Type Here to Get Search Results !

கர்த்தரால் நற்சாட்சி பெற்றவர்கள் | கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | Those Who Have Received Good Testimony From God | Jesus Sam

======================
கர்த்தரால் நற்சாட்சி பெற்றவர்கள்
=======================
    நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும்போது மிகவும் கவனத்தோடு வாசிக்க வேண்டும். வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைகளுக்கும், ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் அர்த்தங்கள் உண்டு. காரணம் இல்லாமல் ஆண்டவர் எந்த ஒரு வார்த்தையையும் வேதப்புத்தகத்தில் பயன்படுத்தவில்லை.

    உதாரணமாக வேதாகமத்தில் சில இடங்களில் தூதன் என்ற வார்த்தையை நாம் பார்க்க முடியும். சில இடங்களில் தூதனானவர் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கும். நாம் அநேக நேரங்களில் இவ்விரண்டு பதங்களும் கர்த்தருடைய தூதர்களையே குறிக்கிறது என்று நினைக்கின்றோம். நாம் நினைப்பது தவறு. தூதன் என்பது துதர்களைக் குறிக்கின்றது. ஆனால், தூதனானவர் என்றால் அது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும்.

    துதர்கள் பிதா கட்டளையிடுகிறதை செய்கிறவர்கள். அவர்களால் சுயமாக முடிவெடுக்க முடியாது. ஆனால் தூதனானவர் அப்படிப்பட்டவர் அல்ல, அவர் பிதாவுக்கு ஒத்த அதிகாரம் உடையவர். அதாவது தூதனானவர் என்பவர் மனுஷக்குமாரன். அவர் சுயமாய் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்.

தூதன் சந்தித்த சிலர்:
1. மேய்ப்பர்கள் (லூக்கா 2:8,9)
2. யோசேப்பு (மத்தேயு 1:24)
3. மரியாள் (லூக்கா 1:28)

தூதனானவர் சந்தித்த சிலர்:
1. ஆபிரகாம் (ஆதியாகமம் 22:1)
2. மோசே (யாத்திராகமம் 3:2)
3. கிதியோன் (நியாயாதிபதிகள் 6:11,12)
4. மனோவா மற்றும் மனோவாவின் மனைவி (நியாயாதிபதிகள் 13:3 மற்றும் 13:14)
5. யாக்கோபு (ஓசியா 12:4) (ஆதியாகமம் 32)

    நம்முடைய வேதாகமத்தில் ஆண்டவர் ஒருசிலருக்கு ஒரு சில அடையாளங்களைக் கொடுத்திருக்கிறார்.


உதாரணமாக:
1. நோவா என்றால் நீதிமான் (ஆதியாகமம் 7:1)
2. ஆபிரகாம் என்றால் என் சிநேகிதன் (யாக்கோபு 2:23)
3. யோபு என்றால் உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன் (யோபு 1:8)
4. பவுல் என்றால் கர்த்தர் தெரிந்துகொண்ட பாத்திரம் (அப்போஸ்தலர் 9:15)

    இப்படியாக வேதாகமத்தில் அநேகருக்கு ஆண்டவர் நற்சாட்சி கொடுத்திருக்கின்றார். வேதாகமத்தில் உள்ள ஒருசிலருக்கு ஆண்டவர் என்ன நற்சாட்சி கொடுத்தார், ஏன் கொடுத்தார் என்று இந்த குறிப்பில் நாம் தியானிக்க இருக்கின்றோம்.


I. நாத்தான்வேல்:
யோவான் 1:47
    இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்

    நாத்தான்வேல் கலிலேயாவில் உள்ள கானா ஊரைச் சார்ந்தவர்.

    பழைய ஏற்பாட்டு காலத்தில் மக்களுக்கும், இராஜாக்களுக்கும் வேண்டிய ஆலோசனையை கர்த்தர் தீர்க்கதரிசிகள் மூலமாக வழங்கி வந்தார். கடைசி தீர்க்கதரிசியாகிய மல்கியாவின் கலத்திற்கு பின்பு 400 ஆண்டுகள் கர்த்தர் எந்த ஒரு தீர்க்கதரிசியிடமும் பேசவில்லை. அந்த நாட்கள் இஸ்ரவேலர்களின் வரலாற்றில் இருண்ட காலமாக கருதப்படுகின்றது.

    அந்த நாட்களில் வாழ்ந்த ஒரு சில பரிசுத்தவான்கள், மேசியா எப்போது வருவார் என்று தீர்க்கதரிசன ஆகமங்களையும், நியாயப்பிரமாண புத்தகங்களையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள்.

    இப்படி ஆராய்ச்சி செய்கின்ற அநேகர் அத்திமரத்தின் கீழ் அமர்ந்து ஆராய்ச்சி செய்து செய்தார்கள். அவர்களுள் ஒருவர் தான் இந்த நாத்தான்வேல்.

    வேதத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த, மேசியாவின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த அந்த நாத்தான்வேலைப் பார்த்தே ஆண்டவர் கபடற்ற உத்தம இஸ்ரவேல் என்று சாட்சி கொடுத்தார்.

    இந்த நாளிலும் கூட ஆண்டவருடைய இரண்டாம் வருகைக்காக நாம் ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இரண்டாம் வருகையைக் குறித்து கர்த்தர் வேதத்தில் எழுதி வைத்த அனைத்து காரியங்களும் இப்போது நிறைவேறி வருகிறதை அறிந்திருக்கிறோம்.

    நாத்தான்வேலைப்போல நாமும் ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய இரண்டாம் வருகைக்காக காத்திருக்கும் போது, அவருடைய வேதத்தை ஆழமாய் ஆராய்ச்சி செய்து வாசிக்கும்போது, இரவும் பகலும் அவருடைய வேதத்தின் மேல் தியானமாயிருக்கும்போது நம்மைப் பார்த்தும் கர்த்தர், இந்த மகன்/மகள் மகபற்ற உத்தமன் என்று சாட்சி கொடுப்பார்.


II. தானியேல்
தானியேல் 9:23அ
    நீ மிகவும் பிரியமானவன்

    கர்த்தர் தானியேலை எனக்கு மிகவும் பிரியமானவன் என்று சொன்னார். தானியேல் கர்த்தருக்கு பிரியமான பிள்ளையாய் மாறுவதற்கு என்ன காரியம் செய்தார்.

1. சாட்சியை காத்துக்கொண்டார்
தானியேல் 1:8
    தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.

    தானியேல் இஸ்ரவேல் தேசத்தைச் சார்ந்தவன். இஸ்ரவேலர்கள் உண்மைக் (யெகோவா கர்த்தர்) கடவுளை ஆராதிக்கின்றவர்கள். பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், எருசலேமை கைப்பற்றியபோது தானியேலையும், அவன் நண்பர்களையும் மாத்திரம் தன் தேசத்திற்கு அடிமைகளாக அழைத்துவரவில்லை. தானியேலோடு சேர்ந்த அநேக யூதர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக வந்தார்கள்.

    அவர்கள் பாபிலோனுக்கு வந்ததும், நேபுகாத்நேச்சார் அவர்களின் பாஷையையும், அவர்கள் பெயரையும், உணவு முறையையும் மாற்றினார்.

    யூதாவிலிருந்து வந்த மற்ற அனைவரும் ராஜாவின் உணவை ஏற்றுக்கொண்டார்கள். பாபிலோனிய தெய்வங்களுக்கு படைக்கப்பட்டதை சாப்பிடுவது நம்முடைய கர்த்தருக்கு அறுவறுப்பானது என்பதை அவர்கள் நினைக்கவில்லை.

    ஆனால், தானியேலும் அவன் நண்பர்களும் அந்நிய தேசத்தில் அடிமைகளாக இருந்தாலும், பாபிலோனிய தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட உணவுவை உண்டு, கர்த்தருக்கு பிரியமில்லாத காரியத்தை செய்ய மாட்டோம் என்று உறுதியாய் இருந்தார்கள்.

    அந்நிய தேசத்திலும் தானியேல் தன்னுடைய சாட்சியை காத்துக்கொண்டான். நாமும் நம்முடைய சமுதாயத்தின் மத்தியில், வேலை செய்யக்கூடிய இடங்களிலும் நம்முடைய சாட்சியை காத்துக்கொள்ள வேண்டும்.

2. ஜெபத்திலே உறுதியாய் தரித்திருந்தார்
தானியேல் 6:10
    தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்து வந்தபடியே, தினமும் மூன்று வேலையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

    தானியேலிடம் காணப்பட்ட சிறப்பான குணங்களில் ஒன்று தினமும் மூன்று வேலையும் முழங்காற்படியிட்டு ஜெபிப்பார்.

    நாமும் ஒவ்வொரு காரியத்தை துவங்கும் முன்பும் ஜெபத்தோடு ஆரம்பிப்பது நல்லது. நாம் எல்லா நேரங்களிலும் முழங்காற்படியிட்டு ஜெபிக்க முடியாது. ஆனால் ஒரு நாளில் குறைந்த பட்டம் இரண்டு வேலை முழங்கால்படியிட்டு ஜெபிக்க கற்றுக்கொள்ள வேண்டும். காலை எழுந்த உடன் மற்றும் இரவு உரங்கச் செல்லும்போதும் நாம் முழங்காற்படியிட்டு ஜெபிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

    எ.கா: வாகனத்தில் பிரயாணப்படும் முன்பாக சிறிது நேரம் ஜெபிக்கலாம். உணவு சாப்பிடும் முன்பதாக உணவை தந்த கர்த்தருக்கு நன்றி சொல்லி ஜெபிக்கலாம். இப்படிப்பட்ட நேரங்களில் நாம் முழங்காற்படியிட்டு ஜெபிக்க முடியாது.

    ஆனால் ஒவ்வொரு இரண்டு வேலைகள் (காலை, இரவு) நாம்மால் முழங்கால்படியிட்டு ஜெபிக்க முடியும்.

    நாம் முழங்கால் படியிட்டு ஜெபிக்கும்போது, கர்த்தர் அதற்கான பிரதிபலனை தருவதற்கு வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

    பழமொழி: மூலையினால் முடியாதது, முழங்காலினால் முடியும் என்பார்கள்.

    தானியேலின் ஜெபித்திற்கு எத்தனையோ தடைகள் வந்தது. தடைகளின் மத்தியிலும் தானியேல் தைரியமாக முழுங்கால்படியிட்டு ஜெபித்தார். தடைகளை ஆண்டவர் நீக்கிப்போட்டார். தானியேலை சிங்கத்தின் கெபியில்போட்டபோது ஆண்டவர் சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார்.

    நாமும் முழங்காற்படியிட்டு ஜெபிக்கும்போது கர்த்தர் நமக்கு எதிரிடையாக இருக்கின்ற எல்லா காரியங்களையும் முறித்துப்போட வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

    தானியேல் அந்நிய தேசத்தில் சாட்சி காத்துக்கொண்டதோடு மாத்திரம் அல்ல, தடைகளின் மத்தியிலும் முழங்கால்படியிட்டு ஜெபத்தார். எனவே கர்தருக்கு பிரியமான பிள்ளையாக மாறினார்.

    நாமும் தானியேலைப்போல நம்முடைய சமுதாயத்தின் மத்தியில் சாட்சியைக் காத்துக்கொண்டு, எத்தனை தடைகள் வந்தாலும் முழங்கால்படியிட்டு ஜெபிக்கும்போது கர்த்தருக்கு பிரியமானவன் என்ற சாட்சியை பெற முடியும்.


III. தாவீது:
அப்போஸ்தலர் 13:22
    பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன். எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங்கொடுத்தார்.

    இருதயத்திற்கு எற்றவன் என்று கர்த்தர் தாவீதைக் குறித்து சாட்சி கொடுத்தார்.

    தனக்கு சித்தமானதையெல்லாம் தாவீது செய்தான் என்று ஆண்டவர் சொல்லுகிறார். அதை சற்று நாம் மாற்றி சொல்வது சிறந்ததாயிருக்கும். தாவீது செய்த எல்லா காரியங்களும் கர்த்தருக்கு சித்தமானதாக இருந்தது.

    தாவீதிடம் காணப்பட்ட சிறப்பு குணங்களைக் பற்றி அறிந்துகொள்வோம்.

1. தாழ்மை
    தாவீதிடம் காணப்பட்ட முதல் குணாதிசயம் தாழ்மை.

    தாவீது சிறுவனாக இருக்கும்போதே சாமுவேல் தீர்க்கதரிசியால் ராஜாவாக ஆபிசேஷம்பண்ணப்பட்டார்

   கற்பனை: நாம் 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்த இஸ்ரவேல் நாட்டிற்கு கடந்து சொல்லுவோம். அங்கே ஒரு அழகிய வனாந்திரம். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஒரு வாலிபன் மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டிருக்கின்றான். அவன் கையில் இசைக்கருவி ஒன்றை வைத்து இசை வாசித்துக் கொண்டிருக்கின்றான். அவன் அருகே சில ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

    சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு ஒரு மனிதன் வந்தான். அந்த சிறுவனிடம் ஏதோ பேசினான். அந்த சிறுவன் தன் இசைக்கருவியை அந்த மனிதனிடம் கொடுத்துவிட்டு, தன் வீட்டிற்கு ஓடினான். சிறிது நேரம் சென்ற பின் அந்த வாலிபன் மீண்டும் அந்த இடத்திற்கு வந்தான். அந்த நபரிடம் கொடுத்த இசைக்கருவிகளை வாங்கி முன்போலவே வாசித்து கர்த்தரை மகிமைப்படுத்த ஆரம்பித்தான். வழக்கம்போல தன் ஆடுகளை மேய்க்க ஆரம்பித்தான்.

    வனாந்திரத்தில் இருந்து வீட்டுக்கு ஓடியது யார் என்றால் தாவீது

    வீட்டிலிருந்து மீண்டும் வனாந்திரத்திற்கு வந்தது யார் என்றால் ராஜாவாகிய தாவீது.

    சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்யும்போது, இப்பொழுது ராஜாவாய் இருக்கின்ற சவுல் மரித்த பின்பு நீ இஸ்ரவேலின் மேல் ராஜாவாக ஏற்படுத்தப்படுவாய் என்று சொல்லவில்லை. நீ இன்று முதல் இஸ்ரவேலின் மேல் ராஜாவாய் இருப்பாய் என்றே அபிஷேகம்பண்ணினார். சாமுவேல் தாவீதை அபிஷேகம் பண்ணின பின்பும் தாவீது தன் வழக்கத்தின்படியே ஆடுகளை மேய்க்க ஆரம்பித்தார்.

    தாவீதுக்கு பதில் நான் அந்த இடத்தில் இருந்திருந்தேன் என்றால், என் தகப்பனைப் பார்த்து, அப்பா இனி என்னால் ஆடு மேய்க்க முடியாது. நான் இஸ்ரவேலின் ராஜா. உன் மகன் இஸ்ரவேலின் ராஜா என்பதில் பெருமைப்படுங்கள் என்று சொல்லியிருப்பேன்.

    என்னுடைய சகோதரரைப் பார்த்து, நான் இஸ்ரவேலின் ராஜா, எனக்கு ஒன்றும் தெரியாது, நான் சிறுவன் என்று தானே சொன்னீர்கள். நான் தான் இனி இஸ்ரவேலின் ராஜா. என் வார்த்தைக்கு கட்டுப்பாட்டு தான் இனி நீங்கள் நடக்க வேண்டும் என்று சொல்லியிருப்பேன்.

    சாமுவேல் தீர்க்கதரிசியை பார்த்து, தீர்க்கதரிசியாரே எனக்கு எப்போது சிங்காசனம் கிடைக்கும். சவுல் சிங்காசனத்தை விட்டு இறங்குவானா? இல்லை நான் வந்த அவனை இறக்கி விட வேண்டுமா என்று கேட்டிருப்பேன்.

    ஆனால் தாவீது: சாமுவேல் தீர்க்கதரிசி தன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக நியமித்த பிறகும், தன் வழக்கத்தின் படியே ஆடுகளை மேய்க்கச் சென்றார்.

    சாமுவேல் தாவீதை அபிஷேகம்பண்ணின நாள் முதல் கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின் மேல் இறங்கினார். கர்த்தரால் வரவிடப்பட்ட பொல்லாத ஆவி சவுலுக்குள்ளாக இருந்தது. (1 சாமுவேல் 16:13,14)

    சவுலுக்குள் இருந்த பொல்லாத ஆவி நீங்க ராஜாவாகிய தாவீது உட்கார்ந்து இசைக்கருவிகளை வாசித்துக்கொண்டிருந்தார்.

    அந்த அளவிற்கு தாவீது தாழ்மையாய் இருந்தார்.

    கடவுள் நமக்கு சின்ன பொறுப்பை கொடுத்துவிட்டால், நம்மை அறியாமலேயே நமக்குள்ளாக நான் என்ற பெருமை வந்துவிடுகின்றது.

    ஆனால் தாவீதைப் பாருங்கள், ராஜாவாக உயர்த்தப்பட்ட பின்பும், பொல்லாத ஆவிபிடித்த சவுலுக்கு இசைக்கருவிகள் வாசித்துக்கொண்டிருக்கின்றார். அந்த அளவிற்கு தாவீது தாழ்மையுள்ளவராக இருந்தார்.

2. ஆலயம் கட்ட வேண்டும் ஆசை:
2 சாமுவேல் 7:2
    ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.

    மோசேயின் காலத்தில் கர்த்தர் ஜனங்களோடு ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தினார். கர்த்தர் ஜனங்களோடு செய்த உடன்படிக்கைக்கு அடையாளமாக ஒரு பெட்டியை கர்த்தர் செய்ய சொன்னார். அந்த பெட்டிக்குள் பத்து கட்டளைகளும், ஆரோனின் துளிர்த்த கோளும், இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் உட்கொண்ட மன்னாவும் இருந்தது. அந்த உடன்படிக்கைப் பெட்டியை ஆசரிப்புக்கூடாரத்தில் வைத்திருந்தார்கள்.

    மோசேயின் காலம் முதல் தாவீதின் காலம் வரை அந்த உடன்படிக்கை பெட்டி ஆசரிப்புக்கூடாரத்திலேயே இருந்தது. இது கடவுள் நமக்காக ஏற்படுத்திக்கொடுத்த உடன்படிக்கை பெட்டி. இதை நாம் உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும் என்ற எண்ணம், எந்த ஒரு பரிசுத்தவான்களுக்கும் தோன்றவில்லை.

    தாவீதுக்கு முன்பதாக சவுல், சாமுவேல், சிம்சோன், கிதியோன், யோசுவா என அநேக தலைவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால், ஒருவரும் கர்த்தருடைய பெட்டிக்காக ஒரு சிறந்த இடத்தை ஆயத்தப்படுத்த வேண்டும் என்று யோசிக்கவில்லை.

    முதன் முதலாக தாவீது கர்த்தருடைய பெட்டியை வைக்கும்படியாக ஒரு மிகப்பெரிய ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்.

    தாவீது மிகப்பெரிய ராஜாவாக இருந்தாலும், மக்கள் அனைவரும் அவரை வாழ்த்தினாலும், தாவீது அதை பொருட்டாக நினைக்கவில்லை. கர்த்தருக்கு இன்னும் என்னால் என்ன செய்ய முடியும் என்பதிலேயே கவனமாக இருந்தார். எனவே, தான் கடவுளுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதனாக மாறினார்.

சங்கீதம் 84:10அ
    ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது.

சங்கீதம் 122:1
    கர்த்தருடைய ஆலயத்திற்குப்போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.


3. தாவீது தவறினாலும் எழுந்தான்
    சிறந்த ராஜாவாய் வாழ்ந்த தாவீது கண்களின் இச்சையினால் பாவம் செய்தார். மற்றவனின் மனைவியை இச்சித்தார்.

    தான் செய்த தவறு யாருக்கும் தெரியாது என்று நினைத்தார். ஆனால், நாத்தான் தீர்க்கதரிசி தாவீதின் தவறை உணர்த்தியதும் தன் பாவத்தை உணர்ந்து ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்டார். மனம் கசந்து அழுதார்.

    தாவீதுக்கு பதிலாக நான் அந்த இடத்தில் இருந்திருப்பேனானால், நான் செய்த தவறு வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் நாத்தானை அதே இடத்திலே கொலை செய்திருப்பேன். முழு இஸ்ரவேல் நாடும் என் கட்டுப்பாட்டில் இருக்கையில் நான் எதை செய்ய வேண்டுமென்று இவன் எனக்கு ஆலோசனை சொல்லுகிறானா? என் முன்னால் நின்று என்னையே குற்றப்படுத்துகிறானா என்று அவனுக்கு மரண தண்டனையை நியமித்திருப்பேன்.
    ஆனால் தாவீது அப்படி செய்யவில்லை.  தான் செய்தது தவறு என்று உணர்ந்து ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டார்.
    இன்று அநேக கிறிஸ்தர்கள் தங்கள் தவறை மற்றவர் சுட்டிக்காண்பித்தால், என்னைவிட நீ பெரிய நீதிமானா? நீ என்னை குற்றப்படுத்துகிறாயா? என்று அவர்கள் மேல் கோபம் கொள்வதை பார்த்திருக்கிறோம்.

    தாவீதைப்போல் அநேகர் வழிமாறி சென்றிருக்கலாம். என்னுடைய பாவங்களையெல்லாம் கர்த்தர் மன்னிக்கமாட்டார். பாவிகளில் பிரதான பாவியாக நான் என்று ஒருவேலை நீங்கள் நினைக்கலாம்.

    நாம் பாவியாக இருந்தாலும், ஆண்டவர் நம்மை நேசிக்கிறார். நாம் பாவி என்று அவர் நம்மை பார்க்கிறவர் அல்ல. என் மகன் பாவத்தை விட்டு வெளியே வருகின்றானா என்று ஏங்குகின்றவர்.

    நாம் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அவருடைய சமுகத்திற்கு முன்பாக நம்மைத் தாழ்த்தும்போது, நம்மை வெறுமையாக்கும்போது அவர் நம்மை மன்னிக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

    தாவீதின் காலத்தில் இயேசு கிறிஸ்து இல்லை, அவருடைய இரத்தம் இல்ல, ஆனால் நமக்கு கல்வாரி இரத்தம் இருக்கிறது. கிறிஸ்து நமக்காக கடைசி சொட்டு இரத்தம் வரை சிலுவையிலே சிந்தி மரித்தார். அவருடைய இரத்தத்தினால் நாம் மீட்படைய முடியும்.

    நம்முடைய பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு, இரட்சிப்பை அதாவது மீட்பை பெற்றுக்கொள்வோமாகில் நாமும் கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக மாற முடியும்.


நீதிமொழிகள் 24:16அ
    நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்.


4. மோசே:
எண்ணாகமம் 12:7
    என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, அவன் என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்.

நீதிமொழிகள் 28:20
    உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான்.

    கர்த்தரிடத்தில் நற்சாட்சி பெற்ற நபர்களைக் குறித்து அறிந்துகொண்டோம். நாமும் மேல்கற்றுக்கொண்ட பரிசுத்தவான்களைப்போல கர்த்தருடைய சித்தத்தை அறிந்து அவருடைய பாதையை பின்பற்றி நடக்கும்போது, அவரால் நற்சாட்சியை பெற்றுக்கொள்ள முடியும்.

    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக…. ஆமென்….!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.