Type Here to Get Search Results !

JC VBS 2023 | Day 1 | மனதில் உறுதி | Be Sure in Mind | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை - இராமநாதபுரம் திருமண்டிலம்
இளையோர் திருச்சபை திருப்பணி

இளைளோர் திருச்சபை விடுமுறை வேதாகமப் பள்ளி – 2023

கருப்பொருள்: உறுதி
(சங்கீதம் 112:8) (ஏசாயா 26:3)

சங்கீதம் 112:8
    அவன் இருதயம் உறுதியாயிருக்கும், அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.

ஏசாயா 26:3
    உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறாபடியால், நீர் அவனைப் பூரன சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

உறுதி என்பதற்கு இணையான வார்த்தைகள்:
    உறுதி, உறுதியான, உறுதியாயிரு, உறுதியாய், உறுதிபட, உறுதிப்படுத்து, உறுதிப்பட, உறுதிப்பாடு, உறுதிசெய், உயிருக்குறுதி, உறுதியோடு, உறுதிக்கு, உறுதியில், உறுதியது, உறுதியிடம், நிலையாய், நிலையான, நிலைத்திரு, மேன்மை, தளராமை, விடாப்பிடி, விடாமுயற்சி, தீர்மானம், நிச்சயமாய், நிச்சயப்படுத்தல், நிச்சயமாக, மாறாத, மாறாமல்.

இந்த சங்கீதத்தின் பின்னணி:
சங்கீதம் 112:1-10
    112-ம் சங்கீதம் 111-ம் சங்கீதத்தின் தொடர்ச்சியாகும். இந்த சங்கீதம் பாபிலோனிய விடுதலைக்குப் பின்னரே பாடப்பட்டிருக்க வேண்டும். இப்பாடல் அறிவுரைகள் கூறும் பாடலாகும். இப்பாடல் கடவுள் மீது நம்பிக்கை (பற்றுறுதி) கொண்டவர்களைப் பற்றி பாடும் பாடலாகும். நேர்மையானவர்களை (கடவுள் மீது பற்றுறுதி கொண்டவர்களை) புகழ்ந்து பாடும் பாடலாகும். கடவுள் மனிதரானார், மனிதன் கடவுளிடம் சார்ந்திருக்க (யோவான் 1:12-14) வேண்டும்.
    மனிதர்கள் கடவுளைப்போன்று வாழ வேண்டும். இல்லாவிட்டால் மனிதன் வாழ்வதற்கு தகுதியில்லாதவன். கலாத்தியர் 2:20,21-ன் படி வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்து வாழ்கிறார், என்ற உறுதி ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் இருக்க வேண்டும்.

நோக்கம்:
    இந்த சங்கீதத்தில் கடவுளுக்குப் பயப்படுகிறவனும், நீதிமானுமாகிய ஒரு மனிதனுக்காகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்களைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. கடவுளுக்கு பயந்து அவருடைய கட்டளைகளிலும், அவருடைய வார்த்தைகளிலும் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதரை ஆசீர்வதிப்பதற்கு கடவுள் வாக்குபண்ணியிருக்கிறார். கடவுளின் சித்தம் செய்யப்பட வேண்டும் என்பதையும், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி, அன்பைக் கூறு வேண்டும் என்பதையும் இச்சங்கீதம் விளக்குகிறது. கடவுளுடைய கட்டளையை உலகம் பார்க்கின்ற பார்வையில் பார்க்க முடியாது. ஏனென்றால் கடவுளுடைய நீதி வேறு, மனிதனின் நீதி வேறு. ஆகவே, கடவுளின் சித்தத்தை அறிந்து பாக்கியத்தை பெற்றுக்கொள்வதே இந்த சங்கீதத்தின் நோக்கமாகும்.
    உலகத்திலுள்ள சூழ்நிலைக்கு மாற்றாக கடவுளின் விருப்பமுள்ளது. பக்தியுள்ள மனிதராக வாழவேண்டும் என்பதே இந்த சங்கீதத்தின் பாடலாகும். இரக்கம், பக்தி, நீதி, நேர்மையுள்ள வாழ்வை வாழ வேண்டும். கடவுளுக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர். துன்பங்களில் வருகின்ற பயத்தினாலும், கலலையினாலும் சங்கீதக்காரன் அசைக்கப்படாமல், கடவுள் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்.

முன்னுரை:
    இந்த உலகின் சவால்களுக்கும் சந்திக்கின்ற சோதனைகளுக்கும் நடுவில் நம் பிள்ளைகள் கர்த்தரோடு நிலைத்திருக்க உறுதியான மனமுடையவர்களாய், உறுதியான இருதயத்தோடு கர்த்தரை சார்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இப்பொருளின் அடிப்படையில் சங்கீதம் 112:8-ஐ மையமாகக் கொண்டு பிள்ளைகள் தங்களது வாழ்க்கையில் உறுதியான எண்ணங்களையும் செயல்களையும் உருவாக்க நாம் உதவ வேண்டும். விடுமுறை வேதாகமப் பள்ளியின் எல்லா நாட்களிலும் தாவீது எவ்விதமாய் கர்த்தரைச் சார்ந்து உறுதியாய் தன் வாழ்க்கையின் சவால்களையும் சோதனைகளையும் மேற்கொண்டார் என பிள்ளைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
    நம் ஆண்டவர் எப்பொழுதும் உறுதியான கடவுள். நாம் அவரை விட்டு விலகினாலும், அவர் நம்மை உறுதியாய் பற்றி பிடிக்கின்ற ஆண்டவர். தாவீது தன் வாழ்வில் ஆண்டவரை விட்டு விலகி, விழுந்து போனாபோதும் கர்த்தர் அவரை உறுதியாய் நடத்தினார். தாவீது எப்பொழுதும் ஆண்டவரை உறுதியாய் பற்றி பிடித்து வாழ்ந்தார்.

நாள் – 1
தலைப்பு: மனதில் உறுதி
அவன் இருதயம் உறுதியாயிருக்கும் (சங்கீதம் 112:8)
நோக்கம்:
    உறுதியான மனம் உடையவர்களாய் வாழவும், உறுதியான எண்ணம் உடையவர்களாய் காணப்படவும், நம் வாழ்வில் ஆண்டவரின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதியான பிள்ளைகளாய் வாழ வழிநடத்துதல்.

வேதபகுதி:
    தாவீது அவர்களின் இளமைப்பருவம், குடும்பம், வளர்ச்சி, அவரின் ஆக்கம், ஆண்டவரின் மேல் அவர் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கை இதின் மூலமாய் அவருக்கு கிடைத்த வெற்றிகள்.
    1 சாமுவேல் 16:1-13
    1 சாமுவேல் 17:1-57

மனப்பாட வசனம்:
ஏசாயா 26:3
    உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

வேதபாட முன்னேற்றம்:
    தாவீது சிறுவயது முதல் கடவுளை சார்ந்து, நம்பி வாழ்ந்தார். தாவீது தன் வாழ்வு முழுவதும் உறுதியான மனமுடையவராய் இடுக்கமான சூழ்நிலைகளில் சவாலான தருனங்களில் தளராமல் உறுதியாய் வாழ்ந்தார்.
    தாவீது பெத்லகேமில் பிறந்தார்.
    அவர் குடும்பம், கடவுளின் திட்டம், சகோதரர்கள்.
    அவர் ஆடுகளை மேய்கிறவராகவும், அவைகளை நேசிக்கின்றவராகவும் காணப்பட்டார்.
    ஆடுகளை பாதுகாக்கிறவராகவும், கரடியையும், சிங்கத்தையும் உறுதியாய் பயப்படாமல் சந்தித்து, போராடி வெற்றி கண்டார்.
    ஒரு சமயத்தில் இஸ்ரவேலுக்கு எதிராக வந்த பெலிஸ்தியனாகிய கோலியாத் கடவுளை நிந்தித்தான். தாவீது சவாலை பொறுத்துக்கொள்ள முடியாமல், தைரியமாக எதிர்கொண்டார். வெற்றியையும் கண்டார்.
    சவுலாகிய இராஜாவுக்கும், தாவீதுக்கும் இடையே உறவு இங்கு ஆரம்பிக்கின்றது. சவுலின் வியாதிக்கு சுகமளிக்க தாவீது அனுப்பப்படுகிறார்.
    தாவீது இராஜாவாக வருவது கடவுளின் திட்டம். அதற்காக கடவுள் தாவீதை தயார்படுத்தினார். உறுதியான கடவுள் தாவீதை உறுதிப்படுத்தினார்.

தலைப்பு அறிமுகம்:
    (பலூன் ஒன்றை வெடிக்கச்செய்து, இந்நாளுக்கான தலைப்பு அறிமுகத்தை துவங்கலாம்) உங்களில் எத்தனை பேர் இந்த சத்தத்திற்கு பயந்தீர்கள்? இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் இரண்டு காரியங்களுக்குப் பயப்படுமாம். ஒன்று கீழே விழுந்து விடுவோம் என்ற பயம். மற்றொன்று ஒலி அதாவது சத்தத்தைக் குறித்த பயம்.  ஆனால் அந்த குழந்தை வளர்ந்து வாலிபனாகி ஒரு ராணுவ வீரனாக இருக்கும் போது போரில் குண்டுமழையின் சத்தத்தைக் கேட்டு பயப்படமாட்டான் அல்லவா? இந்த உலகில் நம்மை பயமுறுத்தும் அநேக காரணிகள் உண்டு. தேவையற்ற பயங்கள் நமது மனதின் உறுதியை குலைத்துவிடும். மனதில் உறுதியுடையோர் எத்தகைய சவாலான சூழலையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவார்கள். இந்த உறுதியை நாம் ஆண்டவரோடு உள்ள உறவில் சரியாக இருக்கும்போது பெற்றுக்கொள்ளலாம். அப்படி தன் வாழ்நாள் முழுவதும் உறுதியுடன் வாழ்ந்த ஒரு நபரை குறித்து இந்த ஆண்டு JC VBS-ல் கற்றுக்கொள்ளப்போகிறோம். நமது வேதாகமத்தில் சிங்கத்தின் வாயைக் கிழித்த நபர்கள் யாரென்று தெரியுமா? 1. சிம்சோன் 2. தாவீது. இந்த தாவீதின் வாழ்வின் மூலமாக, உறுதி என்கிற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஆண்டு நாம் சத்திய வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள இருக்கிறோம்.

பாட விளக்கம்:
    தாவீது பெத்லகேமில் பிறந்தவர். அவரது தகப்பன் ஈசாய். தாவீதுக்கு ஏழு அண்ணன்மார் இருந்தார்கள். இஸ்ரவேல் மக்கள் பெரும்பாலும் ஆடுமேய்த்தலை தங்களது தொழிலாக கொண்டிருந்தனர். தாவீது சிறுவனாக இருக்கும்போதே தன் அப்பாவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஆடுகளை மேய்க்கிற வேலையை செய்து வந்தார். உங்கள் வீட்டிலே வளர்க்கிற நாய், பூனை, ஆடு போன்றவற்றை நீங்கள் நேசிப்பீர்கள் அல்லவா? அதுபோல தாவீதும் தன் ஆடுகளை அதிகமாக நேசித்தார். தான் நேசித்தவைகளுக்கு சிங்கம் கரடி போன்றவற்றால் ஆபத்து வந்தாலும் பயப்படாமல் அவைகளோடு போராடி தன் ஆடுகளை காப்பாற்றினார். தன் ஆடுகளை எப்படியாவது காப்பாற்றியே ஆகவேண்டும் என்கிற உறுதியான மனம் தாவீதுக்கு எப்படி கிடைத்தது? தன் சுய தைரியத்தினால் அல்ல கர்த்தரே தனக்கு பாதுகாப்பாக இருந்ததாக தாவீது கூறுகின்றார். (1 சாமுவேல் 17:34-36)
    இந்த நிலையில் இஸ்ரவேல் மக்களை அழிக்கும்படி பெலிஸ்தியர் அவர்களுடன் போர்தொடுக்க வந்தனர். அவர்களில் அச்சுறுத்தக்கூடிய உடல் அமைப்பைக் கொண்ட கோலியாத் என்பவரை இஸ்ரவேலரில் யாராவது ஒருவர் சண்டையிட்டு வென்றால் பெலிஸ்தியராகிய நாங்கள் எல்லாரும் உங்களுக்கு அடிமைகளாக இருப்போம். நாங்கள் வென்றால் நீங்கள் எல்லாரும் எங்களுக்கு அடிமைகளாக வேண்டும் என்று இதற்கான கெடுவை 40 நாட்களுக்கு விதித்திருந்தனர். தாவீதின் மூத்த அண்ணன்மார் எலியாப், அபினாதாப், சம்மா ஆகியோர் சவுல் ராஜாவின் இராணுவத்திலே போர் வீரராக பணி செய்தனர். ஆகவே அவர்களது நலன் விசாரித்து வரும்படி தாவீதை அவரது தந்தை ஈசாய் அனுப்பி வைத்தார். தந்தையின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அண்ணன்மார்களை பார்க்க சென்றபோது அங்கே கோலியாத் ஆண்டவரை நிந்தித்தும் தன்னுடன் சண்டையிட யாருக்கு தைரியம் இருக்கிறது என்றும் கர்த்தருடைய ஜனங்களை பழித்து பேசியதை தாவீது கேட்டார். ஆண்டவர் மீது அதிக அன்பு வைத்திருந்த தாவீதுக்கு கோலியாத்தின் வார்த்தைகள் கோபத்தை வருவித்தது. ஆகவே, சவுல் ராஜாவிடம் தான் இந்த கோலியாத்துடன் சண்டையிட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு சவுல் நீ இந்த கோலியாத்துடன் சண்டையிட முடியாது ஏனெனில் அவன் சிறுவயது முதல் போர் புரிவதற்கு பயிற்சி பெற்றவன் என்றார்.
    தாவீதோ தன் ஆடுகளை மேய்த்தபோது சிங்கம் மற்றும் கரடியுடன் சண்டையிட்டு தனது ஆடுகளை காப்பாற்றியதையும் அதைவிட மேலாக கர்த்தர் இந்த பெலிஸ்தியனின் கைக்கு தன்னை தப்புவிப்பார் என்றும் ஆண்டவரின் நாமத்தில் தனக்குள் இருந்த மன உறுதியை கூறினார்.
    தாவீதின் மன உறுதியை ஏற்றுக்கொண்ட சவுல் யுத்தத்திற்கான உடைகளையும் ஆயுதங்களையும் கொடுத்து கோலியாத்துடன் சண்டையிட தாவீதை அனுப்பினார். ஆனால் தாவீதுக்கோ அந்த உடைகளையும், யுத்த ஆயுதங்களையும் பயன்படுத்தி பழக்கம் இல்லாததால் அதை கழற்றி ராஜாவிடம் கொடுத்துவிட்டு தான் கொண்டு வந்திருந்த தடியுடன் ஆற்றிலிருந்து தெரிந்தெடுத்த ஐந்து கூழாங்கற்களையும் ஒரு கவனையும் எடுத்துக்கொண்டு கோலியாத்துடன் சண்டையிட புறப்பட்டார். இதைக்கண்ட கோலியாத் தாவீதை ஏளனம் செய்து உன்னை கொன்று உன் உடலை பறவைகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் உணவாக கொடுப்பேன் என்று அச்சுறுத்தினார். ஆனால் தாவீதோ நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் சண்டையிட வருகிறாய், நானோ நீ நிந்தித்த கர்த்தருடைய நாமத்தில் உன்னிடம் வருகிறேன். கர்த்தர் இன்று உன்னை என்னிடம் ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் மேல் தனக்கிருந்த மன உறுதியை தாவீது கூறினார். மேலும் தன்னிடமிருந்த கவனில் ஒரு கல்லை வைத்து அது கோலியாத்தின் நெற்றியில் படும்படி எறிந்தார். அந்தக் கல் கோலியாத்தின் நெற்றியில் படவே கோலியாத் அங்கேயே மயங்கி வீழ்ந்தார். தாவீதின் கையில் பட்டயம் இல்லாததினால் அவர் கோலியாத்தின் பட்டயத்தினாலேயே அவரைக் கொன்று அவரது தலையை வெட்டி எடுத்தார். தங்களது வீரன் கொல்லப்பட்டதினால் பெலிஸ்தியர் அங்கிருந்து ஓடிப்போய்விட்டார்கள்.
    இதைக்கண்ட இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் அவரைப் புகழ்ந்தார்கள். ஆனால் இந்த புகழ்ச்சி சவுல் ராஜாவுக்கு தாவீதின் மீது பொறாமையை ஏற்படுத்தியது. இதனால் சவுல் தீய ஆவிக்கு அடிமையாகி தாவீதைக் கொல்ல பலமுறை முயற்சித்தார். இப்படி சவுல் ராஜா கர்த்தருடைய வழியின் படி நடக்காததால் அவருக்குப் பதிலாக தாவீதை இஸ்ரவேல் தேசத்திற்கு ராஜாவாக்கும்படியாக கர்த்தர் சித்தம் கொண்டார்.
    சவுல் பலமுறை தாவீதைக் கொல்ல முயற்சித்தும் கர்த்தர் தாவீதுடன் இருந்த படியால் தாவீதுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாவீதும் இந்த சூழ்நிலையிலும் கர்த்தருக்குள் மன உறுதியோடு இருந்து சவுல் மீது கோபம் கொள்ளவோ அவருக்கு எதிராகவோ செயல்படாமல் கர்த்தர் விரும்பக்கூடிய செயலையே செய்து வந்தார்.
    தாவீது ஆண்டவரை நேசித்து அவருக்குப் பிரியமானதையே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தபடியால் சிங்கம் எதிரித்து வந்த போதும், கோலியாத் எதிர்த்தபோதும், சவுல் அவருக்கு அநேக தீமைகள் செய்த போதும் பயமில்லாமல், குழப்பம் இல்லாமல் தைரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் கர்த்தருக்குப் பிரியமாகவும் வாழ்ந்தார்.

இரட்சிப்பின் சிந்தனை!
    உனது நம்பிக்கை யார் மீது? நமது ஆண்டவர் இயேசுவும் பிதாவையே தன் நம்பிக்கையாக கொண்டிருந்தபடியால் அவரை ஏளனம் செய்த போதும், அவரை அவமதித்த போதும், அவருக்கு பாடுகளை கொடுத்த போதும் அவர்களுக்கு எதிராக செயல்படாமல் பிதாவுக்கு பிரியமானதையே செய்தார். நீ கர்த்தர் மீது நம்பிக்கை வைத்திருந்தால் அவர் எப்போதும் உன்னோடு இருப்பதை உணர முடியும். வாழ்வில் எத்தகைய கடின சூழ்நிலை உனக்கு வந்தாலும் அதை உறுதியுடனும், கர்த்தருக்கு ஏற்ற விதத்திலும் எதிர்கொள்ள முடியும்.
-x-x-x-x-x-x-x-x-x


கருப்பொருள் விளக்கம்
    ஒவ்வொரு வருடமும் நாம் விடுமுறை வேதாகமப்பள்ளியை ஏதோ ஒரு தலைப்பின் அடிப்படையில் நடத்தி வருகிறோம். ஆனால் அந்த தலைப்பை நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கமாட்டோம். அதற்காக நியமிக்கப்பட்ட தேவஊழியர்கள் தலைப்பை உருவாக்குவார்கள். ஆனால் நாம் பிள்ளைகளுக்கு தலைப்பை கற்றுக்கொடுக்கும்போது அந்த தலைப்பை நாமே உருவாக்கியதாக நினைத்துக்கொண்டு கற்றுக்கொடுக்க வேண்டும். அதாவது, அந்த அளவிற்கு தலைப்பு அதாவது கருப்பொருளானது நமக்குள்ளாக கிரியை செய்திருக்க வேண்டும். கருப்பொருளை நான் அனுபவிக்காமல் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க முடியாது.

    இந்த வருட விடுமுறை வேதாகமப்பள்ளியின் தலைப்பு ”உறுதி”
    உறுதி என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த வருடம் நாம் பிள்ளைகளுக்கு பாடங்களை கற்றுக்கொடுக்க இருக்கின்றோம். ஏசாயா 26:3-ன் அடிப்படையில் இந்த கருப்பொருளானது தயாரிக்கப்பட்டுள்ளது.

    கடவுளைத் தவிற உறுதியானவர் இந்த பூமியில் வாழ்ந்ததும் இல்லை. வாழவும் முடியாது. கடவுள் மாத்திரமே உறுதியானவர்.   நாமும் நம்முடைய பிரச்சனைகளின் மத்தியிலும் கடவுளின் துணையோடு உறுதியாய் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

1. கடவுள் உறுதியானவர்:
    கடவுள் ஆதி முதல் உறுதியானவர்.  கடவுள் உறுதியாய் இருப்பதினால் அவருடைய பிள்ளைகளாகிய நாமும் உறுதியாய் வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
    ஆதாமுக்கு எப்படி நீதி செய்தாரோ அதேபோல நமக்கும் நீதி செய்வார்.  ஆபிரகாமிற்கு எப்படி நீதி செய்தாரோ அப்படியே நீதி செய்வார்.
    இந்த உலகத்தில் காலங்களுக்குத் தக்கதாக, நேரங்களுக்குத் தக்கதாக, இடங்களுக்குத் தக்கதாக நீதி மாறுபடலாம்.  பணம் வைத்திருப்பவனுக்கு ஒரு நீதியும், ஏழைக்கு ஒரு நீதியும் வழங்கப்படலாம்.  அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் ஒரு நீதியும், சாதாரண தொழிலாழிக்கு ஒரு நீதியும் வழங்கப்படலாம்.  ஆனால் கர்த்தருடைய பார்வையில் அனைவருக்கும் ஒரே நீதியே.
    காலம் மாறிவிட்டதால் சில காரியங்கள் பாவம் அல்ல என்று உலகம் சொல்லலாம்.  ஆனால் கர்த்தருடைய பார்வையில் ஆதாம் காலத்தில் ஒரு காரியம் தவறு என்றால் அது இன்றும் தவறுதான்.

2. கடவுள் உருவாக்கின உலகமும் உருதியானது
    கடவுள் உருவாக்கின அனைத்தும் உறுதியாய் இருக்கின்றது. எ.கா: மரம், செடி, கொடி, சமுத்திரம், கண்டங்கள், சூரியன், சந்திரன், கோள்கள் இவையனைத்தும் உறுதியாகவே இருக்கின்றது.

3. உறுதியை இழந்தவன் மனிதன் மாத்திரமே
    மனிதன் உறுதியாய் இருப்பான் என்று நம்பியே கடவுள் மனிதனை உருவாக்கினார்.   ஆனால் மனிதன் உறுதியை இழந்துவிட்டான். பிசாசின் தந்திரத்தை உணராத ஏவாள், கடவுள் புசிக்க வேண்டாம் என்று விலக்கின கனியை புதித்ததால் மனிதன் உறுதியற்றவனாக மாறினான்.
    பிசாசு ஏவாளிடம் நீ கடவுள் புசிக்க வேண்டாம் என்று சொன்ன கனியை புசி என்று சொல்லவில்லை. புசித்தாள் கண்கள் திறக்கப்படும், நீங்கள் சாவதில்லை என்று சொல்லி வஞ்சித்தது. ஆதாமும், ஏவாளும் கடவுள் விலக்கின விருட்சத்தை புசித்ததினால் ஆண்டு கொள்ள வேண்டியவர்கள் அழைந்து திரிந்தார்கள்.
    கடவுள் ஏதோன் தோட்டத்தை விட்டு ஆதாமையும், ஏவாளையும் துரத்திவிட்டார். ஆதாம் முதல் பல ஆண்டுகளாக மனிதர்கள் அழைந்து திரிந்து கொண்டிருந்தார்கள்.
    பயத்தின் மூலமாக உறுதியை கொண்டுவருவது கூடாத காரியம் அகும். கடவுளும் அதை விரும்பவில்லை.  கடவுள் மனிதனை பயமுறுத்தி கனியை புசிக்காமல் இருங்கள் என்று சொல்லவில்லை.  நன்மையும், தீமையும் உன்னிடத்தில் உண்டு.  புசிதால் என்ன விளைவு என்பதையும், புசிக்காவிட்டால் என்ன விளையு என்பதையும் ஆண்டவர் கற்றுக்கொடுத்தார்.  கடவுள் மனிதனை இப்படித்தான் வாழ வேண்டும் என்று பயமுறுத்தவில்லை.  பயமுறுத்துவதால் நாம் பிள்ளைகளை நல்வழிப்படுத்த முடியாது.

    ஆதாம் முதலாக அனைத்து தலைமுறையினரும் அழைந்து திரிந்துகொண்டிருந்தார்கள்.  முதன் முதலாக ஒரு கூடாரத்தை அமைத்து உறுதியாய் நிலைத்திருந்தவன் யாக்கோபு. ஆதியாகமம் 33:19,20ல் வாசிக்கிறோம் யாக்கோபு ஒரு கூடாரம் போட்டு, கடவுளுக்கு பலிபீடம் கட்டி அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பெயரிட்டான்.
    யாக்கோபு நிலைத்திருந்தான். யாக்கோபின் சந்ததியில் வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் நிலைத்திருக்கிறார். நாம் உறுதியாய் இருந்தால் நம்முடைய சந்ததியும் உறுதியாய் நிலைத்திருக்கும்.
    யாக்கோபின் சந்ததியில் அநேகர் விழுந்தார்கள். ஆனால் மீண்டும் எழுந்து நின்றார்கள். நாம் விழுந்தாலும் எழுந்து நின்று உறுதியாய் வாழ வேண்டும்.

4. ஆண்டவர் மனிதர்களோடு நிலைத்திருக்க (உறுதியாயிருக்க) வழியை ஏற்படுத்தினார்
    கடவுள் மனிதர்களோடு நிலைத்திருக்கும்படியாகவே அநேக வழிகளை ஏற்படுத்தினார். எ.கா: ஆசரிப்பு கூடாரம், மேகஸ்தம்பம், அக்கினிஸ்தம்பம்.


தாவீதின் சிங்காசனம் உருதியானது
1 இராஜாக்கள் 2:45ஆ
    தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாயிருக்கும்.
நாம் எப்படி தாவீதின் சிங்காசனம் உருதியானது என்று சொல்ல முடியும்:
    இயேசு கிறிஸ்துவை அநேகர் தாவீதின் குமாரன் என்றே அழைத்தார்கள். காரணம் தாவீதின் சிங்காசனம் நிலைத்திருந்தது.
    1. இரண்டு குருடர்கள் இயேசு கிறிஸ்துவை தாவீதின் குமாரனே என்று அழைத்தார்கள். (மத்தேயு 9:27)
    2. ஜனங்கள் எல்லாரும் ஆச்சரிப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள். (மத்தேயு 12:23)
    3. கானானிய ஸ்திரீ ஒருத்தி இயேசு கிறிஸ்துவை தாவீதின் குமாரனே என்றே அழைத்தாள். (மத்தேயு 15:22)
    4. இயேசு கிறிஸ்துவின் கழுதை பவனியின்போது ஜனங்கள் கிறிஸ்துவை தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்றே பாடினார்கள். (மத்தேயு 21:9)
    தாவீது உறுதியானர் அல்ல. தாவீதின் சிங்காசனம் உறுதியானது.
    தாவீது பாவம் செய்தவர் தானே. பின்னே ஏன் தாவீதின் சிங்காசனத்தை கர்த்தர் உறுதியாக்கினார் என்று நாம் யோசிக்கலாம். தாவீது பாவம் செய்தான். நான் செய்தது பாவம் என்று உணர்ந்த பின்பு தாவீது மீண்டும் அந்த பாவத்தை செய்யவில்லை.
    தாவீதுக்கு அநேக மறுமனையாட்டிகள் இருந்தார்கள். தாவீது தான் செய்வது பாவம் என்று உணர்ந்த நேரத்தில், தன் மறுமனையாட்கள் அனைவரையும் தனித்தனி வீடுகளில் வைத்து பராமரித்தான். அவர்கள் மரிக்கும் வரையிலும் அவர்களை விதவைகளாகவே வைத்திருந்தான் என்று சரித்திரம் சொல்லுகிறது.
    ஒரு முறை பாவத்தில் விழுந்த தாவீது மீண்டும் அந்த தவறை செய்யவில்லை. தவறுவது மனித இயல்பு. நாமும் தவறியிருக்கலாம், மீண்டும் எழுந்து உறுதியாய் நிற்க வேண்டும், மீண்டும் பழைய பாவத்தை தொடர கூடாது என்றே ஆண்டவர் விரும்புகிறார்.

கதை:
1. மேய்ப்பன்:
    தாவீது 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதன். ஒரு வாலிபனை அழைத்து அவனுக்கு அந்த காலத்திய உடை ஒன்றை அணிந்து, அவன் தலையில் ஒரு துணியை அக்காலத்து மனிதர்கள்போல மாட்டி, நமது அருகில் நிற்க வைத்து அவனை தாவீதாக நடிக்க வைக்க வேண்டும். அவனிடம் நாம் தாவீதைப் பற்றிய கேள்விகள் கேட்டு அவனை பதில் சொல்ல வைக்க வேண்டும்.  இப்படியாக முதல் நாள் கதையை நாம் துங்கலாம்.
    இயேசு கிறிஸ்துவைப் போலவே தாவீதும் பெத்லகேமில் பிறந்தவர்.
    தாவீது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோதே அவனுக்கு இசைக்கருவிளை வாசிக்கும் திறன் இருந்தது.  தாவீது இசைக்கருவிகளை வாசிப்பதில் தேறினவனாகவும், கடவுளை துதித்துப் பாடுவதில் நேரத்தை செலவிடுபவனாகவும் இருந்தான்.
    தாவீது ஆடுமேய்ப்பதை ஒரு தொழிலாக வைத்திருக்கவில்லை.  ஈசாய் பெரிய பணக்காரன்.  ஆடு மேய்ப்பதற்காக ஈசாயிடம் அநேக வேலையாட்கள் இருந்தார்கள்.  தாவீது பொழுதுபோக்குக்காக கொஞ்சம் ஆடுகளை மேய்த்து வந்தான்.  (1 சாமுவேல் 17:28)
    அநேகர் ஈசாக்கு தாவீதின் மீது பிரியம் இல்லை.  எனவே, ஆடுமேய்க்கும் தொழிலை ஈசாய்க்கு அவருடைய தகப்பன் கொடுத்துவிட்டார் என்று சொல்லுவார்கள்.  அது உண்மை அல்ல.  தாவீது ஆடுமேய்க்கும் தொழிலை கடவுளு் என்னோடு இருக்கிறார் என்ற மன உறுதியுடன் தானகவே நேசித்து செய்தார்.
    நாமும் கூட நமக்கென்று கொடுக்கப்பட்ட வேலைகளை மனஉறுதியுடன் செய்ய வேண்டும்.  நமக்கு கொடுக்கப்பட்ட வேலை படிக்கின்ற வேலை.  நாம் மன உறுதியோடு படிக்கின்றோமா? சிந்தித்து பார்ப்போம்.  நம்முடைய பெற்றோர் மிகவும் பிரயாசப்பட்டு நம்மை பள்ளிகளுக்கு அனுப்புகின்றார்கள்.  பெரும் தொகையை ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய படிப்பிற்காகவே செலவிடுகிறார்கள்.  ஆனால் அந்த படிக்கின்ற வேலையை நாம் சரியாய் செய்கின்றோமா? சிந்தித்துப்போர்ப்போம்.

    தாவீது தான் பொழுது போக்குக்காக மேய்த்த ஆடுகளையும் கூட கண்ணும் கருத்துமாய் பராமரித்தான்.  ஒரு முறை சிங்கமும், ஒரு முறை கரடியும் ஆட்டு மந்தையில் இருக்கும் ஆட்டை பிடித்த போது, தாவீது அதனோடு போடாடி சிங்கத்தின் வாய்க்கும், கரடியின் வாய்க்கும் ஆடுகளை தப்புவித்தான்.  பொழுதுபோக்குக்காக செய்த வேலையையும் உண்மையும், உத்தமமுமாக செய்தவன் தாவீது.
    தாவீது மிகவும் விருப்பத்தோடு ஆடுகளை மேய்த்து வந்ததினால் தான், ஒரு முறை சிங்கமும், ஒரு முறை கரடியும் வந்தபோது கர்த்தர் என்னோடு இரு்க்கிறார் என்ற மன உறுதியுடன் அதனோடு போராடி அதை மேற்கொண்டு, சிங்கத்தின் வாய்க்கும், கரடியின் வாய்க்கும் தனது மந்தையை பராமரித்தார்.
    நாமும் நம்முடைய படிக்கின்ற வேலையை மிகவும் நேசிக்க வேண்டும்.  படிக்க முடியாதபடி அநேக இடையுருகள் நேரிடும்.  ஆனால் நாம் கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்ற மன உறுதியுடன் தடைகளை நாம் உடைத்தெரிந்து மேற்கொள்ள வேண்டும்.

    இஸ்ரவேலின் முதல் ராஜா சவுல்.  பொல்லாத ஆவி இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலை மிகவும் கலங்கப்பண்ணியது.  சவுலின் பொல்லாத ஆவியின் பிடியிலிருந்து விடுதலைபெற சுரமண்டலம் வாசிக்கத்தெரிந்த ஒருவனை தேடினார்கள்.  அப்பொழுது ஈசாயின் குமாரனாகிய தாவீது நன்றாக சுரமண்டலம் வாசிப்பான் என்பதை அறிந்து அவனை சவுலுக்கு முன்பாக அழைத்துவந்தார்கள்.  சவுலுக்கு தாவீதை பிடித்தபடியினால் தாவீது சவுலின் ஆயுததாரியாக மாறினான்.  (1 சாமுவேல் 16:21)
    தாவீது சவுலின் பொல்லாத ஆவிக்காக சுரமண்டலம் வாசித்த பிறகு தன் வீட்டிற்கு போய் தன் வலக்கப்படியே ஆடுகளை மேய்க்க துவங்கினான்.

    தாவீது ஒரு மேய்ப்பன். மேய்ப்பனான தாவீதின் குணங்களைப் பற்றி பிள்ளைகளிடம் கேட்க வேண்டும். அவர்கள் தங்களுக்கு தெரிந்த பதில்களை சொல்லுவார்கள். பின்பு நாம் கீழ்கண்ட பதில்களை சொல்ல வேண்டும்.
    1. தாவீது ஆடுகளின் மத்தியில் தனிமையாக வாழ்ந்த ஒரு நபர்
    2. வனாந்திரத்தில் ஆடுகளோடு சவால் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர்
    3. ஆடுகளை சிங்கமும், கரடியும் தாக்க வந்தபோது, அதனோடு போராட துணிந்தவன். சிறந்த போர் வீரன்.
    4. ஆடு மேய்ப்பது என்பது பஞ்சு மெத்தையில் உறங்கும் வாழ்க்கை அல்ல. கடினமான ஒரு வாழ்க்கை.
    5. காடுகளிலும், மலைகளிலும் அலைந்து திரிந்தவன் என்பதால் ஒரு முறட்டுத்தனமான மனிதன் தாவீது.
    இவையே ஒருவன் ராஜாவாக மாறுவதற்கான தகுதிகள். இவையனைத்தும் தாவீதுக்கு ஆடுமேய்க்கும் காலத்திலேயே இருந்தது.

பிள்ளைகளிடம் உள்ள குணங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்:
    1. ஒருவனை அழைத்து அவனது நண்பனின் குணங்களைப் பற்றி கூற வைக்கலாம்.
    2. உன் நண்பனின் படத்தை வரைந்து காட்டு என்று சொல்லலாம்
    3. உனக்கு பிடித்த பாடலை பாடு என்று சொல்லலாம்.


2. தாவீதும் கோலியாத்தும்:
    தாவீது கோலியாத்தை ஜெயித்த விதத்தை சொல்லும்போது, ஒரு மனிதனைப்போன்ற பொம்மையை குச்சியில் செய்து நிறுத்தி, ஒரு மாணவனை அழைத்து காகிதபந்தினால் அந்த பொம்மையின் தலையில் குறிவைத்து அடி என்று சொல்லாம்.
    இதைப்போலவே தாவீது சிறுவனாக இருந்தாலும், கோலியாத் என்ற பெரிய வீரனை, சிறுவயது முதல் யுத்தத்தில் பயிற்சி பெற்ற வீரனை தோற்கடித்தார் என்று பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
    தாவீதின் மூத்த அண்ணன்மார் எலியாப், அபினாதாப், சம்மா ஆகியோர் சவுல் ராஜாவின் இராணுவத்திலே போர் வீரராக பணி செய்தனர்.
    தகப்பனுடைய விருப்பத்தின்படி ஆடுமேய்த்துக்கொண்டிருந்த தாவீது தன் சகோதரரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக சவுலின் இராணுவம் இருந்த இடத்திற்கு சென்றார்.
    சவுலும் இஸ்ரவேலின் இராணுவமும் ஏலா பள்ளத்தாக்கில் உள்ள மலையில் ஒருமித்து நின்றார்கள்.   அவர்களுக்கு எதிர்புறத்தில் உள்ள ஒரு மலையில் பெலிஸ்தியர்கள் நின்றார்கள்.  இருவருக்கும் இடைய பள்ளத்தாக்கு இருந்தது.
    பெலிஸ்தியரின் பாலளத்திலிருந்து ஒரு வீரன் வந்தான்.  அவன் பெயர் கோலியாத்.  அவன் காத் ஊரைச் சேர்ந்தவன்.  அவன் இஸ்ரவேலின் சேனையைப் பார்த்து, உங்களில் ஒருவன் என்னோடு போர் செய்து, என்னை கொலை செய்தால் பெலிஸ்தியர்கள் அனைவரும உங்களுக்கு வேலைக்காரராவோம்.  ஒருவேலை நான் உங்கள் வீரனை கொலை செய்துவிட்டால் இஸ்ரவேலராகிய நீங்கள் அனைவரும் எங்களுக்கு வேலைக்காரராக வேண்டும் என்று முழக்கமிட்டான்.  கோலியாத்தின் இந்த வார்த்தைகளை கேட்ட இஸ்ரவேலர்கள் அனைவரும் பயந்து, கலக்கமடைந்தார்கள்.  இப்படியாக கோலியாத் நாற்பது நாள் தினமும் காலையிலும் மாலையிலும் வந்து இஸ்ரவேலின் சேனையை நிந்தித்தான்.
    கோலியாத்தின் உயரம் ஆறு முழும் ஒரு ஜான்.  அவன் வைத்திருந்த போர்கவசத்தின் நிறை 5000 சேக்கல் வெண்கலம்காலில் வெண்கல கவசத்தையும், தன் தோலில் வெண்கல கேடகத்தையும் தரித்திருந்தான்.  அவன் பயன்படுத்தின ஈட்டி அறுநூல் ஏக்கல் இருப்பு(1 சாமுவேல் 17:4-7)
    தன் அணணன்மாரை பார்க்க வந்த தாவீது கோலியாத் ஜீவனுள்ள தேவனுடைய சேனையை நித்திக்கிறதைக் கேட்டு கோபமடைந்தான்.  உண்மைக் கடவுளை ஆராதிக்கின்ற இஸ்ரவேலர்களில் இந்த பெலிஸ்தியனை வீழ்த்த ஒரு வீரன் இல்லை, நான் போய் அந்த பெலிஸ்தியனை கொலை செய்கிறேன் என்றான்.  தாவீதின் வார்த்தைகள் சவுலின் காதில் எட்டியபோது, அவன் தாவீதை அழைத்து நீ சிறுவன், உன்னால் வீரனாகிய கோலியாத்தை தோற்கடிக்க முடியாது என்று சொன்னார்.
    அதற்கு தாவீது நான் சிறுவன் தான், எனக்குள் இருப்பவர் பெரியவர்.  இஸ்ரவேலின் கடவுள் எனக்கு துணையாய் இருப்பார்.  அவரின் துணையோடு நான் கோலியாத்தை தோற்கடிப்பேன் என்றான்.
    தாவீதின் வைராக்கியத்தை அறிந்த சவுல், தன் வஸ்திரத்தையும், வெண்கல தலைச்சீராவையும், ஒரு கவசத்தையும், தன்னுடைய பட்டயத்தையும் அவனுக்கு கொடுத்தான்.  தாவீது இவைகளை அணிந்து நடந்துபார்த்தான்.  அவனுக்கு பழக்கம் இல்லாததால் அவனால் அதை பயன்படுத்தமுடியவில்லை.
    தாவீது தன் தடியையும், தன் கவனையும், ஆற்றிலிருந்து ஐந்து கூலாங்கங்களையும் எடுத்துக்கொண்டு கோலியாத்தோடு யுத்தம் செய்ய புரப்பட்டான்.
    தாவீது தடியோடு கோலியாத்தை நோக்கி வருகிறதை பார்த்த கோலியாத், அவன் இளைஞனும், சவுந்தரிய ரூபமும், சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால் அவனை அசட்டைபண்ணி, தன் தேவர்களைக் கொண்டு தாவீதை சபித்தான்.  கோலியாத் தாவீதைப் பார்த்து என்னிடத்தில் வா, நான் உன் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான்.
    அதற்கு தாவீது: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகின்றாய், நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தில் உன்னிடத்தில் வருகின்றேன் என்றான்.
    தாவீதின் வார்த்தைகளை கேட்ட கோலியாத் கோபமடைந்தவனாய், தாவீதை நோக்கி வந்தான், அப்பொழுது தாவீது கோலியாத்தை நோக்கி ஓடி, தன் கவனில் கல்லை வைத்து கோலியாத்தின் நெற்றியில் பட எறிந்தான்.  கல் கோலியாத்தின் நெற்றியில் பதிந்ததினால் அவன் தரையிலே கீழே விழுந்தான்.  
    தாவீதின் கையில் பட்டயம் இல்லாததால், அவன் பெலிஸ்தியின் பட்டயத்தை உருவி, அவன் மேல் நின்று, அவன் தலையை வெட்டினான்.  தங்கள் வீரன் செத்துப்போனான் என்று அறிந்து பெலிஸ்தியர் ஓடிப்போனார்கள்.

    தாவீது தான் செய்யப்போகின்ற காரியத்தில் கர்த்தர் எனக்கு வெற்றியை தருவார் என்று மனஉறுதியாய் இருந்தான்.  நாமும் நம்முடைய வாழ்க்கையில் எடுக்கின்ற எல்லா முயற்சிகளிலும் மனஉறுதியோடு இருக்க வேண்டும்.
    மனஉறுதியை குலைத்துப்போடும்படியாக கோலியாத் போன்ற எத்தனையோ தடைகளை சாத்தான் நம்முடைய வாழ்க்கையிலும் கொண்டு வருவான்.  தாவீதைப்போல நாமும் கோலியாத் போன்ற தடைகளை கண்டு பயப்படாமல் மனஉறுதியோடு தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டும்.  தாவீதோடு இருந்த கர்த்தர் நம்மோடும் இருக்கின்றார்.

மனன வசனம்:
    காகிதத்தை சிறிய சிறிய அளவாக வெட்டி, அதில் மனன வசனத்தை ஒரு துண்டில் ஒரு வார்த்தை என்ற வீதத்தில் எழுதி, ஒரு பாட்டிலில் போட்டு, மாணவர்களை வரிசைப்படுத்த சொல்லாம்.

நாடகம்:
    முதலாளி ஒருவர் சீப்பு கடை நடத்தி வருகிறார். முதலாளி இரண்டு ஊழியர்களை அழைத்து சில புதுவகையான சீப்புகளை கொடுத்து தெருக்களுக்கு சென்று விற்று வரச்சொன்னார்.
    முதல் ஊழியன் மனத்தில் இந்த சீப்பை ஒருவரும் வாங்க மாட்டார்கள் என்ற எண்ணம் இருந்தது. தெருக்களுக்கு சென்று ஒரு சீப்பும் விற்காமல் மீண்டும் முதலாளியிடம் வந்து, நீங்கள் தயாரித்த சீப்பை ஒருவர் வாங்க தயாராக இல்லை என்று சொன்னார்.
    இரண்டாவது ஊழியனின் மனத்தில் நான் இந்த சீப்புகள் அனைத்தையும் விற்றுவிடுவேன் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது. தெருக்களுக்கு சென்று, சீப்பின் நன்மையைக் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தான். ஊழியனின் வார்த்தையில் கவரப்பட்டவர்களாக அநேகர் மிகவும் ஆர்வத்தோடு சீப்பை வாக்கினார்கள். இரண்டாவது ஊழியக்காரனால் முதலாளிக்கு அநேக லாபமும் கிடைத்தது.
    எந்த ஒரு வேலையாக இருந்தாலும் இதை என்னால் செய்ய முடியும் என்ற மனஉறுதி காணப்படும்போது நாம் அக்காரியத்தை நிச்சயம் செய்து முடிக்க முடியும்.

விளையாட்டுப்போட்டி:
    இரண்டு நபர்களை எதிர்எதிர்புறமாக அமர்ந்து கொண்டு, இருவருடைய வலது கரத்தையும் ஒருவரையொருவர் பிடித்துக்கொள்ள வேண்டும். யார் முதலாவது மற்றவரின் கையை கீழே சாய்கிகிறார் என்று பார்க்க வேண்டும்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.