து பாபிலோனில் வாழ துவங்கினார்கள்.

அந்த நாட்களில் தான் ஆண்டவர் ஆமான் என்ற ஒரு எத்தனை எழும்பப்பண்ணினார். ஆமான் யூதர்கள் அனைவரையும் அழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினான்.

ஆமானின் இந்த காரியத்தைக் கேள்விப்பட்ட யூதர்கள் அனைவரும், ஆமானுக்கு விரோதமாக செயல்படவில்லை. போரிட்டு ஆமானை தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக ஆண்டவருடைய பாதத்தில் அமர்ந்து உபவாசித்து ஜெபித்தார்கள்.

எஸ்தர் 4:16அ,17
16. நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச் செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபாசம்பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்.
17. அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.

ஆமான் யூதர்களை அழிக்க நினைத்த காரணம் என்னவென்றால், மொர்தெகாய் என்னை வணங்கவில்லை என்பது மாத்திரமே. இந்த சாதாரண காரியத்திற்காக ஆமான் முழு யூதர்களையும் கொலைசெய்யும்படி வகைதேடினார்.

ஆனால், யூதா ஜனங்கள் மூன்று நாள் உபவாசத்தோடு ஆண்டவரிடத்திலே மன்றாடி ஜெபித்ததின் விளைவாக, ஆண்டவர் மிகப்பெரிய அற்புதத்தை அங்கே செய்கிறதை நாம் பார்க்கின்றோம்.

எஸ்தர் 9:1ஆ
யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே. அந்த நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.

யூதர்களின் ஜெபத்தைக் கேட்ட ஆண்டவர். யார் யூதர்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அவர்கள் எல்லோரும் அழிந்துபோகும்படி செய்தார்.

நாமும் எஸ்தர், மொர்தெகாய், யூதர்களைப் போல நமக்கு விரோதமாய் வருகிறவர்களோடு எதிர்த்து போடிராதபடி உபவாசத்தோடு ஜெபிக்கும்போது, ஆண்டவருடைய பாதத்தில் காத்திருந்து மன்றாடும்போது ஆண்டவர் நம்முடைய சூழ்நிலைகளை மாற்ற வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.


தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக, தங்கள் எதிரிகளுக்கு முன்பாக ஆசீர்வாதம் அடைத்தவர்களைக் குறித்து அறிந்து கொண்டோம். வேதத்தில் வாழ்ந்த பரிசுத்தவான்கள் தங்கள் எதிரிகளுக்கு முன்பாக, தங்களை பகைத்தவர்களுக்கு முன்பாக ஆசீர்வாத்தை, உயர்வைப் பெற்றுக்கொள்ள ஜெபிக்கிறவர்களாக இருந்தார்கள் என்று பார்த்தோம்.

    அன்னாள் பொருத்தனையோடு ஜெபித்தாள்.
    யாக்கோபு போராடி ஜெபித்தார்.
    எஸ்தர் உபவாசத்தோடு ஜெபித்தாள்.

நம்முடைய ஜெபவாழ்வில் மாற்றம் காணப்பட வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். அன்னாளைப்போல, யாக்கோபைப் போல, எஸ்தர், மொர்தெகாய், யூதா ஜனங்களைப் போல நம்முடைய ஜெப வாழ்விலும் மாற்றம் காணப்பட வேண்டும். பொருத்தனையோடு ஜெபிக்க, போராடி ஜெபிக்க, உபவாசித்து ஜெபிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

நம்முடைய ஜெப வாழ்விலே மாற்றம் ஏற்படும்போது, நம்முடைய உயர்வைத் தடுக்க நினைக்கிறவர்கள், நம்முடைய ஆசீர்வாத்தை தடுக்க நினைக்கிறவர்கள் மத்தியில் ஆண்டவர் நம்மை உயர்த்த இடத்தில் வைத்து அழகு பார்க்க வல்மையுள்ளவராய் இருக்கிறார்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்….!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.