நாள் 5: தடைகளில் தன்னடக்கம்
மனன வசனம்
i. ஆண்டு
1898
ii. இடம்
பெங்களூர், இந்தியா (Bengaluru, India)
iii. கதை முக்கிய கருத்து
இந்தியா வந்த சில காலத்திலேயே கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார். பல மாதங்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டி வந்தது. ஆனால் ஏமி அந்தக் காத்திருப்பு காலத்தைச் சரியாகப் பயன்படுத்தினார்: மொழிகளைக் கற்றுக் கொண்டார். கடிதங்கள் எழுதினார், தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.
iv. தலைப்பு செய்தி
காத்திருப்பது என்பது நேரத்தை வீணாக்குவது என்று அர்த்தமல்ல.
v. மையக்கருத்து
பொறுமை, சகிப்புத்தன்மை, நம்பிக்கை
vi. நோக்கம்
தவறாக புரிந்து கொள்ளப்படும் போது அமைதியாகவும் ஞானமாகவும் நடக்க கற்றுத் தருதல்.
vii. வேதாகம் பகுதி
ஆதியாகமம் 39:19-23
viii. மனப்பாட வசனம்
நீதிமொழிகள் 15:1
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
I. நோக்கம்
நாம் வாழும் சூழலில் பல நேரங்களில் நாம் தவறே செய்யாமல் நேர்மையாகவும், ஒழுக்கத்துடனும் இருப்பினும் நம்மை இந்த சமூகம் தவறாக புரிந்து கொள்ளலாம் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழல் நமக்கு மிகுந்த வலியையும், வேதனையையும் தரும். ஆனாலும் அவ்வாறான சூழலில் கோபம் கொள்ளாமல், உணர்ச்சிவசப்படாமல் அமைதியாகவும், ஞானமாகவும் நடக்க கற்றுக் கொடுக்க வேண்டும். நம்பகமான பெரியவர்களிடம் இதைக் குறித்து அணுக கற்றுக் கொடுக்க வேண்டும்.
II. இலக்குகள்
- கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்வது
- உண்மையை அமைதியாகப் பேசுவதின் மதிப்பை புரிந்து கொள்வது
- நம்பத்தகுந்த பெரியவர்களை அணுகத் தெரிந்துகொள்வது
III. ஏமி கார்மைக்கேல் : காத்திருக்கும் காலம்
ஏமி இறுதியாக இந்தியா வந்து சேர்ந்தார். ஆர்வத்துடனும் சேவை செய்யும் துடிப்புடனும் இருந்த அவருக்குப் பெரும் சோதனை ஏற்பட்டது. வந்த சில காலத்திலேயே அவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார். பல மாதங்கள் அவர் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. அவர் தனிமையை உணர்ந்தார். தனது பயணம் ஏன் இப்படித் தடைப்பட்டது என்று யோசித்தார். ஆனால் ஏமி மனந்தளரவில்லை, அந்தக் காத்திருப்பு காலத்தைச் சரியாகப் பயன்படுத்தினார். உள்ளூர் மொழிகளைக் கற்றுக் கொண்டார். கடிதங்கள் எழுதினார். அமைதியாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். சில நேரங்களில் கடினமான தருணங்கள், அடுத்து வரப்போகும் பெரிய காரியங்களுக்கு நம்மைத் தயார்படுத்துகின்றன.
“காத்திருப்பது என்பது நேரத்தை வீணாக்குவது என்று அர்த்தமல்ல."
IV. பாடவிளக்கம்
யோசேப்பு தன் எஜமானனின் மனைவியுடன் தவறு செய்ய இணங்கவில்லை. தவறு செய்வதற்கான வாய்ப்பு இருந்தும் யோசேப்பு தவறு செய்யவில்லை. தனது நேர்மையை, ஒழுக்கத்தை, கடவுள் பயத்தை இதன் மூலம் வெளிப்படுத்தினார். ஆனால் எஜமானின் மனைவியோ தவறே செய்யாத யோசேப்பை தவறு செய்ய முற்பட்டதாக கூறி அவர் மீது வீண் பழி சுமத்தினாள். யோசேப்பின் மீது பொய்யான குற்றசாட்டை சுமத்தி அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட காரணமாக இருந்தாள். யோசேப்பு நினைத்திருந்தால் தவறு செய்திருக்கலாம். தான் தவறு செய்தாலும் அதை யாரும் பார்ப்பதற்கில்லை என்று எண்ணவில்லை. மனிதன் கவனிக்காவிட்டாலும் ஆண்டவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் யோசேப்புக்கு இருந்தது. இன்று நாம் பல நேரங்களில் நாம் செய்கிற தவறை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறோம். ஆனால் ஆண்டவர் நம்மை, நமது செயல்களை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிய வேண்டும். அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டபோதும் கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவர்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவருக்குக் கிடைக்கும்படி செய்தார். கர்த்தர் யோசேப்போடே இருந்தபடியினாலும், அவர் எதைச் செய்தாரோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணின படியினாலும், அவர் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.
V. வாழ்விற்கு படிப்பினை
யோசேப்பு தவறு செய்யாதபோதும் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும் அதற்காக கோபம் கொள்ளாமல், அமைதியுடனும், ஞானத்துடனும் செயல்பட்டார். அதுபோல நாமும் தவறு செய்யாமல் வீண் பழி சுமக்க நேரிடும்போது கோபம் கொள்ளாமல், உணர்வுகளை கட்டுப்படுத்தி பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் இருக்க கற்றுக்கொள்ளவேண்டும். எந்த சூழலிலும் நம்பிக்கையை இழந்து போகாமல் விசுவாசத்துடன் காத்திருக்க வேண்டும்.
VI. வலியுறுத்த வேண்டியது
- பொய்யான குற்றச்சாட்டு ஆழமான வலி
- அமைதியான பதில் கௌரவத்தை காக்கும்
- நம்பகமான பெரியவரிடம் பேசுதல் முக்கியம்
VII. தவிர்க்க வேண்டியது
- அமைதியாக இருப்பதே ஒரே வழி என கூறுதல்
- அநியாயத்தை கற்பனை நவிற்சி (Romanticism) செய்தல் - உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்
VIII. கற்றல் நோக்கம்
- உணர்ச்சி கட்டுப்பாடு
- பாதுகாப்பான உண்மை சொல்லல்
- ஆதரவு வலையமைப்பு
IX. வழிகாட்டி கேள்வி
- தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் குழந்தைகள் தங்கள் மதிப்பை எப்படி காப்பார்கள்?





இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.