நாள் 8: சேவைக்கான தலைமை
i. ஆண்டு
1900-1930
ii. இடம்
தென்னிந்தியா
iii. கதை முக்கிய கருத்து
குழந்தைகளுக்காகக் குரல் கொடுத்ததற்காக ஏமி பல விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர் கொண்டார். ஆனால் அவர் பின்வாங்கவில்லை. உண்மையான அதிகாரம் என்பது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கல்ல, பாதுகாப்பதற்கே என்பதை அவர் நிரூபித்தார்.
iv. தலைப்பு செய்தி
உண்மையான பலம் என்பது பலவீனமானவர்களுக்காகக் குரல் கொடுப்பதே ஆகும்.
v. மையக்கருத்து
நீதி, பாதுகாப்பு, பலம்
vi. நோக்கம்
தலைமை என்பது அதிகாரம் அல்ல சேவை என்பதை உணரச் செய்வது.
vii. வேதாகம பகுதி
ஆதியாகமம் 41:46-57
viii. மனப்பாட வசனம்
மாற்கு 10:45
மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யுவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
I. நோக்கம்
தலைமை என்பது அதிகாரம் அல்ல என்பதையும், பிறரை அடிமைப்படுத்த அல்ல என்பதையும் புரிய வைக்க வேண்டும். தலைமை என்பது சேவை என்பதை உணர செய்ய வேண்டும். நல்ல தலைவருக்கான பண்புகளை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தனித்து அல்ல பிறரோடு இணைந்து செயல்பட ஊக்குவிக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் மீது அக்கறையுடன் செயல்படுவதே சரியான தலைமைத்துவம் என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிகாரத்தை பெருமையாக எண்ணுவதை தவிர்த்து பணிவுடன் செயல்பட பழக்குவிக்க வேண்டும். இருப்பதை இல்லாத மக்களோடு பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தை வளர்க்க வேண்டும்.
II. இலக்குகள்
- நல்ல தலைவரின் பண்புகளை அறிந்துகொள்வது
- வளங்களைப் பகிர்ந்து கொள்ள கற்றுக்கொள்வது
- குழுவாகச் செயல்பட பழக்குவது
III. ஏமி கார்மைக்கேல் : எளியவர்களைப் பாதுகாத்தல்
குழந்தைகளுக்காகக் குரல் கொடுத்ததற்காக ஏமி பல விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார். ஆனால் அவர் பின்வாங்கவில்லை, ஒவ்வொரு குழந்தையும் முக்கியம் என்று அவர் நம்பினார். உண்மையான அதிகாரம் என்பது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கல்ல, பாதுகாப்பதற்கே என்பதை அவர் நிரூபித்தார்.
"உண்மையான பலம் என்பது பலவீனமானவர்களுக்காகக் குரல் கொடுப்பதே”
IV. பாடவிளக்கம்
யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும் போது முப்பது (30) வயதாயிருந்தார். யோசேப்பு எகிப்து நாடு எங்கும் போய்ச் சுற்றிப் பார்த்தார். பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது. அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவர் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டி வைத்தார். இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப் போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்து வைத்தார். எகிப்து தேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்த பின், யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது. சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று. ஆனாலும் எகிப்து தேசமெங்கும் ஆகாரம் இருந்தது. எகிப்து தேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, ஜனங்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி ஒலமிட்டார்கள் அதற்குப் பார்வோன்: நீங்கள் யோசேப்பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று எகிப்தியர் எல்லாருக்கும் சொன்னார். தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றார். சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.
V. வாழ்விற்கு படிப்பினை
தலைமைத்துவம் என்பது சரியான திட்டமிடுதல் என்பதை இந்நிகழ்வின் மூலம் அறியலாம். வளங்களை சரியாக பயன்படுத்துவதும், தேவை ஏற்படும்போது அதை சரியாக கையாள்வதும் மிகவும் அவசியம் என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஏழைகள் மீது அக்கறை கொண்டு அவர்களது வாழ்வு மேம்பட உழைப்பவரே உண்மையான தலைவர் என்பதையும் அறிய வேண்டும். தலைமைத்துவத்திற்கான பண்புகள் என்ன என்பதை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அதிகாரம் என்பது பிறரை அடக்கி ஆளுவதற்கு அல்ல. பிறருக்கான விடுதலை வாழ்வை உறுதிப்படுத்துவதே தலைமைத்துவம் என்பதை இதன் மூலம் அறியலாம்.
VI. வலியுறுத்த வேண்டியது
- தலைமை என்பது பிறருக்கான திட்டமிடல்
- ஏழைகள், பலவீனர்கள் மீது அக்கறை
- வளங்களை பொறுப்புடன் பயன்படுத்துதல்
VII. தவிர்க்க வேண்டியது
- அதிகாரத்தை பெருமைப்படுத்துதல்
- உயர்வோருக்கே தலைமை என்ற எண்ணம்
VIII. கற்றல் நோக்கம்
- சமூக பொறுப்பு
- குழு முடிவு
- கருணை
IX. வழிகாட்டி கேள்வி
- அனைவருக்கும் நன்மை தரும் தலைவர் யார்?





இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.