Type Here to Get Search Results !

ஷபாட் ஷாலோம் உண்மையான அர்த்தம் | Shabbat Shalom True meaning | bible study in tamil | வேத ஆராய்ச்சி கட்டுரை | Jesus Sam

==========
ஷபாட் ஷாலோம்
==========


ஆண்டவர் மனிதனுக்கு கொடுத்த முதல் மொழி எபிரெய மொழி. பரலோகத்தில் பேசப்படும் மொழியும் எபிரெய மொழி. கிறிஸ்தவர்களாகிய நாம் அதிகமாக இரண்டு எபிரெய சொற்களைப் பயன்படுத்தி வருகிறோம். அவை: ஆமென், அல்லேலூயா.

ஆமென் என்றால், அது அப்படித்தான், அது அப்படியே இருக்கட்டும் என்றும் பொருள். அல்லேலூயா என்றால், தேவனாகிய கர்த்தர் சகல துதிகளுக்கும் பாத்திரர் என்று பொருள்.

பரலோகத்திலே ஆண்டவருடைய சமுகத்தில் இருக்கின்ற தூதர்கள் ஆண்டவரை அல்லேலூயா, அல்லேலூயா என்றே துதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஷாலோம் என்றால் சமாதானம் அதாவது சர்வ சம்பூரணமான சுகம் என்று பொருள். ஷாலோம் என்றால் எழும்புகளுக்கு ஆரோக்கியம். ஷாலோம் என்றால் இரத்த ஓட்டத்திற்கு சுகம். ஷாலோம் என்றால் நமது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம். ஷாலோம் என்றால் நமது குடும்பத்தில் குறை இல்லாத ஆசீர்வாதம். ஷாலோம் என்றால் ஒரு தேசத்தின் ஒரு சுபிட்ஷம். ஷாலோம் என்றால் ஒருவரை வாழ்த்துகின்ற வார்த்தை மாத்திரம் அல்ல. ஷாலோம் என்பது ஒரு நபரைக் குறிக்கிறது. ஷாலோம் என்றால் சமாதானத்தின் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.

ஷபாட் என்றால் ஓய்வு நாள் அல்ல. ஷபாட் என்றால் ஓய்வு என்று பொருள். ஷபாட் மற்றும் ஷாலோம் என்றால் என்ன என்பது பற்றி இந்த குறிப்பில் தெளிவாக தியானிப்போம்.

ஷபாட்
ஷபாட் என்றால் ஓய்வு என்று பொருள். ஓய்வு என்றால் ஏழாம் நாள் என்று நாம் நினைக்கிறோம். வேதத்தின் படி ஒவ்வொரு இலக்கத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. ஒவ்வொரு எபிரெய எழுத்துக்களுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. எண்களுக்கும் அதே போன்று எபிரெய மொழியில் அர்த்தங்கள் உண்டு.

    1. ஒன்று – தேவன்
    2. இரண்டு – பிரிவு
    3. மூன்று – உயிர்த்தெழுதல்
    4. நான்கு – இயேசு
    5. ஐந்து – தேவ வல்லமை
    6. ஆறு – மனிதன்
    7. ஏழு – சம்பூரணம்

ஷபாட் என்றால் ஏழு என்று பொருள். அதாவது சம்பூரமணாக்கிவிட்டு ஓய்ந்து இருந்தல் என்று பொருள்.

ஆண்டவர் முதலாம் நாள் வெளிச்சத்தை உண்டாக்கினார். சிருஷ்டிகளின் கர்த்தராகிய இயேசு: நானே உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்று சொன்னார். வெளிச்சம் என்றால் எது என்பது கேள்வி அல்ல, வெளிச்சம் என்றால் யார் என்பது தான் கேள்வி.

வெளிச்சம் என்றால் இயேசுவைக் குறிக்கிறது. (அதியாகமம் 1:3-5)

சிலர் இப்படியாக கேட்பதுண்டு, அப்படியானால், ஆண்டவர் முதல் நாளில் இருளையும் தானே படைத்தார். அந்த கேள்வி தவறான கேள்வி ஆகும். ஏனென்றால், இருள் என்ற ஒன்று இல்லை. இருள் என்றால் வெளிச்சம் இல்லாத தன்மையைக் குறிக்கிறது.

ஒரு அறைக்குள் உள்ள வெளிச்சத்தை எல்லாம் நீக்கிவிட்டால், அந்த அறையில் ஏற்படும் நிலைக்கு நாம் இருள் என்று சொல்லுகிறோம். இருள் என்ற ஒன்று இருந்தால், இந்த அறைக்குள் நாம் இருளை கொண்டு வர முடியும்.

வெளிச்சம் இருக்கும் இடத்தில் இருள் வர முடியாது. அறைக்குள் இருக்கின்ற எல்லா விளக்குகளையும் அனைத்தால், அந்த அறைக்குள் இருள் வரும். எங்கிருந்து வந்தது என்று கேட்பதே தவறானது, ஏனென்றால், இருள் என்றால் வெளிச்சம் இல்லாத நிலை என்று பொருள்.

முதலாம் நாள் ஆண்டவர் தன்னை பிரதிபலிக்கும் வெளிச்சத்தைப் படைத்தார். வெளிச்சத்தை பகல் என்று ஆண்டவர் அழைத்தார். வெளிச்சம் இல்லாத நிலையை இரவு அல்லது இருள் என்று ஆண்டவர் அழைத்தார்.

இரண்டாம் நாள் ஆண்டவர் ஆகாய விரிவைப் படைத்தார். ஆண்டவர் ஆகாய விரிவை ஜலத்திலிருந்து ஜலத்தைப் பிரித்து ஆகாய விரிவைப் படைத்தார். அப்படியானால் இரண்டு என்பது பிரிவைக் காட்டுகிறது. (ஆதியாகமம் 1:6-8)

மூன்றாம் நாள் ஆண்டவர் வெட்டாந்தரையை உண்டாக்குகிறார். தண்ணீருக்குள் அழிந்து இருக்கும் வெட்டாந்தரையை ஆண்டவர் தண்ணீருக்கு மேலே வரும்படி செய்கிறார். அதாவது உயிர்தெழச் செய்கிறார். தேவன் அதற்கு பூமி என்று பெயரிட்டார். (ஆதியாகமம் 1:9-11) யோனா மீனின் வயிற்றில் இருந்த போது, மூன்றாம் நாள் மீன் அவனை கரையில் போடும்படி கர்த்தர் கட்டளையிட்டார். மரித்த இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் கல்லரையிலிருந்து (பூமி) உயிர்த்தெழுந்தார். மூன்று என்றால் உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது

நான்காம் நாள் ஆண்டவர் சூரியனைப் படைக்கிறார். மல்கியா 4:2-ல் இயேசு கிறிஸ்து நீதியின் சூரியன் என்று அழைக்கப்படுகிறார். இயேசு நானே உலகத்திற்கு ஒளி என்று சொல்லுகிறார். அங்கே ஆண்டவர் பயன்படுத்தின அந்த பதம் சூரிய வெளிச்சத்தைக் குறிக்கிறது. நான்காம் நாள் இயேசுவை அடையாளப்படுத்தும் சூரியனை ஆண்டவர் படைத்தார்.

அதே நான்காம் நாள் சூரியனிலிருந்து வெளிச்சத்தை வாங்கக்கூடிய சந்திரனை ஆண்டவர் படைத்தார். சூரிய, சந்திரனுக்கு துணையாக இருக்கக்கூடிய நட்சத்திரங்களை ஆண்டவர் உண்டாக்குகிறார்.

ஐந்து என்பது தேவனுடைய வல்லமையைக் குறிக்கிறது. முதல் நான்கு நாட்கள் ஆண்டவர் படைத்த எதையும் பார்த்து, நீங்கள் பலுகுங்கள், பெருகுங்கள், அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என்று எந்த கட்டளையும் கொடுக்கவில்லை. ஆதியாகமம் 1:20-22 ஆனால் ஐந்தாம் நாள் நீர் வாழும் ஜந்துக்கள், ஆகாயத்துப் பறவைகள், எல்லாவற்றையும் படைத்த ஆண்டவர், தன் சிருஷ்டிப்போடு பேசுவதை இங்கே பார்க்க முடிகிறது. நீங்கள் பலுகி, பெருகி பூமியை, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

ஐந்தாம் நாள் ஆண்டவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டு சிருஷ்டிப்போடு பேசுகிறார். ஆண்டவருடைய வார்த்தை என்பது அவருடைய வல்லமையின் வெளிப்பாடு ஆகும்.

ஆண்டவர் வெளிச்சத்தை உண்டாக்கின பின்பு வெளிச்சத்தோடு பேசவில்லை. தண்ணீரை பிரித்த பின்பு ஆகாயவிரிவைப் பார்த்து ஆண்டவர் பேசவில்லை. பூமியைப் பார்த்து பேசவில்லை. சூரியனைப் பார்த்து ஆண்டவர் பேசவில்லை. ஆனால் ஐந்தாம் நாள் மீன்களையும், பறவைகளையும் படைத்த ஆண்டவர், அவற்றை ஆசீர்வதிக்கிறார். ஆசீர்வாதம் என்பது கடவுளின் வல்லமையைக் குறிக்கிறது. ஆண்டவர் தம்முடைய சிருஷ்டியைப் பார்த்து, நீங்கள் பெருகுவதற்கு நான் உங்களுக்கு வல்லமையைக் கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார். ஐந்து என்பது தேவனுடைய வல்லமையைக் காட்டுகிறது.

ஆறாம் நாள் தேவன் மனிதனை சிருஷ்டித்தார். (ஆதியாகமம் 1:26-28) ஆறு என்றால் மனிதனைக் குறிக்கிறது.

ஆண்டவர் எவ்வளவு ஒழுங்கும் கிரமமுமாக உலகை படைத்திருக்கிறார் என்பதை இதன் மூலம் நம்மால் உணர முடிகிறது.

ஆதியாகமம் 2:1-3 ஆண்டவர் தம்முடைய படைப்புக்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி முடித்து ஓய்ந்திருந்தார். ஷபாட் என்றால் என்ன? என்று ஆதியாகமம் 2:2-ல் இருக்கிறது. ஷபாட் என்றால் சொல் வேதத்தில் முதல் முதல் வரும் இடம் ஆதியாகமம் 2:2.

ஆதியாகமம் 2:2-ல் மூன்று முக்கிய வார்த்தைகளை நாம் பார்க்க முடியும்.
    1. நிறைவேற்றி
    2. முடித்து
    3. ஓய்ந்திருந்தார்.

நிறைவேற்றி முடித்து ஓய்ந்திருத்தல் என்பது தான் ஷபாட். ஷபாட் என்றால் ஓய்வு நாள் அல்ல, ஷபாட் என்றால் ஓய்வு என்று பொருள். நான் எந்த வேளையும் செய்யாமல் ஓய்ந்து இருக்கிறேன் என்பது அல்ல. நிறைவேற்றி முடித்து ஓய்வதற்கு தான் ஷபாட் என்று பெயர்.

ஆண்டவர் எல்லாவற்றையும் படைத்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தபடியினால் அந்த நாளுக்கென ஒரு மகிமையைக் கொடுத்தார்.

ஒரு மதிப்பிற்குரியவர் வந்து ஒரு நாற்காலியில் அமருக்கிறார் என்றால், அதினால் அந்த நாற்காலிக்கு மதிப்பு உண்டு. மற்றபடி மற்ற நாற்காலிகளைப் போலத்தான் அந்த நாற்காலியும் இருக்கும்.

அதைப்போலவே, ஷபாட் என்றால் ஏழாம் நாள் அல்ல. அது ஓய்வைக் குறிக்கிறது. யாருடைய ஓய்வு என்றால் ஆண்டவருடைய ஓய்வு. எப்படிப்பட்ட ஓய்வு என்றால், கலைத்துப்போய் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று சொல்லும் ஓய்வு அல்ல. எல்லா வேலையையும் முடித்துவிட்டேன், இனி என்ன செய்வது, சிறிது நேரம் ஓய்வு எடுப்போம் என்று சொல்லுவோமோ அந்த ஓய்வும் அல்ல. அப்படியானால், எந்த ஓய்வு என்றால், நிறைவேற்றி முடித்து ஓய்ந்திருக்கும் ஓய்வைக் குறிக்கிறது.

ஷபாட் என்றால் நிறைவேற்றி முடித்து ஓய்ந்திருக்கும் ஓய்வைக் குறிக்கிறது. இஸ்ரவேலர்களுக்கு மாத்திரம் ஆண்டவர் ஒரு கட்டளையைக் கொடுத்தார். பத்து கட்டளைகளில் நான்காவது கட்டளையாக ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக என்று சொன்னார்.

ஆண்டவர் எல்லாவற்றையும் முடித்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தபடியினால், அந்த ஏழாம் நாளை பரிசுத்தப்படுத்தி, ஆசீர்வதித்தார். எனவே, ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களிடம் நீங்கள் அந்த ஏழாம் நாளை வேறுபிரித்து, அதில் ஓய்ந்திருங்கள் நான் அதை ஆசீர்வதிப்பேன் என்று கட்டளையிட்டார்.

ஆண்டவர் ஏழாம் நாளில் நிறைவேற்றி முடித்து ஓய்ந்திருந்தபடியினால் அந்த நாளை ஓய்வு நாளாகவும், பரிசுத்த நாளாகவும் கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்கு கட்டளையிட்டார்.

இப்பொழுது வாழுகிற கிறிஸ்தவர்கள் அதை பின்பற்ற வேண்டுமா?

யோவான் 19:30
இயேசு கடியை வாங்கின பின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

இயேசுவுக்கு கசப்பான காடி கொடுக்கப்பட்டது. அதையும் அவர் ஏற்றுக்கொண்டார். மனிதன் இயேசுவை கைது செய்தான். சித்திரவ செய்தான், வாரினால் அடித்தான், முள் முடி சூட்டினான். சிலுவையில் அறைந்தான். கடைசியாக கசப்பான காரியையும் கொடுத்தான். உயிரோடு இருக்கும் இயேசுவுக்கு மனிதன் செய்த கடைசி காரியம் கசப்பான காடியை குடிக்கக் கொடுத்தான்.

இயேசு கடைசியாக மனிதனிடம் கசப்பான, துன்பமான, வேதனையான ஒன்றை பெற்றுக்கொள்கிறார். வாங்கின பின்பு, முடிந்தது என்று சொல்லி, தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

ஆண்டவர் நிறைவேற்றி முடித்து ஓய்ந்திருந்தார். அதேபோல இயேசுவானவர், மனிதன் தனக்குக் கொடுக்கும் வேதனைகளை நிறைவேற்றி, முடித்து, தனது ஆவியை ஒப்புக்கொடுத்தார். அப்படியானால் ஷபாட் என்பது எதைக் குறிக்கிறது, இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் முடிவைக் குறிக்கிறது.

ஷபாட் என்ற சொல்லின் மூன்று எழுத்துக்களைக் குறித்து பார்ப்போம்.
    1. ஷீன்
    2. பெயிட்
    3. டௌ

1. ஷீன்
ஷீன் என்றால் தன்னால் தன்னையே அழித்துக்கொள்ளுவது என்று பொருள். எபிரெய மொழியின் ஷீன் என்ற எழுத்து இரண்டு பல்கள் கொண்ட அமைப்பு போன்ற வடிவில் காணப்படும்.

இயேசு கிறிஸ்துவை யாரும் கொலை செய்யவில்லை. இயேசு தன்னைத்தானே ஒப்புக்கொடுத்தார்.

2. பெயிட்
பெயிட் என்றால் வீடு அல்லது கூடாரம் என்று பொருள்.

கெம் என்றால் அப்பம் என்று பொருள்.

பெயட்லகேம் என்றால் அப்பத்தின் வீடு. அதாவது பெத்லகேம் என்பதன் அர்த்தம் அப்பத்தின் வீடு.

யாக்கோபு லூஸ் என்ற இடத்திற்கு பெத்தேல் என்று பெயர் வைக்கிறார். பெயிட் என்றால் வீடு. யெல் என்றால் தேவன். பெத்தேல் என்றால் தேவனின் வீடு என்று பொருள்.

பெயிட் என்ற எழுத்தின் அர்த்தமும், சொல்லின் அர்த்தமும் வீடு என்பதாகும்.


3. டௌ
டௌ என்ற எழுத்தி எபிரெய எழுத்துக்களில் கடைசி எழுத்தாகிய 22-வது எழுத்து. டௌ என்றால் சிலுவை என்று பொருள்.

ஷபாட் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்கள் ஷீன்-பெயிட்-டௌ என்பதாகும். இந்த மூன்று சொற்களின் அர்த்தம் என்னவென்றால், தன் கையால், தன் வீடாகிய சரீரத்தைச் சிலுவையில் அழித்தார் என்பது பொருள்.

ஷபாட் என்பது உண்மையில் இயேசுவைக் குறிக்கிறது என்று இஸ்ரவேலர்களுக்குத் தெரியும். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன் வந்தவர் அந்த இயேசுதான் ஷபாட் என்பதை அவர்கள் அறியாதவண்ணம் அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டிருக்கிறது.

ஆண்டவருடைய இரகசிய வருகைக்குப் பின்பு, இஸ்ரவேலர்களின் கண்கள் திறக்கப்படும். அப்பொழுது அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இயேசுதான் மேசியா, அவர் தான் இரட்சகர் என்பதை புரிந்துகொள்வார்கள்.

அன்று இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்றால், நமக்கு விடுதலை இல்லை. இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்றால், நமக்கு இரட்சிப்பு இல்லை. அப்படியானால், ஷபாட் என்றால் நமக்கு அது ஒரு அர்த்தத்தைக் குறிப்பதில்லை. ஷபாட் என்றால் இரட்சிப்பு, ஷபாட் என்றால் மீட்பு, ஷபாட் என்றால் என் பாவங்களுக்காக என் இயேசு சிலுவையில் தண்டனையை அனுபவித்துவிட்டார், இனி நான் பாவத்திற்கு கடனாளி அல்ல என்று பொருள். ஷபாட் என்றால் நாம் இனி நரகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று பொருள். ஷபாட் என்றால் நாம் பரலோகத்திற்குறியவர்கள் என்று பொருள். ஷபாட் என்றால் நாம் பிதாவின் பிள்ளைகள் என்று பொருள். ஷபாட் என்றால் பிரதான ஆசாரியராகி இயேசுவின் உதவி ஆசாரியர்கள் நாம் என்று பொருள். ஷபாட் என்றால் இராஜாதி இராஜாவாம் இயேசு கிறிஸ்துவின் ஆளுகைக்குக் கீழ் வாழும் இராஜாக்கள் நாம் என்று பொருள்.

எனவே, கிறிஸ்தவர்கள் ஷபாட்-ஐ ஒரு நாளுக்குள் எல்லைப்படுத்தக்கூடாது. ஷபாட் என்றால் ஒரு நாள் அல்ல. அது ஒரு நிகழ்ச்சியின் நிறைவேற்றம். எல்லா நாளும், எல்லா நேரமும் நமக்கு ஷபாட் ஷாலோம் தான்.

சில அதிபுத்திசாலிகள் ஷபாட் என்றால் சினிக்கிழமை என்று நினைத்துக்கொண்டு, குழம்பிக்கொண்டு இருக்கிறார்கள். எல்லா நாளும், எல்லா நேரமும், எல்லா நிமிடமும் கிறிஸ்தவர்களுக்கு ஷபாட் தான். அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த ஆசீர்வாதம்.

எபிரெய எழுத்துக்களில் இலக்கங்கள் இல்லை. எபிரெய மொழியில் உள்ள 22 எழுத்துக்களும் இலக்கங்களாக செயல்படும்.

    ஆலெப் - 1
    பெயிட் – 2
    கிமேல் – 3
    லாலெத் – 4
    யோட் – 10

எபிரெய இலக்கங்களில் 10 என்ற இலக்கத்திற்கு பின்பு 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 என்றே வரும். 100-ஐ தொடர்ந்து 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000 என்றே வரும்.

இவற்றில் 21-ம் இலக்கம் ஷீன் என்ற எழுத்து. அதாவது இலக்கத்தில் 3000-ஐ குறிக்கும். 22-வது இலக்கம் டௌ என்ற எழுத்து அதாவது இலக்கத்தில் 400-ஐக் குறிக்கும்.

ஷபாட் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களின் இலக்கங்களை பார்ப்போம்.

ஷீன் என்றால் 300 என்று பொருள்.

பெய்ட் என்றால் 2 என்று பொருள்.

டௌ என்றால் 400 என்று பொருள்.

அப்படியானால், ஷபாட் என்றால் 300+2+400 = 702.

சிலுவை மரணத்தின் மூலம் நமக்கு ஆசீர்வாதம் எப்படி கிடைக்கிறது என்றால், ஏழு என்ற சம்பூரணமான தேவன், பிலிப்பியர் 2:5-ன் படி பரலோகத்திலிருந்து பரிந்து, (பிரிவு என்றால் 2 என்று பொருள்) வந்தபடியினால் நமக்கு கடவுளோடு ஐக்கியம் கிடைத்தது. இதைத்தான் 702 என்ற இலக்கம் காட்டுகிறது.


ஷாலோம்
===========
ஷபாட் என்ற சொல்லுக்கு மூன்று எழுத்துக்கள் உண்டு. அவை: ஷீன்-பெயிட்-டௌ. மூன்று என்ற இலக்கம் உயிர்த்தெழுதலைக் குறிக்கும்.

ஷலோம் என்ற சொல்லுக்கு நான்கு எழுத்துக்கள் உண்டு. நான்கு என்றால் எபிரெய மொழியில் இயேசுவைக் குறிக்கிறது. ஷாலோம் என்றால் சமாதானம் என்ற வெறும் சொல் மாத்திரம் அல்ல, அது சமாதானப் பிரபு என்கின்ற இயேசுவைக் குறிக்கிறது.

இயேசு கிறிஸ்து யூதா கோத்திரத்தில் வந்தார். யூதாவின் தகப்பன் யாக்கோபு. ரூபன் முதல் தன்னுடைய பன்னிரண்டு பிள்ளைகளையும் யாக்கோபு ஆசீர்வதிக்கும்போது, தீர்க்கதரிசனமாக அநேக காரியங்களை அவர்களுக்கு சொல்லுகிறார்.

அப்படி யாக்கோபு யூதாவைக் குறித்து சொல்லும்போது, இப்படியாக சொல்லுகிறார்.

ஆதியாகமம் 49:10
சமாதானத்தின் கர்த்தர் வருமளவும், செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதும் இல்லை. நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒளிவதுமில்லை. ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.

எபிரெய மொழியில் சீலோ வரும் வரை என்று தான் எழுதப்பட்டுள்ளது. அதை தமிழில் சாமாதானத்தின் கர்த்தர் என்று மொழியெர்த்திருக்கிறார்கள்.

யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை யோர்தானைக் கடந்து அழைத்துச் சொல்கையில் அவர்கள் கைப்பற்றிய முதல் பகுதி எரிகோ. அதன்பின்பு ஆயி பட்டணத்தை கைப்பற்றினார்கள். இப்படி அநேக பகுதிகளைக் கைப்பற்றி இறுதியில் யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்களும் முழு கானான் தேசத்தையும் கைப்பற்றினார்கள்.

முழு கானான் தேசத்தையும் இஸ்ரவேலர்கள் கைப்பற்றின பின்பு, யோசுவா சீலோ என்ற இடத்தை இஸ்ரவேலின் முதல் தலைநகராக நிறுவினார். அங்கு தான் ஆசரிப்புக் கூடாரம் வைக்கப்பட்டது. பிற்காலத்தில் எல்கானாவின் மனைவில் அன்னாள் ஆண்டவரிடம் புலம்பி அழுது குழந்தை கேட்டது, இந்த சீலோ என்ற இடத்தில் தான். அன்னாளுக்கு சாமுவேல் என்ற குழந்தை பிறந்தபோது, அவனை அன்னாள் ஆலயத்தில் விடுகிறாள். சாமுவேல் வளர்ந்த ஆலயம் இருந்த இடம் சீலோ. சீலோ என்பது இஸ்ரவேலர்களின் முதல் தலைநகரம்.

இன்றைக்கும் சீலோ என்ற இடம் இருக்கிறது. சீலோவிலே ஆசரிப்புக் கூடாரம் இருந்த இடத்திலே, இன்றைக்கும் நம்மால் ஆண்டவரின் பிரசன்னத்தை உணர முடியும்.

சீலோ என்பது இடம் அல்ல. சீலோ என்றால் ஆசரிப்புக் கூடாம் அல்ல. சீலோ என்றால் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் இருக்கின்ற உடன்படிக்கைப் பெட்டி அல்ல. சீலோ என்றால் யார் என்று, அந்த சீலோ வரப்போகும் யூதா கோத்திரத்து தகப்பனாகிய யூதாவைப் பார்த்து, யாக்கோபு தீர்க்கதரிசனமாக சொன்னதை ஆதியாகமம் 49:10-ல் வாசித்தோம்.

சீலோ என்றால் ஷாலோம் அதாவது சமாதானம் என்று பொருள். யாக்கோபு யூதாவைக் குறித்து தீர்க்கதரிசனம் சொல்லும்போது, உன் வழியாகவே ஷாலோம் என்ற கடவுள் வெளிப்படுவார் என்று சொல்லுகிறார். உன் சந்ததியில் தான் இராஜாக்கள் தோன்றுவார்கள் என்று தீர்க்கதரிசனமாக சொல்லுவார். செங்கோல் என்றால், ஆளுகை செய்யும் கோல் என்று பொருள்.

வேதத்தில் ஷாலோம் என்ற சொல் முதல் முதலில் ஆதியாகமம் 14:18-ல் வாசிக்கிறோம். எபிரெய மொழியில் உள்ள 22 எழுத்துக்களும் மெய் எழுத்துக்கள். உயிர் எழுத்துக்கள் அல்ல. எனவே ஷாலோம் என்ற பதத்தை ஷாலேம், ஷாலீம், ஷோலீம், ஷிலோம் என்றும் உச்சரிக்கலாம்.

ஆதியாகமம் 14:18
அன்றியும் உன்னதமாக தேவனுடைய ஆசாரியராய் இருந்த சாலேமின் இராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சை ரசமும் கொண்டு வந்து,

ஷலேம் என்ற ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் வாழும் அனைவரும் கடவுளின் மக்கள். அவர்களை ஆட்சி செய்த ராஜாவின் பெயர் மெல்கிசேதேக். மெல்கிசேதேக் என்றால் நீதியின் ராஜா என்று பொருள். மெல்கிசேதேக்கைப் பற்றி எபிரெயர் 7,8-ம் அதிகாரத்தில் நாம் பார்க்க முடியும்.

மெல்கிசேதேக்கு ஆட்சி செய்த அந்த ஷாலேம் என்ற பகுதிதான் பிற்காலத்தில் எருசலேம் என்று மாறியது. இன்றைய எருசலேம் தான் அந்த ஷாலேம்.

ஷாலோம்
ஷாலோம் என்ற சொல்லுக்கு நான்கு எழுத்துக்கள் உண்டு. அவை: ஷீன்-லாமேட்-வாவ்-மெம்.

ஷீன் – தன் கையால் தன்னைத்தானே அழித்தல்

லாமேட் – மேய்ப்பனின் கோல்

வவ் – கூடார ஆணி

மெம் – தண்ணீர்.

ஷீன் என்ற எழுத்தைக் குறித்து முன்பே நாம் அறிந்துகொண்டோம்.

2. லாமேட்
லாமேட் என்றால் மேய்ப்பனின் கோல் என்று பொருள். லாமேட் என்ற எழுத்துக்கு ஆசிரியர், போதகர், கற்றுக்கொடுப்பவர் என்ற அர்த்தமும் உண்டு.

முதல் முதலில் மேய்ப்பனின் கோலை மோசேயிடம் நாம் பார்க்கிறோம். மோசே வனாந்திரத்தில் ஆடுகளை மேய்ப்பதற்காக பயன்படுத்தின கோலை, கடவுள் தனது கோலாக மாற்றுகிறார்.

சங்கீதம் 23:4
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர். உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

இந்த வசனத்தில் கோல் என்பது மேய்ப்பனின் கோலைக் குறிக்கிறது. அப்படியானால், யார் அந்த மேய்ப்பன். கர்த்தர் மேய்ப்பன் என்றால், நாம் அனைவரும் அவருடைய ஆடுகள்.

தாவீது இந்த வசனத்தை தீர்க்கதரிசனமாக எழுதுகிறார். தாவீது ஆண்டவரைப் பார்த்து, உமது கோலும், தடியும் என்னைத் தேற்றும் என்று சொல்லுகிறார்.

அவருடைய கோலும் தடியும் என்னைத் தோற்றினது என்று தாவீது பாடவில்லை. தேற்றனது என்றால் கடந்த காலத்தைக் குறிக்கும். தேற்றுகிறது என்று தாவீது பாடவில்லை. தேற்றுகிறது என்றால் நிகழ்காலத்தைக் குறிக்கும். என்னைத் தேற்றும் என்றே தாவீது பாடுகிறார். அப்படியானால், தேற்றும் என்ற பதம் எதிர்காலத்தைக் குறிக்கிறது. எனவே, அது ஒரு தீர்க்கதரிசனம்.

இங்கே தாவீது கோல் என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்றால், எதிர்காலத்திலே நமக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரைக் குறிப்பிடுகிறார். காரணம் அவர் தான் தேற்றரவாளன்.

புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவியானவர் வரப்போவதை தீர்க்கதரிசனமாக யோவேல் தனது இரண்டாவது அதிகாரத்தில் சொன்னார் என்று நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால், யோவேல் தீர்க்கதரிசிக்கு முன்பே தாவீது தீர்க்கரிசனமாக சொல்லுகிறார், தேற்றுகின்ற ஆசிரியர் ஒருவர் வருவார்.

இயேசுவானவர் பரிசுத்த ஆவியானவரைக் குறித்து சொல்லும்போது, அவர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார், போதிப்பார், வழிநடத்துவார் என்று சொல்லுகிறார்.

யோவான் 14:16
நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்கு, சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

இங்கே இயேசுவானவர் தன்னைத் தேற்றரவாளன் என்று சொல்லவில்லை. இயேசுவானவர் தன்னைக் குறித்து சொல்லும்போது, நானே நல்ல மேய்ப்பன் என்று சொல்லுகிறார். இயேசுவானவர் மேய்ப்பர். அவர் பரலோகத்திற்கு சென்று, அவர் தன்னுடைய கோலாகிய தேற்றுகின்ற பரிசுத்த ஆவியானவரை அனுப்புகிறார். யோவான் 14:16-ஐ மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்து, ஆடுகளாகிய நம்மைப் பார்த்து சொல்லுகிறார். இந்த வசனத்தில் திரித்துவம் வெளிப்படுவதை நம்மால் பார்க்க முடியும்.

எபிரெய எழுத்துக்களில் லாமேட் என்ற எழுத்து 12-வது எழுத்து. 1-2. ஒன்று என்றால் தேவன். இரண்டு என்றால் பிரிவு. தேவன் நமக்காக பிரிந்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக வெளிப்பட்டு நமக்கு ஆசீர்வாதத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

மனோதத்துவத்தில் கற்றுக்கொள்ளும் ஒரு இலக்கமாக எண் 12-ஐ குறிப்பிடுகிறார்கள். முழுமையான புரிந்துகொள்ளுதல் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால், ஒரு வகுப்பில் பன்னிரெண்டு பேர் இருக்க வேண்டும் என்பது மூளையை ஆராய்ச்சி செய்து, அதில் தேர்ச்சி பெற்ற வல்லுநர்களின் கருத்து.

ஒரு நல்ல ஆசிரியர் தனிப்பட்ட விதத்தில் மாணவர்களோடு இணைந்து, மாணவர்களுக்கு புரியும் விதத்தில் பாடங்களை நடத்தி, சிறப்பான முறையில் அவர்களுக்கு பாடங்களை கற்றுக்கொடுக்க வேண்டுமானால், அந்த வகுப்பில் பன்னிரெண்டு மாணவர்கள் தான் இருக்க வேண்டுமாம்.

எனவே தான் ஆசிரியர்களுக்கெல்லாம் சிறந்த தலையாய ஆசிரியரான இயேசு கிறிஸ்துவும் தனக்கென பன்னிரெண்டு மாணவர்களை மாத்திரமே வைத்திருந்தார்.

ஒரு வகுப்பில் எவ்வளவு திறமையான ஆசிரியர் இருந்தாலும், மாணவர்கள் எவ்வளவு தெளிவாக பாடத்தைக் கவனித்தாலும், முதல் 12 நிமிடம் அவர் கற்றுக்கொடுத்தவைகள் மாத்திரமே மாணவர்களின் உள்ளத்தில் 100 சதவீதமும் பதிவு செய்யப்படும்.

நல்ல ஆசிரியர், நல்ல மாணவர்களாக இருப்பார்களானால் அடுத்த 12 நிமிடத்தில் 95 சதவீத பாடம் மாத்திரமே அவர்கள் உள்ளத்தில் தங்கும்.

நல்ல ஆசிரயர், நல்ல மாணவர்களாக இருப்பார்களானால், அடுத்த 12 நிமிடத்தில் 90 சதவீத பாடம் மாத்திரமே அவர்கள் உள்ளத்தில் தங்கும்.

இவையனைத்தும் சிறந்த ஆசிரியர், சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமே பொருந்தும்.

நாம் படிக்கின்ற, பார்க்கின்ற காரியங்கள் முதல் 12 மணிநேரம் மாத்திரமே நமது உள்ளத்தில் பதிந்திருக்கும். அடுத்த 12 மணி நேரத்தில் சில காரிங்கள் மறந்துபோய்விடும். இப்படி படிப்பதும், படித்துக்கொடுப்பதும் 12, 12 ஆக பிரிக்கப்படுகிறது.

எனவேதான் இஸ்ரவேலர்களுக்கு ஆண்டவர் ஒரு கட்டளை கொடுத்தார். இஸ்ரவேலில் பிறக்கும் எந்த குழந்தையும் முதல் 12 ஆண்டுகள் டோரா (வேதம்) புத்தகத்தை வாசிக்கக்கூடாது. பன்னிரெண்டு வயதிற்கு பின்பு தான் டோராவை பிள்ளைகள் வாசிக்க வேண்டும்.

பிள்ளைகளுடைய பள்ளி படிப்பையும் 12 ஆண்டுகளுக்குத்தான் எல்லைப் படுத்தி வைத்திருக்கிறார்கள்.

எபிரெய எழுத்துக்கள் 22-ல், சரியாக நடுவில் இருக்கும் எழுத்து லாமேட் என்ற எழுத்து. மற்ற எல்லா எழுத்துக்களைவிடவும், இந்த லாமேட் எழுத்து சற்று வித்தியாசமானது. லாமேட் என்ற எழுத்து மேல் நோக்கி அமைந்திருக்கும். பரிசுத்த ஆவியானவர் தான், நமக்கும் பரலோகத்திற்கும் பாலமாக இருந்து செயல்படுகிறார் என்பதை இந்த லாமேட் எழுத்து நமக்கு காட்டுகிறது.

ரோமர் 8:26
அந்தபடியே ஆவியானவரும் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுக்களோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்.

கடவுள் விரும்புகிறபடி சிலரால் வேண்டிக்கொள்ள முடியவில்லை என்று பவுல் எழுதவில்லை. அங்கே நாம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான் கடவுள் விரும்புகிறபடிதான் ஜெபிக்கிறேன் என்று நீங்கள் சொல்வீர்களானால், நீங்கள் பவுலைவிட நீதிமானாகத்தான் இருப்பீர்கள்.

நமக்கு ஜெபிக்கத் தெரியாது என்பதினாலேயே, ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்று பவுல் எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 6:13-ன் படி நம்முடைய சரீரம் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாய் இருக்கிறது. அப்படியானால், நமக்குள்ளாகவே ஆவியானவர் இருக்கிறார்.

பிதாவும், குமாரனும் பரலோகத்தில் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளாக இருந்து, நம்மையும் பிதாவையும் இணைக்கிறவராக செயல்படுகிறார். அப்படியானால், பரிசுத்த ஆவியானவர் ஒரு கோலாக, ஆசிரியராக, போதகராக செயல்படுகிறார்.

ஒருவர் எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும், வேதாகமம் முழுவதையும் கற்றுத் தேர்ந்த வல்லுனனாய் இருந்தாலும், எபிரெய, கிரேக்க மொழிகள் நன்கு அறிந்தவனாக இருந்தாலும், வேதாகமத்தில் அநேக பட்டங்கள் பெற்றிருந்தாலும், ஆவியானவரின் துணையோடு, ஆவியானவரின் அபிஷேகத்தோடு மட்டுமே கடவுளுடைய வார்த்தையை கற்றுக்கொடுக்க முடியும்.


3. வாவ்
ஷாலோம் என்ற வார்த்தையில் மூன்றாவதாக வரும் எழுத்து வாவ். வாவ் என்றால் அது கூடார ஆணியைக் குறிக்கிறது. கூடார ஆணி என்பது பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாகிய நமது சரீரம் அசையாதபடி, நிலையாய் ஸ்திரப்படுத்தப்படுவதற்கு (நிலைநிறுத்தப்படுவதற்கு) கடவுள் அந்த ஆணியை பயன்படுத்துகிறார்.

“வாவ்“ என்பது ஒரு இணைப்பு வார்த்தையாகும். தமிழில் சொல்லுவோம் என்றால், வானமும், பூமியும்; ஒழுங்கின்மையும், வெறுமையும்; நியாப்பிரமாணங்களும், தீர்க்கதரிசனங்களும்; ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனும்; இதுபோன்ற இணைப்பு வார்த்தையாக பயன்படுத்தப்படுவதுதான் அந்த “வாவ்“ என்ற எழுத்து.

“வாவ்“ என்றால் இரண்டையும் இணைப்பது என்பது பொருள். அதாவது, பூமிக்குறிய கூடாரமாகிய சரீரத்தை, அசையாதபடி இணைக்கின்ற “வாவ்“ என்ற கூடார ஆணிதான் ஷாலோமின் மூன்றாவது எழுத்து.


4. மெம்
மெம் என்றால் தண்ணீர் என்று பொருள். வேதத்தில் தண்ணீர் பல காரியங்களுக்கு அடையாளமாக கூறப்படுகிறது.

எபேசியர் 5:25,26-ல் தண்ணீர் கடவுளுடைய வார்த்தைக்கு எடுத்துக்காட்டாய் கூறப்படுகிறது.

ஏசாயா 12:3-ல் தண்ணீர் என்பது இரட்சிப்பிற்கு அடையாளமாக கூறப்படுகிறது.

எசேக்கியேல் 36:25-ல் தண்ணீர் தூய்மைக்கு (சுத்தமாகுதல்) அடையாளமாக கூறப்படுகிறது

யோவான் 7:37-39-ல் இயேசு கிறிஸ்து தண்ணீரை பரிசுத்த அவியானவருக்கு (ஜீவத்தண்ணீருள்ள ஊற்று) ஒப்பிடுகிறார்.

யோவான் 4:14, வெளிப்படுத்தல் 21:6, வெளிப்படுத்தல் 22:1 இந்த வசனங்களில் தண்ணீர் நித்திய ஜீவனுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

இந்த மெம் என்ற எழுத்து, இலக்கத்தில் எண் 40-ஐ குறிக்கிறது. நோவாவின் காலத்தில் இரவும், பகலும் 40 நாட்கள் மழை பெய்தது. 40 என்பது தண்ணீரைக் குறிக்கும்.

மோசே 40 நாட்கள் சீனாய் மலையில் உபவாசம் இருந்தார். அப்பொழுது அவர் தண்ணீர் குடியாமல் இருந்தார்.

எலியா அதே சீனாய் மலையில் 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அவரும் தண்ணீர் குடிக்கவில்லை.

இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு வனாந்தரத்திற்கு கொண்டுபோகப்பட்டார், அந்த வனாந்தரமும் சீனாய் மலைதான். 40 நாட்கள் இயேசு கிறிஸ்து தண்ணீர் குடிக்காமல் இருந்தார்.

இவர்கள் 40 நாட்கள் தண்ணீர் இல்லாமல் எப்படி உயிரோடிருந்தார்கள் என்றால், ஆண்டவர் அவர்களுக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்து, அவர்களை உயிரோடே வைத்திருந்தார். எனவே பூமியின் தண்ணீர் அவர்களுக்குத் தேவைப்படவில்லை.

ஷாலோம் என்றால் உயிர்த்தெழுந்த வல்லமை என்று பொருள். ஷாலோம் என்ற உயிர்த்தெழுந்த ஆண்டவரின் வல்லமை எனக்குள் எப்பொழுது வருகிறது என்றால், ஞானஸ்நானத்தின் மூலமாக வருகிறது. ஞானஸ்நானத்தின் போது நாம் இயேசுவோடு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்தோம் என்று ரோமர் 6-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

ஷாலோம் என்ற வார்த்தையில் உள்ள ஷீன்-லாமேட்-வாவ்-மென் என்ற நான்கு எழுத்துக்களின் அர்த்தங்களை ஒன்றாக இணைத்தால், இயேசு தன் கையால் தன்னையே அழித்துக்கொண்டு, மேய்ப்பனின் கோலாகிய தேற்றரவாளனும், ஆசாரியருமாகிய பரிசுத்த ஆவியைத் தந்ததால், பரிசுத்த ஆவியின் கூடாரமாகிய எமது சரீரங்கள் வழுவாதபடி ஆணியால் உறுதியாய் இணைக்கப்பட்டு, தண்ணீராகிய இரட்சிப்பைப் பருகிய நாம் தண்ணீராகிய தேவனுடைய வார்த்தை மூலம் தூய்மையாக்கப்பட்டு, நித்திய சமாதானத்தோடு தேவனோடு நித்திய காலமாக வாசம்பண்ணுவோம் என்று பொருள் வரும்.

அல்லேலூயா என்றால் நம் தேவனாகிய கர்த்தர் சகல துதிக்கும், கனத்துக்கும், மகிமைக்கும் பாத்திரர் அல்லவா? என்று பொருள். அல்லேலூயா என்றால் ஒரு கேள்வியோடு வருகின்ற வைராக்கிய வார்த்தை. சபையின் மேய்ப்பன் அல்லேலூயா என்று சொல்லுகிறார் என்றால், விசுவாசிகள் அனைவரும் ஆமென் என்று சொல்ல வேண்டும். ஆமென் என்றால், அது அப்படித்தான், ஆகவே, அது அப்படித்தான் இருக்க வேண்டும் என்று பொருள். ஆனால், இன்று பல ஆலயங்களில், அல்லேலூயா என்று மேய்ப்பன் சொல்லும்போது, விசுவாசிகளும் அல்லேலூயா என்றே மறுபடியும் அந்த கேள்வி வாக்கியத்தை சொல்லுகிறார்கள்.

ஷபாட் ஷாலோம் என்ற வார்த்தையின் முழுமையான விளக்கங்களைக் குறித்து இந்த தொகுப்பில் தெளிவாக அறிந்துகொண்டோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.