Type Here to Get Search Results !

பத்து கட்டளைகள் விளக்கவுரை | Ten Commandments Explanation | Bible Study in Tamil | Jesus Sam

=====================
பத்து வாதைகளும் பத்து கட்டளைகளும் (Part 4)
====================

    பத்து வாதைகள் மூலமாக, இஸ்ரவேலர்களுக்கு எகிப்திய தெய்வங்கள் மீது இருந்த நம்பிக்கையையும், பயத்தையும் அற்றுப்போகப்பண்ணினார் ஆண்டவர்.

    பத்து வாதைகளுக்கு பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்திலிருந்து கானான் தேசத்திற்கு புறப்பட்டார்கள். புறப்படும் வழியில் அநேக அற்புதங்களையும், அடையாளங்களையும் ஆண்டவர் நிகழ்த்தினார்.

    இஸ்ரவேல் ஜனங்கள் புறப்பட்டுப்போனபோது அவர்களுக்கு முன்பாக செங்கடல் இருந்தது. பின்புறத்தில் பார்வோனின் சேனை அவர்களை துரத்திக்கொண்டு வந்தது. பார்வோனின் சேனை இஸ்ரவேலரின் சேனையை தொடாதபடிக்கு ஆண்டவர் இஸ்ரவேலருக்கு அக்கினி மதிலாய் நின்றார்.

    செங்கடலை இரண்டாக பிளந்து, புதிய பாதையை ஜனங்களுக்கு காண்பித்தார். எகிப்திய சேனைகளிடமிருந்து இஸ்ரவேலரை காப்பாற்றி, எகிப்திய சேனைகளை செங்கடலில் முழ்கடித்தார் ஆண்டவர்.

    வனாந்தரத்தில் வானத்திலிருந்து மன்னா கொடுத்தும், கன்மலையிலிருந்து தண்ணீர் கொடுத்தும் ஆண்டவர் ஜனங்களை வழிநடத்தினார்.

    இப்படியாக மூன்று மாதங்கள் மிகவும் அற்புதமாய் ஆண்டவர் ஜனங்களை வழிநடத்தினார். அதன் பின்பாகவே ஆண்டவர், இனி நீங்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்ற பிரமாணங்களை கற்றுக் கொடுக்கிறார்.

    நானூற்று முப்பது ஆண்டுகள் எகிப்திலே வாழ்ந்த இந்த ஜனங்களுக்கு தங்கள் தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும் என்று தெரியவில்லை. தங்களுக்கு ஒரு தெய்வம் இருக்கிறார் என்று அவர்கள் நினைத்தாளும், எகிப்திய தெய்வங்களுக்கு பயந்து, அந்த தெய்வங்களையும் ஆராதித்து வந்தார்கள்.

    அப்படிப்பட்ட ஜனங்களை ஆண்டவர் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து மூன்று மாதங்களுக்கு பின்பு ஜனங்கள் இப்போது தான் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் என்று உணர்ந்து, பத்து கட்டளைகளை கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

    ஆண்டவர் மோசேயை மலைக்கு அழைத்து, தான் கைப்பட இரண்டு பலகைகளில் பத்துக் கற்பனைகளை எழுதி மோசேயிடம் கொடுத்தார். மோசே கீழே வந்து பார்த்த போது, ஜனங்கள் கன்றுக்குட்டியை (ஓப்பூஸ்) உருவாக்கி அதற்கு ஆராதனை செய்து வந்தார்கள். ஜனங்களின் இச்செயலால் கோபம் கொண்ட மோசே ஆண்டவர் எழுதிக்கொடுத்த கட்டளைகள் அடங்கிய கற்பலகைகளை உடைத்துப்போட்டார்.

    பின்பு ஆண்டவர் மோசேயை மீண்டும் மலைக்கு அழைத்து, ஆண்டவர் சொல்லச் சொல்ல மோசே தன் கைகளால் இரண்டு பலகைகளில் அந்த பத்து கட்டளைகளை எழுதினார்.

    அந்த இரண்டு பலகைகளில் முதல் பலகையில் நான்கு கட்டளைகளும், இரண்டாவது பலகையில் ஆறு கட்டளைகளும் எழுதப்பட்டிருந்தது.

    (1) முதலாவது பலகையில் இருக்கின்ற நான்கு கட்டளைகளும் மனிதன் ஆண்டவரோடு எப்படிப்பட்ட உறவிலே இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய கட்டளைகள்.

    (2) இரண்டாவது பலகையில் உள்ள ஆறு கட்டளைகளும் மனிதன் மற்ற மனிதர்களோடு எப்படி வாழ வேண்டும் என்பது பற்றிய கட்டளைகள்.

    மோசே எகிப்தில் பார்வோனின் அரன்மனையில் நாற்பது ஆண்டுகள் வளர்ந்தார். எகிப்தில் வளர்ந்ததால் எகிப்திய மொழியை நன்கு பேசவும், வாசிக்கவும், எழுதவும் கற்றிருந்தார்.

    அதன் பின்பு நாற்பது ஆண்டுகள் மீதியான் தேசத்தில் வளர்ந்தார். மீதியானிய தேசத்தில் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்ததால், மீதியானிய மொழி வாசிக்க எழுத தெரிந்ததோ, தெரியவில்லையே நமக்குத் தெரியாது. ஆனால் மீதியானிய மொழி நன்கு பேசத்தெரிந்தவராக இருந்தார் மோசே.

    எகிப்திய மொழியும், மீதியானிய மொழியும் தெரிந்த மோசே, தான் சொந்த ஜனங்கள் பேசுகின்ற எபிரெய மொழி அறியாதவராக இருந்தார்.

    எனவே தான் ஆண்டவர் மோசேயை அழைக்கும்போது மோசே சொல்லுகிறார், எனக்கு எபிரெய மொழி தெரியாது. எகிப்திய மொழியும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய மொழி. நான் அங்கு சென்று மக்களோடு எப்படி பேசுவது என்று தெரியவில்லை, நான் திக்கு வாயும், மந்த நாவும் உள்ளவன் என்று சொல்லுகிறார். (யாத்திராகமம் 4:10)

    மோசேக்கு திக்கு வாய் அல்ல. அவரால் நன்கு பேச முடியும். மோசே எகிப்து தேசத்தில் வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான் என்று அப்போஸ்தலர் 7:22-ல் வாசிக்கிறோம். எனக்கு எபிரெய மொழி தெரியாது. எகிப்திய மொழியும் பல ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய மொழி நான் எப்படி இஸ்ரவேல் ஜனங்களோடு பேசுவேன் என்று தான் மோசே கூறினார்.

    எபிரெய மொழி உருவானது ஆபிரகாமின் காலத்தில். ஆண்டவர் ஆபிரகாமை அழைத்தபோது அவனை அநேக நாடுகளுக்கு அழைந்து திரியப்பண்ணினார். கடைசியில் ஆண்டவர் ஆபிரகாமிற்கென்று ஒரு புதிய மொழியைக் கொடுத்தார். அதுதான் எபிரெய மொழி.

    ஆபிரகாமின் காலத்திலிருந்து மோசேயின் காலம் வரை எபிரெய மொழி பேச்சு மொழியாக மாத்திரமே இருந்தது. எபிரெய மொழிக்கென்று எழுத்து வடிவம் கிடையாது.

    எபிரெய மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் ஆண்டவர். பத்து கட்டளைகளை தன் கைப்பட எழுதினதின் மூலமாக எபிரெய மொழிக்கு எழுத்துவடிவம் கொடுத்தார் ஆண்டவர்.

    அந்த பத்து கட்டளைகளை மோசே உடைத்துப்போட்டார். ஆண்டவர் மீண்டும் மோசேயை அழைத்து, அவனுக்கு எபிரெய மொழியைக் கற்றுக்கொடுத்தார். மோசே எபிரெய மொழியைக் கற்றுக்கொண்ட பின்பு, ஆண்டவர் சொல்ல சொல்ல தன் கைப்பட பத்து கட்டளைகளை எழுதினார்.
    முதல் முதலில் எபிரெய மொழியை எழுதிய மனிதன் மோசே.  மோசேக்கு முன்பாக எபிரெய மொழி பேச்சு மொழியாக மாத்திரமே இருந்தது.

    

யாத்திராகம் 20
முதலாவது கட்டளை
    என்னையன்றி உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்க வேண்டும்.

    ஆண்டவர் எகிப்தில் உள்ள பிரதான பத்து தெய்வங்களையும் அடித்து, அற்புத அடையாளங்களோடு நம்மை வழிநடத்தி வந்திருக்கிறார்.  உண்மையிலேயே நம்முடைய ஆண்டவர் பெரியவர் என்பதை ஜனங்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.

    இப்போது ஆண்டவர் சொல்லுகிறார், என்னைத் தவிற வேறு தெய்வங்கள் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம். இனி நான் ஒருவர் மாத்திரமே உங்களுக்கு தெய்வம் என்று சொல்லுகிறார்.

    ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள், இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்போது, சில எகிப்திய தெய்வத்தின் சிலைகளையும் கொண்டு வந்திருப்பார்கள்.

    எகிப்திய தெய்வங்களுக்கு வல்லமை இருந்தது. எகிப்திய தெய்வங்களின் மந்திரவாதிகளும் தங்கள் கோல்களை சர்ப்பமாக மாற்றினார்கள். ஆனால் இனி நான் ஒருவர் மாத்திரம் தான் உங்களுக்கு தெய்வம் என்று ஆண்டவர் மிகவும் ஆழமாக கற்றுக்கொடுக்கிறார்.

    இன்றும் உலகத்தில் இருக்கின்ற பிற மத தெய்வங்கள் அற்புதங்கள் செய்கின்றன. பிசாசிற்கும் அற்புதம் செய்யும் அதிகாரம் இருக்கின்றது. பிசாசானவன் ஆதியிலே பரலோகத்தில் தூதர்களுக்கு தலைவனாக இருந்தவன் (எசேக்கியேல் 28). ஆண்டவர் அநேக விதமான அதிகாரங்களை அந்த தூதனுக்குக் கொடுத்திருந்தார்.

    ஆண்டவர் தூதனை பரலோகத்திலிருந்து தள்ளிவிட்டபோது, அவனுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் ஒன்றையும் அவனிடமிருந்து பறிக்கவில்லை.

    மற்ற தெய்வங்களை வணங்குகிறவர்களுக்கும் அற்புதம் நடைபெறுகிறது என்றால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்த தெய்வத்திற்கும் அற்புதம் செய்யும் அதிகாரம் இருக்கின்றது. அதை நம்பிக்கொண்டு நாம் மற்ற தெய்வங்களுக்கு ஆராதனை செய்வதை ஆண்டவர் வெறுக்கிறார்.

    எத்தனை தெய்வங்கள் அற்புத அடையாளங்கள் செய்தாலும், நம்முடைய ஆண்டவர் ஒருவர் மாத்திரமே தெய்வம். அவரை மாத்திரமே நாம் விசுவாசிக்க வேண்டும்.

    எல்லா தெய்வங்களாலும் அற்புதம் செய்ய முடியும். ஆனால் எல்லா தெய்வங்களாலும் நித்திய ஜீவனை கொடுக்க முடியாது. நித்திய ஜீவனை கொடுக்கின்ற ஒரே தெய்வம் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே. அவராலேயல்லாமல் ஒருவராலும் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

    என்னதான் அற்புதங்கள் நடந்தாலும், நத்தியஜீவன் கிடைக்கவில்லை என்றால், அதினால் பிரயோஜனம் இல்லையே. எனவே அற்புத அடையாளங்களைப் பார்த்து யாரும் ஏமாந்துபோய்விட வேண்டாம்.

    மற்ற மதத்தினருக்கு இருக்கின்ற செல்வத்தைப் பார்த்து, மற்ற மதத்தினருக்கு இருக்கின்ற வளர்ச்சியைப் பார்த்து நாம் வழிதப்பி சென்றுவிட வேண்டாம்.

    நம்முடைய தேவன் ஒருவர் மாத்திரமே தேவன். மற்ற தெய்வங்களை நீங்கள் வணங்க வேண்டாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை, மற்ற தெய்வங்கள் உங்களுக்கு உண்டாயிருக்க வேண்டாம் என்று சொல்லுகிறார்.

    மற்ற தெய்வங்களை நான் வணங்கமாட்டேன், ஆனால் அவைகளையும் நான் மதிப்பேன் என்றும் சிலர் சொல்வதுண்டு. எனவேதான், ஆண்டவர் வேறே தெய்வங்கள் உண்டாயிருக்க வேண்டாம் என்று தெளிவாய்ச் சொல்லுகிறார்.

    உனக்கு என்பது ஒவ்வொரு தனி மனிதனையும் குறிக்கிறது. ஆண்டவர் ஏதோ ஒரு ஜனக்கூட்டத்திற்கு இந்த வார்த்தையை சொல்லவில்லை. ஒவ்வொரு தனி மனிதனையும் பார்த்து சொல்லுகிறார், என்னையன்றி உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

 

இரண்டாவது கட்டளை
    மேலே வானத்திலும், கீலே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.

    நீ அவைகளை நமஸ்கரிக்கவும் வேண்டாம், சேவிக்கவும் வேண்டாம்.

    நீங்கள் என்னைத் தொழுதுகொண்டு எனக்கு மாத்திரமே ஆராதனை செய்தால், ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கம் செய்வேன். நீங்கள் விக்கிரகங்களை வணங்கினால் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிப்பேன் என்று ஆண்டவர் சொன்னதின் காரணம், ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே.

    நாம் இரட்சிக்கப்பட்டு நீதிமானாய் வாழ்ந்தால், ஆண்டவர் ஆயிரம் தலைமுறைகளுக்கு நம்மை ஆசீர்வதிக்கவும் மாட்டார். நாம் பாவம் செய்து வழிதவறி நடக்கும்போது ஆண்டவர் நம்முடைய பாவங்களை பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கவும் மாட்டார். ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டவர் இப்படிச் சொல்லுகிறார்.

  

மூன்றாம் கற்பனை
    உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனை தண்டியாமல் விடார்.

    நம்முடைய ஆண்டவருக்கு நாமம் இல்லை. ஆனால் அநேக காரணப் பெயர்கள் இருக்கின்றது. எ.கா - எல்லோகீம், எல்ஷடாய், யாவே, யாவேஈகை, யாவேசம்மா, யாவேசிக்கேனு, சர்வ வல்லவர், உயர்ந்தவர், மேன்மையானவர், கர்த்தர், தேவன், ஆண்டவர், எஜமான் இவையனைத்தும் காரணப்பெயர்கள்.

    ஆண்டவர் மீதியான் தேசத்திலே முட்செடி நடுவே மோசேயோடு பேசும்போது, மீதியானிய மொழியில் பேசினார். நான் ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் தேவன் என்று மோசேயோடு பேசினார். அப்போது மோசே ஆண்டவரிடம், நான் உம்முடைய ஜனங்களைப் பார்த்து, அவர்களோடு பேசும்போது, அவர்கள் உன்னை எந்த கடவுள் எங்களிடம் அனுப்பினார். அவருடைய நாமம் என்ன என்று என்னிடம் கேட்டாள் நான் என்ன சொல்லுவது, உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்க வேண்டும் என்று கேட்டார்.

    மோசே இந்த கேள்வியைக் கேட்டதும், இவ்வளவு நேரம் மீதியானிய மொழியில் பேசிக்கொண்டிருந்த ஆண்டவர், இப்போது எபிரெய மொழியில் நானே என்று சொல்லுகிறார். நானே என்பதன் எபிரெய பதம் ஹயா. மோசேக்கு எபிரெய மொழி தெரியாததால், ஹயா என்பது கடவுளின் நாமம் என்று நினைத்துக்கொண்டார். ஆனால், அங்கே ஆண்டவர் தனது நாமத்தைச் சொல்லாமல், நான், நானே தான் என்று சொல்லுகிறார். இதைத்தான் தமிழ் வேதாகமத்தில் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று  மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (யாத்திராகமம் 3:14)

    நம்முடைய ஆண்டவருக்கு நாமம் கிடையாது. அநேக பிரிவுகள் இருந்தால் தான் அவைகளைப் பிரித்துக் காட்டும்படியாக ஒரு பெயர் அதாவது நாமம் தேவை. மனிதர்கள் அநேகர் இருக்கின்றபடியினால் ஒவ்வொருவரையும் தனித்தனியே அடையாளப்படுத்த நாமங்கள் அதாவது ஒவ்வொருவருக்கும் தனித்தனி பெயர்கள் தேவை. நம்முடைய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். அவர் மாத்திரமே தெய்வம். வேறே தெய்வங்கள் இல்லை. பின்னே ஏன் அவருக்கு நாமம். எனவே நம்முடைய ஆண்டவருக்கு நாமம் இல்லை.

    ஆண்டவர் முட்செடியிலிருந்து ஹயா என்று தன்னை அழைத்ததினால் இஸ்ரவேலர்கள் இன்றுவரை, நான் தான் இதை செய்தேன் என்று சொல்லுவதற்கு ஹயா என்ற பதத்தை பயன்படுத்த மாட்டார்கள். ஹயா என்ற பதத்தை கடவுள் தன்னுடைய பெயராக எடுத்துக்கொண்டபடியினால், ஜனங்கள் அந்த வார்த்தையை பயன்படுத்தாதிருந்தார்கள்.

    நம்முடைய ஆண்டவருக்கென்று நாமம் இல்லாதிருக்க ஆண்டவர் ஏன், என் நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக என்று சொல்ல வேண்டும்.

    அநேக கலாச்சாரங்களிலே என்ன நடந்தாலும் கடவுளை குற்றப்படுத்துவார்கள். புயல் வந்தால், ஏதோ ஒரு தெய்வம் நம்மீது கோபமாய் இருக்கிறது. சுனாமி வந்தால், கடல் தேவதை கோபித்துக்கொண்டாள். இடி இடித்தால் ஏதோ ஒரு தெய்வம் வானத்திலிருந்து சத்தமிடுகிறது. எங்காவது தீப்பற்றி எறிந்தால், அக்கினி தெய்வத்திற்கு கோபம் வந்துவிட்டது. இப்படியாக எந்த ஒரு காலநிலை மாற்றம் வந்தாலும் இதற்கு தெய்வம் தான் காரணம் என்று தெய்வத்தை காரணப்படுத்துவார்கள்.

    எகிப்திய கலாச்சாரத்திலும் இந்த வழக்கம் இருந்தது, எந்த ஒரு காலநிலை மற்றம் வந்தாலும், அந்த தெய்வம் கோபித்துக்கொண்டது, இந்த தெய்வம் கோபித்துக்கொண்டது என்று சொல்லுவார்கள்.

    இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வந்தவர்கள் அல்லவா? இன்னும் நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் நடந்து செல்லப்போகிறார்கள். பிரயாணத்தில் அநேக பிரச்சனைகளையும், போராட்டங்களையும் சந்திக்க நேரிடும். என்னைதவிற வேறு தெய்வம் இல்லை என்று ஆண்டவர் சொன்னதினால், வனாந்திரத்தில் என்ன பிரச்சனை வந்தாலும், இதற்கு ஆண்டவர் தான் காரணம் என்று, தெய்வத்தின் மீது காரணம் காட்டுவார்கள்.

    எனவேதான் ஆண்வர் சொல்லுகிறார், உன் தேவனாகிய கடவுளின் நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.

    இன்றும் அநேக கிறிஸ்தவர்கள் இப்படி இருக்கிறார்கள். மழைகாலங்களில் மழையில் நன்றாக விளையாடிவிட்டு, சரீர பெலவீனம் வரும்போது, கடவுள் என்னை தண்டித்துவிட்டார் என்று சொல்பவர்கள் உண்டு.

    இரவு பகலாக மதுபானம் அருந்திவிட்டு, சரீரம் பெலவீனமடைந்து, மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், மதுபானம் அருந்தும் எத்தனையோபேர் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் என்னை மாத்திரம் தண்டித்துவிட்டார் என்று சொல்லுவார்கள்.

    உலக பொருட்கள் மீது ஆசை வைத்து, கடன் அதிகமாக வாங்கி, கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும்போது, ஏன் ஆண்டவர் என்னை மாத்திரம் இப்படி சோதிக்கிறார் என்று சொல்லுகிறவர்களும் உண்டு.

    பழைய ஏற்பாட்டில் வாழ்ந்தவர்களுக்கு கடவுளின் நாமம் என்ன என்று தெரியாது. ஆனால் புதிய ஏற்பாட்டில் வாழுகின்ற நமக்கு கடவுளின் நாமம் என்ன என்று நன்கு தெரியும். இயேசு என்ற நாமம்.

    இயேசு கிறிஸ்து சிலுவையின் மரண பரியந்தம் கீழ்ப்படிந்து தம்மைத் தாழ்த்தினதினால் எல்லா நாமத்திற்கும் மேலாக இயேசுவின் நாமம் உயர்த்தப்பட்டது. (பிலிப்பியர் 2:8-11)

    புதிய ஏற்பாட்டிற்கு பின்பு கடவுளுக்கென்று ஒரு நாமம் உண்டு, அந்த நாமத்தை நாம் வீணிலே வழங்கக்கூடாது.

    அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம், பவுல் வல்லமையாய் பிரசங்கிக்கிறதைப் பார்த்த பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவாவின் குமாரர் ஏழு பேர் பொல்லாத ஆவி பிடித்திருந்தவர்களிடத்தில் சென்று, பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பெயரில் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன் என்று சொன்னபோது, அந்த அசுத்த ஆவிகள் பவுலையும் அறிவேன், பவுல் பிரசங்கிக்கிற இயேசுவையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, அவர்களை அடித்து, காயப்படுத்தி, நிர்வாணப்படுத்தி துரத்தியது. (அப்போஸ்தலர் 19:11-16)

    நாம் ஒருபோதும் கடவுளின் நாமத்தை வீணிலே வழங்குகிறவார்களாக இருக்கக்கூடாது.


நான்காவது கற்பனை
    ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக.

    ஆறுநாளும் நீ வேலைசெய்து உன் கிரியைகளை நடப்பிப்பாயாக, ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்.

    ஏழாம் நாள் நமக்கு ஓய்வு நாள் அல்ல. கர்த்தருக்கு அது ஓய்வு நாள். ஆறு நாளும் நாம் நமக்காக, நம்முடைய குடும்பத்திற்காக வேலை செய்ய வேண்டும். ஏழாம் நாள் ஆண்டவருக்காக நாம் வேலை செய்ய வேண்டும்.

    அநேகர் இன்று மக்களை குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஞாயிறு கிழமை தான் ஓய்வு நாள் என்று சிலரும், சனிக்கிழமை தான் ஓய்வு நாள் என்று சிலரும், வெள்ளிக்கிழமை தான் ஓய்வு நாள் என்று சிலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு வாரத்திற்கு எழு நாட்கள் இருக்கின்றன. இந்த ஏழு நாட்களில் ஏதாவது ஒரு நாளை நாம் பிரித்தெடுத்து அதை பரிசுத்தப்படுத்தி அதிலே நாம் கர்த்தருக்காக வேலை செய்ய வேண்டும். அது எந்த நாளாய் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான நாட்களை ஓய்வுநாளாக அனுசரிக்கிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை.

    பரிசுத்தம் என்றால் பரித்து எடுத்தல் என்று பொருள். ஒரு புத்தக அலமாரியில் அநேக புத்தகங்கள் இருக்கிறது என்றால், அதிலிருந்து ஒரு புத்தகத்தை மாத்திரம் பிரித்து எடுப்பதற்கு பரிசுத்தப்படுத்துதல் என்று பெயர். அதைப்போல நாம் ஏதாவது ஒரு நாளை கர்த்தருக்கென்று பரித்தெடுக்க வேண்டும், அதாவது பரிசுத்தப்படுத்த வேண்டும்.

    இந்த நான்காவது கட்டளையை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும். இரண்டாவது, ஆறு நாளும் நீ வேலை செய்து உன் கிரியைகளை நடப்பிப்பாயாக என்பது ஒரு கட்டளை. ஆறு நாளும் நீ முடிந்தால் உன்னுடைய வேலை செய், முடிந்தால் உன் கிரியைகளை நடப்பி என்று ஆண்டவர் சொல்லவில்லை. ஆறு நாளும் நீ வேலைசெய்து உன் கிரியைகளை நடப்பி என்று கட்டளையாக சொல்லுகிறார்.

    பவுலும் இதைத்தான் நமக்கு கற்றுக்கொடுக்கிறார். வேலைசெய்யாதவன் சாப்பிடாதிருக்கக்கடவன் என்று பவுல் சொல்லுகிறார்.

    நீங்கள் முழு நேர ஊழியராக இருந்தால், முழுநேர ஊழியத்தை செய்ய வேண்டும். சிலர் தங்களை முழு நேர ஊழியர்கள் என்று அழைத்துக்கொண்டு ஞாயிறு கிழமை ஒரு நாளைத் தவிற மற்ற நாட்கள் சும்மா இருப்பார்கள். முழு நேர ஊழியர் என்றால் ஒவ்வொரு நாளும் வேதத்தை வாசித்து தியானிக்க வேண்டும். அதிலிருந்து பிரசங்கங்கள் எடுக்க வேண்டும். திருச்சபையின் உறுப்பினர்களுக்காக ஜெபிக்க வேண்டும். திருச்சபையின் குடும்பங்களுக்கு சென்று விசாரிக்க வேண்டும். இவையெல்லாம் ஊழியர்களின் வேலைகள். ஒவ்வொரு நாளும் வேலை செய்ய வேண்டும்.

    நீங்கள் கல்லூரி பேராசிரியராக இருப்பீர்கள் என்றால், சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு சென்று, முறைப்படி மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு ஏதேனும் கட்டுரைகள் எழுதக் கொடுத்தால், அதை வாங்கி ஒழுங்காக வாசிக்க வேண்டும். இல்லையென்றால், கட்டுரை எழுதச் சொல்லுவதை தவிர்க்க வேண்டும். அநேக பேராசிரியர்களுக்கு மாணவர்கள் எழுதிக்கொடுக்கும் கட்டுரைகளை வாசிக்க நேரம் இல்லை. கட்டுரைகளை வாசித்து அதற்கு தேவையான மதிப்பெண் கொடுக்க வேண்டும், வாசிக்க நேரம் இல்லையென்றால், கட்டுரை எழுத சொல்லக்கூடாது.

    நீங்கள் விவசாயம் செய்கிறீர்கள் என்றால், ஒழுங்காக நேர்த்தியாக விவசாயம் செய்ய வேண்டும்.

    கால்நடைகள், கோலிகள் வளர்க்கிறீர்கள் என்றால், ஒழுங்காக முறைப்படி வளர்க்க வேண்டும்.

    நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால் உண்மையோடும், உத்தமத்தோடும் வேலை செய்ய வேண்டும். சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும்.

    அநேகர் தலைமை அதிகாரி பார்க்கிறார் என்றால், உண்மையாக வேலை செய்வார்கள். இல்லையென்றால், ஏனோதானோவென்று வேலைகளை செய்வார்கள்.

    ஆண்டவர் தெளிவாய் நமக்கு கற்றுக்கொடுக்கிறார், அறு நாளும் நாம் வேலைசெய்து நம்முடைய கிரியைகள் எல்லாவற்றையும் நடப்பிக்க வேண்டும்.


ஐந்தாம் கற்பனை
    உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்திருக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக.

    பத்து கட்டளைகளில் இந்த ஒரு கட்டளையில் மாத்திரமே நாம் வாக்குத்தத்தத்தைப் பார்க்க முடியும். கர்த்தர் தந்த தேசத்திலே நீண்ட ஆயுலோடு வாழ வேண்டுமானால், நாம் நம்முடைய தகப்பனையும், தாயையும் கனம்பண்ண வேண்டும்.

    வேதத்தில் மற்ற இடங்களில் உன் தகப்பனுக்கும், தாய்க்கும் கீழ்ப்படிவாயாக என்று எழுதப்பட்டிருக்கிறது.   ஆனால் இந்த கட்டளையிலே தாய் தகப்பனை கனம்பண்ண வேண்டும் என்று ஆண்டவர் கற்றுக்கொடுக்கிறார்.

    கீழ்ப்படிவதைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது கனம்பண்ணுவது. கனம்பண்ணாமல் நம்மால் கீழ்ப்படிய முடியும்.

    கனம்பண்ணுவது என்றால், பெற்றோர் சொல்லுகிற எல்லா காரியங்களையும் அப்படியே கேட்டு, அதன்படி செய்ய வேண்டும் என்பது அல்ல.

    நம்முடைய பெற்றோர் ஒருவேலை இரட்சிக்கப்படாதவராக இருப்பாரானால், அவர் நம்மை ஆலயத்திற்கு செல்லக்கூடாது என்று சொல்லும்போது நாம் கீழ்ப்படிந்து ஆலயத்திற்கு செல்லாமல் இருக்கக்கூடாது.

    நம்முடைய தகப்பன் நம்மிடம் கடைக்குச் சென்று சிகரெட் வாங்கி வா என்று சொன்னால், பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காக நாம் சிகரெட் வாங்கிக் கொடுக்கக் கூடாது. நாம் பெற்றாருக்கு கீழ்ப்படிவதைக் காட்டிலும் கனம்பண்ணுவது அவசியமானது.

    அநேக பிள்ளைகள் கொஞ்சம் படித்த பின்பு தங்கள் பெற்றோரை கனவீனப்படுத்துவார்கள். பெற்றோர்கள் மிகவும் கடினப்பட்டு உழைத்து, தங்கள் பிள்ளை நன்றாக படித்து, சமுதாயத்திலே உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று அசைப்படுவார்கள். அதற்காக தங்கள் முழு உழைப்பையும் கொடுப்பார்கள்.

    பெற்றோரின் கடின உழைப்பினால் பிள்ளைகள் பெரிய பெரிய கல்வி நிலையங்களுக்குச் சென்று படித்துவிட்டு, பெற்றோர் எதையாகிலும் சொல்லும்போது, உனக்கு என்ன தெரியும், நீ படிக்காதவர் என்று பெற்றோரை மரியாதைக்குறைவாக பேசுவார்கள்.

    அநேக வாலிபர்கள் இப்படி தங்கள் பெற்றோரை கனவீனப்படுத்துவதுண்டு. ஒருவேலை நமக்குத் தெரிந்த அநேக காரியங்கள் நம்முடைய பெற்றோருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாம் இப்போது இப்படிப்பட்ட நிலமையில் இருப்பதற்குக் காரணம் நம்முடைய பெற்றோர் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.

    பிள்ளைகள் எல்லா நேரத்திலும் பெற்றோருக்குக் கீழ்ப்படிய முடியாது. சில நேரங்களில் ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியங்களை செய்யச் சொல்லி நம்முடைய பெற்றோர் நம்மை கட்டாயப்படுத்துவார்களானால், அப்படிப்பட்ட நேரங்களில் நாம் பெற்றோருக்குக் கீழ்ப்படிய முடியாது.

    ஆனால், நம்முடைய பெற்றோர் நம்மை நல்வழிப்படுத்துகிறவர்களாக இருந்தாலும், நம்மை ஆண்டவருக்கு பிரியமில்லாத வழியில் வழிநடத்துகிறவர்களாக இருந்தாலும் நாம் அவர்களை கனம்பண்ண வேண்டும்.

    அநேக பிள்ளைகள் தங்கள் வயது முதிர்ந்த பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிடுகிறார்கள். தங்களை வளர்த்தெடுத்த தங்கள் தாய் தகப்பனை, அவர்களுடைய கடைசி காலத்தில் வளர்க்க முடியாது என்று உதாசிணம் செய்கிறார்கள்.

    பத்து கற்பனைகளை ஆண்டவர் மோசேயிடம் கொடுத்தார். முதலாவது பலகையில் நான்கு கற்பனைகளும், இரண்டாவது பலகையில் ஆறு கற்பனைகளும் இடம் பெற்றிருந்தது. இந்த முதலாம் கற்பலகையில் உள்ள முதலாம் கட்டளை, என்னையன்றி உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்க வேண்டாம் என்ற கட்டளையும், இரண்டாவது கற்பலகையில் முதல் கற்பனையாக எழுதப்பட்ட இந்த ஐந்தாம் கட்டளை உன் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதும் மிகவும் முக்கியமான கற்பனைகளாகும்.


ஆறாவது கட்டளை
    கொலை செய்யாதிருப்பாயாக.
    
    கொலை என்பது ஒரு மனிதன் சக மனிதனின் உயிரை எடுப்பதாகும். இந்த வார்த்தையை வைத்துக்கொண்டு சிலர் ஆடு மாடுகளை கொலைசெய்யக்கூடாது. விலங்குகளின் மாம்சத்தை புசிக்கக்கூடாது என்று சொல்லுவார்கள்.  அப்படியல்ல, ஆடு, மாடுகளை கொன்று சாப்பிடுவது கொலை ஆகாது.  

    மனிதர்களை கொலைசெய்யக்கூடாது என்றால் யுத்தம் செய்வது தவறுதானே, யுத்தம் என்றாலே எதிரிகளை கொலை செய்வதுதானே. அப்படியானால் யுத்தம் செய்தால், நாம் கட்டளையை மீறுகிறோமா என்றால் இல்லை.

    தாவீதும், இஸ்ரவேலின் அநேக ராஜாக்களும் யுத்தம் செய்தார்கள். அவர்களெல்லோரும் கற்பனையை மீறவில்லை.

    உதாரணமாக, தாவீது கோலியாத்தை கொலை செய்தார். ஆனால் அது கொலை அல்ல. அது யுத்தம். ஆனால், தாவீது உரியாவை கொன்றது ஒரு கொலை. அது ஆண்டவருக்கு விரோதமான பாவம்.

    தாவீது உரியாவின் மனைவியோடு தவறான உறவிலே ஈடுபட்டு, அந்த தவறு யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக உரியாவை கொலை செய்தான். இது யுத்தம் அல்ல. இது கொலை. தாவீது உரியாவை கொலை செய்தது, ஆண்டவருக்கு விரோதமான பாவம். அதற்கு சரியான தண்டனையையும் ஆண்டவர் தாவீதுக்குக் கொடுத்தார்.

    பழைய ஏற்பாட்டில் சிலருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. ஆகான் சாபத்தீடானதிலே கொஞ்சம் எடுத்துக்கொண்டதினால், ஆகானும் அவன் குடும்பத்தாரும் கொலைசெய்யப்பட்டார்கள். அது கொலை அல்ல. (யோசுவா 7)

    புதிய ஏற்பாட்டிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்தக் கட்டளையை இன்னும் கடினப்படுத்துகிறார். ஒரு மனிதன் சக மனிதனைப் பார்த்து மூடனே என்று சொன்னால், அவன் மனுஷ கொலைபாதகன் என்று இயேசு சொல்லுகிறார்.



ஏழாவது கற்பனை
    விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.
    கணவனும் மனைவியும் இணைவது மாத்திரமே வேதத்தின் படி சரியானதாகும். இதைத்தவிற மற்ற எல்லாமே விபச்சாரம் என்று தான் வேதம் சொல்லுகிறது.

    புதிய ஏற்பாட்டிலே இந்த கற்பனையையும் இயேசு கிறிஸ்து கடினப்படுத்துகிறார். ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும், அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று என்று இயேசு சொல்லுகிறார். (மத்தேயு 5:28)



எட்டாவது கற்பனை
    களவு செய்யாதிருப்பாயாக.

    களவு என்றால் சட்டப்படி நமக்கு சொந்தமல்லாத எதையும் நாம் அனுபவிக்கக்கூடாது.


ஒன்பதாவது கட்டளை
    பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக.

    பொய் அல்லது பொய் சாட்சி இரண்டும் ஒன்றுதான். பிறர் செய்யாத ஒரு காரியத்தை செய்தார் என்று சொல்லுவது பொய் சாட்சி. அதைப்போல பிறர் செய்த ஒரு காரியத்தை அவர் செய்யவில்லை என்று சொல்வதும் பொய்சாட்சியாகும்.

    ஏசாயாவில், உன் உதட்டில் பொய் இருக்கிறது என்று எழுதப்பட்டுள்ளது. அநேகர் சொல்லுவார்கள் உதட்டளவில் நான் பொய் சொன்னேனே தவிற உள்ளத்தில் நான் பொய் சொல்லவில்லை என்று சொல்லுவார்கள்.

    ஆண்டவர் பொய்யையும், பொய் சாட்சியையும் வெறுக்கிறார்.

    பிசாசானவன் பொய்யவும், பொய்க்கு பிதாவுமாய் இருக்கிறான். (யோவான் 8:44)




பத்தாவது கட்டளை
    பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.

    ஆசையின் எல்லையைத் தாண்டிய ஒரு நிலையைத்தான் இச்சை என்று சொல்லுகிறோம்.

    ஒரு மனிதனுக்கு ஆசை வருவது என்பது இயல்பு. அந்த ஆசையை அவன் கட்டுப்படுத்தாவிட்டால், அது இச்சையாக மாறுகிறது.

    இச்சை கர்ப்பந்தரித்து பாவத்தை பிறப்பிக்கும் என்று வேதத்திலே வாசிக்கிறோம். (யாக்கோபு 1:15)

    ஆசை பாவத்தை பிறப்பிப்பது இல்லை. ஆசையை நாம் அடக்கிக்கொள்ளாம். அந்த ஆசை இச்சையாக மாறிவிட்டால், அது பாவத்தை பிறப்பிக்கும்.

    இச்சை வராமலிருக்க என்ன செய்ய வேண்டுமென்றால், தனக்கு இருப்பது போதுமென்று இருக்க வேண்டும். மற்றவரின் பொருட்களை, வீட்டை, மனைவியை, வேலைக்காரரை பார்ப்பதினால் தான் இச்சை வருகிறது.

    நமக்கு இருப்பது போதுமென்று இருக்கும்போது இச்சைக்கு இடமில்லையே.

    போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் என்று 1 தீமோத்தேயு 6:6-ல் வாசிக்கிறோம்.

    ஆண்டவர் எனக்கு கொடுத்திருக்கின்ற மனைவிக்காக, வீட்டிற்காக, பிள்ளைகளுக்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் என்று நன்றி செலுத்தி வாழும்போது நாம் இச்சையிலிருந்து விலக முடியும்.

    பத்து வாதைகளும் பத்த கற்பனைகளும் என்ற தலைப்பில், ஆண்டவர் ஏன் எகிப்தியருக்கு பத்து வாதைகளைக் கொடுத்தார். அதன் மூலமாக எப்படி இஸ்ரவேலர்களுக்கு பத்து கட்டளைகளை கொடுத்தார் என்று அறிந்துகொண்டோம்.

    பத்து கட்டளைகள் இஸ்ரவேலர்களுக்கு மாத்திரமானது அல்ல. புறஜாதிகளும் பத்து கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து தான் நடக்க வேண்டும்.

    ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவரின் பிள்ளையாய் வாழும்போது அவர் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார். ஆமென்….!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.