நாள் 2: நஷ்டமென்று எண்ணுகிறேன்
(பிலிப்பியர் 3:7)
==================
நோக்கம்:
பிள்ளைகள் தங்கள் வாழ்வில் சுய முயற்சிகள், சுய பெலன் பெற்றோரின் பிண்ணனிகள் கொண்டு தாங்கள் பெற்ற தாலந்துகள், பெயர், புகழ், பொருட்கள் உட்பட பல காரியங்களைக் குறித்து மேன்மை பாராட்ட எதுவும் இல்லை, கிறிஸ்துவுக்கு முன் அவைகள் தங்களின் மேன்மையல்ல நஷ்டம் என்று எண்ண வேண்டும். தேவைப்பட்டால் அவைகளை இழக்கவும் தயாராக இருக்க வேண்டும்.
வேதபகுதி:
லூக்கா 19:1-10 (சகேயுவின் ஒப்படைப்பு)
மனன வசனம்:
பிலிப்பியர் 3:7
...எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.
பாட சுருக்கம்:
சகேயு தன் வாழ்வில் தான் சேர்த்த செல்வங்கள் எல்லாம் கிறிஸ்வுக்கு முன் நஷ்டமென எண்ணி அவைகளை இழக்க, தியாகம் செய்ய எண்ணியதால் இயேசு கிறிஸ்துவால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றதுபோல, பிள்ளைகள் தங்கள் சுயநலமான வாழ்வை நஷ்டமென எண்ணி கிறிஸ்துவுக்காக தங்களுக்குள்ளவைகளை தியாகம் செய்யவும், இழக்கவும் தங்களை ஒப்படைக்க வேண்டும்.
கவன ஈர்ப்பு:
ஒரு தட்டில் ஒரு 15 பென்சில்களை வைத்துவிட்டு மூன்று ஜீனியர் பிள்ளைகளை முன் அழைத்து, மூன்று பேர்களுக்கு தலா ஐந்து பென்சில்களை கொடுக்கவும், விளையாட்டின் முடிவில் அதிக பென்சில்களை வைத்திருப்பவரே வெற்றியாளர் எனக் கூறவும். பின்பு ஒருவரிடம் மற்ற இரண்டு பேரின் மீது தவறான குற்றச்சாட்டுக்கூறி, தண்டனையாக ஒரு பென்சிலை அவர்களிடம் பெறும்படி கூற வேண்டும். எடுத்துக்காட்டாக இன்று காலை நீ தாமதமாக எழுந்தாய்! எனக்கூறிவிட்டு அந்த நபரிடமிருந்து ஒரு பெல்சிலைப் பெற வேண்டும். பின்பு அடுத்த நபரிடம் அடுத்தக் குற்றச்சாட்டைக் கூற வேண்டும். ஒரு நிமிடத்திற்குள் அந்த சிறு பிள்ளை எத்தனை பென்சில்கள் குற்றம் கூறி பெற்றுள்ளார். இப்பொழுது பென்சிலை இழந்த மற்ற இரண்டு பேரிடம் தலா எத்தனை பென்சில்கள் இழந்தார் எனக் கேட்க வேண்டும். அடுத்து அந்த பென்சில்கள் வென்ற நபரிடம் மற்ற இருவரிடமிருந்து எத்தனை பென்சில்கள் பெற்றாரோ, அதைவிட இருமடங்கு கொடுத்துவிடலாமா? எனக் கேட்கவும். நான் இரண்டு மடங்கு கேட்டதற்கே இந்த சிறுபிள்ளை தயங்குகிறதே, வேதத்தில் ஒரு செல்வந்தர் தான் மற்றவரிடம் தவறாக பெற்றதை நான்கு மடங்காக கொடுப்பதாக மனதார கூறினார். அவரைப் பற்றி நாம் காண்போம்.
பாட விளக்கம்:
இயேசுவின் போதனைகளைப் பற்றியும் ஏழைகளுக்கு அவர் காட்டும் அன்பை பற்றியும் கேள்விப்பட்ட அனைவரும் இயேசுவைக் காண ஆசை வைத்திருந்தனர். இயேசு ஒரு முறை கலிலேயாவில் இருந்து எருசலேமிற்கு சென்றார். அப்பொழுது எரிகோ என்கிற பட்டணம் வழியாகச் செல்ல திட்டம் கொண்டிருந்தார். வழியில் போதனைகளும் அற்புதங்களும் செய்தார். எரிகோ பட்டணத்திற்குள் நுழையும் முன்பு கூட, பார்வை திறன் இழந்த ஒருவரை இயேசு குணமாக்கினார். அதினால் ஆரவாரம் பெருகியது. இயேசு உள்ளே வருவது அந்த பகுதிகளில் அனைவருக்கும் தெரிந்தது. பலரும் அவரைக் காண சாலைக்கு வந்தனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் அதினை மீறி இயேசுவை நாம் காண முடியாது என ஒரு மனிதன் அறிந்துகொண்டார். அவர் குள்ளமான மனிதர். எனவே, தான் செல்வந்தர் என பெருமையில்லாமலும், இயேசுவைக் காண வேண்டும் என்ற ஆவல் மட்டும் கொண்டவராக, ஆபத்து என அறிந்தும் கவலைப்படாமல் அங்கிருந்த காட்டத்தி மரத்தில் ஏறினார். அந்த மரத்தின் அருகே வந்த இயேசு அந்த மனிதரை அண்ணாந்து பார்த்து: சகேயுவே, நீ சீக்கியமாய் இறங்கி வா! நான் இன்றைக்கு உன் வீட்டில் தங்க வேண்டும் எனக் கூறினார்.
நம் தெருவுக்கு முதல் அமைச்சரோ, ஜனாதிபதியோ ஊர்வலமாய் வருகிறார் அவரைக்காண மாடியில் ஏறி நிற்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். அந்த பிரபலர் நம்மை பார்த்து நம்முடைய பெயரை சொல்லி கூப்பிட்டு நான் உங்கள் வீட்டில் இன்று சாப்பிட போகிறேன் என்று மற்றவர் முன் கூறினால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்ளுவோம். அத்தகைய மகிழ்ச்சி தான் சகேயுவுக்கும்.
சகேயு அவர் ஊரில் மிகப் பெரிய செல்வந்தர், வரி வசூலிப்பவர்களின் தலைவர். இன்று நாம் உபயோகிக்கும் சாலைக்கும், குடிநீருக்கும், வீட்டுக்கும் மற்ற பொருட்களுக்கும் நாம் வரிசெலுத்துகிறோம் அல்லவா? அதேப்போல அன்று பல காரியங்களுக்கு மக்களிடம் வரி வசூலித்தனர். சட்ட விதி மீறுகிறவர்களிடமும் வரிவசூல் செய்தனர். சில வரிவசூலிப்பவர்கள் மக்களிடம் அவர்கள் விதி மீறினார்கள் என குற்றம் சாட்டி ஏமாற்றி அதிக வரி வசூலித்தனர். எனவே மக்கள் அவர்களை வெறுத்தனர். சகேயு அந்த வரி வசூலிப்பவர்களுக்கு தலைவராக இருந்தார். அவர் மற்ற ஆயக்காரர்களை கண்டிக்கவில்லை. எனவே மற்றவர்களின் குற்றங்களுக்கும் இவரே பொறுப்பானவர். எனவே மக்கள் இவரையும் வெறுத்தனர். இவரை பாவி என்றே அழைத்தனர். அதினால் தான் இயேசு அவர் வீட்டுக்கு செல்லும்போது பாவி வீட்டிற்கு இயேசு செல்கிறார் என்று கூறினார்கள். ஆனால் இயேசு சகேயுவை ஆபிரகாமின் குமாரன் (அப்படியென்றால் இவரும் கடவுளின் பிள்ளைகளில் ஒருவர்) என்று கூறினார். இயேசு அனைவரையும் நேசிக்கிறார். நாம் எல்லாரும் அவரின் பிள்ளைகள். தவறு செய்கிறவர்களாக இருந்தாலும் நம்மை மன்னித்து நேசிக்கிறவராகவே இருக்கிறார்.
வாழ்விற்கு படிப்பினை:
நாமும் நம் வாழ்வில் நம் முயற்சியால் பெற்ற கல்வியும், திறமைகளும், நம் பெற்றோர் மூலம் பெற்ற பொருட்களும், சிலரை ஏமாற்றி பெற்ற பொருட்களும் லாபமானவைகள் என்றும், அவைகளைக் கொண்டு சிறப்பாக வாழலாம் என எண்ணுகிறோம். அவைகளைக் கொண்டு பெருமையுள்ளவர்களாக மாறி அவரை விட்டு விலகிச் செல்கிறோம். கடவுள் நம் மீது வைக்கும் அளவில்லாத தூய அன்பிற்க்கு முன்னால் அவைகளை எல்லாம் மேன்மையாக எண்ணாமல் அவைகளை நஷ்டம் என்று எண்ணி நம்மை கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும்.
நாள் 2 - நஷ்டமென எண்ணுகிறேன்
குறு நாடகம்
ஒருமுறை இருவர் இரயிலில் பயணம் செய்கிறார்கள். ஒருவர் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறார். மற்றவர் அந் மனிதர் தன்னை கவனிக்காததை எண்ணி கொஞ்சம் வருத்தம் அடைகிறார். வந்தவர் ஒரு பெரிய விஞ்ஞானி. இரயில் நிலையத்தில் தன்னை பார்த்தவர்கள் எல்லோரும் ஆவலுடன் தன்னிடம் கையெழுத்து வாங்க நின்றபோது இந்த மனிதர் மட்டும் தன்னை கண்டு கொள்ளவில்லை என மனம் வருந்தினார். பின்பு அந்த விஞ்ஞானியே தன்னை Jean என்கிற மிகப்பெரிய விஞ்ஞானி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அருகில் இருந்தவரும் கைக்குலுக்கி சிரித்தார். பின்பு அந்த விஞ்ஞானி இயற்பியலில் தான் செய்த ஆராய்ச்சிக்கு பல விருதுகள் கிடைத்ததாகவும், தற்போது கூட ஒரு பாராட்டு கூட்டத்திற்கு செல்வதாகவும் கூறினார். அற்த நபரும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் எனக் கூறினார். பின்பு அந்த விஞ்ஞானி அந்த மனிதரிடம் நீங்கள் யார் எனக் கேட்டார். அந்த நபர் “நான் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்” என்றார். அந்த விஞ்ஞானி அதிர்ந்து போனார். பின்பு “ஐயா உங்கள் இயற்பியல் கோட்பாடுகள் கண்டுடிபிடிப்புகளை வைத்துதான் நான் ஆராய்ச்சிகள் செய்தேன். ஆனால் உங்கள் முன்பே இப்படி தலைக்கணத்தோடு நடந்து கொண்டேனே, என்னை மன்னித்து விடுங்கள்” என்றார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் “நான் மிகப்பெரிய அறிவாளி அல்ல, மிகவும் ஆச்சரியமாக கடவுள் படைத்த இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு துளியைத்தான் நான் கண்டறிந்தேன். கடவுள் படைப்பின் இரகசியங்களை முழுவதுமாக அறிய எந்த மனிதராலும் முடியாது. அந்த கடவுளுக்கு முன்னால் என் அறிவு ஒன்றுமில்லை” என்றார். அந்த விஞ்ஞானி “மனித வரலாற்றில் ஆகச்சிறந்த விஞ்ஞானி ஆன நீங்களே கடவுள் முன் மிகவும் எளியவர் என நினைத்து வாழும்போது நான் அகந்தையோடு வாழ்ந்ததை எண்ணி வருந்துகிறேன். கடவுள் எனும் பேராற்றல் முன் நாம் ஒன்றுமில்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொண்டேன்” என்றார்.
படிப்பினை:
நாம் நம்மைக் குறித்து மேன்மை பாராட்ட ஒன்றுமில்லை. கடவுள் முன் நாம் அனைவரும் மிகவும் எளிமையாளவர்கள். அதினால் மேன்மை பாராட்ட தூண்டும் எந்த காரியமும் நஷ்டமென எண்ண வேண்டும்.
நாள் 2 - சகேயுவின் கதை
சகேயு கதையை சொல்லும்போது, இந்த கேள்விகளுக்கான பதில்களோடு கதையைச் சொல்லுவது சிறந்தது
1) மக்கள் சகேயுவைக் குறித்து என்ன சொன்னாார்கள்?
2) சகேயு தவறை ஒப்புக்கொண்டார் என்று நீ எப்படி சொல்கிறாய்?
3) சகேயுவைப் போல நீ செய்த தவறை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறாயா?
4) சகேயு ஒப்புக்கொண்டது போல, நீ செய்த தவறை நீ ஒப்புக்கொண்டிருக்கிறாயா?
5) சகேயு தவறு செய்துவிட்டு, அதை நியாயப்படுத்தவில்லை என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
6) சகேயுவை மக்கள் வெறுத்தது போல, உன்னை மக்கள் வெறுத்ததுண்டா?
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.