Type Here to Get Search Results !

எலியா வேத ஆராய்ச்சி | Elijah Bible Study | Part 5 | Jesus Sam

================
எலியா (பாடம் 5)
================
ஆண்டவர் காகம் கொண்டு எலியாவை போஷித்தல்
    காகம் என்பது ஒரு சுத்தமான பறவை அல்ல. காகங்கள் கொடுக்கின்ற உணவை சாப்பிட்டால் வியாதிகள் வருவதற்கு கூட வாய்ப்பு உண்டு.

    1 இராஜாக்கள் 17:5-ல் காகங்கள் எலியாவிற்கு காலையும், மாலையும் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது என்று வாசிக்கிறோம்.


    அப்பம் என்பது இயற்கையாக கிடைக்கின்ற பொருள் அல்ல. மனிதனால் செய்யப்படுகின்ற ஒரு பொருள். அப்பம் எப்படி காகத்திற்கு கிடைத்தது என்று நமக்கு தெரியாது.

    அநேக கலாச்சாரங்களில் உணவை காகங்களுக்கு வைப்பது வழக்கம். தாங்கள் தயாரித்த உணவின் ஒரு சிறிய பகுதியை எடுத்து, காகங்களை கா கா என்று கத்தி கூப்பிட்டு, காகத்திற்கு உணவு படைப்பார்கள். ஒருவேலை அப்படி அந்த காகத்திற்கு படைக்கப்பட்ட உணவை காகம் கொண்டு வந்திருக்கலாம்.

    பாட்டி வடைசுட்டுக் கொண்டிருக்கும்போது காகம் வந்து வடையை திருடிச்சென்ற கதை நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். எனவே, காகம் ஒரு திருடும் பறவை. எங்காவது திருடிக்கொண்டு வந்திருக்கலாம்.

    காகத்தை ஆண்டவர் தான் ஏற்படுத்தினார். ஆண்டவரால் ஏற்படுத்தபட்ட ஒரு காகம் திருடிக்கொண்டு வந்து தான் எலியாவை போஷிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழும்புகிறது.

    காகங்கள் சுத்தமான, சமைத்த இறைச்சியை மாத்திரம் சாப்பிடும் பறவை அல்ல. காகங்கள் எது கிடைத்தாலும் அதை எடுத்து சாப்பிடும். அப்படிப்பட்ட காகங்களைக் கொண்டே ஆண்டவர் எலியா போஷித்தார். காகம் நிச்சயமாக ஒரு சிறந்தை இறைச்சியைத்தான் எலியாவிற்கு கொண்டு வந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

    ஒருவேலை நல்ல அப்பத்தையும், இறைச்சியையும் காகம் கொண்டு வராதிருந்தால், நிச்சயம் எலியாவிற்கு வியாதி வந்திருக்கும். எலியாவிற்கு வியாதி ஏதும் வரவில்லை. அவர் நன்றாகத் தான் இருந்தார். எனவே காகங்கள் நன்றாக சுட்ட அப்பத்தையும், சமைத்த இறைச்சியையும் தான் எலியாவிற்கு கொண்டு வந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

    எப்படி காகங்கள் அப்பத்தையும் இறையைச்சியையும் கொண்டு வந்தது என்று நமக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் காகங்கள் எலியாவிற்கு அப்பத்தையும் இறைச்சியையும் கொண்டு வந்தது உண்மை. அது வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.


    ஆண்டவர் ஒருவேலை எலியாவிடம் நான் உன்னை காகங்களை கொண்டு தான் போஷிக்கப்போகிறேன் என்று சொல்லியிருக்கவில்லை என்றால், எலியா கேரீத் துரவன்டை வந்து உட்கார்ந்திருக்கும்போது காகங்கள் அவர் அருகே வந்தால் அவர் காகத்தை துரத்தியிருப்பார். ஆண்டவர் காகத்தை கொண்டு போஷிக்கப்போகிறேன் என்று சொல்லாவிட்டாலும், ஆண்டவர் எப்படியாவது போஷிப்பார் என்று எலியாவுக்குத் தெரியும். ஆனால் நிச்சயம் காகங்களைக் கொண்டு ஆண்டவர் போஷிக்க மாட்டார் என்று நினைத்து எலியா காகங்களை துரத்தியிருப்பார்.

    இன்று அநேக கிறிஸ்தவர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நான்காம் பாடத்தில் அநேகர் யோர்தானை நம்பி கேரீத்தை உதாசினப்படுத்துகிறார்கள் என்று கற்றுக்கொண்டோம். அதைப்போலவே, அநேகர் கழுகுகளையும், நாரைகளையும் நம்பி காகங்களை அசட்டைபண்ணுகிறார்கள். இதனால் காகங்கள் மூலம் கர்த்தர் கொடுக்கின்ற ஆசீர்வாதங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

    காகங்கள் எல்லா இடத்திலும் காணப்படும். கழுகுகளும், நாரைகளும் எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லை. அநேக கிறிஸ்தவர்கள் கழுகுகள் போன்ற பெரிய ஊழியர்களை நம்பி, தங்கள் சபையின் ஊழியரை (காகம்) அசட்டைபண்ணுகிறார்கள்.

    நமது சபையில் உள்ள ஊழியரிடம் சென்று நாம் ஜெபிக்க மாட்டோம். ஆனால் தூர தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பிரபலமான ஊழியருக்கு கடிதம் எழுதுவோம். என் மகனுக்கு நல்ல வரன் வேண்டும், என் மகளுக்கு நல்ல வரன் வேண்டும் எங்களுக்காகவும் எங்கள் குடும்பங்களுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள் என்று அநேகர் கடிதம் எழுதுவதையும் நாம் பார்க்க முடிகிறது.

    மற்ற ஊழியர்களுக்கு கடிதம் எழுதுவது தவறல்ல. ஆனால், நம்முடைய திருச்சபையில் இருக்கின்ற ஊழியரிடம் நாம் சென்று எனக்காக, என் குடும்பங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதுண்டா?

    அந்த பிரபலமான ஊழியர் தலையில் கை வைத்து ஜெபித்தால் என் குடும்பத்தின் வறுமை மாறும், என் வியாதி சுகமடையும் என்று நினைக்கிறோம். நம்முடைய திருச்சபையின் ஊழியரிடம் சென்று ஜெபிக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம்.

    அருகில் உள்ள காகங்களை கொண்டு ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்க நம்முடைய ஜெபத்திற்கு பதில்கொடுக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார். ஆனால் அநேக கிறிஸ்தவர்கள் அருகில் இருக்கும் காகங்களை மறந்துவிட்டு தூரத்தில் இருக்கும் கழுகுகளையே தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

    அநேக கிறிஸ்தவர்கள் ஒரு சபைக்கு சென்றுகொண்டிருப்பார்கள். ஆனால் ஆலோசனைக்காக வேறொரு ஊழியரைத் தேடுவார்கள். தங்கள் சபையின் ஊழியரிடம் ஆலோசனை கேட்க மாட்டார்கள். நாம் எந்த சபைக்கு செல்லுகிறோமோ, அந்த சபையின் ஊழியரிடமே ஆலோசனைகள் கேட்க வேண்டும். அவருக்குத்தான் நம்முடைய சூழ்நிலைகள் என்ன? நம்முடைய குடும்ப நிலை என்ன என்பது தெரியும். வேறு ஊழியர்களுக்கு நாம் சொல்லுவது மாத்திரம் தான் தெரியும், நம்முடைய ஊழியருக்குத்தான் நம்மைப்பற்றி நன்றாகத் தெரியும்.


    அநேக ஊழியர்களும் இன்றைய காலத்தில் காகங்களை மறந்து, கழுகுகளையும் நாரைகளையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் ஊழியத்தின் தேவைக்காக, புதிய இடங்கள் வாங்க, புதிய கட்டிடங்கள் கட்ட ஆண்டவர் எங்களுக்கு உதவி செய்வார் என்பதை மறந்து, எங்களுக்கு பணம் அனுப்புங்கள், நாங்கள் மிகவும் வறுமையில் இருக்கிறோம் என்று வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு கடிதங்கள் எழுதுகிறார்கள்.

    சங்கீதம் 121:1-ல் வாசிக்கிறோம் எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். உண்மையான எபிரெய பாஷையில் பர்வதங்களுக்கு மேலாக என் கண்களை ஏறெடுக்கின்றேன் என்று எழுதப்பட்டுள்ளது. பார்வதங்களைப் பார்க்காதே, பர்வதங்களுக்கு மேலே இருக்கின்றே என்னைப் பார் என்றே கர்த்தர் சொல்லுகிறார்.

    நம்முடைய ஊழியத்தை வளர்ப்பதற்கு, நம்முடைய ஊழியத்திலே சிறப்பு முயற்ச்சிகள் எடுப்பதற்கு பணம் தேவை தான். அந்த பணத்தை ஆண்டவர் காகங்கள் மூலமே தர விரும்புகிறார். அநேக ஊழியர்கள் கழுகு, நாரை போன்ற தொழிலதிபர்கள், வெளிநாட்டில் வேலைசெய்யக்கூடியவர்களை நம்பி, தங்கள் சபை விசுவாசிகளாகிய காகங்களை மறந்துவிடுகின்றார்கள்.

    எலியாவைப் போன்று காகங்களிடம் ஆசீர்வாதத்தை பெறுகின்ற அந்த பக்குவம், தாழ்மை நமக்கு இருக்க வேண்டும். சிலருக்கு காகங்கள் மூலம் வருகின்ற ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை. சில ஊழியர்கள் காகங்கள் கொடுக்கின்ற சிறிய சிறிய காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் எவ்வளவு பெரிய ஊழியன். நான் இந்த காகங்களின் உதவியை தேடுவதா? எனக்கென்று ஆண்டவர் கழுகுகளையும், நாரைகளையும் ஏற்படுத்தியிருப்பார் என்று நினைக்கிறார்கள்.


    இன்று அநேக கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய ஊழியத்தை செய்ய பயப்படுகிறார்கள். பெரிய பெரிய ஊழியர்களைப் பார்த்துவிட்டு, அவர்களைப்போல என்னால் ஜெபிக்க முடியவில்லையே, அவர்களைப்போல என்னால் அந்நிய பாஷை பேசமுடியவில்லையே, அவர்களைப்போல ஆவியின் வரங்கள் எனக்கு இல்லையே என்று நினைத்துக்கொண்டு, ஊழியம் செய்ய பயப்படுகிறார்கள்.


    எ.கா: ஆண்டவர் எலியாவை போஷிக்க எந்த பறவையை பயன்படுத்தலாம் என்று யோசித்தாராம். பறவைகளை எல்லாம் ஒன்றாக கூட்டி, யாருக்கு அந்த பொறுப்பை கொடுக்கலாம் என்று கேட்டாராம்.

    அப்பொழுது எல்லா பறவைகளும் நினைத்ததாம், நிச்சயம் இந்த பொறுப்பு கழுகுகளுக்கும், நாரைகளுக்கும், தீக்கோழிகளுக்கும், கடற்பறவைகளுக்கும் தான் கிடைக்கும் என்று நினைத்ததாம். சின்ன சின்ன குருவிகள், பறவைகள் எல்லாம் நமக்கு இந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்காது, நாம் ஏன் இங்கே நின்றுகொண்டு நேரத்தை வீணடிப்பானேன். நம்முடைய வேலையை செய்வோம் என்று புறப்பட்டுவிட்டதாம்.

    இந்த பறவைகள் கூட்டத்தில் ஆண்காகமும், பெண்காகமும் கலந்துகொண்டதாம். ஆண் காகம் பெண் காகத்தைப் பார்த்து சொன்னதாம், யாருக்கு இந்த பொறுப்பு கிடைக்கிறது என்று பார்த்துவிட்டு செல்வோம் யாருக்குத் தெரியும், ஒருவேலை நமக்கு இந்த பொறுப்பு கிடைக்கலாம் அல்லவா என்றதாம். அப்பொழுது ஆண் காகம் பெண் காகத்திடம் சொன்னதாம், நீ உன்னை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா? நீ யார் என்று மறந்துவிட்டு போசுகிறாய். ஜப்பானிலும், சீனாவிலும் வாழுகிறவன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறான். ஆப்பிரிக்காவில் வாழுகிறவன் கருப்பாய் இருக்கிறான். அமெரிக்கா, ஐரோப்பாவில் வாழுகிறவன் வெள்ளை நிரத்தில் இருக்கிறான். ஆசியா இந்தியா இலங்கையில் வாழுகிறவன் மண்ணிறத்தில் இருக்கிறான். ஆனால் ஜப்பான், சீனா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா, இலங்கை என்று உலகத்தில் எங்கு சென்றாலும் நாம் (காகம்) மாத்திரம் கருப்பு தானே. கர்த்தர் நமக்கு நிரமே கொடுக்கவில்லை. குரலை குயிலுக்கு கொடுத்துவிட்டார். நடனத்தை மயிலுக்கு கொடுத்துவிட்டார். நடையை அன்னத்திற்கு கொடுத்துவிட்டார். நல்ல பெயரை புறாவிற்கு கொடுத்துவிட்டார். இப்படி எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத நமக்குப்போய் ஆண்டவர் இந்த பொறுப்பை கொடுப்பாரா? என்று சொன்னதாம்.

    இதைப்போலத்தான் அநேக கிறிஸ்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு பாடத்தெரியாது? எனக்கு துதிக்கத் தெரியாது? எனக்கு பேசத்தெரியாது? எனக்கு ஞானம் இல்லை. எனக்கு நல்ல கிறிஸ்தவ பின்னணி இல்லை. என்னை விட திறமை படைத்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள். என்னை விட கல்வி அறிவு படைத்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள். என்னைக் எப்படி ஆண்டவர் பயன்படுத்துவார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    எனக்கு ஒன்றும் தெரியாது என்று நீங்கள் நினைத்தால், உங்களைக் கொண்டுதான் ஆண்டவர் பெரிய காரியங்களை செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

    ஏன் ஆண்டவர் கழுகை தெரிவு செய்யவில்லை என்றால், திறமையும், செய்யக்கூடிய ஆற்றலும் கொண்ட கழுகையும், நாரையையும் பயன்படுத்தினால், அது அந்த கழுகுக்கும், நாரைக்கும் தான் மகிமை. ஆனால் செய்ய முடியாத, செய்யத் தெரியாத காகத்தை செய்ய வைப்பது தான் கர்த்தருக்கு மகிமை.

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப் போல, கர்த்தருக்கு காகமும் ஆயுதம். காகங்கள் ஒரு சிறந்த பறவை அல்ல. காகங்கள் தன் குஞ்சுகளுக்குக்கூட தன் சாப்பிட்ட பின்பே உணவு கொடுக்கும். மற்ற பறவைகள் தன் சேகரித்த உணவை குஞ்சுகளுக்கு கொடுத்துவிட்ட பின்பு தான் சாப்பிடும். ஆனால், காகங்கள் அப்படியல்ல. கொடுக்கும் தன்மை சிறிதும் இல்லாத அந்த காகத்தைத்தான் ஆண்டவர் எலியாவை போஷிக்க பயன்படுத்தினார்.


    எலியாவைப்போல கேரீத்தையும், காகங்களையும் உதாசினம் செய்யாமல் இருப்போம். காகங்கலாக எலியாக்களை போஷிக்கின்ற பெரிய ஊழியங்களை செய்வதில் தயக்கம் காட்ட வேண்டாம். கர்த்தர் நம்மைக்கொண்டு பெரிய காரியங்களை செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  ஆமென்!...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.