மத்தேயு
சுவிசேஷம் ஒன்றாம் அதிகாரத்தில் (மத்தேயு 1: 1-16) ஆபிரகாம் முதல் இயேசு கிறிஸ்து வரை
உள்ள வம்ச வலராற்று பெயர் பட்டியல் இடம் பெற்றிருக்கும். அதேபோல் லூக்கா சுவிசேஷம் மூன்றாம் அதிகாரத்தில்
(லூக்கா 3: 23-38) இயேசு கிறிஸ்து முதல் ஆதாம் வரை உள்ள வம்ச வரலாற்று பெயர் பட்டியல்
இடம் பெற்றிருக்கிறது. மத்தேயு சுவிசேஷத்தில்
உள்ள பெயர் பட்டியலையும், லூக்கா சுவிசேஷத்தில் உள்ள பெயர் பட்டடியலையும் நாம் கவனித்துப்
பார்த்தால் அங்கே தாவீது முதல் யோசேப்பு வரை உள்ள பெயர்கள் அனைத்தும் வேறு வேறு பெயர்களாகக்
காணப்படும். நம்மில் எத்தனை பேர் வேதவசனங்களை வாசிக்கும்போது இதை கவனித்திருப்போம்.
மத்தேயு 1: 6-16
6. ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்.
7. சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான். ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான். அபியா ஆசாவைப் பெற்றான்.
8. ஆசா
யோசபாத்தைப் பெற்றான். யோசபாத் யோராமைப் பெற்றான். யோராம் உசியாவைப் பெற்றான்
9. உசியா
யோதாமைப் பெற்றான். யோதாம் ஆகாசைப் பெற்றான். ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்.
10.
எசேக்கியா மனாசேயைப் பெற்றான். மனாசே ஆமோனைப்
பெற்றான். ஆமோன் யோசியாவைப் பெற்றான்.
11.
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும்
பெற்றான்.
12.
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன பின்பு எகோனியா சலாத்தியேலைப் பெற்றான். சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்.
13.
சொரொபாபேல் அபியூதைப் பெற்றான். அபியூத் எலியாக்கீமைப்
பெற்றான். எலியாக்கீம் அசோரைப் பெற்றான்.
14.
ஆசோர் சாதோக்கைப் பெற்றான். சாதோக்கு ஆகீமைப்
பெற்றான். ஆகீம் எலியூதைப் பெற்றான்.
15.
எலியூத் அலெயாசாரைப் பெற்றான். எலெயாசார் மாத்தானைப்
பெற்றான். மாத்தான் யாக்கோபைப் பெற்றான்.
16.
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான். அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.
லூக்கா 3: 23-31
23.
அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்.
24.
ஏலி மாத்தாத்தின் குமாரன். மாத்தாத் லேவியின்
குமாரன். லேவி மெல்கியின் குமாரன். மெல்கி யன்னாவின் குமாரன். யன்னா யோசேப்பின் குமாரன்.
25.
யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன். மத்தத்தியா
ஆமோசின் குமாரன். ஆமோஸ் நாகூமின் குமாரன். நாகூம் எஸ்லியின் குமாரன். எஸ்லி நங்காயின் குமாரன்.
26.
நங்காய் மாகாத்தின் குமாரன். மாகாத் மத்தத்தியாவின்
குமாரன். மத்தத்தியா சேமேயின் குமாரன். சேமேய் யோசேப்பின் குமாரன். யோசேப்பு யூதாவின் குமாரன். யூதா யோவன்னாவின் குமாரன்.
27.
யோவன்னா ரேசாவின் குமாரன். ரேசா சொரொபாபேலின்
குமாரன். சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன். சலாத்தியேல் நேரியின் குமாரன்.
28.
நேரி மெல்கியின் குமாரன். மெல்கி அத்தியின்
குமாரன். அத்தி கோசாமின் குமாரன். கோசாம் எல்மோதாமின் குமாரன். எல்மோதாம் ஏரின் குமாரன். ஏர் யோசேயின் குமாரன்.
29.
யோசே எலியேசரின் குமாரன். எலியேசர் யோரீமின்
குமாரன். யோரீம் மாத்தாத்தின் குமாரன். மாத்தாத் லேவியின் குமாரன்.
30.
லேவி சிமியோனின் குமாரன். சிமியோன் யூதாவின்
குமாரன். யூதா யோசேப்பின் குமாரன். யோசேப்பு யோனானின் குமாரன். யோனான் எலியாக்கீமின் குமாரன்.
31.
எலியாக்கீம் மெலெயாவின் குமாரன். மெலெயா மயினானின்
குமாரன். மயினான் மாத்தாத்தாவின் குமாரன். மாத்தாத்தா நாத்தானின் குமாரன். நாத்தான் தாவீதின் குமாரன்.
இந்த
இரண்டு சுவிசேஷங்களையும் நாம் கவனித்துப் பார்த்தால் இங்கு உள்ள எல்லா பெயர்களும் வெவ்வேறாகக்
காணப்படும். நாம் ஒருவேலை நினைக்கலாம் இயேசு
கிறிஸ்துவின் வம்ச வரலாற்று பெயர் பட்டியல் முற்றிலும் தவறானது என்று. ஆனால் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு எழுதப்பட்ட
இந்த வேதாகமம் ஒருபோதும் தவறான கருத்தை எடுத்துரைப்பதில்லை. ஏன் இந்த வேறுபாடு என்பதை நாம் சிந்திக்கலாம்.
மத்தேயு
சுவிசேஷத்தில் யோசேப்பின் தகப்பன் பெயர் யாக்கோபு என்றும் (மத்தேயு 1: 16), லூக்கா
சுவிசேஷத்தில் யோசேப்பின் தகப்பன் பெயர் ஏலி (லூக்கா 3: 23) என்று எழுதப்பட்டுள்ளது.
தாவீதின் குமாரன் கிறிஸ்து:
இயேசு
கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதத்தில் நாம் அநேக இடங்களில் வாசிக்கிறோம். {மத்தேயு
1:1, மத்தேயு 9:27, மத்தேயு 12:23, மத்தேயு 15:22, மத்தேயு 20:30,31, மத்தேயு 21:9,15,
மத்தேயு 22:42, மாற்கு 10: 47,48, மாற்கு 12:35, லூக்கா 18:37,38, லூக்கா 20:41}. ஆனால் மத்தேயு நற்செய்திபடி யோசேப்பு தானே தாவீதின்
குமாரன். இயேசு கிறிஸ்து யோசேப்பின் மூலமாக
பிறக்கவில்லையே (இயேசு கிறிஸ்து மரியாளின் குமாரன். யோசேப்பின் குமாரன் அல்ல, யோசேப்பின் குமாரன் எண்ணப்பட்டார். இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் பிறந்தவர். இயேசு கிறிஸ்துவுக்கு தகப்பன் இல்லை). அப்படியென்றால் எப்படி இயேசு கிறிஸ்து தாவீதின்
குமாரன் ஆக முடியும். யோசேப்பு இயேசுவின் தகப்பனாக
எண்ணப்பட்டார் என்று சொல்லும் வேதம், இயேசு கிறிஸ்து தாவீதின் குமாரனாக எண்ணப்பட்டார்
என்று சொல்லாமல், தாவீதின் குமாரன் என்றே கூறுகிறது. வேதம் பொய் சொல்லாது. வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது
(2 தீமோத்தேயு 3: 15). இயேசு கிறிஸ்து எப்படி
தாவீதின் குமாரன் என்பதை சிந்திக்கலாம்.
யூதர்களின் கலாச்சாரம் (சந்ததி):
வேதத்தில்
உள்ள ரகசியங்களை அறிந்துகொள்ள வேண்டுமானால் நாம் யூதர்களின் கலாச்சாரத்தைப் பற்றி தெரிந்து
கொள்ள வேண்டியுள்ளது. யூதர்களைப் பொருத்தவரை
பெண்களை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள்.
வேதத்தில் நாம் பார்த்தாலும் கூட பெண்களின் பெயர்கள் அதிகமாக இடம் பெற்றிருப்பதில்லை. ஏனென்றால் பெண்களை அவர்கள் ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.
ஒரு பெண் கர்பவதியாய் இருக்கிறாள் என்றால்
அந்த குடும்பத்தில் உள்ள அனைவரின் ஜெபமும் கடவுளே பெண் குழந்தையாக இருக்கக் கூடாது
என்பதே. ஒருவேளை பெண் பிள்ளை பிறந்துவிட்டால்
கசப்பு என்று புலம்புவார்கள். கசப்பு என்றால்
மாஹா. இதைத்தான் தமிழில் மரியாள் என்று வாசிக்கிறோம். மரியாள் என்றால் கசப்பு என்று அர்த்தம். எனவே இஸ்ரவேலில் அநேக பெண்களுக்கு மரியாள் என்ற
பெயரை வைத்திருப்பார்கள். இயேசுவின் தாய் மரியாள்,
மகதலேனாள் மரியாள், கிலெயோப்பா மரியாள் (லூக்கா 19: 25), மற்ற மரியாள் (மத்தேயு
28: 1) என்று கூட நாம் வேதத்தில் வாசித்திருக்கிறோம்.
ஒரு
தந்தைக்கு ஆண் பிள்ளைகளே இல்லை என்றால், அவரோடு அந்த சந்ததி முடிந்துவிடும். அப்படி முடிந்துவிட்டால் அதை அவர்கள் ஒரு சாபமாக கருதினர். எனவே ஒரு தகப்பனுக்கு மகள் மட்டுமே பிறந்தால் அந்த
தகப்பன் இரண்டாம் திருமணம் செய்து கொள்வார்.
ஏனென்றால் என் சந்ததி அழிந்துவிடக் கூடாது என்பதற்காக. இரண்டாவது மனைவியும் ஆண் பிள்ளையை பெற்றுத்தராவிட்டால்,
மூன்றாம் திருமணம் செய்து கொள்வார்கள். இவ்வாறு
எப்படியாவது தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் யூத ஆண் மக்கள்.
இப்படிப்பட்டவர்களுள்
ஒரு சில நல்ல மனிதர்களும் இருந்தார்கள். அவர்கள்
எனக்கு மகள் பிறந்தாலும் பரவாயில்லை, நான்
என் மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று மறுமணம் செய்யாமலே இருப்பார்கள். இப்படி ஒரு நபர் மறுமணம் செய்யாமல் இருப்பாரானால்,
அவருடைய சந்தததியை காப்பாற்ற யூத கலாச்சாரத்தில் ஒரு வழி உண்டு. அது என்னவென்றால், அந்த மகள் வளர்ந்து அவளுக்கு
திருமணம் செய்யும் போது, அந்த மருமகனை சட்டப்படி அந்த மகளின் தந்தை மருமகனை தனது மகனாக
ஏற்றுக் கொள்ள முடியும். அப்படியானால் அந்த மருமகனுக்கு இரண்டு தகப்பன் உண்டு. ஒன்று தன்னைப் பெற்ற தகப்பன். மற்றொன்று மனைவியின் தகப்பன்.
தாவீதின் குமாரன் இயேசு கிறிஸ்து:
இயேசுவின் தாயாகிய மரியாளின் தகப்பனுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே. வேறு ஆண், பெண் குழந்தைகள் அவருக்கு இல்லை. அவர் தன் மனைவிக்கு துரோகம் செய்ய நினைக்காததால் மறுமணம் செய்துகொள்ளவில்லை. இந்த மரியாளின் தகப்பன் பெயர் தான் ஏலி. தாய் பெயர் அன்னாள் என்று சரித்திர ஏடுகளில் நாம் பார்க்கலாம். இந்த ஏலிக்கு ஆண் பிள்ளைகள் இல்லாததால் தன் ஒரே மகள் மரியாளின் கணவன் யோசேப்பை ஏலி சட்டப்படி தன் மகனாக ஏற்றுக்கொள்கிறார். அப்படியானால் யோசேப்பிற்கு இரண்டு தகப்பன் உண்டு. ஒன்று தன்னைப் பெற்ற தனப்பன் யாக்கோபு (மத்தேயு 1: 16). மற்றொன்று தன் மனைவியின் தகப்பன் ஏலி (லூக்கா 3: 23).
மத்தேயு
சுவிசேஷத்தில் சொல்லப்பட்டிருக்கும் யாக்கோபு என்பவர் யோசேப்பைப் பெற்ற தகப்பன். லூக்கா சுவிசேஷத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஏலி
மரியாளின் தகப்பன். ஏலிக்கு ஆண் பிள்ளை இல்லாததால்
இப்போது யோசேப்பிற்கும் தகப்பனாகிறார்.
மத்தேயு
சுவிசேஷத்தில் யாக்கோபு யோசேப்பைப் பெற்றான் என்றும்…. அப்படியே நாம் வருவோமானால் மத்தேயு
1: 6-ல் தாவீது சாலொமோனைப் பெற்றான் என்றும் வாசிக்கலாம்.
லூக்கா
சுவிசேஷத்தில் யோசேப்பு ஏலியின் குமாரன் என்றும்,…….அப்படியே நாம் வருவோமானால் லூக்கா
3: 31-ல் மாத்தாத்தா நாத்தானின் குமாரன் என்றும்.
நாத்தான் தாவீதின் குமாரன் என்றும் வரும்.
இதிலிருந்து
நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால் மத்தேயு நற்செய்தியில் தாவீதின் குமாரன் சாலொமோன்
வழியில் வந்தவர் தான் யாக்கோபு. யாக்கோபின்
குமாரன் தான் யோசேப்பு. லூக்கா நற்செய்தியில்
தாவீதின் குமாரன் நாத்தான், நாத்தானின் குமாரன் மாத்தாத்தா வழியில் பிறந்தவர் தான்
ஏலி, ஏலியின் குமாரத்தி தான் மரியாள். மரியாளின் வயிற்றில் இயேசு கிறிஸ்து பிறந்தார். எனவே இயேசு கிறிஸ்து
தாவீதின் குமாரன். தாவீதுக்கு மொத்தம் இருபது
பிள்ளைகள் இருந்தார்கள்.
இரண்டு
நற்செய்தியிலும் ஒரு சில பெயர்கள் ஒன்று போலவே காணப்படும். அவைகள் ஒரே பெயர் அல்ல. வேறு வேறு பெயர்கள். உதாரணமாக பாபிலோனில் பிறந்த எல்லா பிள்ளைகளுக்கும்
செருபாபேல் என்ற பெயரையே வைத்தார்கள். இதுபோன்ற
ஒருசில பெயர்கள் இரண்டு இடங்களிலும் வரும்.
அவர்கள் ஒரே நபர்கள் அல்ல. அவர்கள்
வேறு வேறு நபர்கள்.
மத்தேயு
நற்செய்தியாளர் மத்தேயு சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்துவை யூதர்களுக்கு ராஜாவாக காண்பிக்க
விரும்பினார். எனவே தாவீது ராஜாவின் மகன் சாலொமோன்
ராஜா என்ற வரிசையில் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றை காண்பிக்கிறார். யூதர்களுக்காக எழுதப்பட்டதால் யோசேப்பை மட்டுமே
முக்கியப்படுத்துகிறார். மரியாளிடம் தேவதூதன்
பேசியதையோ, எலிசபெத் கர்ப்பவதியாய் இருக்கிறாள்,
அவள் யோவான் ஸ்நானனை பெறப்போகிறாள் என்றோ,
மரியாள் மூன்று மாதம் எலிசபெத்தின் வீட்டில் தங்கியிருந்தாள் என்றோ மத்தேயு
நற்செய்தியாளர் எழுதவில்லை.
லூக்கா நற்செய்தியாளர் ஒரு மருத்துவர் என்பதால் லூக்கா
சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்துவை ஒரு மனுஷ குமாரனாக காண்பிக்க விரும்பினார். எனவே, மரியாளின் குமாரன் இயேசு கிறிஸ்து என்பதை
காட்டுகிறார். யோசேப்பு மரியாளை தள்ளிவிட நினைத்ததையோ,
யோசேப்பிடம் தேவதூதன் பேசியதையோ லூக்கா நற்செய்தியாளர் காண்பிக்கவில்லை.
நீதிமானாகிய யோசேப்பு:
லூக்கா
1: 26-38 இந்த வசனத்தில் காபிரியேல் என்னும் தூதன் கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும்
ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு கன்னிகையிடம் (மரியாளிடம்) வந்து பேசுகிறார், பரிசுத்த ஆவியினால் நீ கர்ப்பவதியாவாய் என்று. மரியாளிடம் சொன்ன காபிரியேல் தூதன் மரியாளின் தாய்,
தகப்பனிடம் சொல்லாமல் சென்று விட்டார். மரியாளாளும்
தன் தாய் தகப்பனிடம் சொல்ல முடியாது. ஏனென்றால்
இதுபோன்ற ஒரு நிகழ்வு இதுவரை சரித்திரத்தில் நடந்ததில்லை. எனவே, மரியாள் எவ்வளவு நல்ல பெண்னாக இருந்தாலும், அவளுடைய பெற்றோர் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மரியாள் திருமணத்திற்கு முன்பே தவறான உறவு வைத்துவிட்டாளே
என்று வேதனை தான் படுவார்கள். எனவே தான், காபிரியேல்
தூதன் மரியாளிடம் சொல்லுகிறார், உன் இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே
ஒரு புத்திரனை கர்ப்பந்தரித்திருக்கிறாள் என்று (லூக்கா 1: 36).
உடனே
மரியாள் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்தில் இருக்கின்ற எலிசபெத்தின் வீட்டிற்கு சென்று
அங்கே மூன்று மாதம் தங்குகிறாள் (லூக்கா 1: 39-56). ஏனென்றால், ஒரு பெண் கர்ப்பந்தரித்தால் முதல் மூன்று
மாதங்கள் வெளிப்புற அடையாளங்கள் எதுவும் தெரியாது, பெண்ணின் செயல்பாடுகளை வைத்தே அவள்
கர்ப்பந்தரித்திருகிறாள் என்று தெரியவரும்.
இந்த மூன்று மாதம் மரியாள் தன் பெற்றோருடைய வீட்டில் இருந்தால் பெற்றோருக்கு
மரியாள் கர்ப்பவதியாய் இருக்கிறாள் என்பது தெரியவரும் என்பதால் தான் எலிசபெத்தின் வீட்டிற்கு
தீவிரமாய் போகிறாள். இப்போது எலிசபெத்து ஆறுமாத
கர்ப்பிணியாக இருக்கிறாள். எலிசபெத்துக்கு
ஒருவேலை தூதன் சொல்லியிருக்கலாம் மரியாள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பந்தரித்திருக்கிறாள்
என்று. எனவே தான் எலிசபெத் சொல்லுகிறாள் ”என்
ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது” (லூக்கா 1: 43) என்று. எனவே, மரியாள் கர்ப்பந்தரித்த அந்த முதல் மூன்று
மாதமும் அவளை எலிசபெத் பராமரிக்கிறாள். எலிசபெத்தின்
கடைசி மூன்று மாதங்கள் மரியாள் எலிசபெத்தை பராமரிக்கிறாள். பின்பு மரியாள் நாசரேத்திற்கு திரும்பி வருகிறாள்.
மரியாள் கர்ப்பவதி
என்று யோசேப்புக்கு எப்போது தெரியும்:
மரியாளுக்கும் யோசேப்பிற்கும் திருமணமான பின்பு தான் யோசேப்பிற்கு
தெரியும் மரியாள் கர்ப்பவதியானால் என்று.
மத்தேயு 1: 19
அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து,
அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
1. திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருக்கின்ற தம்பதிகளை
எப்படி அழைப்பார்கள். மணவாளன், மணவாட்டி என்று
அழைப்பார்கள். திருமணத்திற்கு பின்பே அவர்களை
புருஷன், மனைவி என்று அழைப்பார்கள். மத்தேயு
1: 19-ல் மரியாளின் மனவாளன் என்று எழுதப்படவில்லை. புருஷன் என்றே எழுதப்பட்டுள்ளது.
2. மத்தேயு 1: 19-ல் தள்ளிவிட யோசனையாய் இருந்தான் என்று
வாசிக்கிறோம். தள்ளிவிட இப்பதம் விவாகரத்தைக்
குறிக்கிறது.
மல்கியா புத்தகத்தில் தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று
வாசிக்கிறோம். (மல்கியா 2: 16)
தள்ளுதல்
சீட்டை எழுதிக்கொடுத்துவிட்டு மனைவியை தள்ளிவிடலாம் என்று மோசே கற்றுக் கொடுத்தார்
என்று இயேசு கிறிஸ்துவிடம் வந்து சொல்லுகிறார்கள். (மாற்கு 10: 4)
திருமணம்
செய்தால் மட்டுமே தள்ளிவிட (விவாகரத்து செய்ய) முடியும்.
3. மத்தேயு 1: 20-ல் தேவதூதன் சொப்பணத்தில் வந்து மனைவியாகிய
மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே என்று சொன்னார். மனவாட்டியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே
என்று சொல்லவில்லை.
4. மத்தேயு 1: 24-ல் தன் மனைவியை சேர்த்துக்கொண்டு என்று
வாசிக்கிறோம்.
இந்த
வசனங்கள் மூலம் நமக்கு தெளிவாகிறது, மரியாள் யோசேப்பிற்கு நியமிக்கப்பட்டிருக்கையில்
யோசேப்பிற்கு தெரியாது, மரியாள் கர்ப்பவதியானால் என்று, திருமணத்திற்கு பின்பே தெரியும்
மரியாள் கர்ப்பவதியாய் இருக்கிறாள் என்று.
மரியாள் யோசேப்பின் திருமணம்:
மரியாள் எலிசபெத்தின் வீட்டிலிருந்து நாசரேத்திற்கு வந்ததும்
மரியாளுக்கும், யோசேப்பிற்கும் திருமணம் நடைபெறுகிறது. மரியாள் கர்ப்பவதியாகி மூன்று
மாதம் தான் ஆகிறது என்பதால், வயிறு காட்டிக்கொடுக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு பின்புதான் வயிறு பெயரியதாக
மாறும்.
திருமணம் முடிந்து முதல் இரவில் தான் யோசேப்பிற்கு தெரியும்
மரியாள் கர்ப்பவதியாய் இருக்கிறாள் என்று.
உடனே யோசேப்பு மிகவும் வேதனைபடுகிறார், கோபம் கொள்கிறார். மிகவும் ஆனந்தமாக ஓர் எதிர்பார்ப்போடு திருமண வாழ்க்கையை
ஆரம்பிக்க நினைத்த யோசேப்பிற்கு மிகப்பெரிய வேதனை. மரியாள் ஒருவேளை சொல்லியிருக்கலாம் இது பரிசுத்த
ஆவியினால் உண்டானது என்று. ஆனால், ஒரு சாதாரண
மனிதனாக இருந்த யோசேப்பால் மரியாள் சொன்ன எதையும் நம்பமுடியவில்லை.
யோசேப்பு ஒரு நீதிமான். நீதிமான் என்றால் கடவுளோடும், சக மனிதர்களோடும்
சரியான உறவில் இருக்கின்ற ஒரு மனிதன். திருமணத்திற்காக
அநேக முறை கடவுளிடம் ஜெபித்திருப்பார். ரபிமார்களிடம்
ஆநேக ஆலோசனைகள் கேட்டிருப்பார்.
அந்த முதல் இரவில் யோசேப்பிற்கு தூக்கம் வரவில்லை. ஒருவேலை வேறு எந்த ஒரு ஆணாக இருந்தாலும், உடனே சத்தமிட்டு
ஏலியையும், அன்னாளையும் தெருவிற்கு அழைத்து, ஊராரை அழைத்து மரியாளையும், ஏலியையும்,
அன்னாளையும் அவமானப்படுத்தியிருப்பார். ஆனால்
இந்த யோசேப்பு நீதிமானாய் இருந்ததால் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி மறைமுகமாக இவளை
விவாகரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறார். இப்போதுதான் திருமணம் நடந்திருக்கிறது இப்போது நாம் இவளை எல்லோருக்கு முன்பாக தள்ளிவிட்டால்
அவளால் அவளுடைய பெற்றோர் பாதிக்கப்படுவார்கள்.
எனவே சில நாள் சென்ற பின் மறைமுகமாக ரபிமார்களை சந்தித்து இவளை தள்ளிவிடலாம்
என்று யோசிக்கிறார்.
மறுநாள் காலையில் மரியாள் தப்பு செய்தவள் என தெரிந்தாலும்,
எதுவுமே தெரியாதது போல எல்லோரோடும் சகஜமாக பேசிக்கொண்டிருக்கிறார் யோசேப்பு. முதல் நாள் இரவில் மரியாள் எனக்கு துரோகம் செய்துவிட்டாள்
என்ற வேதனையில் தூக்கம் வராததால், இரண்டாம் நாள் இரவில் அயர்ந்து தூங்கிவிட்டார். அப்போதுதான் கர்த்துருடைய தூதன் சொப்பணத்தில் யோசேப்போடு
பேசுகிறார். தாவீதின் குமாரனாகிய யோசேப்பே
உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே. அவள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பந்தரித்திருக்கிறாள்
என்று. அந்த நேரம் முதல் யோசேப்பு தன் மனைவியை
தன்னிடமாய் சேர்ந்துக்கொள்ளுகிறான். (மத்தேயு 1: 18-25).
ஏன் தூதன் முதல் இரவிலே பேசவில்லை:
நமது
உடலில் ஓர் காயம் ஏற்பட்டால் அந்த வேதனையை மூலை எந்த இடத்தில் உணருமோ அதேபோலவே நமது
மனதிலும் ஒரு வேதனை ஏற்பட்டால் அவ்வேதனையை அதே மூலை தான் உணரும். எனவே யோசேப்பு முதல் இரவில் மிகவும் வேதனைப்படுகிறார். இந்த நேரத்தில் தேவதூதன் மரியாளிடம் வந்து சொன்னதுபோல
சொன்னாலும் யோசேப்பு அதைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவத்தில் அவர் இல்லை. எனவேதான் கடவுள் இவன் எப்போது தூங்குவான் என்று
பார்த்து தூங்கியதும் தூதன் மூலமாக யோசேப்பிற்கு வெளிப்படுத்துகிறார்.
கடவுளின் ஆசீர்வாதம்:
இன்று
நீங்களும் ஒருவேலை அநேக பாரத்தோடு, தேவையோடு, ஏக்கத்தோடு, அநேக காரியங்களைச் சிந்தித்துக்
கொண்டிருக்கிறீர்களா? இதை நான் எப்படி செய்து
முடிக்கப்போகிறேன். யார் எனக்கு உதவி செய்வார்கள்? என்னால் மட்டும் ஏன் முடியவில்லை? என்று மிகவும்
வேதனைப்பட்டு யோசேப்பைப்போல அலைபாய்ந்து கொண்டிருக்கிறீர்களா? யோசேப்பைப்போல சற்று எல்லா கவலைகளையும் ஒதுக்கி
வைத்துவிட்டு நின்மதியாக உரங்குங்கள். கவலைகளை
உதரித்தள்ளுங்கள். யோசேப்பு எல்லாவற்றையும்
மறந்து தூங்கியபோதுதான் கடவுள் அவனோடு பேசினார்.
நீங்களும் கவலைகளை மறந்து நின்மதியாக தூங்குங்கள். யோசேப்பின் கடவுள் நம் கடவுள். யோசேப்பிற்கு காரியத்தை வெளிப்படுத்தின கடவுள் நமக்கு
வெளிப்படுத்துவார். எப்படி செயல்பட வேண்டும். எப்படி காரியத்தை துவங்கினால் முடிக்க முடியும்
என்று பல ஆலோசனைகளை கடவுள் தருவார். அதற்கு
நாம் கடவுளுக்கு இடம் கொடுக்க வேண்டும். நாமே
மூலையைப் போட்டு குழப்பிக்கொண்டிருக்கக்கூடாது.
நாம் கடவுள் கரத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கும்போது அவர் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். ஆமென்.
யாத்திராகமம் 14: 14
கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்.
யோசேப்பின் ஒரே மனைவி மரியாள்:
மாற்கு
6:3-ல் இயேசு கிறிஸ்துவிற்கு அநேக சகோதரரும், சகோதரிகளும் இருக்கிறதை பார்த்துவிட்டு
சிலர் நினைக்கிறார்கள் யோசேப்பு ஏற்கனவே வேறு திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும், மரியாள் மரிக்கும் வரை கன்னியாகவே இருந்து விட்டாள்
என்றும். அது உண்மையள்ள. இயேசு கிறிஸ்து பிறந்த பிறகு மரியாளுக்கும் யோசேப்பிற்கும்
பிறந்தவர்கள் தான் இந்த சகோதர, சகோதரிகள்.
இயேசு கிறிஸ்து பிறக்கும் வரை மட்டுமே மரியாள் கன்னிகையாக இருந்தார்கள். (மத்தேயு
1: 25)
இயேசு
கிறிஸ்து தன் தகப்பன், தாயோடு பனிரெண்டு வயதில் எருசலேம் தேவாலயத்திற்கு வருகிறார். இந்த இடத்தில் தான் யோசேப்பு கடைசியாக வருகிறார்
(லூக்கா 2: 42-50). எனவே அதன் பின்பு சில ஆண்டுகளில்
யோசேப்பு இரந்துபோயிருக்கலாம் என சரித்திர ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
யூதர்களின் கலாச்சாரம்:
யூதர்களின்
கலாச்சத்தில் ஒரு குடும்பத்தின் தலைவன் புருஷன் ஆகும். ஒருவேலை அவன் மரித்துப்போனால் அதன் பின் அவருடைய
மனைவி குடும்பத்தலைவியாக முடியாது. அவர்களுடைய
பிள்ளைகளில் மூத்த மகன் தான் குடும்பத் தலைவனாக இருக்க வேண்டும். அந்த மூத்த மகன் தனது நாற்பது வயது வரை திருமணம்
செய்துகொள்ளாமல் தாயை கவனிக்க வேண்டும். அவருக்கு
நாற்பது வயது வந்ததும், அவர் திருமணம் செய்துகொண்ட பின் அந்த தாயை கவனிக்கும் பொறுப்பு
இரண்டாவது குமாரனுக்கு வரும்.
மரியாளுக்கு
முன் யோசேப்பு வேறுபெண்ணை திருமணம் செய்து, அவளுக்கு பிறந்த பிள்ளைகள் தான் இந்த சகோதரர்கள்
என்றால், அவர்கள் கண்டிப்பாக இயேசுவுக்கு அண்ணன்மார்களாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் தம்பி,
தங்கைமாராகத்தான் இருந்தார்கள். இயேசு கிறிஸ்து
முப்பத்து மூன்றரை (3312) வயதில் சிலுவையில் தொங்கி மரித்ததால்
இன்னும் ஏழு ஆண்டுகள் தன் தாயை பராமரிக்க வேண்டிய பணி அவருக்கு இருக்கிறது. எனவே தான் தனக்கு அன்பாய் இருந்த சீஷனை அனைத்து
தன் தாயை ஒப்படைக்கின்றார்.
யோவான் 19: 25-27
25. இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின்
சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த
சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
27. பின்பு அந்த சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரத்தில் அந்த சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
இதிலிருந்து
நமக்கு நன்றாகத் தெரிகிறது. மாற்கு 6:3-ல்
வருபவர்கள் இயேசு கிறிஸ்துவின் தம்பி, தங்கைமார்கள் தான். அவர்கள் மரியாளுக்கும் யோசேப்பிற்கும் பிறந்தவர்கள்
தான்.
இயேசு
கிறிஸ்துவின் வளர்ப்புத் தகப்பன் யோசேப்பைக் குறித்து இந்த குறிப்பில் ஆழமாக சிந்தித்தோம். இந்த குறிப்பின் மூலம் அநேக வேத ரகசியங்களை அறிந்திருப்பீர்கள்
என்று கிறிஸ்து இயேசுவுக்குள் நான் விசுவாசிக்கிறேன்.
ஆண்டவர்
தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.