Type Here to Get Search Results !

இயேசுவின் இரத்தத்தின் இரகசியம் பாகம் 1 | Blood of JESUS Part 1 | bible study plan in tamil | jesus sam

=================
இயேசுவின் இரத்தத்தின் இரகசியம் (பாகம் 1)
Blood of JESUS
=================



இரத்தம்:
நம்மில் அநேகருக்கு இரத்தத்தைப் பார்த்தால் பயம். அநேகர் இரத்தத்தைப் பார்க்க விரும்புவதில்லை. யாருக்கேனும் விபத்து ஏற்பட்டு, அவர்கள் சரீரத்திலிருந்து இரத்தம் வருமாயின் நாம் பயந்து விடுகிறோம்.

சில நேரங்களில் நமக்கு ஏதேனும் காயம் ஏற்படும்போது, இரத்தம் வரவில்லை என்றால், நல்லவேளை இரத்தம் வரவில்லை என்று நாம் சொல்லுகிறோம்.

நம்முடைய சரீரத்தில் இரத்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தத்தில் அநேக வகைகள் உண்டு. (Ex: A+, B+, O-, O+etc…)

வேறு ஒரு மனிதனுடைய இரத்தத்தை நம்முடைய சரீரத்தில் செலுத்த வேண்டுமானால், எந்த நபரிடமிருந்து நாம் இரத்தம் வாங்குகிறோமோ, அந்த நபரின் இரத்த வகையும், நம்முடைய இரத்த வகையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும்.

இந்த தொகுப்பில் நாம் இயேசுவின் இரத்தத்தைக் குறித்து அறிந்துகொள்ள இருக்கிறோம். இயேசுவின் இரத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன? இயேசு தன்னுடைய இரத்தத்தை சிந்தினாரே, அதன் முக்கியத்துவம் என்ன? இயேசுவின் இரத்தம் நம்முடைய வாழ்வில் எந்த விதத்தில் தொடர்புபடுகிறது? இவற்றைக் குறித்து தெளிவாக அறிந்து கொள்வோம்.

இயேசுவின் இரத்தத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் முன்பாக, இரத்தத்தைப் பற்றிய சில தெளிவான விவரங்களை அறிந்துகொள்வோம்.

ஒரு மனிதனுடைய சரீரத்தில் குறிப்பிட்ட அளவு இரத்தம் இல்லை என்றால், அவன் மரித்துவிடுவான் என்பது மருத்து அறிஞர்கள் கூற்று. ஒரு மனிதன் உயிரோடு வாழ்வதற்கு, அந்த மனிதனுக்குள் இரத்தம் இருந்தே ஆகவேண்டும்.

மனிதனுடைய உயிர் எங்கே இருக்கிறது என்று அநேகருக்கு தெரிவதில்லை. ஆனால், மனிதனுடைய உயிர் எங்கே இருக்கிறது என்று வேதம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

லேவியராகமம் 17:11
    மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது.

நம்முடைய உயிர் இரத்தத்தில் இருக்கிறது என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஆண்டவர் சொன்னார் என்றால், அது தான் உண்மை. ஏனென்றால், அவர் தான் மனுஷனை உண்டாக்கினார்.

உலகத்தில் எவ்வளவு பெரிய மருத்துவ விஞ்ஞானி வந்து, இல்லை இல்லை மனிதனின் உயிர் இரத்தத்தில் இல்லை என்று சொன்னாலும், அது உண்மை ஆகாது.

ஆண்டவர் மண்ணை எடுத்து ஆதாமை வரைந்தார். பின்பு, அந்த மண்ணுக்குள் தன்னுடைய சுவாசத்தை ஊதினார். அந்த நேரத்தில் அந்த சரீரத்திற்குள் இரத்தம் உருவாக்கப்பட்டது. இது நமக்கு புரிகிறதோ இல்லையோ, ஆதாமுக்கு இது தெரிந்ததோ இல்லையோ, இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த பிசாசுக்கு இது நன்றாகத் தெரியும்.

காயீன் ஆபேலை கொலை செய்த பிறகு, ஆண்டவர் காயீனிடம் வந்து, உன் சகோதரன் எங்கே என்று கேட்டார். அதற்கு காயீன்: என் சகோதரனுக்கு நான் காவலாளியோ? என்று கேட்கிறான். அதற்கு ஆண்டவர்: அவனுடைய இரத்தம் என்னிடத்தில் கூக்குரலிடுகிறது என்று சொல்லுகிறார்.

பிசாசு ஆபேல் என்பவனுடைய இரத்தத்தை சிந்த காயீனைப் பயன்படுத்தினான். இந்த உலகத்தில் முதல் முதல் ஏற்பட்ட மனித மரணம், இரத்தம் சிந்துதளினால் ஏற்பட்டது.

ஒவ்வொரு மனிதனும் தாயின் கருவில் உருவாகிறான். ஆணின் கருவும், பெண்ணின் முட்டையும் இணைந்து கரு உருவாகிறது. சுமார் ஒன்பது மாதமும், பதினைந்து நாட்களும், தாயின் வயிற்றிலே கரு வளருகின்றது. அந்த நாட்களில் அந்த குழந்தைக்கு தேவையான உணவு, காற்று, தண்ணீர் இவை அனைத்தும் தாயின் மூலமாக மட்டுமே குழந்தைக்கு கிடைக்கிறது. தாயின் தொப்புள் கொடி மூலமாகவே அனைத்தும் குழந்தைக்கு கிடைக்கிறது. இன்னும் ஆழமாய் சொல்ல வேண்டுமானால், தாயின் இரத்தம் மூலமாகவே குழந்தை ஒன்பது மாதமும், 15 நாட்களும் வளர்க்கப்படுகிறது, போஷிக்கப்படுகிறது, காப்பாற்றப்படுகிறது.

ஆனால் அந்த தாயின் இரத்தம் பிள்ளைக்குள் செல்வதில்லை. அந்த குழந்தைக்குள் எப்படி இரத்தம் உருவாகிறது என்றால், ஆணின் அணு பெண்ணின் கருவோடு இணையும் அந்த நேரத்தில் அந்த கருவுக்குள் இரத்தம் உருவாக்கப்படுகிறது. ஒரு ஆணின் மூலமாகவே குழந்தைக்குள் இரத்தம் உருவாகிறது.

ஒரு ஆணின் அணு பெண்ணின் முட்டையை அடையும்போது, ஆணின் அணு இரத்தம் உருவாவதற்கான ஒரு தூண்டுதலை மாத்திரமே செய்கிறது. அந்த நேரத்தில் குழந்தைக்குள் இரத்தம் உருவாக்கிறது. அப்படியானால், ஒரு குழந்தைக்குள் இரத்தத்தைக் கொடுக்கிறவர் ஆண்டவர்.

கருவுக்குள் ஆண்டவரால் இரத்தம் உருவாக்கப்படுகிறது. எனவே தான், தகப்பனின் இரத்தம் B- என்றும், தாயின் இரத்தம் O+ என்றும் இருந்தாலும், குழந்தைக்கு A+ என்ற வகை இரத்தம் இருக்கலாம். கருவுக்குள் இரத்தத்தைக் கொடுக்கிறவர் ஆண்டவர் என்றபடியினால், அந்த தாயின் இரத்த வகையும் இல்லாமல், தகப்பனின் இரத்த வகையும் இல்லாமல், புதிய ஒரு இரத்த வகை கருவுக்குள் உருவாக்கிறது.

ஆனால் தகப்பனின் உந்துதளினால், அந்த பிள்ளைக்குள் இரத்தம் உருவாகின்றபடியினால், அந்த தகப்பன் பாவியாக இருக்கும்போது, பிள்ளையும் பாவியாகத்தான் இருக்கும்.

உலகத்தில் முதல் மனிதன் ஆதாம். ஆதாம் பாவம் செய்தபடியினால், ஆதாமின் இரத்தத்தின் மூலமாக உலகில் உள்ள அனைவருக்குள்ளும் பாவம் வந்துவிட்டது. நாமும் ஆதாமின் பிள்ளைகள் என்பதினால், நமக்குள் இருக்கும் இரத்தமும் பாவ இரத்தமே.

அப்படியானால் மனிதனுக்குள்ளே பாவம் எங்கே இருக்கிறது? அவனுடைய இருதயத்தில் பாவம் இருக்கிறது. அவனுடைய மூளையில் பாவம் இருக்கிறது என்று அநேகர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மை அல்ல. மனிதனுடைய இரத்தத்தில் தான் பாவம் இருக்கிறது.

ரோமர் 6:23
    பாவத்தின் சம்பளம் மரணம்.

பாவம் மனிதனின் இரத்தத்தில் இருக்கிறது. அப்படியானால், அந்த மனிதனுடைய சரீரத்தில் உள்ள இரத்தம் முழுவதையும் எடுத்துவிட்டால், அந்த மனிதனுடைய பாவமும் வெளியேறிவிடும். ஒரு மனிதனுடைய சரீரத்தில் உள்ள இரத்தம் முழுவதும் வெளியேறிவிட்டால், அவன் மரித்து விடுவான். எனவே தான் பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

கிரேக்க மொழியில் மரணத்தைக் குறிக்கும் இரண்டு சொற்கள் உண்டு. அவை: நெக்ரோஸ், டெனட்டோஸ்.

நெக்ரோஸ் என்றால் மரணம் என்று பொருள். யாராவது மரித்துவிட்டால், அவர் மரித்துவிட்டார் என்று சொல்வதற்கு இப்பதத்தைப் பயன்படுத்துவார்கள்.

டெனட்டோஸ் என்றால் சிதைந்து, உருக்குளைந்து சரீரத்தில் உள்ள இரத்தம் முழுவதும் வெளியேறி மரித்துப்போவதைக் குறிக்கும். (எ.கா: குண்டு வெடிப்பில் மரித்துப்போகிறார்களே அது போன்றது)

ரோமர் 6:23-ல் சொல்லப்பட்டுள்ள மரணம் என்பது நெக்ரோஸ் மரணம் அல்ல, டெனட்டோஸ் மரணம். சரீரத்தில் உள்ள இரத்தம் முழுவதும் வெளியேறி ஏற்படுகின்ற மரணத்தைக் குறிக்கிறது. இப்படி ஒரு மனிதனுடைய சரீரத்திலிருந்து இரத்தம் முழுக்க வெளியேறுமானால், அவன் சரீரத்திலிருந்து பாவம் வெளியேறிவிடுகிறது. ஆனால், அவனால் உயிர் வாழ முடியாது.

எனவேதான், ஆண்டவர் இவ்வுலகத்திற்கு மனிதனாய் பிறந்து வந்தார். நாம் அனைவருடைய சரீரத்திலும் உள்ள பாவம் வெளியேறுவதற்கு, அதாவது இரத்தம் வெளியேறுவதற்கு பதிலாக, தன்னுடைய இரத்தத்தை முழுவதும் வெளியேற்றி நமக்காக ஜீவனைக் கொடுக்க வந்தார்.

இப்படி இரத்தம் சிந்தி மரிக்கும்படியாக ஆண்டவர் வரவேண்டுமானால், அவருடைய சரீரத்தில் இரத்தம் இருக்க வேண்டும். அந்த இரத்தமும் பாவ இரத்தமாக இருந்தால், அவரும் பாவியாகவே காணப்படுவார். அப்படி அந்த பாவ இரத்தத்தை அவர் வெளியேற்றி மரித்தால், அதன் மூலமாக, அவருக்கு மாத்திரமே பாவ விமோட்சனம் கிடைக்கும். அந்த இரத்தத்தைக் கொண்டு, மற்றவருடைய பாவங்களை கழுவ, சுத்திகரிக்க முடியாது.

ஆண்டவர் பரிசுத்தமாய் பிறக்க வேண்டும் என்பதினால் தான், ஒரு ஆணின் துணை இல்லாமல், பரிசுத்த ஆவியின் மூலமாக பிறந்தார். ஆணின் தூண்டுதல் இல்லாமல் இயேசு கருவுற்றபடியினால், அவருடைய இரத்தத்தில் பாவம் இல்லை. எனவேதான், இயேசுவானவர், கன்னியின் வயிற்றில் மனிதனாய் அவதரித்தார்.

ஆதாமுக்குள் ஆண்டவர் சுவாசத்தை ஊதும்போது எப்படி அவனுக்குள் இரத்தம் உருவானதோ, அதேபோல, பரிசுத்த ஆவியானவர் மரியாளுக்குள் சுவாசத்தை ஊதும்போது, இயேசுவானவருக்குள் இரத்தம் சிருஷ்டிக்கப்பட்டது. எனவேதான், மரியாள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானால் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

எனவேதான் இரண்டாம் ஆதாம் இயேசு கிறிஸ்து என்று ரோமர் 2-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆதாமுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும் மாத்திரமே மனிதன் யாருடைய துணையும் இல்லாமல் இரத்தம் உருவாக்கப்பட்டது.

1 பேதுரு 1:19
    குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

ரோமர் 5:8,9
    8. நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினால் தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
    9. இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

நாம் இயேசுவின் இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம், இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நீதிமான்களாக்கப்படுவது என்றால், தேவனோடான சரியான உறவு மறுபடியும் நமக்குக் கிடைத்திருக்கிறது. இரட்சிக்கப்படுவது என்பது நரகத்திற்கு தப்பி, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவது.

நமக்காக இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ள ஒவ்வொரு துளி இரத்தமும் வெளியேறினபடியினால் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.

லேவியராகமம் 16:14
    பின்பு காலையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன்.

காலையின் இரத்தம் ஏழு தரம் தெளிக்கப்பட வேண்டும் என்று வாசித்தோம். இது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைப் பிரதிபலிக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் ஏழு முறை இரத்தம் சிந்தினார்.

1. முதலாவது கெத்சமனே தோட்டத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் வியர்வையாக வெளியேறியது.

2. இரண்டாவதாக காய்பாவின் அரண்மனையில் இயேசுவை அடித்து விசாரிக்கும்போது இயேசு இரத்தம் சிந்தினார்.

3. மூன்றாவது முறையாக பிலாத்துவின் அரண்மனையில் 39 முறை வாரினால் அடிக்கும்போது இயேசு இரத்தம் சிந்தினார்.

4. நான்காவதாக இயேசு கிறிஸ்துவின் தலையில் முள்முடி சூட்டியபோது இரத்தம் சிந்தினார்.

5. ஐந்தாவதாக அவருடைய கைகளில் ஆணிகள் அடிக்கும்போது இரத்தம் சிந்தினார்.

6. ஆறாவதாக அவருடைய கால்களில் ஆணிகள் அறையும்போது இரத்தம் சிந்தினார்.

7. ஏழாவதாக இயேசு மரித்து விட்டாரா? இல்லையா? என்று உறுதிப்படுத்துவதற்காக, போர்ச்சேவகன் விலாவில் குத்தும்போது, கடைசி துளி இரத்தமும் விலாவிலிருந்து வெளியேறியது.

வேதத்தில் இலக்கங்கள் மிகவும் முக்கியமானவை.
    1. ஒன்று என்றால் தேவன்
    2. இரண்டு என்றால் பிரிவு
    3. மூன்று என்றால் உயிர்த்தெழுதல்
    4. நான்கு என்றால் இயேசு கிறிஸ்து
    5. ஐந்து என்றால் தேவனுடைய வல்லமை
    6. ஆறு என்றால் மனிதன்
    7. ஏழு என்றால் பரிபூரணம் அல்லது சம்பூரணம்

முதலாவதாக ஆண்டவர் கெத்சமனேயில் இரத்தம் சிந்தினார். ஒன்று என்றால் தேவனைக் குறிக்கிறது. ஆறு என்றால் மனிதன்.

இயேசுவானவர் முதல் முறை கெத்சமனேயில் தேவனுக்காக இரத்தம் சிந்தினார். மற்ற ஆறு முறையும் மனிதனுக்காக இரத்தம் சிந்தினார்.

எப்படியென்றால், இரண்டாவது முறையிலிருந்து ஏழாவது முறை வரை இயேசுவின் சரீரத்திற்கு வெளியே இருந்து ஒருவர் தாக்கியால் இரத்தம் சிந்தினார்.

2. காய்பாவின் அரண்மனையில் அடித்தார்கள் இரத்தம் வந்தது.

3. பிலாத்துவின் அரண்மனையில் 39 முறை அடித்தார்கள் இரத்தம் வந்தது.

4. தலையில் முள் முடி சூட்டினார்கள் இரத்தம் வந்தது.

5. கைகளில் ஆணி அறைந்ததால் இரத்தம் வந்தது.

6. கால்களில் ஆணி அறைந்ததால் இரத்தம் வந்தது.

7. விலாவில் குத்தினார்கள் இரத்தம் வந்தது.

ஆனால் கெத்சமனே தோட்டத்தில் இயேசுவை யாரும் அடிக்கவில்லை, திட்டவில்லை, கைதுசெய்யில்லை. ஆனால் இரத்தம் வியர்வையாக வெளியே வந்தது.

லூக்கா 22:44
    அவருடைய வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் விழுந்தன.

எனவே இயேசுவானவர் முதல் முறை ஆண்டவருக்காக இரத்தம் சிந்தினார். மற்ற ஆறு முறையும் மனிதனுக்காக இரத்தம் சிந்தினார்.

ஏசாயா 53:5, 1 பேதுரு 2:24
    அவருடைய தழும்புகளால் சுகமானோம்.

அவருடைய தழும்புகள் என்பது வாரினால் அடித்த தழும்புகளையே குறிக்கும். உலகத்தில் பலவிதமான வியாதிகள் இருக்கின்றன. இவற்றை மருத்துவத்துறையினர் பல பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கின்றார்கள். உலகில் உள்ள பல ஆயிரக்கணக்காக வியாதிகளையும் மருத்துவறையினர் குடும்பம் குடும்பமாக பிரித்து 39 பிரிவுகளில் பிரித்து வைத்துள்ளனர்.

இந்த 39 வகை குழுக்களுக்குள் உலகில் உள்ள அனைத்து விதமான வியாதிகளும் அடங்கும் என்பது விஞ்ஞான மற்றும் மருத்துவ அறிஞர்களின் கூற்று.

இந்த 39 விதமான வியாதிகளையும் சுகப்படுத்துவதற்காகவே இயேசு கிறிஸ்து 39 முறை வாரினால் அடிக்கப்பட்டார். அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்.

நமது சரீரத்தில் தலை முதல் பாதம் வரை இரத்தம் உள்ளது. எனவே, இயேசுவானவர் வெவ்வேறு காரணங்களுக்காக தலை முதல் பாதம் வரை அநேக விதங்களில் இரத்தம் சிந்தினார். இயேசு சிந்தின ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் காரணங்களும், அர்த்தங்களும் உண்டு.

கெத்சமனே
இயேசு கிறிஸ்து ஏன் கெத்சமனேயில் இரத்தம் சிந்தினார். காத் என்றால் ஆலை என்று பொருள். செமன் என்றால் ஒலிவம் என்று பொருள். கெத்சமனே என்றால் ஒலிவ ஆலை என்று பொருள்.

ஒலிவ பழங்களையெல்லாம் எடுத்து, ஒரு ஆலையில் போட்டு, அதில் உருளையான ஒரு கல்லை இறக்கி, கல்லிலிருந்து ஒரு குச்சியைக் கட்டி, குச்சியை கழுதையின் கழுத்தில் மாட்டி சுற்றவைப்பார்கள். இவ்வாறு செய்யும்போது, ஒலிவ எண்ணை கிடைக்கும்.

முழு வேதாகமத்திலும் (பழைய, புதிய ஏற்பாடு) எண்ணை என்று எங்கெல்லாம் நாம் வாசிக்கிறோமா? அது ஒலிவ எண்ணையைக் குறிக்கிறது.

இஸ்ரவேலர்கள் எல்லா காரியங்களுக்கும் இந்த ஒலிவ எண்ணையைத்தான் பயன்படுத்துவார்கள். விளக்கை கொழுத்துவதற்கு, இராஜாக்களை அபிஷேகம் செய்ய, ஆசாரியர்களை அபிஷேகம் செய்ய, சமையல் செய்ய, காயம் கட்டுவதற்கு மருந்தாக இப்படி பல விதங்களில் ஒலிவ எண்ணையைப் பயன்படுத்தினார்கள்.

ஆண்டவர் ஏன் மனிதனைப் படைத்தார் என்றால், அவரைத் துதித்துப்பதற்காக படைத்தார். மனிதன் பாவம் செய்ததால், அண்டவருடைய மகிமையை அவன் இழந்துவிட்டான்.

மனிதன் நரகத்திற்கு செல்வதால், வேதனை மனிதனுக்குத் தான் கடவுளுக்கு அல்ல.

இயேசு ஏன் கெத்சமனேயில் கைது செய்யப்பட்டார் என்றால், அவர் ஒரு ஒலிவ பழமாக கெத்சமனேயில் காணப்பட்டார். துக்கமும், வியாகுலமும், அவரை நசுக்கி, பிழிய ஆரம்பித்தது. ஒரு ஒலிவ பழம் ஒலிவ ஆலையில் வைத்து எப்படி நசுக்கப்படுமோ, அதேபோல இயேசுவும் நசுக்கப்படுகிறார். என்னால் படைக்கப்பட்ட மனிதன் என்னை கைது செய்யப்போகிறான், என்னை அடிக்கப்போகிறான், என்மேல் துப்பப்போகிறான், என்னை சிலுவையில் அறையப்போகிறான் என்ற துக்கமும், வியாகுலம் இயேசுவுக்கு இருந்தது.

இந்த துக்கமும், வியாகுலமும் அவருக்குள் அதிகரித்தபடியினால், அவருடைய மனம் பாதிக்கப்பட்டது. மருத்துவ நடையில் ஹமாட்டிரோசிஸ் என்று சொல்லுவார்கள். எனவே இயேசுவின் இருதயத்திலிருந்து இரத்தம் வெடித்து, இரத்த நாளங்கள் வழியாக, வேர்வைத்துளிகளாக இரத்தம் வெளியே வர ஆரம்பித்தது.

இந்த வித மனநோய் வந்தவர்களுக்கு, இரத்தம் நாளங்கள் வெடித்து குடழுக்குள் செல்லும், அங்கிருந்து ஈரளுக்குச் செல்லும். அங்கிருந்து நுரையீரலுக்கு செல்லும். அங்கிருந்து சிறுநீரகத்திற்கு செல்லும். கடைசியாக வியர்வையின் பெருந்துளிகளாக வெளியே வரும்.

இயேசு கெத்சமனே தோட்டத்தில் வெளிப்புறத்திலிருந்து எந்த காயமும் ஏற்படாமல், துக்கப்பட்டு, வியாகுலப்பட்டு இரத்தம் சிந்தினதைத்தான், ஒலிவ எண்ணையாகிய இரத்தம் என்று சொல்லுகிறோம்.

இந்த இயேசு கிறிஸ்துவின் எண்ணையாகிய இரத்தம் தான் நம்மை இராஜாக்களாக, ஆசாரியர்களாக அபிசேஷம் செய்கிறது. 1 பேதுரு 2:9-ல் ஆண்டவர் நம்மை இராஜரீக ஆசாரியர்களாக மாற்றியிருக்கிறார் என்று வாசிக்கிறோம். ஆண்டவர் நம்மை இராஜாக்களாக, ஆசாரியர்களாக ஏற்படுத்தினது ஏன் என்றால், பிதாவுக்கு முன்பாக நாம் இராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் நிறுத்தும்படியாகவே.

சிலுவை மரத்தின் அருகே கசப்பான காடி வைக்கப்பட்டிருக்கும். ஏனென்றால், அவ்வப்போது போர்வீரர்கள் காடியை எடுத்து, சிலுவையில் அறையப்பட்டவர்களின் காயங்களில் வைப்பார்கள். காரணம், இந்த காடி இரத்தம் உரையாமல் இருக்க உதவும். அவ்வப்போது, அந்த காடியை குற்றவாளிகளுக்குக் குடிக்கக்கொடுப்பார்கள்.

குற்றவாளிகள் காடி கசப்பாக இருந்தாலும் அதை குடிப்பார்கள். காரணம், வேதனையின் மிகுதியினால் தாகம் எடுக்கும். எனவே, கசப்பாய் இருந்தாலும் அவர்கள் குடிப்பார்கள். இந்த காடி சரீரத்திற்குள்ளே சென்று, உள்ளே இருக்கின்ற இரத்தத்தையும் உரையாமல் இருக்க வைக்கும்.

நீங்களும், நானும் கிறிஸ்தவனாய், கிறிஸ்தவளாய் மாறினது, ஆண்டவர் தன்னுடைய இரத்தம் முழுவதையும் சிந்தி நம்மை மீட்டுக்கொண்டிதினால் தான். இவ்வளவு பெரிய தியாகம் செய்து, நம்மை மீட்டுக்கொண்ட, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, நான் கிறிஸ்தவனாய் மாறின பின்பு எனக்கு ஏதாகிலும் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது நியாயமா?

நான் ஆண்டவருக்காக எதையாகிலும் செய்தால், அவர் எனக்காக எதையாகிலும் கொடுக்க வேண்டுமா? ஆண்டவர் தன்னுடைய கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி எனக்காக ஜீவனையே கொடுத்திருக்கிறாரே, அதற்கு கைமாறாக நான் மரிக்கும்வரை நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்தாலும், அதற்கு அது ஈடாகாது. அவ்வளவு பெரிய விளையேறப்பெற்ற இரட்சிப்பை ஆண்டவர் எனக்குக் கொடுத்திருக்கிறார்.

ஊழியம் செய்கிற எவரும், நான் அண்டவருக்காக இலவசமாக ஊழியம் செய்கிறேன் என்று சொல்ல முடியாது. மிகப்பெரிய விளைக்கிரயமாக தன்னுடைய ஜீவனையே கொடுத்துதான் ஆண்டவர் நம்மை ஊழியர்களாய் மாற்றியிருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.