Type Here to Get Search Results !

நிலைத்திருத்தலின் ஆண்டு-2023 | புது வருட வாக்குத்தத்த செய்தி | Year of Abiding | ஆசீர்வாத வாக்குத்தத்த பிரசங்க குறிப்பு | Jesus Sam

தலைப்பு: நிலைத்திருத்தலின் ஆண்டு - 2023

Topic: Year of Abiding - 2023

யோவான் 15:7

  நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும்.

 

 இந்த புதியா ஆண்டிற்கென (2023) தென்னிந்திய திருச்சபை, மதுரை இராமநாதபுரம் திருமண்டிலம் நமக்கு கொடுத்திருக்கிற தலைப்பு நிலைத்திருத்தலின் ஆண்டு.  நாம் ஆண்டவரில் நிலைத்திருக்கும்போது நாம் கேட்டுக்கொள்ளும் காரியத்தை கடவுள் நமக்கு தர வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.  நாம் எந்த எந்த காரியங்களில் நிலைத்திருக்க வேண்டும் என்று இந்த குறிப்பின் மூலமாக அறிந்து கொள்ளுவோம்.

 

1. அன்பில் நிலைத்திருங்கள்:

I. கர்த்தரிடத்தில் அன்பாயிருக்க வேண்டும்:

யோவான் 15:9

 பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்.  என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

    கிறிஸ்து நம்மீது அன்பு வைத்திருக்கிறதுபோல நாமும் கிறிஸ்துவின் மீது அன்பு வைக்க வேண்டும்.

    கிறிஸ்து நம்மீது அன்பு வைத்ததால் தம்முடைய சொந்த இரத்தத்தை சிந்தி நம்மை மீட்டுக்கொண்டார்.  நாமும் அவர் மீது அன்பு வைத்திருப்போமானால் அவருக்காக வைராக்கியமாக வாழவேண்டும்.

 

வெளிப்படுத்தல் 2:4

    ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.

  ஆதியில் வைத்திருந்த அன்பை விட்டு நாம் பின்வாங்கி இருக்கிறோம் என்று நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

  நாம் எந்த இடத்தில் ஆண்டவரை விட்டு பின்வாங்கியிருக்கிறோம் என்று சிந்திப்போம்.  இந்த புதிய ஆண்டிலும் கூட ஆண்டவரிடத்தில் இன்னும் அதிகமாய் கிட்டிச் சேர பிரயாசப்படுவோம்.

எ.கா:

      அனுதினமும் வேதம் வாசிப்பது,

  அனுதினமும் தேசத்திற்காக, ஊழியங்களுக்காக, நமது திருச்சபைக்காக ஜெபிப்பது,

     ஆலயத்தின் காரிங்களில் தன்னை அர்ப்பணித்து செயல்படுவது,

     நேரம் கிடைக்கும்போதெல்லாம் பகுதி நேர ஊழியம் செய்வது,

 என்னோடு வேலை செய்யக் கூடியவர்கள், படிக்கக் கூடியவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிவிப்பது,

   இதுபோன்ற எந்த காரியத்தில் நான் பின்வாங்கி இருக்கிறேன் என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

 

  கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஏதோ ஒரு நாள் இரட்சிக்கப்பட்டு விட்டால் நான் கிறிஸ்தவன் என்பது அல்ல.  ஒவ்வொரு நாளும் நாம் இரட்சிக்கப்பட வேண்டும்.  ஒவ்வொரு நாளும் நம்முடைய இரட்சிப்பை நாம் புதிப்பித்துக்கொண்டிருக்க வேண்டும்.

   எனக்காக ஜீவன் தந்த ஆண்டவருக்காக நான் எதையாகிலும் செய்ய வேண்டும் என்ற ஆசை வரவேண்டும்.

 

ஊழியர்கள்:

2 கொரிந்தியர் 5:14அ

     கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது.

  கிறிஸ்துவுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த பவுல், கிறிஸ்துவின் அன்பு என்னை நெருக்கி ஏவுகிறதால் நான் கிறிஸ்துவுக்காக ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லுகிறார்.

   நம்மில் அநேகரை ஆண்வர் ஊழியத்திற்காக அழைத்திருக்கலாம்.  நாம் எதற்காக ஊழியம் செய்கிறோம், பணதிற்காகவா? பெருமக்காகவா? சிந்திப்போம்.

    கிறிஸ்துவின் அன்பிற்காக மாத்திரம் நாம் ஊழியம் செய்வோமானால், நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஆசீர்வாதங்களை பெற முடியும்.

 

யோபு:

யோபு 2:10

    அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்.  தேவன் கையில் நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெற வேண்டாமோ என்றான்.  இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.

  யோபு தன் கிறிஸ்துவின் மீது முழுமையான அன்பு வைத்ததால் உயர்ந்த நிலையில் இருக்கும்போதும் ஆண்டவரை நம்பினார், தாழ்வான நிலைக்கு போனபோதும் அவரை நம்பினார்.  தன் உதடுகளால் பாவம் செய்யவில்லை.

 

   கிறிஸ்து நம்மை ஆசீர்வதிக்கும்போது அவருக்கு நன்றி செலுத்துகிற நாம், துன்பத்தை அனுமதிக்கும்போது அவரை அவமதிக்கிறோம்.  நாம் கிறிஸ்துவின் மீது உண்மையான அன்பு வைத்திருப்போமானால், யோபுவைப்போல அவர் நம்மை ஆசீர்வதிக்கும்போதும் அவரை துதிப்போம்.  அவர் நம்முடைய வாழ்க்கையில் துன்பத்தை அனுமதிக்கும்போதும் அவரை நாம் துதிப்போம்.

 

II. மற்றவரிடத்தில் அன்பாயிருக்க வேண்டும்:

யோவான் 15:12

   நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.

     நாம் ஆண்டவர் மீது முழுமையான அன்பு வைத்திருக்கிறோம் என்றால், அவரை நாம் நேசிப்பதுபோல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.

 

யோவான் 13:34,35

    34. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்.  நான் உங்களில் அப்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

     35. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

  நாம் மற்றவர்கள் மீது அன்பு வைப்பதால் ஆண்டவருக்கு சீஷராக மாறுகிறோம்.

 

    ஒரு புதிய ஆண்டுக்குள்ளாக நுழைந்திருக்கிற நாம், யாரிடமாவது பகை, வெறுப்பு, வைத்திருப்போனால் அவர்களோடு ஐக்கியமாவோம்.  இந்த புது வருடத்தில் அவர்களையும் நேசிப்போம்.  அவர்கள் மீதே தவறு இருந்தாலும், நாமாக சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்போம்.  கிறிஸ்து நம்மை மன்னித்திருக்கிறாரே.

  நாம் கிறிஸ்துவை நேசிப்பது போல, நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களையும், உறவுகளையும் நேசிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

 

 நாம் அன்பில் நிலைத்திருப்போனால், கிறிஸ்துவுக்காக பெரிய காரிங்களை செய்ய ஆசைப்படுவோம், கிறிஸ்வின் மீது வைத்த அன்பை போல மற்றவர்களிடமும் அன்பு பாராட்டுவோம்.  இதுவே அன்பில் நிலைத்திருத்தல்.

 

 

 

2. வார்த்தையில் நிலைத்திருங்கள்:

I. வசனத்தை வாசிக்க வேண்டும்:

சங்கீதம் 1:2

 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷம் பாக்கியவான்.

 கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களாகிய நாம் வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டுமானால், ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் வேதத்தை வாசிக்கிறவர்களாய் மாத்திரம் அல்ல, வேத வசனங்களை தியானிக்கிறவர்களாய் இருக்க வேண்டும்.

    தியானிப்பது என்பது, இந்த நாளில் நான் வாசித்த வேதபகுதியில் இருந்து ஆண்டவர் எனக்கு என்ன காரியம் கற்றுக்கொடுக்க விரும்புகிறார் என்று அதைக் குறித்து நான் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    நமது கரங்களில் இருக்கின்ற இந்த வேதப்புத்தகமானது சாதாரண ஒரு புத்தகம் அல்ல.  ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளுக்காக விரும்பி எழுதிக் கொடுத்த ஒரு காதல் கடிதம்.  இதை நாம் ஒவ்வொருநாளும் விருப்பத்தோடு வாசிக்கிறவர்களாக, தியானிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

 

எபிரெயர் 4:12அ

    தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்,……..

   கடவுளுடைய வசனத்திற்கு ஜீவனும் வல்லமையும் உள்ளது என்று நாம் வாசிக்கிறோம்.

   எத்தனையோ மனிதர்கள் புத்தகங்கள் எழுதுகிறார்கள்.  கிறிஸ்துவைப் பற்றியும், வேதத்தைப் பற்றியும் கூட அநேகர் புத்தகங்கள் எழுதியுள்ளார்கள்.  ஆனால் அவைகள் அனைத்தும் வெறும் மனிதர்களுடைய வார்த்தைகளே.  அந்த புத்தகங்கள் நம்முடைய வாழ்க்கை முறையை நல்வழிப்படுத்தலாம்.  ஆனால் அந்த புத்தகங்களுக்குள் ஜீவன் இல்லை.

  நமது ஆண்டவர் நமக்கு எழுதிக் கொடுத்த இந்த வேதப்புத்தகத்தில் ஜீவனும் வல்லமையும் இருக்கிறது.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்டவருடைய வார்த்தைகள் எந்த அளவிற்கு கிரியை செய்ததோ அதே அளவிற்கு இந்த நாளிலும் கிரியை செய்து கொண்டிருக்கிறது.

 

உண்மை நிகழ்வு:

   ஒரு திருச்சபையில் இருந்து கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்து பிறந்த நற்செய்தியை அறிவிக்கும் வண்ணமாக கிறிஸ்துமஸ் கீத பவனியாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாழ்த்துக்களை கூறினார்கள்.  அப்பொழுது ஒரு இந்து குடும்பம் எங்கள் வீட்டிலும் வந்து ஜெபம் செய்யுங்கள் என்று கூறினார்கள்.  அப்படி அவர்கள் வீட்டிற்கு ஜெபிக்க சொல்லும்போது, அந்த குடும்பத்தார் எங்களுக்கு இந்த தேவை இருக்கிறது, அதற்காக ஜெபியுங்கள் என்று எந்த ஒரு காரணமும் சொல்லவில்லை.  வழக்கமாக எல்லா வீடுகளிலும் சென்று ஒரு வசனத்தை வாசித்து ஜெபிப்பதுபோல, அந்த வீட்டிலும் ஒரு வசனத்தை வாசித்து ஜெபித்துவிட்டு வந்தார்கள்.  அந்த குடும்பத்தில் வாசித்த வசனம் என்னவென்றால், இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்.  அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான்.  (மத்தேயு 1:23) இந்த வசனம் தான் அந்த குடும்பத்தினருக்காக வாசிக்கப்பட்டது.

    அதே குடும்பத்திற்கு 2022-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் கீத பவனிக்காக சென்ற போது அந்த குடும்பத்தார் சொன்ன சாட்சி, எங்களுக்கு பதின் மூன்று ஆண்டுகளாக குழந்தை இல்லை.  கடந்த ஆண்டு நீங்கள் வாசித்த வசனத்தை வைத்து நாங்கள் இந்த வார்த்தை எங்களுக்காக சொல்லப்பட்டது என்று முழுமையாக இயேசுவை நம்பினோம்.  இந்த ஆண்டு அருமையாக கர்ப்பத்தின் கனியை கடவுள் எங்களுக்கு தந்திருக்கிறார் என்று அவர்கள் சாட்சி சொன்னார்கள். 

   பாருங்கள் ஆண்டவருடைய வார்த்தை இன்றும் புறஜாதிகள் மத்தியிலும் வல்லமையாய் கிரியை செய்து கொண்டிருக்கிறது.  ஆண்டவருடைய வார்த்தை ஒருபோது தரையில் வீணாய் விழுவதில்லை.

 நாமும் கூட ஆண்டவருடைய வார்த்தையை பற்றிகொண்டு ஜெபிக்கும்பொழுது நம்முடைய வாழ்க்கையிலும் இந்த ஜீவனுள்ள வார்த்தை கிரியை செய்ய வல்லமையுள்ளதாய் இருக்கிறது.

 

ஜார்ஷ் முள்ளர்:

ஜார்ஷ் முள்ளர் என்று சொல்லப்படக்கூடிய தேவ ஊழியர் தனது வாழ்நாளில் 200 முறை வேதத்தை வாசித்திருக்கிறார்.  இதிலும் குறிப்பாக 100 முறைக்கு மேலாக முழங்காலில் நின்று வேதத்தை வாசித்திருக்கிறார்.

   ஆண்டவருடைய வார்த்தை அவ்வளவு விலையேறப்பெற்றது என்பது அவர் அறிந்து வைத்திருந்தார்.  நாம் எப்படி இந்த வேதத்தை வாசிக்கிறோம்.

 

தமிழ் மொழியில் வேதம்:

    இந்த விஞ்ஞான உலகிலும் கூட எத்தனையோ மொழிகளில் இன்னும் வேதம் இல்லாமல் இருக்கிறது.  எத்தனையோ மனிதர்கள் எங்கள் சொந்த மொழியில் வேத புத்தகம் இல்லையோ என்று கலங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

  ஆண்டவர் நம்மீது கிருபை வைத்ததால் கி.பி.1700-ம் ஆண்டிலேயே தமிழ்மொழியில் வேதத்தை கொடுத்திருக்கிறார்.  நாம் எப்படி இந்த வேதத்தை வாசிக்கிறோம்.

 

II. வசனத்தின் படி வாழ வேண்டும்:

மரியாள்:

லுக்கா 1:38அ

   அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்….

 ஆண்டவருடைய வார்த்தையின் வல்லமையை மரியாள் அறிந்திருந்தார்கள்.  எனவே தான் உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்று ஆண்டவருக்கு தன்னை ஒப்புக்கொடுக்கிறார்கள்.

 

பேதுரு:

லூக்கா 5:5

     அதற்கு சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை.  ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.

   ஆண்டவருடைய வார்த்தையின் வல்லமையை அறிந்துகொண்ட பேதுரு ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தவராக வலையைப் போடுகிறார், வலை கிழியத்தக்க மீன்களை பிடிக்கின்றார்.

 

நாம் ஆண்டருடைய வார்த்தையின்படி நடக்கிறோமா?

மனைவிகள்:

எபேசியர் 5:22

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.

ஆணும் பெண்ணும் சமம்.  யாருக்கும் யாரும் அடிமையாய் வாழ வேண்டியதில்லை, என்று உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.  ஆனால் நாம் வேதத்திலே வாசிக்கிறோம், கணவன் தான் குடும்பத்தின் தலைவன்.  மனைவி கணவனுக்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டும்.

சில குடும்பங்களில் கணவனை விட மனைவி அதிகம் சம்பாதித்து விட்டால், கணவனை மரியாதைக் குறைவாக நடத்துவதை நாம் பார்க்க முடிகிறது.

வேதம் நமக்கு தெளிவாய் கற்றுக்கொடுக்கிறது, கணவன் தான் குடும்பத்தின் தலைவன்.  மனைவி கணவனுக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டும்.

 

கணவன்:

எபேசியர் 5:25அ

     புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்…..

  அநேக குடும்பங்களில் சண்டை வருவதற்காக காரணம் என்னவென்றால், திருமணமானபோது கணவனுக்கு மனைவியிடம் இருந்த அன்பு தற்போது இல்லை.  ஒவ்வொரு புருஷனம் (கணவனும்) தன் முதல் அன்பை, முழுமையான அன்பை தன் மனைவியின் மீது வைப்பாரானா, குடும்பங்களில் சமாதானமும், சந்தோஷமும் காணப்படும்.

 

பிள்ளைகள்:

எபேசியர் 6:1

     பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.

   அநேக பிள்ளைகள் பெற்றோரை மதிக்காமல், உங்களுக்கு என்ன தெரியும், நான் கணினி உலக்தில் வாழந்து கொண்டிருக்கிறேன்.  உங்கள் ஆலோசனைகள் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்லி பெற்றோரை மரியாதைக் குறைவாக பேசுகிறார்கள்.

  எத்தனை காலங்கள் மாறினாலும், வேதத்தில் வாசிக்கிறோம், நாம் பெற்றொருக்கு கீழ்ப்படிந்து தான் வாழ வேண்டும்.

 

   வேதவசனத்தை நாம் நேசித்து அதை தியானிப்பதன் மூலம், தியானி்பதோடு மட்டுமல்ல அதின்படி நாம் வாழும்போது நாம் வார்த்தையில் நிலைத்திருக்க முடியும்.  நாம் வார்த்தையில் நிலைத்திருக்கும்போது இந்த புதிய ஆண்டில் நாம் வேண்டிக்கொள்ளும் காரியங்களை ஆண்டவர் நமக்குத் தருவார்.

 

 

 

 

3. விசுவாசத்தில் நிலைத்திருங்கள்:

1 கொரிந்தியர் 13:13

   இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது.  இவைகளில் அன்பே பெரியது.

 

       அன்பைக் குறித்து நாம் முன்பே தியானித்தோம்.

 

விசுவாசம்

விசுவாசம் என்பது நிகழ்காலத்தைக் குறித்தது.  ஆண்டவர் இப்பொழுது என்னை ஆசீர்வதிப்பார்.  இப்பொழுது என் வியாதியை மாற்றுவார், இப்பொழுது என் தேவையை சந்திப்பார் என்பது விசுவாசம்.

 

நம்பிக்கை

நம்பிக்கை என்பது எதிர்காலத்தைக் குறித்தது.  ஆண்டவர் ஒரு நாள் என்னை பரலோக ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்வார். 

 

இரண்டு குருடர்கள்: (மத்தேயு 9:27-31)

மத்தேயு 9:28

     அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள்.  இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார்.  அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.

      இரண்டு குருடர்கள் பார்வையடைய வேண்டும் என்பதற்காக இயேசு கிறிஸ்துவிடம் வருகிறார்கள்.  அவர்கள் ஆண்டவரிடம் வந்து ஜெபித்த உடனே அவர் அற்புதம் செய்யவில்லை.  இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா? என்று கேட்கிறார். 

   குருடர்கள் விசுவாசித்ததால் மிகப்பெரிய அற்புதத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

 

ஊமையான ஆவி பிடித்த மகன்: (மாற்கு 9:17-27)

மாற்கு 9:22,23

    22. இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று.  நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்றான்.

  23. இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.

     இந்த தகப்பன் மகனுக்கு இருக்கிற வியாதி சுகமாக வேண்டும் என்று எத்தனையோ மனிதர்களையும், மருத்துவர்களையும், ஜோசியர்களையும் சந்தித்திருக்க வாய்ப்பு உள்ளது.  எனவே, தான் எல்லோரையும் சந்தித்துவிட்டேன், ஒருவராலும் சுகம் கொடுக்க முடியவில்லை, உமக்காவது சுகம் கொடுக்க முடியுமா என்ற தோரனையில் ஆண்டவரிடம் கேட்கிறான்.  ”நீர் ஏதாகிலும் செய்யககூடுமானால் செய்யும்” என்று சொல்லுகிறான்.

  இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூமானால் ஆகும் என்று சொல்லுகிறார்.

 

விசுவாச ஜெபம்:

மத்தேயு 21:22

    மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்.

 

மலை சமுத்திரத்திற்குள் போகும்:

மாற்கு 11:22-24

   22. இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருக்கள்.

      23. எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்ற மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

 24. ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவகைளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவகைள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.

 

சிங்கப்பூர் – இராஜேந்திரன்:

கிறிஸ்தவர்களை விசுவாசித்திற்குள் வழிநடத்துவது என்பது மிகவும் கடினமான காரியம்.  புதிதாக ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்கள், ஆண்டவரை முழுமையாக விசுவாசிப்பார்கள்.  பரம்பரை கிறிஸ்தவர்கள் முழுமையாக ஆண்டவரை விசுவாசிக்க மாட்டார்கள்.  எனவேதான், நம்முடைய வாழ்க்கையில் அற்புதங்கள் தடைபடுகிறது.

    சிங்கப்பூரில் ஒரு சிறப்புக் கூட்டத்தில் அநேக விசுவாசிகள் கலந்துகொண்டார்கள்.  ஜெப நேரத்தில் தேவஊழியர் ஆண்டவரை விசுவாசித்தால் உங்களுக்கு எப்பேர்பட்ட வியாதியாக இருந்தாலும் சுகம் கிடைக்கும் என்று ஜெபித்துக்கொண்டிருந்தார்.  கூட்டத்தில் அமர்ந்திருந்த இராஜேந்திரன் என்ற ஒரு சகோதரருக்கு வயிற்றில் பெரிய கேன்சர் கட்டி இருந்தது.  அவர் ஆண்டவரை அறியாத ஒரு நபர்.  ஆண்டவரை விசுவாசித்தால் சுகம் கிடைக்கும் என்று ஊழியர் சொல்லுகிறாரே என்று விசுவாசத்தில் முழுமையாக ஆண்டவரை நம்பினார்.  அந்த நேரமே அவருடைய கேன்சர் கட்டி மறைந்துவிட்டது.

    நாமும் விசுவாசத்தோடு ஆண்டவருடைய சமுகத்தில் வந்து ஜெபிக்கும்போது, உடனே பதில் தர அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

 

1 யோவான் 2:6

    அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

 

    புதிய வருடத்திற்குள்ளாக நுழைந்திருக்கிற நாம் எந்த எந்த காரியங்களில் நிலைத்திருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டோம்.

          1. அன்பில் நிலைத்திருக்க வேண்டும்

          2. வார்த்தையில் நிலைத்திருக் வேண்டும்

          3. விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்

    இம்மூன்று காரியங்களிலும் நாம் நிலைத்திருக்கும் போது இந்த புதிய ஆண்டில் நாம் நினைக்காத, பெரிய காரிங்களை, பெரிய அதிசங்களை ஆண்டவர் நம் வாழ்வில் செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

     ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! அமென்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.