Type Here to Get Search Results !

இயேசு கிறிஸ்து பிறந்ததன் நோக்கம் என்ன? | Christmas Special Message | What Purpose Birth of Jesus Christ | கிறிஸ்துமஸ் பிரசங்க குறிப்புகள் | Jesus Sam

=====================
தலைப்பு: இயேசுவின் பிறப்பு
=====================
இயேசுவானர் பூமியில் பிறந்தது உண்மை. இது கிறிஸ்தவர்கள் மாத்திரம் அல்ல. உலகத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஓர் உண்மை.

பரிசுத்த தோகமம் மாத்திரம் அல்ல, யூதர்களின் சரித்திரம், இஸ்லாமியர்களின் புனித நூலாகிய குரான், உலக சரித்திரமும் கூட இதற்கு சான்றாக உள்ளது.

உலக சரித்திரத்தை கி.மு – கி.பி என்று இரண்டாக பிரித்தவர் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து.  உலகில் தோன்றி எவரைப் பற்றி குறிப்பிடவும் இந்த கால கணிப்பே பயன்படுத்தப்படுகிறது.


திருவள்ளுவர் கி.மு 31-ல் பிறந்தார் சிலர் நம்புகிறார்கள்.

பாரதியார் கி.பி. 1882-ல் பிறந்தார்

அமெரிக்கா கி.பி. 1492-ல் கொலம்பஸ்சால் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படி உலகில் தோன்றிய எவரையும் குறிக்க கிறிஸ்து பிறப்பு பயன்படுகிறது.

உலக சரித்திரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக சிலர் சரித்திரத்தைக் குறிப்பிடும்போது தி.மு – தி.பி (திருவள்ளுவருக்கு முன், திருவள்ளுவருக்கு பின்) என்று மாற்ற வேண்டும் என்று பிரயாசப்பட்டார்கள்.   சிலர் பொ.மு - பொ.பி (பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்கு பின்) எனவும் மாற்ற ஆசைப்பட்டார்கள்.  ஆனால் அது சாத்தியப்படவில்லை.

இயேசு கிறிஸ்து மனிதனாய் பிறந்தது உண்மை. ஆனால், இயேசுவானவர் டிசம்பர் 25-ம் தேதி பிறக்கவில்லை.

பின்னே, ஏன் டிசம்பர் 25-ம் தேதியை கிறிஸ்து பிறப்பின் பண்டிகையாக நாம் கொண்டாடுகிறோம்.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நம்பாத யூதர்களும், ரோமர்களும் இயேசுவை ஆராதிக்கிறவர்களை சிறையில் அடைத்தும், கொலை செய்தும் வந்தார்கள்.

இதனால் கிறிஸ்தவர்கள் மறைமுகமாக கர்த்தரை ஆராதித்து வந்தார்கள். கி.பி 4-ம் நூற்றாண்டு வரை கிறிஸ்தவர்களுக்கென அங்கிகாரம் கிடைக்கவில்லை.

கி.பி 4-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் அதிகாரப்பூர்வ மதமாக அறிவிக்கப்பட்டது. அதுவரை மறைமுகமாக இருந்த கிறிஸ்தவர்கள் வெளிப்படையாக ஆராதிக்க ஆரம்பித்தார்கள்.

கிறிஸ்தவ மதம் அதிகாரப்பூர்வ மதமாக அறிவிக்கப்பட்ட பின்பு, கி.பி. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறந்த தினத்தை சிறப்பு நாளாக அனுசரிக்க நினைத்தார்கள்.

400 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிறந்தார் என்பதினால், இயேசு எந்த நாளில் பிறந்தார், எந்த நேரத்தில் பிறந்தார் என்று கண்டுபிடிப்பது சாத்தியமில்லாத ஒன்று.

அந்நாட்களில் டிசம்பர் மாதம் விடுமுறை மாதமாக இருந்தது. குறிப்பாக டிசம்பர் 20 முதல் ஜனவரி 1 வரை உள்ள நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்தது. இந்த விடுமுறை நாட்களில் ஏதேனும் ஒரு நாளை கிறிஸ்து பிறப்பின் நாளாக கொண்டாட வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்து, டிசம்பர் 25-ம் தேதியை கிறிஸ்து பிறந்த திருநாளாக கொண்டாடி வந்தார்கள்.


கி.பி 4-ம் நூற்றாண்டிற்கு பிறகே கிறிஸ்து பிறந்த நாள் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவானவர் பூமியில் வாழ்ந்த நாட்களிலோ, இயேசு கிறிஸ்து பரமேரியபிறகோ, அப்போஸ்தலர்களின் நாட்களிலோ கிறிஸ்து பிறந்த திருநாள் கொண்டாடப்படவில்லை.


இயேசுவானவர் இந்த பூமியில் பிறந்தது உண்மை. ஆனால் டிசம்பர் 25-ம் தேதி இயேசுவானவர் பிறக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வருவதற்கு அநேக காரணங்கள் இருந்தாலும், ஒரு சில காரணங்களைக் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம்.


1. இரட்சகராக பிறந்தார்
மத்தேயு 1:21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்ற பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

நம்மை இரட்சிக்கும்படியாகவே இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தார்.


இரட்சிப்பு என்றால் என்ன?
இரட்சிப்பு என்பது தமிழ் மொழி வார்த்தை அல்ல. இரட்சிப்பு என்பதன் தமிழ் பதம் விடுதலை அல்லது மீட்பு என்றும் சொல்லாம்.

இஸ்ரவேல் ஜனங்கள் 430 ஆண்டுகள் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்தார்கள். அவர்களை இரட்சிக்கும்படியாக அதாவது காப்பாற்றும்படியாக கர்த்தர் மோசே என்ற தலைவனை ஏற்படுத்துகிறார். (யாத்திராகமம் 14:13, யாத்திராகமம் 18:8)

இஸ்ரவேலர்களை மீதியானியர்களிடமிருந்தும், அமலேக்கியரிடமிருந்தும், மோவாபியரிடமிருந்தும் இரட்சிக்கும்படியாக அநேக நியாயாதிபதிகளை கர்த்தர் ஏற்படுத்தினார் என்று நியாயாதிபதிகள் புத்தகத்தில் வாசிக்கிறோம்.

1. சம்கார். (நியாயாதிபதிகள் 3:31)
2. கிதியோன். (நியாயாதிபதிகள் 7:7)
3. சிம்சோன் (நியாயாதிபதிகள் 15:18)

இரட்சிப்பு என்பது விடுதலையை, மீட்பை, பாதுகாப்பைக் குறிக்கிறது. நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவும் நம்மை மீட்கும்படியாகவே, நம்மை பாதுகாக்கும்படியாகவே இந்த பூமிக்கு வந்தார்.

எதிலிருந்து நம்மை இரட்சிக்க அதாவது பாதுகாக்க வந்தார் என்றால், பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்க இயேசு கிறிஸ்து பிறந்தார் என்று மத்தேயு 1:21-ல் வாசித்தோம்.

ஆதாமின் மூலமாக உலகம் பாவத்திற்குள்ளானது. நாம் அனைவரும் ஆதாமின் சந்ததியார். எனவே, நாமும் பாவமுள்ளவர்கள். என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள் என்று தாவீது பாடுகிறார். (சங்கீம் 51:5).

நான் பிறந்தது முதல் எந்த பாவமும் செய்யவில்லை என்றாலும், நாமும் பாவிதான். ஏனென்றால், நாம் அனைவரும் பாவத்தின் வித்து.

அந்த பாவத்தை போக்கும்படியாகவே, பாவத்திலிருந்து நம்மை விடுவித்து, பரலோக ராஜ்யத்தில் நம்மைச் சேர்க்கும்படியாகவே இயேசு கிறிஸ்து பிறந்தார்.

இயேவானவர் இல்லாமல் நம்மால் பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய பாவம் கழுவப்பட வேண்டுமானால், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மாத்திரமே கழுவ முடியும்.

என்னுடைய பாவம் கழுப்பட நான் என்ன பரிகாரம் செய்தாலும், என்ன புண்ணியம் செய்தாலும் என்னுடைய பாவம் கழுவப்படாது.

அப்போஸ்தலர் 4:12
அவராலேயன்றி வேயொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.

யாரோ ஒரு சிலரை மாத்திரம் அல்ல, இஸ்ரவேலர்களை மாத்திரமே, யூதர்களை மாத்திரமோ அல்ல, முழு உலகத்தையும் இரட்சிக்கும்படியாக, முழு உலகத்தையும் விடுவிக்கும்படியாகவே இயேசு கிறிஸ்து பிறந்தார்.

யோவான் 3:17
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்க்காகவே அவரை அனுப்பினார்.

1 தீமோத்தேயு 1:15
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது. அவர்களில் பிரதான பாவி நான்.

நம்முடைய பாவங்களை கழுவி நம்மை சுத்திகரித்து, அந்த பரலோக பாக்கியத்தை நமக்கு கொடுக்கும்படியாகவே இயேசு கிறிஸ்து இந்த பூவுலகில் மனிதனாய் அவதரித்தார்.


2. இராஜாவாக இயேசு பிறந்தார்
மத்தேயு 2:2 (1-6)
யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.

இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு ராஜாவாக வந்தார். அவர் ஏழ்மையாக வந்தார் என்று அநேகர் சொல்வதுண்டு. இயேசு கிறிஸ்து ஏழ்மையாக வரவில்லை, தாழ்மையாக வந்தார். வானத்தையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த ஆண்டவர், ஒரு ஏழையாக பூமிக்கு வரவில்லை.

ஐசுவரியமும், கனமும், வல்லமையும் அவருடையது. எல்லாம் இருந்தாலும் எல்லாவற்றையும் துரந்தவராக தாழ்மையின் உருவமாக இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறந்தார். தாழ்மைக்கு அடையாளமாக மாட்டுத்தொழுவத்தை ஆண்டவர் தெரிந்தெடுத்தார்.

இயேசு கிறிஸ்து யூதா கோத்திரத்தில் பிறந்தார். இஸ்ரவேலை ஆட்சி செய்த தலைசிறந்த ராஜாவான தாவீதின் வம்சத்தில் பிறந்தார். தாவீதின் சந்ததியார் தொடர்ந்து யூதா கோத்திரத்தை ஆட்சி செய்து வந்தார்கள். யூதர்கள் பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு போகும் வரை தாவீதின் சந்ததியார் யூதாவை ஆட்சி செய்து வந்தார்கள்.

ஒருவேலை பாபிலோனியர்கள் இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தவில்லை என்றால், இயேசுவானவர் பூமியில் பிறந்தபோது, யூதர்களை ஆட்சி செய்து கொண்டிருப்பவர், யோசேப்பு. அப்படிப்பட்ட யோசேப்பின் மகனாகவே இயேசு பிறந்தார்.

யோசேப்பு ஒரு சாதாரண மனிதர் அல்ல. யோசேப்பு சாதாரண தச்சர் என்று நாம் நினைக்கிறோம். அவர் தச்சர் அல்ல, அவர் ஒரு தொழில் அதிபர். (Architecture). பெரிய பெரிய கட்டிடங்களையும், தொழிற்சாலைகளையும் கட்டி எழுப்புகிற நிபுணர்.

இயேசு கிறிஸ்து ராஜாவாக பிறந்தாலும், தாழ்மையாய் பிறக்க வேண்டும் என்பதற்காக, நாசரேத் என்னும் ஊரில் ராஜாவாய் (முதலாளி) வாழ்ந்து கொண்டிருந்த யோசேப்பை, குடிமதிப்பு என்னும் பெயரில் யோசேப்பின் சொந்த ஊரான பெத்லகேமிற்கு அனுப்புகிறார் ஆண்டவர்.

பெத்லகேம் ஒரு சிறிய கிராமம். அங்கே சத்திர வசதிகளும் அதிகமாக இல்லை. ஒரே ஒரு சத்திரம் இருந்ததாகவே வேதம் சொல்லுகிறது. யோசேப்பும் மரியாளும் பெத்லகேமிற்கு வந்தபோது மரியாளுக்கு பிரசவவலி ஏற்பட்டது.

உடனே அங்கிருந்த சத்திரத்திற்கு சென்றபோது, குடிமதிப்பின் நேரம் என்பதினால் அந்த சத்திரம் முழுவதும் ஆட்களால் நிரைந்திருந்தது. யோசேப்பிற்கும் மரியாளுக்கும் தங்க இடம் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை ஆண்டவர் தான் ஏற்படுத்துகிறார். எதற்காக என்றால், தாம் தாழ்மையாய் பிறக்க வேண்டும் என்பதற்காகவே.

லூக்கா 2:7-ல் சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லை என்று தான் லூக்கா எழுதுகிறார். சத்திரங்களிலே அல்ல. அப்படியானா அங்கே அநேக சத்திரங்கள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

மரியாளும் யோசேப்பும் ஏழைகள், எனவே சத்திரத்திலோ, வாடகை வீட்டிலோ தங்குவதற்கு அவர்களுக்கு வசதி இல்லை எ்ன்று நாம் நினைப்பது தவறு.

யோசேப்பு செல்வன். நாற்பது வயது நிரம்பிய வாலிபன். நாசரேத்தூரிலிருந்து பெத்லகேம் வருவதற்கு தேவையான பணத்தை அவர் நிச்சயம் கொண்டுவந்திருப்பார். ஆனால் அவர்கள் தங்குவதற்கு சத்திரத்திலே இடம் கிடைக்கவில்லை.

சத்திரத்தில் இடம் இல்லாததினால் மாட்டுத்தொழுவத்தில் ஒரு இடத்தை சுத்தம் செய்து அங்கு தான் இயேசு கிறிஸ்து பிறந்தார்.

பெத்லகேமிற்கு அருகில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மேய்ப்பர்கள் இயேசுவை பார்க்க வந்தபோது, இயேசுவானவர் மாட்டுத்தொழுவத்தில் இருந்தார். (லூக்கா 2:16)

சாஸ்திரிகள் அருகாமையில் இருந்த கிராமங்களில் இருந்து வந்தவர்களோ, அருகாமையில் இருந்த பட்டணங்களில் இருந்து வந்தவர்களோ அல்ல, அவர்கள் வேறு தேசத்திலிருந்து நட்சத்திரத்தைப் பின்பற்றி வந்தவர்கள்.

சாஸ்திரிகள் இயேசுவை காண வரும்போது அவர்கள் இயேசு பிறந்த மறுநாளோ, மறுவாரமே வரவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்புதான் அவர்கள் இயேசுவை பார்க்க வந்தார்கள். அப்படி அவர்கள் வரும்போது இயேசுவானவர் மாட்டுத்தொழுவத்தில் இல்லை. மத்தேயு 2:11-ல் சாஸ்திரிகள் வீட்டிற்குள் பிரவேசித்து இயேசுவைப் பார்த்தார்கள் என்று வாசிக்கிறோம்.

அப்படியானால், இயேசு கிறிஸ்து தாழ்மையாய் பிறக்க வேண்டும் என்பதற்காகவே மாட்டுத்தொழுவத்தை தெரிந்தெடுத்தார். ஆனால் இயேசுவானவர் மாட்டுத்தொழுவதில் வளரவில்லை. சில நாட்களிலேயே யோசேப்பு ஒரு வீட்டை வாடகைக்கோ சொந்தமாகவோ வாங்கியிருக்க வேண்டும்.

மீகா 5:2
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும். இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.

இஸ்ரவேலை ஆளப்போகிறவர் இயேசு கிறிஸ்து என்பதையே மீகா குறிப்பிடுகிறார்.

யோவான் 18:37
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்.

பிலாத்து இயேசுவைப் பார்த்து: நீ ராஜாவோ என்று கேட்டபோது இயேசுவானவர் நான் ராஜாதான் என்று சொல்லுகிறார். எனவே இயேசு கிறிஸ்து உலகிற்கு ராஜாவாகவே வந்தார்.


3. இம்மானுவேலராக இயேசு பிறந்தார்
மத்தேயு 1:23
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

இயேசுவானவர் இம்மானுவேலராக வந்தார். இம்மானுவேல் என்றால் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்று பொருள்.

பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கென்று ஒரு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்திருந்தார். நியாயப்பிரமாணத்தை மீறுகிறவர்கள் அனைவரும் உடனே தண்டிக்கப்படுவார்கள்.

பழைய ஏற்பாட்டிலும் ஆண்டவர் ஜனங்களை நேசித்தார். அவர்கள் மீது அன்பு வைத்திருந்தார். ஜனங்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் ஆண்டவர் ஜனங்களை கண்டித்தும் நடத்தினார்.

கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல். (யாத்திராகமம் 21:24)

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என்பது புதிய ஏற்பாடு. மறுகன்னத்திலும் அறைய வேண்டும் என்பது பழைய ஏற்பாடு.


ஆகான் என்பவன் சாபத்தீடானதிலே கொஞ்சம் ஒழித்து வைத்ததினால் அவனும் அவன் குடும்பத்தாரும் கல்லெறிந்து கொலை செய்யப்படார்கள். (யோசுவா 7-ம் அதிகாரம்)

உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியர்கள் மாத்திரமே தொட முடியும். கர்த்தருடைய அனுமதியின்றி உடன்படிக்கைப் பெட்டியை தொட்ட ஊசா அங்கே மரித்துப்போனார். (1 நாளாகமம் 13:9,10)


பழைய ஏற்பாட்டில் ஜனங்கள் ஆண்டவரிடத்தில் நேரடியாக பேச முடியாது. அதற்கென ஆசாரியர்கள், லேவியர்கள் இருப்பார்கள் அவர்கள் மூலமாக ஜனங்கள் ஆண்டவரிடத்தில் தங்கள் கோரிக்கைகளை கொண்டு செல்ல முடியும்.


இப்படியாக, ஆண்டவர் ஜனங்களை நேசித்திருந்தாலும், ஜனங்களுக்கும் ஆண்டவருக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி காணப்பட்டது.

இப்படிப்பட்ட இடைவெளியே நீங்கும்படியாகவே, நம்மோடு கூட இருக்கும்படியாகவே இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார்.


திரைச்சீலை
மாற்கு 15:38
அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கி கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரித்தபோது தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது. தேவாலயத்திற்குள் ஆசாரியர்கள் மாத்திமே செல்ல முடியும், என்ற முறையை ஆண்டவர் மாற்றி எல்லோரும் ஆலயம் செல்லாம், எல்லோரும் அவரிடத்தில் பேசலாம் என்ற புதிய முறையை ஆண்டவர் ஏற்படுத்துகிறார்.

எரேமியா 1:8
நீ அவர்களுக்குப் பயப்பட வேண்டாம். உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே, நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி உலக்குச் சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.


மத்தேயு 28:20ஆ
இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார்.

பழைய ஏற்பாட்டில் கடவுளுக்கும் ஜனங்களும் இடையே இருந்த இடைவெளியை நீக்கி, நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தும்படியாகவே மனுஷகுமாரன் இம்மானுவேலராக பிறந்தார்.

நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவருக்குள் அடங்கியிருப்போம்.  வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தர் நம்மோடு இருந்து நம்மை தேற்றி ஆதரிக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  ஆமென்.....!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.