எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை, சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை. (சங்கீதம் 9:18)
தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் பேராயம்
பேராய அருட்பணி இயக்கம் (HMS)
Home Missionary Society
சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்தி பிரசங்கிக்கப்பட வேண்டும். மாற்கு 13:10
நற்செய்தி பணி ஆண்டவரின் அருட்பணி
அன்பான! அருட்பணி பங்காளர்களே!
பேராய அருட்பணி இயக்கத்தின் தலைவராகவும், பேராயத்தில் 7-வது பேராயராகவும் பொறுப்பேற்றிருக்கும் பேரருட்திரு. அறிவர். D. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஐயா அவர்கள் சார்பிலும் பேராயரம்மா மற்றும் HMS செயலராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி. P. மேரி ஜெயசிங் அவர்கள் சார்பிலும் அனைத்து அருட்பணியாளர் சார்பிலும் வாழ்த்துக்கள். உங்களது தொடர் ஜெபத்தாலும் உதாரத்துவமான காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளாலும் கர்த்தரின் கிருபையால் அருட்பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடவுளின் இதயத் துடிப்பாகிய அருட்பணியின் நுகத்தை எங்களோடு இணைந்து ஆண்டு முழுவதும் சுமக்கும் உங்கள் யாவருக்கும் கனிகளின் வாயிலாக சிறந்த நற்பலன்கள் உண்டு என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
அருட்பணி அறிமுகம்
1834 ஆம் ஆண்டு ஜீன் 16 ஆம் நாள் யாழ்பாணத்தில் பணிபுரிந்து வந்த அமெரிக்க அருட்பணி இயக்கமானது தனது எல்லையை விரிவாக்கி மதுரையை மையமாகக் கொண்டு நற்செய்திப் பணிபுரிய தனது முதல் அருட்பணியாளர் வில்லியம் டாட் என்பவரையும் அவரது துணைவியர் ட்ரேஸி அம்மையாரையும் அனுப்பினார்கள். இதற்கு முன் மூன்று மிஷனெரிகள் இங்கு வந்த பணித்தள ஆய்வு மேற்கொண்டு வந்தனர். முதலில் குடும்பமாக தங்கி பணியாற்றி வந்த அருட்பணியாளர் தனது மனைவியுடன் அருட்பணிப்பயணம் மேற்கொண்டபோது 1835 ஆம் ஆண்டு அவரது மனைவி எதிர்பாராத விதமாக மரித்துவிட்டார். 1839 ஆம் ஆண்டு இவரது உடல் நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டு சொந்த நாடு திரும்பினார். ஆனால் அவரது குறிப்பின்படி ஐந்து ஆண்டு அருட்பணியின் விளைவாக 1600 சபை அங்கத்தினர்களும், 7000 இரட்சிக்கப்பட்டவர்களும் இருந்தனர் என குறிப்பிடுகிறார். இதனைத் தொடர்ந்து மிகச் சிறந்த அர்ப்பணிப்பு மிக்க அருட்பணியாளர்களின் திருப்பணியால் நற்செய்திப்பணி பல்வேறு பரிமாணங்களில் பரிமளித்தது.
முழுமையான நற்செய்திப்பணி (Holistic Mission)
வெறும் சொற்களால் மட்டுமே அறிவிப்பது முழுமையான நற்செய்திப்பணியாகாது என்பதை திருமறையின் அடிப்படையில் நன்கு புரிந்து கொண்ட அயல் நாட்டு அருட்பணியாளர்கள், தங்கள் அருட்பணி இயக்கமாக மட்டுமல்ல உள்நாட்டு அரசாங்கம் மற்றும் பெரும் நன்கொடையாளர்களுடன் தொடர்பு கொண்டு நற்செய்தி அறிவித்தனர். ஏழை பணக்காரன், இனத்தின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என்று வெவ்வேறு பரிமானங்களில் மக்கள் கரிசனையை வெளிப்படுத்தினர்.
சமூகத்தாலும் அரசாங்கத்தாலும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் இவர்கள் கண்ணில் அதிகமாக தென்பட்டார்கள். இத்தகைய மக்களின் வாழ்வின் உயர்வு நற்செய்தியின் வழியாக உண்டு என்பதை உணரச் செய்தார்கள். 1942-ல் ”வெள்ளையனே வெளியேறு” இயக்கம் வலுப்பெறும் போது மட்டுமல்ல அதற்கு முன்னதாகவே நிர்வாகம் செய்யும் திறமையை நம் நாட்டினருக்கு உருவாக்க நினைத்து செயல்படத் துவங்கின மிஷனரிகளின் ஒரு சிறந்த முயற்சிதான் உள்நாட்டு அருட்பணி சங்கம் என்ற பொருள்படும் Home Missionary Society ஏற்படுத்தப்பட்டது.
இந்த இயக்கம் அயல் நாட்டு அருட்பணியாளர்களின் துவக்கமாகவும் நம் நாட்டு மக்களின் ஊக்கமான செயலாக்கமாகவும் திகழ்ந்தது. இந்த கால காட்டத்திற்கு முன்னரே திருச்சபைகள் சிறிய மிஷனரி இயக்கங்களை துவங்கி நடத்தி வந்தனர். அருட்திரு. வே. சந்தியாகு அய்யர் அவர்கள் இதன் கவுரவ செயலராகப் பணிபுரிந்து வந்த போது HMS-க்கான ஆண்டு வரைவு திட்டம் ரூ.2000/- என்றும் 12 அருட்பணியாளர்கள் இதில் பணிபுரிவதாகவும் 200 ஆத்துமாக்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். இக்குறிப்பினை 1915 ஆம் ஆண்டு நடைபெற்ற 81 வது ஆண்டு அமெரிக்க – மதுரா அருட்பணி அறிக்கையில் தொகுத்து அருள்திரு. ஜெஃப்ரி ஐயா வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய திருச்சபையின் உருவாக்கத்திற்கு பின் அருட்பணி
தென்னிந்திய திருச்சபை உருவான காலத்திலேயே முதலில் உருவான பேராயங்களில் நமது பேராயமும் ஒன்று. இதின் முதல் பேராயரான Rev. லெஸ்லி நியூபிகின் அவர்கள் தன்னை ஒரு அருட்பணியாளராக நினைவில் நிருத்திக் கொண்டு திருப்பணியாற்றினார்.
முதல் தமிழ் பேராயரான அருட்பெருந்திரு. ஜார்ஜ் தேவதாஸ் ஐயா அவர்களின் துணைவியர் திருமதி. ரஞ்சிதம் தேவதாஸ் அவர்கள் அருட்பணியை தாங்குவதை முதன்மையான நோக்கமாக கொண்டு 62 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் உள்ள OCPM பள்ளி வளாகத்தில் அருட்பணிக்கான விற்பனை விழாவினை துவங்கினார்கள். அன்றைய நாளில் ரூ.2450/- விற்பனை விழாவின் மூலம் வரவு வந்தாக குறிப்பில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பேராயர்கள் காலத்திலும் வெவ்வேறு பரிமாணங்களில் அருட்பணி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
அருட்பணியின் புதிய பரிமானங்கள்
நமது பேராயத்தின் ஒவ்வொரு பேராயர்களின் காலத்திலும் அருட்பணி பல்வேறு விதங்களில் நடைபெற்றுக் கொண்டே இருந்திருக்கிறது என்பதை பின்வறுமாறு குறிப்பிடலாம்.
1. கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள கிராமங்களில் நற்செய்தி அறிவிக்கும் கம்பம் பள்ளத்தாக்கு அருட்பணி
2. ஒரிசாவில் கிறிஸ்துவின் அன்பை அறிவிக்க பேராயத்திலிருந்தே அருட்பணியாளர்களை அனுப்பி நடத்திய ஒரிசா அருட்பணி திட்டம்.
3. 10 அருட்பணியார்களின் ஊழிய தரத்தை மேம்படுத்தவும் துரிதமாக அருட்பணி செய்ய ஊக்குவிக்கவும் இருசக்கர வாகனங்கள் கொடுக்கும் திட்டம்.
4. பர்மா மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் மியான்மர் அருட்பணி மற்றும் நாடோடி மக்களுக்கான அருட்பணி.
5. தற்போது 100 அருட்பணியார்கள் 100 பணித்தளங்கள் என்ற இலக்கோடு அனைவருக்கும் நற்செய்தி என்னும் திட்டம்
அருட்பணியாளர்களின் தனிவாழ்வில் வளர்ச்சி
பேராயமாக அருட்பணியாளர்களின் தனி வாழ்வின் தேவைகளை கருத்தில் கொண்டு தொடர்ந்து செய்து வருகிற செயல் திட்டங்கள்
1. ஊதிய உயர்வை வழிமுறைப்படுத்தி வருடக் கணக்கின்படி ஊதியம் வழங்கும் முறை.
2. பிள்ளைகளின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகளை சந்தித்து உதவும் மருத்துவ உதவித்திட்டம்
3. L.I.C மற்றும் E P F திட்டத்தில் அனைத்து அருட்பணியாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
4. தாங்கும் நிறுவனங்கள் மற்றம் சபைகளை உற்சாகப்படுத்தி தொடர்ந்து அருட்பணி தாகத்தை உருவாக்குதல்.
5. அருட்பணியைத் தாங்கும் திருச்சபை மற்றும் நிறுவனங்கள் மூலமாக ஆண்டிற்கு ஒரு முறை பண்டிகை காலத் தேவைகள் நிறைவேற்றப்படுகிறது
6. முழுமையான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ, உபகரணங்கள் வழங்கி சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் பார்த்தல் போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்யும் பயிற்சியும் வழங்குகப்பட்டு வருகிறது.
7. பள்ளிகளில் படிக்கும் அருட்பணியாளர்களின் பிள்ளைகள் இலவசமாக விடுதிகளில் தங்கி படிக்க ஆவண செய்யப்பட்டுள்ளது.
8. மேற்கல்வியை தொடரும் அருட்பணியாளர்களின் பிள்ளைகளுக்கும் மருத்துவ படிப்பில் உள்ள பிள்ளைகளுக்கும் கல்வி உதவியை ஆண்டுடிற்கு ஒரு முறை தந்து உதவும் திட்டம்
அருட்பணி விபரம்
1. அருட்பணியாளர்கள் எண்ணிக்கை 42
2. ஆங்கில பேச்சுக் கலைப் பயிற்சி மையம் 2
3. மலைப்பணித்தளங்கள் 4
4. கொரி-இந்த் அருட்பணி மூலம் கட்டப்பட்ட ஆலயங்கள் 4
5. தையல் பயிற்சி மையங்கள் 3
6. கம்பியூட்டர் பயிற்சி மையங்கள் 2
7. மாலை நேர இலவச கல்வி மையம் 10
8. கிராம குருக்கள் 2
9. ஓய்வு பெற்ற அருட்பணியாளர்கள் 12
புதிய திசனங்கள்
1. ஆண்டிற்கு ஒரு முறை தரிசன முகாம் நடத்தி மிஷனெரி அர்ப்பணிப்பை திருச்சபை வாலிபர்கள் மத்தியில் உருவாக்குதல்.
2. அருட்பணியார்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்த்துதல்
3. 3 மாதத்திற்கு ஒரு முறை காலாண்டு அருட்பணி மலர் வெளியிட்டு அருட்பணி விபரங்களை திருச்சபை மக்கள் அறிந்து கொள்ளச் செய்தல்
4. அருட்பணியாளர்களின் மாதாந்திர ஊக்கத்தொகையை அதிகரித்து மன நிறைவோடு அருட்பணி செய்ய ஊக்குவித்தல்.
5. ஊதிய தரத்தை மேம்படுத்த தகுந்த பயிற்சிகளை கொடுத்தல்.
மேற்கண்ட தரிசனங்கள் நிறைவேற ஊக்கமாய் ஜெபியுங்கள் உற்சாகமாக கொடுங்கள் உன்னதரின் அருட்பணி சிறக்க யாவரும் கரம்கோர்த்து செயல்படுவோம்.
அருள்திரு. J. பொன் பிரபாகர்
(இயக்குனர் HMS)
திருமதி. P. மேரி ஜெயசிங் M.A., M.Ed
பேராயரம்மா – தலைவி பெண்கள் ஐக்கிய சங்கம் – செயலர் HMS
Rt.Rev.Dr. D. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் M.A.,B.D.,P.G.D.TH.Ph.D.,
பேராயர் மதுரை – இராமநாதபுரம் திருமண்டிலம்
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.