Type Here to Get Search Results !

பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்கள் | ஆழமான பிரசங்க குறிப்புகள் | Acts Bible Study | Gospel Sermon Points Tamil | Jesus Sam

=======================
தலைப்பு: பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்கள்
========================
    பஸ்கா பண்டிகையன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார்.

    இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தவர்கள் ரோமர்கள். இயேசுவின் காலத்தில் ரோமர்கள் உலகை ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள்.

    மூன்றாம் நாள் உயிரோடு கூட எழுந்த இயேசுவானவர் பொது ஜனங்களுக்கு காட்சியளிக்கவில்லை. சீஷர்களுக்கு மாத்திரமே தரிசனமானார். நாற்பது நாட்கள் சீஷர்களுக்குத் தரிசனமானார். பின்பு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். நாற்பது நாளும் சீஷர்களோடு இயேசு இல்லை, அவ்வப்போது சீஷர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    உலகை ஆட்சி செய்து கொண்டிருந்த ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இயேசுவின் சரீரம் காணாமல் போனதால், அதை சீஷர்கள் தான் திருடிக்கொண்டுபோய்விட்டார்கள் என்ற வதந்தி தேசம் முழுவதும் பரவியிருந்தது. இயேசுவின் சரீரத்தைக் காணாததால் மூர்க்கமடைந்த ரோமர்கள், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று சொல்லுகிறவர்களை பிடித்து சிறையில் அடைக்கவும், கொலை செய்யவும் தொடங்கினார்கள்.

    ரோமர்களின் இச்செயல்களால், கிறிஸ்துவைப்பற்றி பேசுவதற்கே சீஷர்கள் பயந்தார்கள்.

    பஸ்கா பண்டிகைக்கு பின் வரும் ஐம்பதாவது நாள் பெந்தகோஸ்தே பண்டிகை. பெஸ்தகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் சீஷர்களை நிரப்பினார்.

    பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்ட சீஷர்கள், தைரியமாய் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நற்செய்தியை அனைவருக்கும் அறிவித்தார்கள்.

    இப்படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு வல்லமையாய் கிரியை செய்த ஒருசிலரைப் பற்றி இக்குறிப்பில் தியானிப்போம்.


1. ஸ்தேவான்
    ஸ்தேவான் பந்தி விசாரிப்புக்காக தெரிவு செய்யப்பட்ட ஒரு வாலிபன். ஸ்தேவான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட போது மிகவும் தைரியமாய் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்.

    ஸ்தேவானின் ஞானத்தையும், ஆவியையும் எதிர்த்துநிற்க ஒருவராலும் கூடாமற்போயிற்று. (அப்போஸ்தலர் 7:10)

    இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று சொல்லுகிறவர்களை கொலை செய்ய யூத மதத்தலைவர்களும், ரோமர்களும் துரிதமாய் செயல்பட்டார்கள்.

    பந்தி விசாரிப்புக்காரனாகிய ஸ்தேவான் பரிசுத்த ஆவியினால் நிரைந்த பின்பு, தன் உயிரையும் பொருட்படுத்தாமல், கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க துவங்கினார்.

    ஸ்தேவானின் தைரியத்தையும், ஞானத்தையும் கண்ட மதவெறியர் மூர்க்கமடைந்து நகரத்திற்கு புறம்பே அவரை இழுத்து கல்லெறிந்து கொலை செய்தார்கள்.

    லிபர்த்தீனர் ஆலயத்தை சேர்ந்தவர்களாலும், சிரேனே பட்டணத்தாராளும், அலெக்சந்திரியா பட்டணத்தாராலும், சிலிசியா நாட்டாராலும், ஆசியா தேசத்தாராலும் ஸ்தேவானின் ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்து நிற்க முடியவில்லை. (அப்போஸ்தலர் 2:9,10)

    நாமும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது ஸ்தேவானைப்போல தைரியமாக சுவிசேஷத்தை ராஜாக்களுக்கு முன்பாகவும், அதிகாரிகளுக்கு முன்பாகவும், ஞானிகளுக்கு முன்பாகவும் பிரசங்கிக்க முடியும்.

    ஸ்தேவான் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவராய், வானத்தை பார்த்த போது தேவனுடைய மகிமையையும், வலது பாரிசத்தில் இயேசு கிறிஸ்துவையும் பார்க்கக்கூடிய பாக்கியம் பெற்றார்.

    நாமும் பரிசுத்த ஆவியினால் நிரப்பபடும்போது கடவுளை தரிசிக்க முடியும்.

அப்போஸ்தலர் 7:55
    அவன் பரிசுத்த ஆவியிலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு:

    கிறிஸ்துவுக்காக மரித்த முதல் இரத்தசாட்சி இந்த ஸ்தேவானே.

    கிறிஸ்துவின் மீது பக்தி வைராக்கியம் கொண்டு தைரியமாய் சுவிசேஷம் அறிவித்த ஸ்தேவானை மதவெறியர் கல்லெறிந்து கொலைசெய்தார்கள்.  தேவானை வரவேற்கும்படியாக சிங்காரசன்தில் வீற்றிருந்த இயேசுவானர் எழுந்து நின்றார்.  பரிசுத்தவான்களின் ஆத்துமாவிற்கு இயேசு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கிறார்.


2. பர்னபா
    சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் நிரைந்து சுவிசேஷத்தை தைரியமாய் பிரசங்கித்ததால், அநேகர் ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்கள். அப்படி ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவர் தான் இந்த பர்னமா.

    பர்னபா ஆண்டவருடைய ஊழியத்திற்காக தன் நிலங்கள் அனைத்தையும் விற்று அதின் கிரயத்தைக் கொண்டு வந்து படைத்தவர்.

அப்போஸ்தலர் 4:36,37
    36. சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
    37.தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.

    பர்னபாவைப்போல அநேகர் தங்கள் நிலங்களையும், வீடுகளையும் விற்று அதின் தொகையை அப்போஸ்தலரிடம் கொடுத்தார்கள்.

பர்னபா – பவுல்
    பவுல் என்பவர் சீஷர்கள் அநேகரை துன்புறுத்தியதால், அவர் இரட்சிக்கப்பட்ட போது அவரை சீஷர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பவுல் இரட்சிக்கப்பட்டுவிட்டார் என்று சீஷர்கள் நம்பிவில்லை. அந்த சூழ்நிலையில் பவுலை ஏற்றுக்கொண்டவர் இந்த பர்னபாவே.

அப்போஸ்தலர் 9:26,27அ
    26. சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப் பார்த்தான். அவர்கள் அவனைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள்.
    27. அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக் கொண்டு,......

    இப்படியாக ஊழிய வாஞ்சை மிகுந்த பர்னபா பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட போது அநேகரை ஆண்டவரின் பக்கம் திருப்பினார். பர்னபாவின் மூலமாக அநேகர் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்.

அப்போஸ்தலர் 11:24
    அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.

    பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட பர்னபாவின் மூலமாக சபையில் ஆத்துமாக்கள் பெருகினார்கள். நாமும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவோமாகில், நம்மூலமாக அநேகர் கர்த்தரின் பக்கம் திரும்புவார்கள்.

    நம்முடைய வாயின் வார்த்தைகள், நம்முடைய செயல்பாடுகள் மூலமாக அநேகர் கர்த்தரை அறிந்துகொள்ள வேண்டும்.

    இக்கால கிறிஸ்தவர்களின் செயல்பாடுகளைக் பார்க்கின்ற புறஜாதியார் நானும் கிறிஸ்தவனாக மாறினால் இவர்களைப்போல பாவியாகிவிடுவேனோடு என்று யோசிக்கும் அளவிற்கு இருக்கின்றது.

    நம்முடைய செயல்பாடுகள் மூலமாக சபையிலே ஆத்துமாக்கள் சேர்க்கப்படுகிறார்களா? சபையில் உள்ள ஆத்துமாக்கள் வேறு சபையை நோக்கி நகருகிறார்களா? என்று யோசிக்க வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியின் கடமை.

    நாம் பர்னபாவைப்போல பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவோமானால் நம்மூலமாக அநேகர் கர்த்தரின் பக்கம் திரும்புவார்கள்.


3. பவுல்
    சவுல் என்று சொல்லப்படுகின்ற பவுல் கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்பட்ட ஒருவர். கிறிஸ்தவர்களை பிடித்து சிறைச்சாலையில் அடைத்தவர். கிறிஸ்துவைப்பற்றி அறிவித்த ஸ்தேவானை கொலை செய்ய காரணமாய் இருந்தவர்களில் ஒருவர்.

    இந்த பவுல் அதிகம் படித்தவர். அந்நாட்களில் உலக புகழ்பெற்ற பேராசிரியரான கமாலியேல் என்பவரின் சிறந்த மாணவர். மிகச் சிறந்த ஞானி. பன்மொழி பண்டிதர்.

    கிறிஸ்தவர்களை துன்பப்படுத்திய பவுல், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட போது மிகவும் வல்லமையாய் ஊழியம் செய்தார். பவுல் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட போது பிசாசுகளும் கீழ்ப்படிந்தன.

    பவுல் பாப்போ பட்டணத்திற்கு வந்தபோது, அங்கே செர்கியுபவுல் என்னும் ஒரு அதிபதியை கண்டார். பவுல் செர்கியுபவுலுக்கு தேவவசனத்தை அறிவித்துக் கொண்டிருக்கையில், மாயவித்தைக்காரனாகிய பர்யேசு என்னும் எலிமாவுக்குள் சாத்தான் புகுந்தான். அவன் செர்கியுபவுலை விசுவாசத்தினின்று திரும்பும்படி வகைதேடினான்.

    அப்பொழுது பவுல் பரிசுத்த ஆவியினால் நிரைந்தவனாய், எலிமாவையும் அவனுக்குள் இருந்த பிசாசையும் அதட்டினார். உடனே அவன் சூரியனைக் காணமுடியாமல் குருடனானான். கீழே விழுந்து கைலாகு கொடுக்கிறவர்களை தேடினான்.

அப்போஸ்தலர் 13:9,10
    9. அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து,
    10. எல்லாக்கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?

    பவுலைப்போல நாமும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது நாமும் பிசாசை அதட்ட முடியும், பிசாசுக்கு கட்டளையிட முடியும்.

    பரிசுத்த ஆவியினால் நிரைந்தவர்கள் கட்டளையிடும்போது பிசாசுகளும் கீழ்ப்படியும்.

    பரிசுத்த ஆவியினால் நிரைந்த பவுல் 14 நிருபங்களை அதாவது கடிதங்களை எழுதுகிறார். புறஜாதிகள் மத்தியில் கிறிஸ்துவுக்காக மிகவும் வைராக்கியமாய ஊழியம் செய்கிறார்.

    நாமும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது வைராக்கியமாக, தைரியமாய் சுவிசேஷத்தை தேசம் முழுமைக்கும் சென்ற பறைசாற்ற முடியும்.

    பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் என்னென்ன கிரியைகள் செய்தார்கள் என்பதை அறிந்துகொண்டோம். நாமும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொள்வோம். கிறிஸ்துவுக்காக வைராக்கியமாய் எழும்பி பிரகாசிப்போம்.

    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்….!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.