Type Here to Get Search Results !

An in-depth study of Abraham Part 2 | ஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி | Tamil Bible Study | Jesus Sam

==========================
ஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி (பகுதி-2)
===========================
    ஆண்டவரும், மீட்பரும், உலக இரட்சகருமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.  ஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி பாகம் இரண்டு.  முதல் பாகத்தை வாசிக்காதவர்கள் லிஸ்க்கை தொட்டு வாசிக்கவும்.


    ஆண்டவர் ஆபிரகாமை அழைத்தபோது ஆபிரகாம் கீழ்ப்படியவில்லை. தகப்பன் தான் உயிருக்கு பயந்து ஊர் என்ற தேசத்தை விட்டு புறப்பட்டார். ஆபிரகாம் கீழ்ப்படியாத போது ஆண்டவர், நீ கீழ்ப்படி நான் சொல்லும் இடத்துக்குப் போ என்று மீண்டும் மீண்டும் ஆபிரகாமை வழியுறுத்தவில்லை. ஆபிரகாம் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு புறப்பட்டு கடவுள் நியமித்த இடத்திற்கு வந்த பின்பே கடவுள் ஆபிரகாமோடு பேசினார்.
    கர்த்தர் நமக்கு சொன்ன காரியத்தில் நாம் கீழ்ப்படியாமல் தூர ஓடிக்கொண்டிருப்போமானால், ஆண்டவர் பின்னாலே நம்மை துரத்திக்கொண்டு வந்து, நான் கட்டளையிடாத காரியத்தை நீ செய்து கொண்டிருக்கிறாய், பிழையான வழியிலே சென்று கொண்டிருக்கிறாய், திரும்பு நான் கட்டளையிட்டதை செய்ய ஒப்புக்கொடு, ஒப்புக்கொடு என்று சொல்ல மாட்டார்.
    நாம் கீழ்ப்படிந்தால் நமக்கு வழிகாட்டுவார், அநேக ஆலோசனைகள் கொடுத்து நம்மை வழிநடத்துவார். நாம் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமல் மனம்போன போக்கில் வாழ்ந்து கொண்டிருப்போமானால், நம்மை நல்வழிப்படுத்த ஆண்டவர் மீண்டும் மீண்டும் உணர்த்திக்கொண்டிருக்க மாட்டார்.

    ஆதியாகமம் 11:31-ல் அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது என்று எழுதப்பட்டுள்ளது. அப்படியானால் அவர்கள் வந்த இடத்திற்கு ஆரான் என்ற பெயர் இருந்தது என்று தானே அர்த்தம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படியல்ல, ஆதியாகமம் புத்தகத்தை எழுதியவர் மோசே. மோசே யாத்திராகமம் புத்தகத்தின் காலத்தில் வாழ்ந்தவர். தேராகு புறப்பட்டு சேர்ந்த இடம் ஆரான் என்று மோசேக்கு தெரியும்.
    இவர்கள் கானான் தேசத்திற்கு தான் புறப்பட்டார்கள் என்று மோசேக்கு தெரியும். ஆனால், நான் கானான் தேசத்திற்குத் போகத்தான் கடவுள் என்னை அழைத்தார் என்று ஆபிரகாமுக்கு தெரியாது.  எனவே தன் அவர்கள் கானான் தேசத்திற்கு புறப்பட்டார்கள் என்று மோசே எழுதுகிறார்.

ஆதியாகமம் 12:1-3
    1. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பன் வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
    2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
    3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன். உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
    எபிரெய மொழியிலேயே மோசே ஆதியாகமம் புத்தகத்தை எழுதினார். ஆதியாகமம் 12:3-ம் வசனம் முடியும் போது என்றார் என்று தமிழ் வேதாகமத்தில் முடிந்திருக்கிறது. ஆனால் எபிரெய மொழியிலே என்று கூறியிருந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆங்கில வேதாகமத்திலும் என்று சொல்லியிருந்தார் என்றே எழுதப்பட்டுள்ளது.

    ஆதியாகமம் 12:4-ல் கர்த்தர் ஆபிரகாமுக்கு சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான் என்று எழுதப்பட்டுள்ளது. ஆபிரகாம் ஆரானிலிருந்தே புறப்பட்டுப்போனார். ஊர் என்ற பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போகவில்லை. ஊர் என்ற பட்டணத்திலிருந்து புறப்பட்டது ஆபிரகாமின் தகப்பன் தேராகு (ஆதியாகமம் 11:31).
    கர்த்தர் ஆபிரகாமுக்கு கட்டளையிட்டது ஊர் என்ற தேசத்தில். அதற்கு பின்பு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு பின்பு ஆரான் என்ற இடத்திலிருந்து தான் ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து புறப்படுகின்றார். ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து புறப்பட்ட போது எழுபத்து ஐந்து வயதுள்ளவனாய் இருந்தான்.

    ஆபிரகாம் ஆரானை விட்டுப் புறப்பட்டது கானான் தேசத்தை அடைந்து, கானான் தேசத்திலே சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிக்கு வந்தான்.
    இதுவரை ஆபிரகாமிடம் பேசாமல் இருந்த ஆண்டவர், ஆபிரகாம் கீழ்படிந்து கானான் தேசத்தை வந்தடைந்த உடன், அவனுக்கு தரிசனமாகி பேசுகிறார். கானான் தேசத்தில் உள்ள சீகேம் என்ற இடத்தில் வைத்து கர்த்தர் ஆபிரகாமிடம்: உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்தார். ஊர் என்ற தேசத்தில் பேசின ஆண்டவர் இடைப்பட்ட முப்பது ஆண்டுகளில் ஆபிரகாமிடம் பேசவில்லை.
    ஆண்டவர் ஒரு காரியத்தை தெளிவாய் உணர்த்துவரானால் அதற்கு நாம் கீழ்ப்படியும் வரை ஆண்டவருடைய வார்த்தையை நம்மால் கேட்க முடியாது. ஒருவேளை அண்டவருடைய வார்த்தை கேட்பது போல தோன்றலாம், ஆனால் அது ஆண்டவருடைய வார்த்தையாக இல்லாமல், பிசாசின் வார்த்தைகளாக இருக்கலாம். இல்லையென்றால் நம்முடைய மாம்சத்தின் வெளிப்பாடாய் இருக்கலாம். நாம் கீழ்படிந்தால் மட்டுமே ஆண்டவருடைய வார்த்தையை கேட்க முடியும். கீழ்ப்படிதலே பலியை விட ஊத்தமமானது.

    அநேக ஆண்டுகளுக்கு பின்பு ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்ட ஆபிரகாம் சந்தோஷமடைந்திருப்பார். ஆண்டுகள் பல கழிந்திருந்தாலும், ஆண்டவர் சொன்ன இடத்திற்கு நான் வந்துவிட்டேன். அவர் என்னோடு மீண்டும் பேசிவிட்டார் என்ற சந்தோஷம் ஆபிரகாமுக்குள்ளாக வந்திருக்கும்.
    அநேக ஆண்டுகளுக்கு பின்பு தன்னோடு பேசின கர்த்தருக்கு அந்த இடத்திலே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தையும் கட்டுகிறார். (ஆதியாகமம் 12:7)

யோசுவா:
    ஆபிரகாம் ஊர் என்ற தேசத்தை விட்டு ஆரான் மட்டும் வந்தபோது, கூடாரங்களைப்போட்டு அங்கேயே தங்க ஆரம்பித்துவிட்டார். அதேபோல இந்த கானான் தேசத்திற்கு ஆபிரகாம் வந்தபோது, ஆண்டவர் உன் சந்ததிக்கு இந்த இடத்தை கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்தார். உடனே ஆபிரகாம் என்ன செய்திருக்க வேண்டும், இங்கே கூடாரம் போட்டு தங்க ஆரம்பித்திருக்க வேண்டும் அல்லவா? ஆபிரகாம் அப்படி செய்யவில்லை.
    மோசேயின் உதவியாளனாக இருந்த யோசுவா அவருடைய கடைசி காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரையும் அழைத்து, யாரை சேவிக்கப்போகிறீர்கள். ஐபிராத்து நதிக்கு அப்புறத்திலே இருக்கும் அந்நிய தெய்வங்களை சேவிக்கப்போகிறீர்களா? அல்லது இந்த தேசத்தில் இருக்கின்ற இந்த கானானிய தெய்வங்களை வணங்கப்போகிறீர்களா? யாரை சேவிக்கப்போகிறீர்கள். நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்று சொல்லுகிறார். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் நாங்களும் நம்முடைய கர்த்தரையே சேவிப்போம் என்றார்கள். இதற்கு அடையாளமாக யோசுவா பன்னிரண்டு கற்களை எடுத்து அதை சாட்சியாக நிறுத்தினார். இப்படி யோசுவா பன்னிரண்டு கற்களால் சாட்சி ஏற்படுத்தின இடம் சீகேம். சீகேமில் தான் ஆண்டவர் ஆபிரகாமிற்கு முதல் முறையாக உன் சந்ததிக்கு இந்த இடத்தை கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்தார்.

    ஆதியாகமம் 12:8 ல் வாசிக்கிறோம் பின்பு ஆபிரகாம் அவ்விடம் விட்டு பெயர்ந்து பெத்தேலுக்கு கிழக்கே இருக்கும் மலைப்குப்போனார். ஆபிரகாமின் கீழ்ப்படியாமையை பாருங்கள். இவ்வளவு காலம் ஆண்டவர் சொன்ன வார்த்தையை அவன் கண்டுபிடிக்கவில்லை. எனவே, அலைந்து திரிந்துகொண்டிருந்தான். ஆண்டவர் இந்த இடத்தை உன் சந்ததிக்கு தருவேன் என்று சொன்ன பின்பும் ஆபிரகாம் அங்கே தங்காமல் அவ்விடம் விட்டு பெயர்ந்து போகிறார்.
    ஆதியாகமம் 12:8-ல் பெத்தேல் என்ற இடத்திற்கு ஆபிரகாம் போகிறார். அந்த இடத்திற்கு ஆபிரகாமின் காலத்தில் பெத்தேல் என்ற பெயர் இருக்கவில்லை. அந்த இடத்திற்கு லூஸ் என்ற பெயர் இருந்தது. ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு, ஈசாக்கின் குமாரன் யாக்கோபு தான் லூஸ் என்ற இடத்திற்கு பெத்தேல் என்ற பெயரை வைக்கின்றார்.  (ஆதியாகமம் 28:19)  ஆதியாகமம் புத்தகத்தை பிற்காலத்தில் மோசே எழுதியதால், ஆபிரகாம் கானான் தேசத்திலிருந்து பெத்தேலுக்கு போனார் என்று எழுதுகிறார்.
    ஆபிரகாம் கர்த்தர் தனக்கு தரிசனமான பின்பும், சீகேமில் இருந்த மோரே என்ற சமபூமியை விட்டு, பெத்தேல் என்ற மலைக்குப்போகிறார். கர்த்தர் தனக்கு கொடுத்த சமபூமியை விட்டு, தனக்கு விருப்பமான ஒரு மலைப்பிரதேசத்தை ஆபிரகாம் தெரிவுசெய்தார். காரணம், சமபூமியிலே வெப்பம் அதிகமாக காணப்படும். சமவெளியில் வாழ்வதை விட மலைப்பிரதேசங்களில் வாழ்வது மிகவும் லேசானது. வாழ்வதற்கான வசதிவாய்ப்புக்கள் மலைப்பிரதேசத்திலே மிகவும் அழகாகவும் அருமையானதாகவும் இருக்கும்.
    ஆபிரகாம் கர்த்தர் கட்டளையிட்டதை மறந்து, தன்னுடைய இன்பத்தை நாடி, சுகத்தை நாடி மலைக்குப் போய் தங்கினார். ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாததால் ஆபிரகாமிற்கு குற்றவுணர்வு வந்திருக்க வேண்டும். ஆனால் ஆபிரகாமிற்கு குற்ற உணர்வு வரவில்லை. காரணம், ஆதியாகமம் 12:8-ன் பின்பகுதியில் வாசிக்கிறோம், ஆபிரகாம் அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை கட்டி கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொண்டான். ஆபிரகாம் சரியானதை செய்தார், ஆனால் தவறான இடத்தில் செய்தார். ஆபிரகாம் பிழையான இடத்தில் இருந்தாலும், அவர் ஆண்டவருக்கு பலிசெலுத்தி சரியானதைத்தான் செய்கிறேன் என்று நினைத்தபடியினால், அது அவரின் குற்ற உணர்வை மறைத்துவிட்டது.
    ஆபிரகாமைப்போல இன்றும் அநேகர் பிழையான இடத்தில் இருந்துகொண்டு சரியான வேலையை செய்கிறார்கள். சபைக்கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் என்று எபிரெயர் 10:25-ல் வாசிக்கிறோம். அநேகர் வேலையின் நிமித்தமாக சபைக்கு வரமாட்டார்கள். படிப்பின் நிமித்தமாக சபைக்கு வரமாட்டார்கள். ஞாயிற்றுக் கிழமை யாராவது உறவினர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் சபைக்கு வரமாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் குற்ற உணர்வு வராமல் இருப்பதற்கு வீட்டிலேயே அமர்ந்துகொண்டு தொலைக்காட்சியில் ஆராதனையை பார்த்துக்கொண்டிருப்பார்கள். இல்லையென்றால் வேலை செய்துகொண்டே கிறிஸ்தவ பாடல்களை கேட்டுக்கொண்டிருப்பார்கள். தொலைக்காட்சிகளில் கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் பார்ப்பதும், வேலை செய்யும் போது கிறிஸ்தவ பாடல்கள் கேட்பதும் தவறல்ல. ஆனால் நான் ஆலயத்திற்கு செல்லவில்லையே என்ற குற்ற உணர்வு வரும்போது அதற்காக நாம் இதை செய்வது தவறானதாகும். ஆபிரகாமைப்போல இன்றும் அநேகர் தங்கள் குற்ற உணர்வை மறைப்பதற்காக சரியான காரியத்தை தவறான இடத்தில் செய்துகொண்டிருக்கிறார்கள்.

    ஆதியாகமம் 12:9-ல் வாசிக்கிறோம், அதின்பின்பு ஆபிரகாம் தெற்கே பிரயாணப்பட்டுப்போனார். மலைப்பிரதேசத்திலும் ஆபிரகாமிற்கு திருப்பி இல்லை. இப்போது ஆபிரகாம் கானான் தேசத்தை விட்டு வெளியே புறப்பட்டார். கானான் தேசத்திற்கு தெற்காக, அராபியாவுக்கு வடக்காக இருக்கின்ற நெகேவ் என்ற இடத்திற்கு வருகின்றார். நெகேவ் என்ற இடத்திற்கு வந்ததாக தமிழ் வேதாகமத்தில் இல்லை. மூல பாஷையாகிய எபிரெய வேதத்தில் நாம் அதை பார்க்க முடியும்.
    மேல் புறம் இருந்து ஆண்டவர் தனக்கு வாக்குக்கொடுத்த கானான் தேசத்திற்கு வந்தவர், கீழ்புறமாக கானான் தேசத்தை விட்டு வெளியேறி சென்றுவிட்டார்.
    ஆபிரகாமைப்போல இன்றும் அநேகர் ஒரு இடத்தில் தங்காமல் கோயில் மாடுகளைப்போல அங்கும் இங்கும் அழைந்து திறிந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு திருச்சபைக்கு இவர்களால் செல்ல முடியாது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திருச்சபைக்கு செல்லுவார்கள்.
    சிலர் சிறப்பு ஊழியர்கள் வருகின்ற திருச்சபைக்கு மாத்திரம் சொல்லுவார்கள். இந்த வாரம் இந்த திருச்சபையில் சிறப்பு ஊழியர் வருகிறார் என்று கேள்விபட்டால் அந்த திருச்சபைக்கு சென்றுவிடுவார்கள். அடுத்த வாரம் வேறு திருச்சபைக்கு சிறப்பு ஊழியர் வருகிறார் என்று அங்கு சென்றுவிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் சிறப்பானதை மாத்திரமே தேடுவார்கள். அது ஆவிக்குறிய வாழ்க்கைக்கு ஆசீர்வாதத்தை தேடித்தராது.
    ஒரு குழந்தைக்கு உணவு மிக அவசியம். ஆனால் குழந்தைக்கு உணவை விட சாக்லேட் மிகவும் பிடிக்கும். அதற்காக தினமும் சாக்லேட்டை மட்டுமே சாப்பிட்டு வாழ முடியாது. எப்போதாவது சாக்லேட் சாப்பிட்டால் பரவாயில்லை. தினமும் சாக்லேட்டை மட்டுமே சாப்பிட்டால் குழந்தையின் சரீரம் பெலவீனமடைந்துவிடும்.
    வீட்டிற்கு மாமா வருகிறார் என்றால் வரும்போது சாக்லேட் வாங்கிக்கொண்டு வருவார். மற்றொருநாள் மற்றொரு மாமா வரும்போது அவரும் சாக்லேட் வாங்கிக்கொண்டு வருவார். மாமாமார் பிள்ளைக்கு ஆசையான சாக்லேட்டை மாத்திரமே கொடுப்பார்கள். தாய் மாத்திரமே பிள்ளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவை கொடுப்பார்கள்.
    இன்று அநேக கிறிஸ்தவர்கள் ஒரு திருச்சபையின் கீழ் அடங்கியிருப்பதை விட்டுவிட்டு, மாமாமாரைத் தேடிக்கொண்டு போகிறார்கள். அவர்களால் ஆவிக்குரிய விதத்தில் சரியாய் வளர முடியாது. நாம் ஒரு சபையின் கீழ் அடங்கியிருந்தால் மாத்திரமே ஆவிக்குரிய விதத்தில் நன்றாய் வளர முடியும்.
    ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திருச்சபையாக சென்றுகொண்டிருக்கின்ற விசுவாசிகள், கடைசியில் ஆபிரகாம் கானானை விட்டே வெளியேறியது போல கிறிஸ்தவத்தை விட்டே வெளியேறிவிடுவார்கள். ஒரு திருச்சபைக்கு செல்லுகிறாவர்களுக்கு அந்த திருச்சபையில் இருக்கும் குறைகள் மாத்திரம் தெரியும். ஆனால், பல திருச்சபைகளுக்கு செல்லுகிறவர்களுக்கு பலரின் குறைகள் தெரியும். கடைசியில் கிறிஸ்தவம் என்றாலே இப்படித்தான். கிறிஸ்தவர்கள் ஒருவனும் நல்லவன் இல்லை என்று சொல்லி, கிறிஸ்தவத்தை விட்டே வெளியேறிவிடுவார்கள்.
    வேதம் சொல்லுகிறது, மனிதர்களில் ஒருவனும் நல்லவன் இல்லை. மனிதர்களை பார்ப்பதற்காக நாம் ஆலயம் வராமல், கிறிஸ்துவை பார்ப்பதற்காக நாம் ஆலயம் வர வேண்டும். இப்படி ஆண்டவர் சொன்ன இடத்தில் நிற்க முடியாமல் அங்கும் இங்கும் அழைந்து திரிந்துகொண்டிருந்த ஆபிரகாமை ஏன் ஆண்டவர் தெரிந்துகொண்டார். ஆபிரகாமைவிட வேறு யாரும் நல்லவர்கள் அந்நாட்களில் வாழவில்லையா?
    ஆபிரகாமைக் குறித்து இன்னும் அடுத்து வருகின்ற பதிவுகளில் அறிந்துகொள்ள இருக்கிறோம்.  தொடர்ந்து அடுத்த பகுதியையும் வாசியுங்கள்.
    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  ஆமேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.