Type Here to Get Search Results !

அப்போஸ்தலர் நடபடிகள் வேத ஆராய்ச்சி | Acts Bible Study Chapter 13-15 | Part 7 | Jesus Sam

==========
அப்போஸ்தலர் நடபடிகள் (பாகம் ஏழு)
=======
அப்போஸ்தலர் பதிமூன்றாம் (13) அதிகாரம்
==========

பவுலின் முதலாம் மிஷனெரி பயணம்:
பவுல் தமஸ்வில் இரட்சிக்கப்பட்டு, அங்கிருந்து அரபி தேசத்திற்கு சென்றார். அங்கியிருந்து தமஸ்குவிற்கு வந்தார். பின்பு, தமஸ்குவிலிருந்து எருசலேம் வந்தார். பின்னர், எருசலேமிலிருந்து தர்சுவுக்குச் சென்றார். தர்சுவிலிருந்து அந்தியோகியா சென்றார். இப்படி பல இடங்களுக்கு பவுல் பிரயாணம் செய்திருந்தாலும் அவற்றை நாம் மிஷனெரி பயணங்கள் என்று சொல்ல முடியாது.

இந்த இடங்களுக்கெல்லாம் ஊழியம் செய்யும்படியாக பவுல் செல்லவில்லை, சென்ற இடங்களில் ஊழியம் செய்தார். சென்ற இடங்களில் ஊழியம் செய்தவற்கும், ஊழியம் செய்வதற்காகவே செல்வதற்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு.

அப்போஸ்தலர் 13-ம் அதிகாரத்திற்கு பின்பு பவுல் மூன்று மிஷனெரி பயணங்களை மேற்கொண்டார். இவையனைத்தும் அவர் ஊழியத்திற்காக பிரயாணம் செய்த இடங்கள். அப்போஸ்தலர் 9-12 அதிகாரங்களில் பவுல் மிஷனெரி பயணம் மேற்கொள்ளவில்லை, சென்ற இடங்களில் சுவிசேஷம் அறிவித்து வந்தார்.

அப்போஸ்தலர் 13:1–14:28 வரை உள்ள வசனங்களில் பவுலின் முதலாவது மிஷனெரி பயணத்தை நாம் பார்க்க முடியும்.


செல்லும் இடங்களில் ஊழியம் செய்தல் என்பது ஒருவிதம், ஊழியம் செய்வதற்காக புறப்படுதல் என்பது ஒருவிதம். இரண்டு விதமான ஊழியங்களையும் ஆண்டவர் கனப்படுத்துகிறார், இரண்டு விதமான ஊழியங்களிலும் ஆண்டவருடைய நாமம் மகிமைப்படுகிறது, இரண்டு விதமான ஊழியங்களிலும் ஆத்துமாக்கள் ஆதாயம் செய்யப்படுகிறார்கள். இந்த இரண்டு விதமான ஊழியத்தையும் ஆண்டவர் ஏற்றுக்கொள்ளுகிறார்.

பவுல் 9-12 அதிகாரங்களில் அநேக இடங்களுக்கு சென்றிருந்தாலும், அந்த இடங்களுக்கு போக வேண்டும் என்று ஆண்டவர் கட்டளையிடவில்லை, பவுல் சென்ற இடங்களில் ஆண்டவர் பவுலை பயன்படுத்தினார்.

ஆனால், அப்போஸ்தலர் 13-ம் அதிகாரத்திற்கு பிறகு பவுல் மூன்று மிஷனெரி பிரயாணங்களை மேற்கொள்ளுகிறார், கடைசியாக ரோமாபுரிக்கு செல்கிறார். இவையனைத்தும் கடவுள் கட்டளையிட்டு பவுல் சென்ற இடங்கள்.

கடவுள் கட்டளையிட்டு நாம் ஒரு இடத்திற்கு செல்லும்போது, நாம் உரிமையோடு கடவுளிடத்தில் நம்முடைய காரியங்களை கேட்ட முடியும். நாம் விரும்பக்கூடிய இடங்களில் ஊழியம் செய்யும்போது, நாம் உரிமையினால் கடவுளிடத்தில் எதையும் கேட்க முடியாது, கிருபையின் மூலமாகவே கேட்க முடியும்.

இன்றைய கிறிஸ்தவ உலகிற்கு இதுபோன்ற இரண்டு ஊழியங்களும் தேவை. இவை இரண்டில் முக்கியமான ஊழியம் எதுவென்றால், கடவுள் கட்டளையிடுகின்ற இடத்திற்கு நாம் செல்லவேண்டும். அதைத்தான் ஆண்டவர் அதிகம் விரும்புகிறார்.


இந்தியாவில் வசிக்கிற ஒரு ஊழியர் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வசிக்கிற தங்கள் உறவினரின் வீட்டிற்கு செல்கிறார் என்றால், அங்குள்ள திருச்சபையின் தலைமை போதகரிடம் நான் என் உறவினர் வீட்டிற்கு வந்திருக்கிறேன், சில நாட்கள் இங்குதான் இருப்பேன், என்னை உங்கள் ஊழியத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை.

ஏனென்றால் நாம் அதிக பணம் செலவு செய்து, வேறு ஒரு நாட்டிற்கு வந்திருக்கிறோம். வந்ததோடு, அங்குள்ள சபைகளுக்கும் ஆண்டவரின் வார்த்தையை பிரசங்கித்தால் நல்லது தானே என்று யோசிக்கிறோம். அதில் எந்த தவறும் இல்லை.

ஆனால், வெளிநாட்டில் உறவினர் வீட்டில் இருக்கின்ற நாம், ஒரு ஊழியரை தொலைபேசியில் அழைத்து, நான் சிலநாட்கள் இங்குதான் இருப்பேன் என்னை ஊழியத்தில் பயன்படுத்துங்கள் என்று சொல்லும்போது, அது அந்த ஊழியருக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். அந்த ஊழியர் அந்த நாட்களில் ஊழியம் செய்தவற்கான வேறு ஏற்பாடுகளை செய்திருப்பார். நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள் என்றபடியினால், உங்களிடத்தில் இல்லை நீங்கள் வரவேண்டாம் என்று சொல்லவும் முடியாமல், நாம் வேறு ஒருவரை ஒழுங்குபடுத்தியிருக்கிறோமே, அவருக்கு என்ன பதில் செல்வது என்றும் தெரியாமல், சில சிக்கல்களை அவர் சந்திக்க நேரிடும்.


இந்தியா, இலங்கை போன்ற வளரும் நாடுகளிலிருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு நாம் செல்லும்போது, அங்குள்ள சபைகளில் ஊழியம் செய்ய அனுமதி கேட்டு அவர்கள் அனுமதி கொடுத்துவிட்டால், நம்மையும் அறியாமல், இவர்கள் வளர்ந்த நாடுகள், எனவே கவர்ச்சியான காணிக்கையை நிச்சயம் கொடுப்பார்கள் என்ற மனநிலை இந்திய, இலங்கை ஊழியர்களுக்கு உண்டு.

அதைப்போலவே நாம் அனுமதி கேட்கும்போது அந்த ஊழியர், இந்தியா, இலக்கை போன்ற வளரும் நாடுகளிலிருந்து வந்திருக்கிறார்கள், எனவே நல்ல ஒரு தொகையை அவர்களுக்கு காணிக்கையாக தர வேண்டும் என்ற நிர்பந்தமும் அவர்களுக்கு உண்டாகிறது. என்னதான் வளர்ந்த நாடுகளாக இருந்தாலும், அவர்களுடைய திருச்சபையிலும் அநேக தேவைகள் இருக்கத்தான் செய்கிறது. எல்லாவற்றையும் மீறி ஏதோ ஒரு பெரிய தொகையை கொடுத்துதான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்திற்குள் அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

சபையின் தலைவர் இயேசு கிறிஸ்து.  ஒரு சபையின் தலைமைப்போதகர் இந்த இந்த நாட்களில் இந்த இந்த ஊழியம் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறார் என்றால், அந்த திட்டங்களை கொடுத்தர் பரிசுத்த ஆவியானவர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இந்த தேதியில் இங்குதான் இருக்கிறேன், என்னை பயன்படுத்துங்கள் என்று சொல்லும்போது, அந்த தேவனுடைய திட்டம் பாதிக்கப்படுகிறதல்லவா?

எல்லாமே ஊழியம், எல்லாமே கடவுளுடைய வார்த்தை தான் என்றாலும், நாம் செல்லக்கூடிய இடங்களில் நாம் ஊழியம் செய்ய விருப்பப்படும்போது, அதிலே சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் நினைக்கலாம், நான் இந்த இந்த நாட்களில் இங்குதான் இருக்கிறேன் என்னை பயன்படுத்துங்கள் என்று நான் சொல்லும்போது, அவர்கள் விரும்பம் இருந்தால்தானே என்னைப் பயன்படுத்தப்போகிறார்கள். விருப்பம் இல்லை என்றால், பயன்படுத்த மாட்டார்களே என்று நீங்கள் நினைக்கலாம். நாம் ஒரு காரியத்தை புரிந்து கொள்ள வேண்டும், அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும், அவர் உங்கள்மேல் உள்ள மரியாதையின் நிமித்தமாக அதை உங்களிடம் காண்பித்துக்கொள்ள மாட்டார். அவர்கள் தாராளமாக நீங்கள் வாருங்கள் உங்களுக்கு மேடை கொடுக்கிறோம் என்று சொன்னாலும், அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது என்பதை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏதேனும் ஒரு ஊழியர் உங்களிடம் ஐயா, நீங்கள் எங்கள் இடத்திற்கு வந்து ஊழியம் செய்ய வேண்டும் என்று எங்களுக்கு ஆசையாய் இருக்கிறது. ஆனால், உங்களை அழைக்கும் அளவிற்கு எங்களிடம் பணவசதி இல்லை, நீங்கள் ஒருவேலை வேறு ஏதேனும் ஊழிய காரியமாக எங்கள் பகுதிக்கு வந்தால், உங்களை நாங்கள் அன்போடு ஏற்றுக்கொள்கிறோம், நீங்கள் நிச்சயம் எங்கள் சபைக்கும் வந்து ஊழியம் செய்ய வேண்டும் என்று சொல்வாரானால், அப்படிப்பட்ட இடங்களுக்கு நாம் தாராளமாக போகலாம்.

நாம் ஒரு இடத்திற்கு ஊழியத்திற்காக செல்லும்போது, அங்கு நம்மை பார்க்கின்ற ஏதோ ஒரு ஊழியர், ஐயா உங்களுடைய பிரசங்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, எங்கள் சபைக்கும் நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று சொல்லும்போது, அவர் உண்மையிலேயே நம்மை ஊழியத்திற்காக அழைக்கிறாரா? இல்லையென்றால், இவ்வளவு பெரிய ஊழியரை பார்த்துவிட்டோமே எதையும் சொல்லாமல் சென்றால் அவர் கோபித்துக்கொள்வாரே என்று நினைத்துச் சொல்கிறாரா? என்பதை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் நமக்குத் தேவை.

நாம் யாரையாவது ஒருவரைப் பார்த்து நன்றாக இருக்கிறீர்களா? என்று கேட்டால், நன்றாக இருக்கிறேன் என்று தான் சொல்லுவோம். யாராவது நம்மிடம் வந்து, நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்கும்போது, நீங்களாவது என்னுடைய குறைவுகளை அறிந்து என்னிடம் வந்து கேட்கிறீர்களே, சற்று அமருங்கள் என்னுடைய குறைவுகளை சொல்லுகிறேன் என்று சொல்லமாட்டோம். நம்முடைய சரீரத்திலே, குடும்பத்திலே, சபைகளிலே எவ்வளவு பிரச்சனைகள் போராட்டங்கள் இருந்தாலும், நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லுவோம்.

அதைப்போலவே வேறு ஏதேனும் ஊழிய ஸ்தலங்களில் நாம் இருக்கும்போது, நீங்கள் எங்கள் சபைக்கும் வாருங்கள் என்று யாராவது அழைத்தால், அவர்கள் என்ன மனநிலையில் நம்மை அழைக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் போகிற இடங்களில் ஊழியம் செய்யும்போது, இதுபோன்ற சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதினால், கர்த்தர் அனுப்புகிற இடங்களுக்குச் சென்று நாம் ஊழியம் செய்வது சிறந்ததாகும்.

நாம் ஒரு இடத்திற்கு ஊழியத்திற்கு சென்றால், அங்குள்ள விசுவாசிகள் கொடுக்கும் காணிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடாது. விசுவாசி அந்த திருச்சபையின் ஊழியர் மூலமாக உங்களுக்குக் கொடுத்தால், அதை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். சபையின் தலைமை ஊழியருக்குத் தெரியாமல், உங்களிடத்தில் விசுவாசிகள் காணிக்கை கொடுத்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

அதைப்போல ஊழியத்திற்குச் செல்லும் இடங்களில், அங்குள்ள விசுவாசிகளிடம் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது.  அவர்களுடைய தனிப்பட்ட தகவல்களையும் கேட்கக்கூடாது. (எ.கா விலாசம், தொழில், தொலைபேசி எண், மின் அஞ்சல்).

எல்லாமே கடவுளுடைய பிள்ளைகள் தான், எல்லாமே ஊழியம் தான் என்றாலும் அவற்றில் ஒழுக்கம் மிக முக்கியம். சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது என்று பவுல் கூறுகிறார். (1 கொரிந்தியர் 14:40)

நாம் வேறு இடத்திற்கு ஊழியம் செய்ய போகிறோம் என்றால், எதையும் தாங்கக்கூடிய விதத்தில் நாம் பக்குவடைந்திருக்க வேண்டும். அவர்கள் கொடுக்கின்ற இடம் நமக்கு ஏற்ற விதத்தில் இல்லை என்றாலும் அங்கே தங்குவதற்கு நம்மை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுடைய உணவு பழக்கவழக்கங்கள் நமக்கு ஒத்துவரவில்லை என்றாலும் அதையும் நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு இப்படிப்பட்ட ஒரு இடம் தான் வேண்டும், எனக்கு இந்த உணவு தான் வேண்டும் என்று சொல்லக்கூடாது.

பவுல் மூன்று மிஷனெரி பயணங்களின்போதும் கிடைத்த இடத்தில் தங்கினார், கிடைத்த உணவுகளை சாப்பிட்டார். ஒவ்வொரு ஊழியனும் பவுலிடமிருந்து இந்த காரியங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.


பவுல் தனது முதலாவது மிஷனெரி பயணத்தில் சுமார் 1400 மைல் துரம் பிரயாணம் செய்தார். மைல் என்பதை கிலோ மீட்டரில் கணக்கிட வேண்டுமானால் தொகையை ஐந்தால் வகுத்து, எட்டால் பெருக்க வேண்டும். அப்படியானால் 1400 மைல் என்பது 2240 கி.மீ.

பவுல் முதலாவது மிஷனெரி பயணத்தை அந்தியோகியாவிலிருந்து துவங்குகிறார். முதல் மிஷனெரி பயணத்தின் முக்கிய இடங்கள் பாப்போ, பெர்கே, பிசிதியா, இக்கோனியா, லிஸ்திரா, தெர்பை.

பவுலின் முதலாவது மிஷனெரி பயணத்தை அப்போஸ்தலர் 13:1-14:28 வரை உள்ள வசனங்களில் லூக்கா அழகாக விவரித்து எழுதியுள்ளார்.

பவுலின் இந்த முதலாவது மிஷனெரி பயணத்தின்போது பவுலோடு கூட பர்னபாவும், பர்னபாவின் சகோதரி மரியாளின் மகன் யோவான் மாற்குவும் சென்றார்கள்.

பவுல், பர்னபாவோடு சென்ற மாற்கு இடையிலேயே பின்வாங்கிவிடுகிறார். ஏன், மாற்கு, பவுல் பர்னபாவோடு ஊழியத்தை தொடரவில்லை என்ற சரியான காரணங்கள் நமக்கு தெரியாவிட்டாலும், பெரும்பாலான அறிஞர்கள் வயது வித்தியாசம் காரணமாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.

பவுல் வயது முதிர்ந்த ஒருவர். பவுலைவிட வயதில் மூத்தவர் பர்னபா. ஆனால் மாற்கு ஒரு வாலிபர். எனவே, வாலிபனான மாற்குவினால் அனுபவத்திலும், ஊழியத்திலும் முதிர்ச்சியடைந்த பவுல், பர்னபாவோடு இணைந்து ஊழியம் செய்யமுடியவில்லை. இடையிலேயே பின்வாங்கிவிடுகிறார்.

மாற்கு ஊழியத்தை விட்டுச்செல்லவில்லை, பவுல் பர்னபா என்ற இருவரையும் விட்டுதான் சென்றார். பின்பு பேதுருவோடு இணைந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பேதுரு மாற்குவிற்கு இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை சொன்னதின் அடிப்படையில் தான் பரிசுத்த ஆவியானவர் மாற்குவைக் கொண்டு ஒரு சுவிசேஷத்தை எழுதுகிறார். இந்த மாற்கு தான் மாற்கு நற்செய்தி நூலை எழுதியவர்.

மாற்கு சுவிசேஷத்தை பேதுருவின் சுவிஷேம் என்றும் சொல்லலாம். மாற்கு எழுதினாலும், கற்றுக்கொடுத்தவர் பேதுரு.


பவுலின் இரண்டாவது மிஷனெரி பயணத்தின்போது மாற்கு பவுலோடு இணைந்துகொள்ளப் பார்த்தார். முதல் பயணத்தில் மாற்கு தங்களைவிட்டு பிரிந்து சென்றதால், இரண்டாவது பயணத்தில் மாற்கு தங்களோடு வருவதை பவுல் விரும்பவில்லை.

பர்னபா, மாற்கு தன் சகோதரியின் மகன் என்பதால், எப்படியாவது இரண்டாவது பயணத்திலும் மாற்குவைக் கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இதனால் பவுலுக்கும், பர்னபாவிற்கும் இடையே வாக்குவாதம் வந்தது. பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு வேறு இடத்திற்கு சென்றார். பவுல் சீலாவைக் கூட்டிக்கொண்டு வேறு இடத்திற்கு சென்றார்.


பவுலும் பர்னபாவும் பிரிந்ததற்கான காரணம், குடும்ப பிரச்சனையே. சபைக்குள் நாம் குடும்பத்தைக் கொண்டுவரக் கூடாது. அது என்றாவது ஒரு நாள் பிரச்சனையையே கொண்டுவரும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


அப்போஸ்தலர் பதினைந்தாம் (15) அதிகாரம்
==============
விருத்தசேதனம்
புறஜாதியாரான அந்தியோகியா பட்டணத்திற்கு வந்த யூதர்களில் சிலர், நீங்கள் விருத்தசேதனம் பண்ணவில்லையென்றால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று கற்றுக்கொடுத்தார்கள்.

யூதர்களாய் இருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள், இன்னும் யூதர்களாகவே இருக்கிறார்கள், போதாதென்று, அந்தியோகியாவில் உள்ள புறஜாதிகளையும் யூதமுறைமைகளை கடைபிடிக்கச் சொல்லி வற்புருத்துகிறார்கள்.

இதுபோன்ற காரியங்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் எருசலேமிற்கு புனித பயணம் மேற்கொள்வதுண்டு. அப்படி எருசலேம் சென்று வருகின்ற சிலர், எருசலேமில் வாழ்கின்ற யூதர்களை தங்களுக்கு நண்பர்களாகவும் மாற்றிக்கொள்கிறார்கள். அவர்களோடு நன்றாக பேசி பழகிய பின்னர், அவர்கள் செய்யும் சடங்குகள் அனைத்தையும் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களும் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார்கள்.

இயேசுவை இயேசு என்று சொல்லாமல் யெசுவா என்று சொல்ல வேண்டும் என்றும், ஞாயிற்றுக் கிழமை ஓய்வுநாள் அல்ல, சனிக்கிழமை தான் ஓய்வுநாள் என்றும் ஜனங்களை குலப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

எருசலேம் தேவாலயத்தில் பொன் குத்துவிளக்கு இருப்பதால், நம்முடைய சபைகளிலும் பொன் குத்துவிளக்கு இருக்க வேண்டும். இதுபோன்ற யூதர்களின் முறைமைகளை கிறிஸ்தவத்திற்குள் புகுத்துகின்ற ஊழியர்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.

யூதர்கள் அனுசரிக்கின்ற ஏழு பண்டிகைகளையும் நாமும் அனுசரிக்க வேண்டும் என்றும் சில ஊழியர்கள் போதிக்கிறார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லுகிற உதாரணம் என்னவென்றால், நாம் அனைவரும் ஆவிக்குரிய யூதர்கள் தானே, அப்படியானால் யூதர்களின் முறைகளை நாம் பின்பற்றிதானே ஆகவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

ஆவிக்குறிய யூதர்கள் என்றால் ஆவிக்குறிய விதத்தில் மாத்திரமே இருக்க வேண்டும். ஆவிக்குறியதை சுபாவத்திற்கு கொண்டுவரக் கூடாது. கிறிஸ்தவர்கள் எல்லோருமே ஆவிக்குறிய விதத்தில் கிறிஸ்துவின் மணவாட்டி. அவன் ஆணாக இருந்தாலும் அவன் கிறிஸ்துவின் மணவாட்டியே. ஆவிக்குறிய விதத்தில் நான் மணவாட்டி என்பதால், ஆண்கள் அனைவரும் சுபாவத்தில் பெண்களைப்போல உடை அணிந்து, பெண்களைப்போல பேச வேண்டும் என்று ஆண்டவர் சொல்லவில்லை. ஆவிக்குறிய காரியங்களை சுபாவத்திற்கு கொண்டு வருவது தவறான கருத்து.

நான் ஆவிக்குறிய யூதன், சுபாவத்தில் அல்ல. எனவே சரீரப்பிரகாரமான விருத்தசேதனம், யூதர்களின் பண்டிகைகள், அவர்களுடைய முறைமைகள் எனக்குத் தேவையில்லை.


இதுபோன்ற காரிங்கள் அப்போஸ்தலர்கள் காலத்திலும் நடந்திருக்கிறது. யூதேயாவிலிருந்து வந்த சிலர், அந்தியோகியாவில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்கள். இதினாலே யூதேயாவிலிருந்து வந்தவர்களுக்கும், பவுல், பர்னபாவுக்கும் மிகுந்த வாக்குவாதம் உண்டாயிற்று. (அப்போஸ்தலர் 15:1,2)

பவுல் ஒரு யூதன், பரிசேயன், ஆலோசனை சங்கத்தின் உறுப்பினர். இருந்தபோதிலும் விருசத்தசேதனம் யூதர்களுக்கு மாத்திரமானது, புறஜாதிகளுக்கு விருத்தசேதனம் தேவையில்லை என்பதில் அவர் தெளிவாய் இருந்தார்.

அந்தியோகியாவிலே வாக்குவாதம் அதிகரித்தபடியினால், இந்த காரியத்தை அப்போஸ்தலரிடத்திற்கு கொண்டுபோக வேண்டும் என்று எருசலேமிற்கு வந்தார்கள்.

பவுலும், பர்னபாவும் அப்போஸ்தலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுடைய பிரயாணங்களில் நடந்த அற்புத அடையாளங்களை அவர்களுக்கு அறிவித்தார்கள்.

அப்பொழுது பரிசேயராய் இருந்து இரட்சிக்கப்பட்டவர்களில் சிலர், புறஜாதிகளும் விருத்தசேதனம் பெற்று, மோசேயின் நியாயப்பிரமாணங்களை கடைபிடிக்க வேண்டும் என்று வாதாடினார்கள்.

இதைப்போலவே இக்காலங்களிலும் இந்துக்கள், இஸ்லாமியர்கள், மௌத்தர்கள் இரட்சிக்கப்படும்போது அவர்களுடைய மதக் கலாச்சாரத்தை கிறிஸ்தவ மதத்திற்குள் கொண்டு வந்து, கிறிஸ்தவ சாயத்தைப் பூசுகிறார்கள்.


ஒரு 7Up பாட்டிலில் உள்ள பானத்தை குடித்துவிட்டு, அந்த பாட்டிலில் தண்ணீரை ஊற்றினால், அந்த பாட்டிலில் உள்ள தண்ணீர் 7Up ஆக மாறுமா? நிச்சயம் மாறாது.


அதைப்போன்றே நாம் பின்பற்றுகின்ற அநேக மதக் கலாச்சாரசங்கள் ஜெபித்து ஆரம்பித்து, ஜெபித்து முடிப்பதன் மூலமாக அது கிறிஸ்தவ முறையாகாது. (எ.கா வரதட்சனை, ஜாதி)


மிகுந்த தர்க்கங்களுக்கு பின்பு பேதுரு எழுந்து நின்று பேசத் தொடங்கினார். விருத்தசேதனமும், நியாயப்பிரமாணமும் யூதர்களாகிய நமக்கே கடினமாக இருக்கும்போது, இதுபோன்ற கடினமான காரியங்களை ஏன் புறஜாதிகளுக்குள்ளும் கொண்டுவர வேண்டும் என்று சொல்லுகிறார்.

பின்பு இயேசுவின் சகோதரனும், சீஷனுமான யாக்கோபு (எருசலேமின் தலைமை போதகர்) பேசத்துவங்குகிறார். யாக்கோபு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை எடுத்துகாட்டி பேசுகிறார்.

பாராமான ஒன்றையும் புறஜாதிகள் மேல் சுமத்தாதிருப்பது, பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் ஏற்றதாய் இருக்கிறது என்றும், விருத்தசேதனம் புறஜாதிகளுக்கு தேவையானது அல்ல என்றும் அப்போஸ்தலர் சங்கம் தீர்மானம் இயற்றியது.

இச்செய்தியை அந்தியோகியாவில் உள்ள புறஜாதியாருக்கு அறிவிக்கும்படி பவுல், பர்னபா, சீலா, யூதா போன்றவர்களை அனுப்பிவிடுகிறார்கள். அப்போஸ்தலர் சங்கம் புறஜாதிகளுக்கு விருத்தசேதனம் தேவையில்லை என்று சொன்னதை கேள்விப்பட்ட அந்தியோகியா பட்டணத்தார் மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.

யூத மதக் கோட்பாடுகளை கிறிஸ்தவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தை அநேகர் முன்வைத்தாலும், பவுலும், பர்னபாவும் ஞானமாய் செயல்பட்டதினால், அந்தியோகியாவில் ஏற்பட்ட இந்த தர்க்கம், எருசலேமுக்கு கொண்டு செல்லப்பட்டு, பேதுரு, யாக்கோபு என்பவர்களின் ஆலோசனைப்படியும், பரிசுத்த ஆவியின் துணையோடும் புறஜாதிகளுக்கு விருத்தசேதனம் அவசியமில்லை என்று ஏகமனதாய் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்படி ஒருவேலை பவுலும், பர்னபாவும் ஞானமாய் செயல்படவில்லை என்றால், கிறிஸ்தவ மதம் இன்னமும் யூத மதத்தின் ஒரு கிளையாக மாத்திரமே செயல்பட்டுக்கொண்டிருக்கும்.

இந்த நாட்களிலும் கூட மற்ற மதத்திலிருந்து கிறிஸ்தவ மார்க்கத்திற்கு கொண்டுவரப்படுகின்ற கலாச்சாரங்களை நாம் முற்றிலும் ஒழிக்க வேண்டும். மற்ற கலாச்சாரங்களில் இருப்பது போன்ற உயர்வு தாழ்வுகளும், ஜாதி பாகுபாடுகளும் இக்கால திருச்சபைகளில் காணப்படுவதால், புதிய ஆத்துமாக்களை சபைகள் ஆதாயப்படுத்த முடியவில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.