Type Here to Get Search Results !

எலியா கேரீத் ஆற்றங்கரையில் | எலியா வேத ஆராய்ச்சி கட்டுரை | Elijah Bible Study in Tamil Part 6 | Jesus Sam

=====================
எலியா பாகம் ஆறு
=====================
1 இராஜாக்கள் 17
    எலியா கேரீத் ஊற்றண்டையில் தங்கியிருந்தார். காகங்கள் அவருக்கு தினமும் காலையும், மாலையும் உணவு கொண்டு வருகின்றன. கேரீத் ஆறு என்று தமிழ் வேதாகமத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். ஆனால் அது ஆறு அல்ல ஊற்று. கேரீத்தில் தண்ணீர் வற்றிப்போனதாக வேதத்தில் வாசிக்கிறோம்.


    ஒரு நீரூற்றில் தண்ணீர் வற்றுகிறது என்றால் தீடீரென தண்ணீர் காணாமல் போகாது. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வற்ற துவங்கும்.

    எலியா கேரீத்துக்குச் சென்று ஒரு சில நாட்களில் தண்ணீர் வற்றவில்லை. எலியா ஒரு சில மாதங்கள் இந்த கேரீத்தில் தான் தங்கியிருந்தார். சில மாதங்கள் எலியா கேரீத்திலேயே தங்கியிருந்ததால், அந்த ஊற்று அவருக்கு நன்கு பரிச்சயமான ஒரு இடமாக மாறியிருக்கும். ஒவ்வொரு நாளும் தண்ணீர் குடிக்க வறும்போது, தண்ணீரை பயன்படுத்த வறும்போது தண்ணீர் குறைந்து கொண்டிருக்கிறதா? தண்ணீர் அதிகரிக்கிறதா? என்று எலியாவிற்கு நிச்சயம் தெரியும்.

    எலியா இடத்தில் நாம் இருந்திருப்போமானால், தண்ணீர் வற்ற துவங்கின முதல் நாள் கொஞ்சம் தைரியமாக இருப்போம். தண்ணீர் வற்றவில்லை, நாம் தினமும் இந்த தண்ணீரையே பார்த்துக்கொண்டிருப்பதினால் வற்றுவதுபோல் தெரிகிறது என்று நினைப்போம்.

    இரண்டாம் நாள் காலையில் எழுந்து பார்த்தால், தண்ணீர் இன்னும் கொஞ்சம் குறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. நாம் எவ்வளவு பெரிய அபிஷேகம் பெற்றவராக இருந்தாலும் நமக்குள்ளாக ஒருவித பயம் ஏற்படும். தண்ணீர் வற்றிக்கொண்டிருக்கிறதே, சில நாட்களில் தண்ணீர் முழுமையாக வற்றினால், நான் மரித்துப்போவேனே என்ற பயம் வரும்.

    மூன்றாம் நாள் காலையில் எழுந்து பார்த்தால், தண்ணீர் இன்னும் கொஞ்சம் குறைந்திருப்பதை கண்டவுடன் பயம் இன்னும் அதிகரித்திருக்கும். ஆண்டவர் தான் என்னை இங்கே அழைத்து வந்தார். எனக்கு யோர்தானைப்பற்றி நன்கு தெரியும், ஆனால் இந்த கேரீத்தைப் பற்றி எனக்கு தெரியாது.  ஆண்டவர் தான் என்னை இங்கே அழைத்து வந்தார். ஆண்டவர் எனக்காக ஏற்படுத்தின இந்த கேரீத் வற்றுகிறது என்றால், நான் ஆண்டவருக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டேனோ என்ற பயம், ஆண்டவர் என்னை கைவிட்டுவிட்டாரோ என்ற பயம் நமக்குள்ளாக வந்திருக்கும்.

    உடனே முழங்கால் படியிட்டு, ஆண்டவரே என்னுடைய பாவத்தை மன்னியும். நீர் எனக்காக ஏற்படுத்தின நீரூற்றை வற்றப்பண்ணாதிரும் என்று ஜெபித்திருப்போம்.

    ஒருவேலை பிசாசுதான் தண்ணீரை வற்றப்பண்ணியிருப்பான் என்ற பயம் இருந்தால், பிசாசே கர்த்தர் எனக்காக கொடுத்த தண்ணீரை எடுப்பதற்கு உனக்கு என்ன அதிகாரம் உண்டு, கர்த்தரின் பெயரால் ஆணையிடுகிறேன், இந்த ஊற்றைவிட்டு ளெியேறு. இது ஆண்டவர் எனக்காக ஏற்படுத்தின இடம் என்று பிசாசை கட்டி ஜெபித்திருப்போம்.

    அன்பானவர்களே, இந்த கேரீத் என்பது ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கும் ஆசீர்வாதத்தைக் குறிக்கும். கர்த்தர் நமக்கு கொடுத்திருகின்ற திறமைகள், செல்வங்கள், நிலங்கள் இவையனைத்தும் கேரீத் போன்றவைகள் தான். இந்த உலகத்தில் எது நமக்கு கிடைத்தாலும், ஒரு நாள் அது குறையும், முடிந்துவிடும், அழிந்துவிடும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இவ்வுலகில் நமக்கு கிடைக்கும் எதுவும் நிரந்தரமானது அல்ல.

    நம்மிடம் இருக்கின்ற செல்வம், ஐசுவரியம், பதவி, படிப்பு இவையனைத்தும் ஆண்டவர் தான் நமக்கு கொடுத்தார். இருப்பினும், இவைகள் உலகத்திற்குறியவைகள் என்பதால், இவைகளெல்லாம் ஒரு நாள் அழிந்துவிடும்.

    இந்த உலக ஐசுவரியமும், பதவியும் ஒருநாள் நம்மிடம் இருந்து எடுபடும்போது நமக்கு ஒருவிதமான பயம், திகில் ஏற்படும்.

    ஒரு ஊழியர் சபையின் பயன்பாட்டிற்காக ஒரு சிறிய கட்டிடம் ஒன்றை கட்டுகிறார் என்றால், அதற்காக பணத்தேவை சந்திக்கப்படாதபோது ஒருவித பயம் ஏற்படும். கட்டிடத்தை கட்டி முடிக்க முடியுமா? இல்லையென்றால், கட்டிடம் பாதியில் நின்றுவிடுமா? என்ற ஒரு வித பய உணர் ஏற்படும்.

    கேரீத்திலே நீரூற்று வற்றியபோது, எலியாவுக்கு கொஞ்சமும் பயம் இல்லை. ஒவ்வொரு நாளும் ஊற்றில் தண்ணீர் குறைந்து கொண்டிருந்தாலும் எலியா சந்தோஷமாக இருந்தார். காரணம் என்னவென்றால், கேரீத்தில் தண்ணீர் வற்றினாலும் ஆண்டவர் என்னை போஷிப்பார், என்னை நடத்துவார் என்ற விசுவாசம் எலியாவிற்குள்ளாக இருந்தது.

    தமிழ் வேதாகமத்தில் 1 இராஜாக்கள் 17:2-ல் பின்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, 1 இராஜாக்கள் 17:8-ல் அப்பொழுது என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மூல பாஷையாகிய எபிரெயு பாஷையில் இரண்டு இடங்களிலும் பின்பு என்ற ஒரே பதம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    எலியா கர்த்தர் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தார். காரணம், தேசத்திலே பஞ்சம் வந்தபோது ஆண்டவர் என்னை போஷிப்பதற்காக ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணினார். அவர் என்னை கைவிடமாட்டார். அவர் என்னை எப்படியாவது போஷிப்பார் என்ற விசுவாசம் அவருக்குள் இருந்தது.


    இன்று அநேக கிறிஸ்தவர்கள் ஆண்டவரிடம் இருந்து அநேக நன்மைகளை பெற்றிருந்தாலும், அவர்கள் எதிர்பார்த்த ஒரு காரியம் நடைபெறவில்லை என்றதும் கடந்த நாட்களில் கர்த்தர் தங்களை எப்படி போஷித்தார், எப்படி வழிநடத்தினார் என்பதை மறந்துவிடுகிறார்கள். மறந்ததின் விலைவாக பயந்து, கலங்குகிறார்கள்.

    மறதியில் இரண்டு விதங்கள் உண்டு. ஒரு வித மறதி என்பது நடந்த நிகழ்வை முழுமையாக மறந்துவிடுவது. மற்றொருவித மறதி என்பது, என்ன நடந்தது எப்படி நடந்தது என்றெல்லாம் நியாபகம் இருக்கும். நம்முடைய கஷ்ட நேரத்தில், வறுமையின் நேரத்தில், வியாதியின் நேரத்தில் கர்த்தர் நம்மை காப்பாற்றினார், உயர்த்தினார், பெலப்படுத்தினார் என்பது நினைவில் இருக்கும். இப்போது ஒரு பிரச்சினை வந்ததும், முன்னே கர்த்தர் நம்மைக் காப்பாற்றியதுபோல இப்பொழுதும் காப்பாற்றுவார் என்று நினைக்காமல் கலங்கிக்கொண்டிருப்பார்கள்.

    எதை மறக்க வேண்டுமோ அதை நியாபகம் வைத்துக்கொண்டு, எதை நினைவில் வைத்திருக்க வேண்டுமோ அதை மறந்துவிடுவார்கள்.

    எலியா கர்த்தர் செய்த நன்மைகளை நினைவில் வைத்திருந்தார். பஞ்சத்தின் ஆரம்பத்தில் எனக்காக கேரீத்தை ஆயத்தம் செய்தவர், கேரீத் வற்றினாலும், என் கர்த்தர் என்னை போஷிப்பார்.  எப்படி போஷிப்பார், எதன் மூலமாக போஷிப்பார் என்று எனக்கு தெரியாது. ஆனால் என்னை நேர்த்தியாய் போஷிப்பார் என்ற நம்பிக்கை, விசுவாசம் எலியாவிடம் காணப்பட்டது.

    கேரீத் போன்ற கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதங்களை எந்த ஒரு மனிதனாலும், வானத்தில் உள்ள தேவதூதனாலும், சாத்தானாலும் கூட எடுத்துப்போட முடியாது. ஒருவேலை ஆண்டவர் எனக்கு கொடுத்த ஆசீர்வாதம் குறைந்து கொண்டிருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு ஒரு நற்செய்தி, அவைகள் குறையவில்லை, அதைவிட மேலான ஆசீர்வாதத்தை கர்த்தர் உங்களுக்கு கொடுக்க விரும்புகிறார்.

    எலியாவை பாதுகாப்பதற்காக ஆண்டவர் ஏற்படுத்திய இடம் கேரீத்தாக இருந்தாலும், அதைவிட சிறந்த இடத்திற்கு எலியாவை அழைத்துச்செல்ல வேண்டும் என்பதற்காகவே கர்த்தர், கேரீத்தை வற்றப்பண்ணினார். அதைப்போலவே, உங்களுடைய வாழ்க்கையிலும் உங்கள் முந்தின நிலமையின் ஆசீர்வாதங்களை விட உயர்ந்த ஆசீர்வாதங்களை உங்களுக்கு தருவதற்காக கர்த்தர் உங்கள் முந்தின ஆசீர்வாதங்கள் குறைந்துபோக அனுமதிப்பார்.

    சாரிபாத் என்ற சிறப்பான இடத்திற்கு எலியா செல்ல வேண்டும் என்பதற்காகவே, கேரீத் வற்றிப்போனது. நம்முடைய வாழ்க்கையிலும், ஆண்டவர் நம்மை உயர்த்தவே, சில கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுமதிக்கிறார்.

    உங்களிடம் இருக்கின்ற லட்சங்கள் ஆயிரங்களாக குறையும்போது ஒருவித பயம் ஏற்படுகின்றதா? பயப்படாதிருங்கள், ஆயிரங்களும் செலவழிந்த பின்பு கர்த்தருடைய வார்த்தையை உங்களால் கேட்க முடியும். கேரீத்தின் தண்ணீர் வற்றின பின்பே, கர்த்தருடைய வார்த்தை எலியாவிற்கு உண்டாயிற்று.

    எலியாவின் தேவன் நம்முடைய தேவன். எலியாவை போஷித்த தேவன் நம்மையும் போஷிப்பார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.