Type Here to Get Search Results !

Acts Bible Study | Chapter 9-10 | அப்போஸ்தலர் நடபடிகள் வேத ஆராய்ச்சி | Part 5 | Jesus Sam

=================
அப்போஸ்தலர் நடபடிகள் பாகம் ஐந்து
==================
அப்போஸ்தலர் அதிகாரம் ஒன்பது
====================


    அநேக ஊழியர்கள் சுவிசேஷத்தை அறிவிக்க புதிய ஏற்பாட்டை மாத்திரம் பயன்படுத்துவதுண்டு. பழைய ஏற்பாடு யூதர்களுக்கானது, கிறிஸ்தவர்களாகிய நாம் புதிய ஏற்பாட்டில் இருந்துதான் பிரசங்கிக்க வேண்டும் என்பதை அநேக ஊழியர்களும் நம்புகிறார்கள்.

    வேதத்தில் முதல் முதலில் சுவிசேஷம் அறிவித்த பேதுரு பழைய ஏற்பாட்டிலிருந்து தான் பிரசங்கம் செய்கிறார். ஸ்தேவானும் பழைய ஏற்பாட்டிலிருந்தே பிரசங்கிக்கிறார். பிலிப்பு எத்தியோப்பிய மந்திரிக்கு ஏசாயா புத்தகத்தை விளக்கப்படுத்தும்போதே அவர் இரட்சிக்கப்படுகிறார்.

    புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அனைவருமே (எ.கா:பேதுரு, ஸ்தேவான், பிலிப்பு, பவுல்) பழைய ஏற்பாட்டிலிருந்து பிரசங்கம் செய்துதான் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள்.

சவுல் (பவுல்)
    சவுல் மற்றும் பவுல் இந்த இரண்டு பெயர்களும் ஒரே நபரைக் குறிக்கும் பெயர்கள்.

    திருச்சபை உருவாவதற்கு மிக முக்கிய பங்காற்றியவர் பவுல். அப்போஸ்தலர்கள் திருச்சபையை உருவாக்கினாலும், அவர்கள் மூலமாகவே சுவிசேஷம் உலகம் முழுவதிற்கும் சென்றடைந்தாலும், கிறிஸ்தவத்திற்கான மூல உபதேசத்தை அப்போஸ்தலர்கள் கொடுக்கவில்லை.

    கிறிஸ்தவத்திற்கான மூல உபதேசத்தைக் கொடுத்தவர் பவுல்.
    
    இயேசு கிறிஸ்து தனது ஊழியத்தின் ஆரம்பத்தில் தனக்கென பன்னிரண்டு சீஷர்களை தெரிந்தெடுத்தார். அவர்களுள் யூதாஸ் காரியோத்து நான்றுகொண்டு செத்துப்போனார்.

    மற்ற பதினொருவருக்கும் மத்தேயு 28-ம் அதிகாரத்தில் நீங்கள் உலகமெங்கும் சென்று சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்று இயேசு கட்டளையிட்டார். இந்த பதினொருவரும் உலகம் முழுமைக்கும் சென்று சுவிசேஷத்தை அறிவித்து சபைகளை உருவாக்கினார்கள்.

    ஊழியத்தை விரிவுபடுத்தவும், சுவிசேஷம் எல்லா இடங்களுக்குச் சென்றடையவும், திருச்சபைகளை உருவாக்கவும் ஆண்டவர் அப்போஸ்தலர்களை அதாவது தமது சீஷர்களை பயன்படுத்தினார்.

    ஆனால் அந்த சீஷர்களைக் கொண்டு, ஆண்டவர் கிறிஸ்தவ மூல உபதேசங்களை எழுதவில்லை. கிறிஸ்தவத்திற்கென மூல உபதேசம் எழுத அதாவது கிறிஸ்தவர்களின் வாழ்க்கை நடைமுறைப் பற்றிய சட்டதிட்டங்களை எழுத ஆண்டவர் பவுலை தெரிந்துகொண்டார்.

    புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 புத்தகங்கள் உண்டு. அவற்றில் 14 புத்தகங்களை எழுதியவர் பவுல். எத்தனையோ பரிசுத்தவான்கள் கடிதங்கள், நிருபங்கள் எழுதியிருந்தாலும், பவுலின் கடிதங்களே வேதத்தில் அதிகம் இடம்பெற்றுள்ளது.

    பவுல் 13 நிருபங்கள் தான் எழுதியுள்ளார், எபிரெயர் நிருபத்தை பவுல் எழுதவில்லை என்று சிலர் நம்புவதுண்டு. மூலபாஷையாகிய கிரேக்க மொழியில், பவுல் எழுதிய 13 நிருபங்களின் மொழிநடையும், எபிரெயு நிருபத்தின் மொழிநடையும் ஒன்றுபோல் இருப்பதால், எபிரெயர் புத்தகத்தையும் பவுலே எழுதினார் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

    சவுல் எருசலேமில் உள்ள கிறிஸ்தவர்களை துன்புறுத்தி, சபையை பாழாக்கிக்கொண்டிருந்தார். இந்த பவுல் எருசலேமை மாத்திரம் அல்ல சுற்றுப்புறங்களிலும் இருக்கின்ற கிறிஸ்தவர்களையும் துன்புறுத்த நினைத்தார்.

    சிரியா தேசத்தின் தலைநகரம் தமஸ்கு. இந்த தமஸ்குவில் உள்ள கிறிஸ்தவர்களையும் சிறைப்பிடிக்க சவுல், பிரதான ஆசாரியரிடத்தில் நிருபங்களை கேட்டு வாங்கினார்.

    சவுல் எருசலேமில் மாத்திரம் அல்ல, தொலைதூரத்தில் உள்ள தமஸ்குவில் இருந்த கிறிஸ்தவர்களையும் துன்புறுத்த நினைத்தார் என்றால், அவர் எந்த அளவிற்கு யூதமார்க்கத்தின் மீதும், நான் ஒரு பரிசேயன் என்பதிலும் வைராக்கியமாய் இருந்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.


ஊழியம்
1 கொரிந்திரயர் 12:5
    ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.

    ஊழியங்களில் வித்தியாசம் உண்டு. அதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு சிலர் பெரிய திருச்சபைகளில் ஊழியம் செய்கிறார்கள். ஒரு சிலர் சிறிய கூரைகளிலும், வாடகை வீடுகளிலும், மிதிவண்டியிலும் சென்று ஊழியம் செய்கிறார்கள்.

    பெரிய சபைகளிலே ஊழியம் செய்கிறவர்கள், சிறிய சபைகளில் ஊழியம் செய்கிறவர்களைப் பார்த்து, நீங்கள் சிறிய ஊழியர் என்று சொல்வதும் தவறு. சிறிய ஊழியம் செய்கிறவர்கள் பெரிய திருச்சபை நடத்துபவர்களைப் பார்த்து, இவர்கள் பெரிய ஊழியர்கள் என்று சொல்லுவதும் தவறு. கர்த்தருடைய பார்வையில், இருவரும் கனம்பெற்றவர்களே. இருவரையும் ஆண்டவர் ஒரே விதத்தில் நேசிக்கிறார்.


    முதிர்ச்சியின் அடிப்படையில் நான் தான் பெரிய ஊழியன் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படியானால் ஸ்தேவான் சில நாட்களே ஊழியம் செய்தார். அவருடைய முதல் பிரசங்கத்தின்போதே அவர் கொலைசெய்யப்பட்டார். அப்படியானால் அவர் சிறிய ஊழியரா? இல்லை.

    எலியா 17 ஆண்டுகள் ஊழியம் செய்தார். 1 இராஜாக்கள் 17-ம் அதிகாரத்தில் தான் எலியா தனது ஊழியத்தை ஆரம்பித்தார். மோசே 40 ஆண்டுகள் ஊழியம் செய்தார். மோசே தனது 80-வது வயதில் தான் ஊழியத்தை துவங்கினார். அப்படியானால், எலியாவை விட மோசே பெரிய ஊழியனா? இல்லை. ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே விதமான முக்கியத்துவத்தையே ஆண்டவர் கொடுக்கின்றார்.

    நான் அதிக நாள் ஊழியம் செய்தால் அதினால் நான் முதிர்ச்சி அடைய முடியும் (முதிர்ச்சி, அனுபவம், வளர்ச்சி). ஆனால் முக்கியத்துவம் என்பது எல்லோருக்கும் ஒரே விதமான முக்கியத்துவமே.


    சவுல் தமஸ்குவிற்கு சமீபமாய் சேர்த்த போது வானத்திலிருந்து வந்த ஒளி அவனைச் சுற்றிலும் பிரகாசித்தது என்று வாசிக்கிறோம்.


    யாராவது ஒருவர் கிறிஸ்தவத்திற்கு விரோதமாக செயல்படுகிறவர் என்றால், அவர் செயல்படத் துவங்கும்போதே ஆண்டவர் அவரைத் தண்டிக்க வேண்டும், தடுத்து நிறுத்த வேண்டும் என்பது நம்முடைய நோக்கம். ஆனால் ஆண்டவர் அப்படி செய்ய மட்டார். காரணம், ஆண்டவரால் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது என்பதால் அல்ல, நம்முடைய விசுவாசத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆண்டவர் இப்படிச் செய்கிறார்.

    எருசலேமிற்கும் தமஸ்கூவிற்கும் இடைப்பட்ட தூரம் 220 கி.மீ. சவுல் தமஸ்குவிற்கு குதிரையில் தான் பிரயாணம் பண்ணினார். குதிரை வேகமாக ஓடும் விலங்கு. குதிரையினால் அதிகபடியாக ஒருமணி நேரம் மாத்திரமே ஓட முடியும். குதிரை ஒருமணி நேரம் வேகமாக ஓடினால், அதற்கு ஒருமணி நேரம் ஓய்வு தேவை. குதிரை ஓடாமல் நடந்து சென்றால், சுமார் நான்கு ஐந்து மணி நேரம் தொடர்ந்து நடந்து சொல்லும், ஆனால் ஓடினால், ஒருமணி நேரம் மாத்திரமே குதிரையினால் ஓட முடியும்.

    குதிரையினால் ஒருநாளைக்கு சுமார் 15 கி.மீ மாத்திரமே கடக்க முடியும். அப்படியானால் குறைந்தது 7 நாட்களுக்குப் பின்புதான் சவுல் தமஸ்குவைச் சென்றடைய முடியும்.

    சவுல் எருசலேமிலிருந்து புறப்படும்போது ஆண்டவர் சவுலை சந்தித்திருக்கலாம். ஆனால் ஆண்டவர் அப்படிச் செய்யவில்லை. சவுல் தமஸ்குவிற்கு சமீபித்தபோது தான் ஆண்டவர் சவுலை சந்திக்கிறார். ஏழுநாள் பிரயாணத்திற்கு பின்பே ஆண்டவர் சவுலை சந்தித்தார்.

    சவுல் தமஸ்குவில் உள்ள கிறிஸ்தவர்களை சிறைபிடிக்க பிரதான ஆசாரியரிடத்தில் நிருபங்களை வாங்குகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்ட உடனேயே, எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களில் சிலர், தமஸ்குவிற்கு சென்று, சவுல் நம்மை சிறைபிடிக்க வருகிறான் என்ற செய்தியை சொல்லிவிட்டார்கள்.

    தமஸ்குவில் இருந்த அனனியா என்பவருக்கு ஆண்டவர் தரிசனமாகி, நீ நேர் தெருவில் உள்ள யூதாவின் வீட்டிற்கு சென்று அங்கே சவுல் என்பவனை சந்தி என்று சொல்லுகிறார். அதற்கு அனனியா ஆண்டவரே, சவுல் தமஸ்குவில் உள்ள கிறிஸ்தவர்களை சிறைபிடிக்க வந்தவர் அல்லவா? நான் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என்று கேட்கிறார். இதிலிருந்து எருசலேமிலிருந்து ஆட்கள் தமஸ்குவிற்கு சவுலின் காரியத்தை சொல்ல வந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. (அப்போஸ்தலர் 9:11-14)

    இப்படி சவுலின் திட்டத்தை தமஸ்குவில் உள்ளவர்களுக்கு சொல்ல வந்தவர்களில் ஒருவர் தான் பர்னபாவாக இருந்திருக்க வாய்பு உள்ளது. சவுல் இரட்சிக்கப்பட்டு எருசலேமிற்கு சென்று, சீஷர்களோடு தன்னை இணைத்துக்கொள்ள நினைத்தபோது, சீஷர்கள் சவுலை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அவரை ஏற்றுக்கொண்டவர் இந்த பர்னபா. பர்னபா தான் சவுலை அப்போஸ்தலர்களுக்கு அறிமுகப்படுத்தி, தமஸ்குவில் சவுல் இயேசுவின் நாமத்தை தைரியமாய் பிரசங்கித்ததை எடுத்துரைத்தார். (அப்போஸ்தலர் 9:27)

    ஆண்டவர் சீஷர்களின் விசுவாசத்தையும், ஜெபத்தையும் அதிகப்படுத்தவே, சவுலை சந்திக்காமல் தாமதப்படுத்தினார். சவுல் நிருபங்களை வாங்கும்போது தமஸ்குவில் உள்ளவர்களுக்கு தகவல் கிடைத்திருக்கும். அன்றிலிருந்து அவர்கள் ஜெபிக்க ஆரம்பித்திருப்பார்கள். சவுல் பிரயாணம் செய்த ஏழு நாளும் அவர்கள் ஜெபித்துக்கொண்டு தான் இருந்திருப்பார்கள். கடைசியில் சவுல் தமஸ்குவிற்கு அருகில் வந்தபோது கர்த்தர் சவுலை சந்தித்தார்.

    உபத்திரவம் எங்கே இருக்கிறதோ அங்கே சபைகள் வலுப்பெறும். உபத்திரவம் உள்ள இடத்தில் சபைகள் பெருகத்துவங்கும்.

    சீனாவில் கிறிஸ்தவ மதத்திற்கு தடை. சீனர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாள் அவர்களை சிறையில் அடைத்துவிடுவார்கள். ஆனால் இன்று சீனாவில் மிகப் பெரிய எழுப்புதலை நாம் பார்க்க முடிகிறது. உலகத்தில் அதிவேகமாக சீனாவில் தான் சுவிசேஷம் பரவிக்கொண்டிருக்கிறது. காரணம் உபத்திரவம்.  உபத்திரவம் உள்ள இடத்தில் சபைகள் பெருகத்துவங்கும்.

    சீனாவில் அதிகாரப்பூர்வமான சபைகள் இல்லை. வீடுகளிலும், இரகசிய இடங்களிலுமே ஜனங்கள் இயேசுவை ஆராதித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நெருக்கடியின் மத்தியிலும் அநேகர் கிறிஸ்துவை தம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். உபத்திரவம் எங்கே உண்டோ அங்கே ஜெபம் அதிகரிக்கும், விசுவாசம் அதிகரிக்கும், பரிசுத்தம் அதிகரிக்கும்.

    நம்முடைய வாழ்க்கையிலும் கூட உபத்திரவத்தை மாற்ற ஆண்டவரால் முடியும், நம்முடைய பெலவீனங்களை மாற்ற ஆண்டவரால் முடியும், ஆண்டவர் ஏன் தாமதிக்கிறார் என்றால், நம்முடைய ஜெபம், நம்முடைய விசுவாசம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே.


    எனக்கு இந்த நேரத்தில் இதை செய்தால், இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று நாம் அநேக நேரங்களில் நினைப்பதுண்டு. ஆண்டவர் அதை ஒருபோதும் செய்ய மாட்டார். ஆனால் சரியான நேரத்தில் ஆண்டவர் செய்து முடிப்பார். ஆண்டவர் எந்த ஒரு காரியத்தையும் முந்தி செய்கிறவரும் அல்ல, பிந்தி செய்கிறவரும் அல்ல. ஏற்ற நேரத்தில் ஆண்டவர் கிரியை செய்வார்.

    இது உபத்திரவத்திற்கு மாத்திரம் அல்ல, திருமண காரியமாக இருந்தாலும், வேலைவாய்ப்பாக இருந்தாலும் ஆண்டவர் சரியான நேரத்தில் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். ஆண்டவர் செய்து முடிக்கும் வரை நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.


சவுலின் பண்புகள்
    சவுல் தமஸ்குவிற்கு சமீபித்த போது, வானத்திலிருந்து ஒரு ஒலி அவரைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவர் கீழே விழுந்தார்.

    சவுல் மிகச் சிறந்த கல்விமான். இவர் தர்ஷிஸ் பட்டணத்தைச் சார்ந்தவர். இவருடைய பெற்றோர் அலெக்சாண்ரியா பகுதியை சார்ந்தவர்கள்.

    கி.மு. 586-ம் ஆண்டு நேபுகாத்நேச்சார் எருசலேமை கைப்பற்றியபோது அங்குள்ள அனைவரையும் கைதுசெய்து தன் நாட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    எரேமியா என்ற தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்களுக்கு இப்படியாக தீர்க்கதரிசனம் உரைத்தார்: நீங்கள் உங்கள் பாவ வழிகளை விட்டு மனந்திரும்பாவிட்டால், ஆண்டவர் பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சாரை உங்கள் மேல் எழும்பப்பண்ணுவார். அவர் உங்களை அடிமைப்படுத்துவார் என்று எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்தார்.

    எருசலேமில் இருக்கின்ற ஒரு தீர்க்கன், என்னைக் குறித்து நல்ல முறையில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்பதைக் கேள்விப்பட்ட நேபுகாத்நேச்சார், எருசலேமைக் கைப்பற்ற தன் வீரர்களை அனுப்பும்போது, நீங்கள் எரேமியா என்ற தீர்க்கதரிசியை மிகவும் பக்குவமாக நடத்துங்கள். அவரை நீங்கள் கைது செய்ய வேண்டாம்.

    அவருக்கு விருப்பம் இருந்தால் அவர் இங்கே பாபிலோனுக்கு வரட்டும். அவரை நாம் நல்ல முறையில் பராமரித்துக்கொள்வோம். அவருக்கு விருப்பம் இல்லையென்றால், அவர் அங்கேயே இருக்கட்டும். அவருக்கு பாதுகாப்பிற்கு கொஞ்சம் ஆட்களை அங்கே வைத்துவிட்டு, மற்றவர்களை அடிமைகளாக இழுத்து வாருங்கள் என்று சொல்லி அனுப்புகிறார்.

    நேபுகாத்நேச்சாரின் வீரர்கள் எருசலேமைக் கைப்பற்றுகையில் எரேமியாவிடம் நீங்கள் பாபிலோனுக்கு வருகிறீர்களா? உங்களை எங்கள் அரசர் மிகவும் நேசிக்கிறார் என்று சொன்னபோது, எரேமியா பாபிலோன் செல்ல மறுத்துவிட்டார்.

    எரேமியாவும் அவரோடு கூட ஒருசில வாலிபர்களும், பெண்களும் இருந்தார்கள். எரேமியாவோடு இருந்தவர்களின் பாதுகாப்பிற்காக ஒரு ஆளுநரையும் பாபிலோனியர்கள் நியத்தார்கள்.

    எரேமியாவும் அவரோடு கூட இருந்தவர்கள் மாத்திரம் எருசலேமில் இருந்தார்கள். மற்றவர்கள் அனைவரும் சிறைபிடிக்கப்பட்டு அடிமைகளாக கொண்டுபோகப்பட்டார்கள்.  சில நாட்களுக்குப்பின்பு, எரேமியாவோடு கூட இருந்த வாலிப ஆண்களில் சிலர் நேபுகாத்நேச்சார் இவர்களுக்கென நியமித்த ஆளுநரை கொலை செய்துவிட்டார்கள்.

    எனவே, நேபுகாத்நேச்சார் நம்மை கொலை செய்துவிடுவார் என்ற பயத்தில், எரேமியாவும், அவரோடு கூட இருந்த ஜனங்களும் எகிப்திற்கு தப்பிச் சென்றார்கள்.

    இவர்கள் தப்பி எகிப்தின் கடற்கரைப் பகுதியில் வந்து தங்கினார்கள். இந்த பகுதிதான் பிற்காலத்தில் அலெக்சாண்ரியா என்று அழைக்கப்பட்டது. அலெக்சாண்டர் மாமன்னர் கி.மு. 334-ல் எகிப்தை கைப்பற்றிய போது, எரேமியா தப்பிச்சென்ற வாழ்ந்த அந்த பகுதிக்கு தனது பெயரை வைத்தார். அதுதான் அலெக்சாண்ரியா.

    எரேமியாவின் காலத்தில் தப்பிச்சென்ற யூதர்கள் அங்கேயே வாழ ஆரம்பித்தார்கள். இவர்களுடைய வம்சத்தில் பிறந்தவர் தான் சவுல். அக்காலத்தைய உலகத்தின் தலைசிறந்த கல்வி மையம் அலெக்சாண்ரியா. சவுலின் பெற்றோர் அலெக்சாண்ரியாவைச் சார்ந்தவர்கள். ஆனால் சவுல் தர்ஷிஸ் என்ற பகுதியில் தான் பிறந்தார்.

    சிரியா தேசத்தின் மேல் பகுதியில் தான் தர்ஷிஸ் இருக்கிறது. சவுல் சிரியா தேசத்தில் பிறந்ததால் அவர்கள் பேசக்கூடிய சீரிய பாஷை (சிரியாக்) சவுலுக்கு தெரியும். சவுல் அலெக்சாண்ரியாவில் வளர்ந்ததால், அவர்கள் பேசக்கூடிய எகிப்திய பாஷையும் சவுலுக்குத் தெரியும். பவுல் யூத குலத்தைச் சார்ந்தவர், பரிசேய வம்சத்தைச் சார்ந்தவர். எனவே சவுலுக்கு எபிரெய மொழியும் தெரியும். சவுலின் காலத்தில் எருசலேமில் பேசப்பட்டு வந்த மொழி அராமிய மொழி, சவுலின் குடும்பத்தார் எருசலேமுக்கு போக்கும் வரத்துமாக இருந்தபடியினால் அவருக்கு அராமிய மொழியும் தெரியும். உலகப் பொதுமொழியான கிரேக்க மொழி எல்லா நாடுகளிலும் எழுத்து மொழியாக இருந்தபடியினால் பவுலுக்கு கிரேக்க மொழியும் தெரியும். சவுல் ரோமக் குடியுரிமை பெற்றிருந்ததினால் அவருக்கு ரோமர்களின் மொழியாகிய இலத்தின் மொழியும் தெரியும். எனவே தான் சவுல் பன்மொழி பண்டிதர் என்று அழைக்கப்படுகிறார்.

    தனது உயர் கல்வியை கமாலியேல் என்ற சிறந்த ஆசிரியரிடம் கற்ற ஒரு கல்விமான் பவுல்.

    சவுல் எழுதிய நிருபங்களில், அவர் எழுதியுள்ள ஒருசில காரியங்களைப் பார்க்கும்போது, அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

    மல்யுத்தத்தைப் பற்றி பவுல் எழுதியதை வாசிக்கும்போது, ஒரு மல்யுத்த வீரனால் மாத்திரமே இப்படி எழுதமுடியும் என்று நாம் விளங்கிக்கொள்ள முடியும்.


    பாடல் பாடத்தெரியாத ஒருவர் பாடலைக் குறித்து பேசுவதற்கும், பாடல் ஆசிரியர் பாடலைக் குறித்து பேசுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நம்மால் உணர முடியும்.

    மல்யுத்தத்தைப்பற்றி பவுல் எழுதியதைப் பார்க்கும்போது அவர் ஒரு மல்யுத்த வீரனாக இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.

    பவுல் ஓட்டப்பந்தைய வீரரும் கூட. ஓட்டப்பந்தயத்தைப் பற்றி பவுல் எழுதும்போது, பந்தைய சாலையில் ஓடுகிறவர் இலக்கை மாத்திரமே நோக்கமாக கொண்டு ஓடுவார் என்று சொல்லுகிறார். ஓட்டப்பந்தையத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரால் இப்படியெல்லாம் எழுத முடியாது. இதிலிருந்து பவுல் ஒரு ஓட்டப்பந்தைய வீரர் என்பதை நாம் அறிய முடிகிறது.

    அப்போஸ்தலர் 9-ம் அதிகாரத்தில் ஒளியைப் பார்த்த பவுல் குதிரையிலிருந்து கீழே இறங்கவில்லை, கீழே விழுந்தார். ஏழுநாள் பிரயாணம் செய்து மிகவும் கலைத்துப்போன நிலையில், ஒளியைப் பார்த்த பவுல் கீழே விழுந்தும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. குதிரையில் ஓடிக்கொண்டிருந்த ஒருவர் கீழே விழுந்தால், கை கால்கள் உடையவும் வாய்ப்பு உண்டு. குதிரையிலிருந்து விழுந்து, மரித்தவர்களும் உண்டு. ஆனால் பவுலின் சரீரம் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை.

    இரண்டு முறை வாரினால் அடிபட்டேன் என்று பவுல் கூறுகிறார். ஒருமுறை வாரினால் அடிப்பது என்றால் ரோமர்களின் வழக்கப்படி 39 முறை அடிப்பார்கள். இப்படியான இரண்டு முறை வாரினால் அடிக்கப்பட்டேன் என்று பவுல் சொல்லுகிறார்.

    இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் The Passion of the Christ என்ற படத்தை பார்த்தால், இயேசுவை வாரினால் அடித்ததை தத்துரூபமாக காட்டியிருப்பார்கள். இப்படியாக இரண்டு முறை அடிவாங்கியவர் பவுல். (2 கொரிந்தியர் 11:24,25)

    யூதர்கள் பவுலை கல்லெறிந்து, பவுல் செத்துவிட்டான் என்று நினைத்து சென்றுவிட்டார்கள். ஆனாலும் பவுல் மரிக்கவில்லை.  உயிரோடுதான் இருந்தார்.   இப்படியாக நல்ல சரீர கட்டமைப்புக் கொண்டவர் இந்த பவுல்.

    இரத்தத்தைப் பார்த்து பயமடையாத ஒருவர் பவுல். ஸ்தேவானை கல்லெறிந்தவர்களுடைய உடைமைகளை பார்த்துக்கொண்டு அதற்கு சாட்சியாக இருந்தவர். எருசலேமில் மாத்திரம் அல்ல, தமஸ்கு வரை சென்று கிறிஸ்தவர்களை துன்பப்படுத்த வேண்டும் என்ற வெறிகொண்டவர்.


    பவுல் பன்மொழி பண்டிதர், அதிகம் படித்தவர், விளையாட்டு வீரர், மல்யுத்த வீரர், இரத்தத்தைக் கண்டு பயப்படாதவர். இப்படிப்பட்ட ஒருவருக்கு சுவிசேஷம் அறிவிக்க பேதுருவோ, யோவானோ அறிவித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார். பவுல் பரிசேயன் என்றபடியினால் யூத மத சட்டதிட்டங்களை நன்கு அறிந்த ஒருவர்.

    எனவே தான் பவுலை சந்திக்க ஆண்டவரே நேரடியாக வந்தார்.


    குதிரையிலிருந்து கீழே விழுந்த சவுலைப் பார்த்து ஆண்டவர் சவுலே சவுலே என்று உரத்த சத்தமாய் கூப்பிடுகிறார். உடனே சவுல் பயந்து, ஆண்டவரே நீர் யார் என்று கேட்கிறார்.

    அதற்கு ஆண்டவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே? முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம் என்று சொல்லுகிறார்.

    ஆண்டவர் உயிரோடு இருக்கும்போது இந்த வார்த்தையை ஒருக்காலும், ஒருவரிடத்திலும் பயன்படுத்தவே இல்லை. தன்னை மறுதலித்த பேதுருவிடமோ, காட்டிக்கொடுத்த யூதாஸ் காரியோத்திடமோ, சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்த பிரதான ஆசாரியர், வேதபாரகர், பரிசேயர், சதுசேயர், பிலாத்து, போர்ச்சேவகர்கள் ஒருவரிடமும் ஆண்டவர் இப்படி பேசவில்லை. ஆனால் சவுலைப் பார்த்து சொல்லுகிறார், நீ வெறும் காலால் முள்ளில் உதைத்துக்கொண்டிருக்கிறாய். வழி முள்ளுக்கு அல்ல, உனக்குத் தான் என்பதை ஆண்டவர் சவுலுக்கு உணர்த்துகிறார்.


    ஆண்டவர் இயேசு தேவைப்படும் நேரத்தில் தன்னை முள்ளாகவும் காட்டிக்கொள்கிறார். ஆண்டவர் முள் என்றால் நாம் அனைவருமே சேலைகள் தான். முள் சேலையில் பட்டாலும், சேலை முள்ளில் பட்டாளும் பாதிப்பு சேலைக்கத் தான்.

    சவுல் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், கர்த்தருடைய வார்த்தையைக் கேட்ட நிமிடத்தில் நடுங்கி, திகைத்தான் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அப்படியானால் ஆண்டவருடைய வார்த்தை எந்த அளவிற்கு பயங்கரமாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

    ஆண்டவரின் வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் சவுல் பயந்து ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கிறீர் என்று தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்.

    சவுலோடு கூட தமஸ்குவிற்கு வந்தவர்கள் சத்தத்தைக் கேட்டு ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள். இதைப்போலவே இயேசு கல்லறையிலிருந்து வெளியே வரும்போதும் காவலர்கள் பிரமித்து நின்றார்கள்.

    சவுல் இயேசுவைச் சந்தித்த பின்பு அவனுடைய கண்கள் குருடாக்கப்பட்டது. மூன்று நாள் சவுல் பார்வை இல்லாதவனாய் இருந்தான்.


    சவுல் மூன்று நாள் பார்வையில்லாதவனாய் புசியாமலும், குடியாமலும் இருந்தார். மிகப்பெரிய வீரனான சவுலை ஆண்டவர் சந்தித்தபோது, இந்த அனுபவத்தை அவன் வாழ்நாள் முழுவதும் மறக்கக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்தார். மூன்று நாள் பவுல் அதிர்ச்சியில் இருந்தார்.


    பின்பு கர்த்தர் அனனியா என்பவரைச் சந்தித்து, சவுலின் வீட்டிற்கு போகச் சொல்லுகிறார். பவுல் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேலுக்கும் என் நாமத்தை அறிவிக்கும்படி நான் தெரிந்துகொண்ட பாத்திரம் என்று பவுலைக் குறித்து ஆண்டவர் சொன்னார்.

    இங்கே அனனியாவிடம் பேசியது கர்த்தர் என்று வாசிக்கிறோம். உண்மையில் அனனியாவோடு பேசியது இயேசுவானவர் தான்.

    எப்படியென்றால், மூன்று நாளைக்கு முன் சவுலிடம் பேசியது இயேசுவானவர் தான். அந்த இயேசு தான் அனனியாவிடம் வந்து என் நாமத்தை அறிவிக்கும்படி நான் தெரிந்துகொண்ட பாத்திரம் என்று சொல்லுகிறார். இப்பொழுது இயேசுவின் நாமத்தில் தான் சபை நடந்து கொண்டிருக்கிறது. எனவே அனனியாவிடம் பேசியது இயேசுவானவர் தான்.

    அப்போஸ்தலர் 9:15-ல் இயேசுவானவர் பேசியரை வேதத்தில் கர்த்தர் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த கர்த்தர் என்ற சொல்லின் கிரேக்கப் பதம் குறியோஸ். குறியோஸ் என்பதன் எபிரெய பதம் யாஃவே. யாஃவே என்பதன் தமிழ் பதம் யெகோவா. இதன் மூலமாக இயேசுதான் யெகோவா, யெகோவா தான் இயேசுவானவர் என்பது நிருபனமாகியது.

    அப்போஸ்தலர் 9:5-ல் நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே என்று இயேசுவானவர் சவுலிடம் சொல்லுகிறார்.

    அப்போஸ்தலர் 9:15-ல் சவுல் என்னுடைய நாமத்தை அறிவிப்பதற்காக நான் தெரிந்து கொண்ட பாத்திரம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    அப்போஸ்தலர் 13:2-ல் பர்னபாவையும், சவுலையும் நான் அழைத்த ஊழியத்திற்காக பிரித்து விடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார்.

    இதிலிருந்து பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இவர்கள் மூவரும் தனித்தனி நபர்கள் அல்ல, ஒரே நபர் தான் என்பது நிருபனமாகிறது.

    இதைப்போலவே அப்போஸ்தலர் 5:3,4 இந்த வசனங்களில் பரிசுத்த ஆவியானவரும், பிதாவும் ஒருவரே என்று வாசிக்க முடியும்.

    நமக்கு ஒரே தேவன் இருக்கிறார், திரித்துவம் என்ற பதம் வேதத்தில் இல்லை என்றாலும், அவர் திரித்துவமாக (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) செயல்படுகிறார் என்பதை அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்தே நாம் புரிந்கொள்ள முடிகிறது.


    அனனியாவின் மூலமாக சவுல் பார்வை பெற்றுக்கொண்டு, தாமதமின்றி ஆலயங்களில் இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

    பவுல் அநேக நாள் தமஸ்குவில் தங்கி, ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவித்து வந்தார். பின்பு, யூதர்கள் அவரை கொலை செய்ய வகை தேடியதால், மதிலிலிருந்து கூடைவழியாக இறக்கப்பட்டு, அரபி தேசத்திற்கு சென்றார். மூன்று ஆண்டுகள் அரபியில் இருந்துவிட்டு பின்பு தான் பவுல் எருசலேமிற்கு வருகிறார்.

    தமஸ்குவிலிந்து பவுல் அரபிதேசத்திற்கு சென்றார் என்று அப்போஸ்தலர் நடபடிகளில் நாம் பார்க்க முடியாது. பவுல் காலத்தியருக்கு எழுதின நிருபத்தில் இதை விளங்கப்படுத்துகிறார். (கலாத்தியர் 1:17,18)


    அரபிதேசத்திலிருந்து வந்த சவுல் சீஷர்களோடு சேர்ந்துகொள்ளப்பார்த்தார். ஆனால், சீஷர்கள் அவரை ஏற்றக்கொள்ளவில்லை. சவுல் ஒற்றனாக இருப்பான் என்று சீஷர்கள் பயந்தார்கள்.

    ஆனால், பர்னபா என்பவர் சவுலை ஏற்றுக்கொண்டார்.


பேதுரு
    பேதுரு யோப்பா என்ற பட்டணத்திற்கு போகிறார். யோனா தீர்க்கதரிசி கப்பல் ஏறிய இடம் இந்த யோப்பா பட்டணம். யோப்பா பட்டணத்தில் ஒரு சீஷி இருந்தாள். அவள் பெயர் தொற்காள். தொற்காள் என்பது கிரேக்க பாஷை.

    தொற்காள் வியாதிப்பட்டு மரித்தபோது, பேதுரு அவளை உயிரோடு எழுப்பினார். அதினால் அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

    பின்பு பேதுரு யோப்பா பட்டணத்தில் தோல் பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிற்கு சென்று, அநேக நாள் அங்கே தங்கியிருந்தார்.


அப்போஸ்தலர் பத்தாம் அதிகாரம்
===============
    அப்போஸ்தலர் 9-ம் அதிகாரம் வரையிலும் மற்ற தேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற யூதர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் மாத்திரமே சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. இதுவரையில் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்படவில்லை.

    அப்போஸ்தலர் 9-ம் அதிகாரம் வரை அப்போஸ்தலர்களும் ஏனைய சீஷர்களும் இயேசு கற்ப்பித்த மார்க்கம் என்பது யூதர்களுக்கானது என்று தான் நம்பினார்கள்.

    இவர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் இன்னும் கொடுக்கப்படவில்லை. இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அந்தியோகியா என்ற புறஜாதி பட்டணத்தில் தான் கொடுக்கப்பட்டது. (அப்போஸ்தலர் 11:26)

    9-ம் அதிகாரம் வரையிலும் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் அனைவருமே யூதர்கள். இவர்கள் கிறிஸ்துவை ஏற்றக்கொண்டாலும், தேவாலயத்திற்கு சென்று பண்டிகைகளை கொண்டாடுதல், பலி செலுத்துதல், விருத்தசேதனம் பண்ணுதல் போன்ற யூத முறைகள் அனைத்தையும் செய்து கொண்டிருந்தார்கள்.

    இயேசு கற்ப்பித்த மார்க்கம் என்பது யூதர்களுக்கு மாத்திரம் தான். யூதர்களுக்காகவே இயேசு வந்தார். அவர்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கும்படியாகவே இயேசு வந்தார். எனவே, இயேசுவின் இரத்தத்தினால் மீட்பு என்பது யூதர்களுக்கானது மாத்திரேமே என்று அவர்கள் நம்பினார்கள்.

    சுவிசேஷம் யூதர்களுக்கு மாத்திரமே என்று நம்பிக்கொண்டிந்த பேதுருவோடு ஆண்டவர் சொப்பனத்தின் மூலம் பேசினார்.

    பேதுரு சொப்பனம் கண்ட நேரம் மத்தியானம் 12 மணி. பசி எடுக்கும் நேரம். பேதுரு மேல் வீட்டில் இருக்கிறார். கீழே உணவு தயார் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. தோல் பதனிடுகிறவனாகிய சீமோனின் வீட்டிற்கு மேலே தனி அரை எதுவும் இல்லை. வீட்டிற்கு மேலே சென்றால், வெயில் தலையில் படும்.  வீட்டிற்கு மேலே நின்று பார்த்தால் அருகாமையில் கடல் இருப்பதை பார்க்க முடியும். பேதுரு வீட்டிற்கு மேலே மத்தியான வெளியில் ஜெபிப்பதற்காகவோ, தூங்குவதற்காகவோ செல்லவில்லை. வீட்டின் மேல் ஏறி அந்த இயற்கை அழகை இரசிக்கச் சென்றார்.

    மத்தியான நேரம் என்பதால் பேதுருவுக்கு பசி எடுத்தது. கீழே வீட்டில் சாப்பாடு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது. எப்பொழுது நம்மை கூப்பிடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு பேதுரு மேலே அமர்ந்திருக்கிறார்.

    அப்பொழுது வானத்திலிருந்து ஒரு பெரிய துப்பட்டி ஒன்று வந்தது. அதில் சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், விருட்சங்களும், ஊரும் பிராணிகளும், பறவைகளும் இருந்தன. (எ.கா பன்னி, ஆமை, நண்டு, இறால், கனவாய், குரங்கு, பாம்பு, நத்தை, கழுகு, காகம்)

    இந்த அனைத்து உணவுகளும் யூதர்கள் அறுவெறுக்கின்ற உணவுகள். பேதுருவே நீ பசியாய் இருக்கிறாய்? இவைகளை அடித்துப் புசி என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.

    பேதுரு ஆண்டவரைப் பார்த்து: ஆண்டவரே, நான் ஒரு யூதன். இவையெல்லாம் எங்களுக்கு தீட்டான உணவுகள் நான் எப்படி புசிக்க முடியும் என்று கேட்கிறார். உடனே ஆண்டவர் நான் பரிசுத்தப்படுத்தினதை நீ எப்படி தீட்டாக எண்ணலாம் என்று கேட்கிறார்.

    இந்த தரிசனத்தின் மூலமாக பேதுரு சுவிசேஷமானது யூதர்களுக்கானது மாத்திரம் அல்ல, புறஜாதிகளுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்துகொள்ளுகிறார்.


    பேதுருவுக்கு ஆண்டவர் இந்த தரிசனத்தை கொடுத்தின் மூலமாக பழைய ஏற்பாட்டு சட்டதிட்டங்கள் யூதர்களுக்கு மாத்திரமானது, புறஜாதிகள் யூதர்களின் சடங்கு முறைகளை பின்பற்ற வேண்டிய தேவை இல்லை என்பதை விளங்கப்படுத்துகிறார்.

    பழைய ஏற்பாட்டில் உள்ள கட்டளைகளையும், சட்டதிட்டங்களையும் எடுத்துக்கொண்டால் அவற்றில் சில காரிங்கள் யூதர்களுக்கும், புறஜாதியாருக்கும் உரியவை. சில காரிங்கள் யூதர்களுக்கு மாத்திரம் உரியவை.

    பழைய ஏற்பாட்டில் உள்ள கற்பனைகள் பத்து (10). ஆனால் கட்டளைகள் அறுநூற்று பதின் மூன்று (613).
    
    பத்து கற்பனைகளில் செய்ய வேண்டாம் என்று சொல்லும் கற்பனைகள் எட்டு உள்ளது. செய்ய வேண்டும் என்று சொல்லுகிற கற்பனைகள் இரண்டு உள்ளது.


செய்ய வேண்டும் என்று சொல்லும் கற்பனைகள்:
4. ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக.

5. தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக.


செய்ய வேண்டாம் என்று சொல்லும் கற்பனைகள்:
1. என்னைத்தவிர வேறே தெய்வங்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

2. விக்கிரகத்தை உண்டாக்க வேண்டாம்.

3. என் நாமத்தை வீணிலே வழங்க வேண்டாம்

6. கொலை செய்ய வேண்டாம்

7. விபச்சாரம் செய்ய வேண்டாம்

8. களவு செய்ய வேண்டாம்

9. பொய் சாட்சி சொல்ல வேண்டாம்

10. பிறனுடைய பொருளை இச்சிக்க வேண்டாம்.

    இந்த பத்து கற்பனைகளும் யூதர்களுக்கு மாத்திரம் உண்டானது அல்ல. இவையனைத்தையும் யூதர்களும், புறஜாதிகளும் கடைபிடிக்க வேண்டும்.


    கட்டளைகள் மொத்தம் 613. இவற்றில் 248 கட்டளைகள் இதை செய்ய வேண்டும் என்று சொல்லும் கட்டளைகள். 365 கட்டளைகள் செய்ய வேண்டாம் என்று சொல்லும் கட்டளைகள்.

    இந்த கட்டளைகளில் சில காரியங்கள் யூதர்களுக்கு மாத்திரமே உரிய கட்டளைகள். எ.கா விருத்தசேதனம், இந்த உணவை சாப்பிட வேண்டும், இந்த உணவை சாப்பிடக்கூடாது என்பது யூதர்களுக்கு மாத்திரமானது. புறஜாதிகளைப் பொருத்தவரை நாம் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம்.

    கர்த்தர் பேதுருவுக்கு கொடுத்த தரிசனத்தின் படி புறஜாதியாருக்கு ஆண்டவர் எந்த ஒரு உணவையும் ஒதுக்கிவைக்கவில்லை. நாம் எந்த உணவையும் சாப்பிடுவதற்கு உரிமை உண்டு.

    பன்னி, பாம்பு, போன்றவற்றை ஆரோக்கியம் சம்பந்தமாக சாப்பிடக்கூடாது என்று சொல்லுவது சரியானது. ஆனால் வேதத்தில் போடப்பட்டுள்ளது அதினால் நான் சாப்பிடமாட்டேன் என்று சொல்வது முட்டாள்தனம். வேதத்தில் சொல்லப்பட்ட உணவு முறைகளை தான் நான் கடைபிடிப்பேன் என்றால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான உணவுகளை நாம் சாப்பிட முடியாது.

    புறஜாதிகளுக்கென்று எந்த உணவையும் கர்த்தர் தடைசெய்யவில்லை. பேதுரு கண்ட தரிசனத்திற்கு பிறகு நாம் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.


கொர்நேரியு
    கொர்நேலியு என்பவர் ஒரு நூற்றுக்கு அதிபதி. இவர் யூதன் அல்ல. இவர் ஒரு ரோமன். பேதுருவின் மூலமாக புறஜாதியான கொர்நேலியுவிற்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.

    கொர்நேலியு ஒரு சாதாரண மனிதர் அல்ல. 100 ரோம வீரர்களுக்கு தலைவன். அப்படிப்பட்ட கொர்நேலியு பேதுருவைப் பார்த்ததும், பேதுருவின் காலில் விழுந்தார்.

    உடனே, பேதுரு நான் எவ்வளவு பெரிய ஊழியன், ரோம அதிகாரியே என்னுடைய காலில் விழுந்து வணங்குகிறான் என்று பெருமைப்படவில்லை. உடனே, பேதுரு கொர்நேலியுவை தூக்கி விடுகிறார். எழுந்திரும் நானும் சாதாரண மனிதன் தான் என்று சொல்லுகிறார்.

    நாம் எவ்வளவு பெரிய ஊழியராக இருந்தாலும், ஒருவர் நம்முடைய காலில் விழுந்து வணங்குவதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அது ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியம்.

    விசுவாசிகளாகிய நாமும் ஒருபோதும் ஊழியர்களின் காலிலோ, தலைவர்களின் காலிலோ விலக்கூடாது. அதை ஆண்டவர் ஒருபோதும் விரும்புகிறவர் அல்ல.

    நாம் விலவேண்டிய ஒரே இடம், ஆண்டவருடைய பிரசன்னம் மாத்திரமே.

    பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்ட கொர்நேலியுவின் வீட்டாரும், அவன் வீட்டில் கூடியிருந்த அனைவரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் பெற்றார்கள்.
    
    அப்போஸ்தலர் நடபடிகள் ஐந்தாம் பாகம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிக்கிறேன்.  ஆதி திருச்சபையைக் குறித்த ஆழமான சத்தியங்களையும், சபை வரலாறு பற்றியும் அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிக்கிறேன்.
    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  ஆமென்......!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.